வெள்ளவத்தையில் காணி கபளீகரம் செய்தவரே சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பிரசாரம்
வில்பத்து விவகாரம் குறித்து சபையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
விரட்டப்பட்ட மக்களை மன்னாரில் மீள குடியேற்றுவதை வடக்கில் இருக்கும் பெளத்த மதகுருக்களோ இந்து மதகுருக்களோ கத்தோலிக்க மதகுருக்களோ எதிர்க்கவில்லை. மாறாக வெள்ளவத்தையில் வேறு ஒருவரின் காணியை பலாத்காரமாக வைத்துக்கொண்டிருக்கின்ற மதகுருவே சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக பொய் பிரசாரம் செய்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக மதகுரு ஒருவர் வில்பத்து அழிக்கப்படுவதாக பொய் பிரசாரம் செய்து, மாணவர்களை இணைத்துக்கொண்டு 10இலட்சம் கையெழுத்துக்களை பெற்றுவருகின்றார். அதற்கு சில ஊடகங்களும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன. ஆனால் குறித்த மதகுரு வெள்ளவத்த பிரதேசத்தில் வேறு ஒருவரின் காணியை ஆக்கிரமித்துக்கொண்டு, வில்பத்து தொடர்பாக பொய் பிரசாரம் செய்து வருகின்றார்.
அத்துடன் மன்னார் முசலி பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டு மீள்குடியேறிய அந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் ஒரு அங்குலம் நிலம்கூட வழங்கவில்லை. எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய மன்னாரில் விரட்டப்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதாக கடந்த அரசாங்கம் ஜெனிவாவில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் பிரகாரம் பசில் ராஜபக் ஷ தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தீர்மானத்துக்கமைய அந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.
அத்துடன் அந்த மக்கள் மீண்டும் குடியேற்றப்படும்போது அந்த மக்களின் தேர்தல் இடாப்புகளில் அவர்களின் பெயர்கள் இருகின்றதா, அவர்கள் விரட்டப்பட்டவர்களா, அவர்களுக்கு அங்கு சொந்த காணி இருந்ததா என்றெல்லாம் தேடிப்பார்க்கப்பட்டது. மாறாக ஒரு குடும்பம்கூட வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டுவந்து அங்கு குடியேற்றப்படவில்லை.
விளாத்திக்குளம் என்ற பிரதேசத்தை மாத்திரம் குறிப்பிட்டு கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை ஒட்டுமொத்தமாக துவேச அடிப்படையிலே வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கை தொடர்பில் வன பாதுகாப்பு திணைக்களம் பதிலளிக்கும் என்று நினைக்கின்றேன். அதனை அடிப்படையாகக்கொண்டே குறித்த மதகுரு பொய் பிரசாரம் செய்துவருகின்றார்.
அத்துடன் விரட்டப்பட்ட மக்களை மீள குடியேற்றுவதை வடக்கில் இருக்கும் பெளத்த மதகுருக்களோ இந்து மதக்குருக்களோ கத்தோலிக்க மதக்குருக்களோ எதிர்க்கவில்லை. மாறாக வெள்ளவத்தையில் வேறு ஒருவரின் காணியை பலாத்காரமாக வைத்துக்கொண்டிருக்கின்ற மதகுரு, மீண்டும் நாட்டில் சிங்கள –முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக சதியைமேற்கொண்டுவருகின்றார்.
எனவே குறிப்பிட்ட மதகுரு மேற்கொண்டுவரும் பொய் பிரசாரம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரோ வனவள அதிகாரசபையோ வாய்மூடிக்கொண்டிருந்தால் இந்த நாடு மீண்டுமொரு அழிவை சந்திக்கநேரிடும். அதனால் இவ்வாறான அழிவு ஏற்படாமல் தடுத்து நிறுத்த மதகுருவின் பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்த பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli