­ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது

விட்டுக் கொடுப்பு அவசியம் என்கிறார் ஹக்கீம்

0 96

எம்.வை.எம்.சியாம்

எமது சமூ­கத்தில் தீர்வு காணப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இருப்­பினும் நாம் ஒரு சில விட­யங்­களை மாத்­திரம் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு முரண்­பட்டு கொண்­டி­ருக்­கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. சமூக மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப சில விட­யங்­களை முஸ்லிம் சமூ­கமும் ஏற்­றுக்­கொண்டு அதற்­கேற்ப மாற­வேண்டும். சர்ச்­சை­களை வளர்த்­துக்­கொண்டு முரண்­பட்டு கொண்டு இருக்­காமல் கொஞ்சம் விட்­டு­கொ­டுத்து போகும் போது எமக்­குள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும் என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

ஹெம்மாதகம கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கல்வித்துறையில் உயர் அடைவுகளைப் பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சல்மா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த அர­சாங்­கத்தில் எமக்­குள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்­பார்க்க முடி­யாது. நாமும் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண மாற்று வழி­களை கடை­பி­டிக்க புதிய முயற்சி­களை மேற்­கொள்ள வேண்டும். வளக்­கு­றைப்­பாட்­டினால் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்­க­ளுக்கு மாற்று உபாய வழி­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஸகாத் என்­பது எமது மார்க்­கத்தின் மிக முக்­கி­ய­மான கட்­ட­மைப்பு. ஆனால் ஸகாத் கட­மை­யா­கு­வ­தற்கு முன்பு ஆரம்ப இஸ்­லா­மிய சமூகம் தம்­மிடம் இருந்த எல்­லா­வற்­றையும் கொடுத்­தது. ஒரு­போதும் அவர்கள் அளந்துக் கொடுக்­க­வில்லை. அளக்­காமல் கொடுத்து வளர்ந்த சமூகம். நுபுவ்­வ­துக்கு 15 வரு­டங்­க­ளுக்கு பின்பு ஸகாத் கட­மை­யா­னது. அந்த 15 வருட காலப்­ப­கு­தியில் மக்கா முஸ்­லிம்கள் பல்­வேறு துன்­பத்தை அனு­ப­வித்­தார்கள். தம்­மிடம் இருந்­த­வற்றை அனைத்­தையும் கொடுத்­தார்கள். அவ்­வாறு கொடுத்து வளர்ந்த சமூகம் தான் நாம். இதனை நாம் சரி­யாக செய்யும் போது வறுமை என்ற ஒன்று இருக்­காது.

குறிப்­பாக பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­படும் முஸ்லிம் பெண்­களின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்து வரு­கி­றது. பெண்கள் இன்று பட்­டப்­ப­டிப்பு துறையில் முன்­னே­றிக்­கொண்டு வரு­கி­றார்கள். இது நல்­ல­தொரு விட­ய­மாகும். சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது மகளும் சட்­டத்­து­றையில் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வு­செய்­யப்­பட்டார். அங்கு அவ­ருடன் 250 மாண­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களுள் 50 பேர் மாத்­தி­ரமே ஆண்கள். மற்­றைய அனை­வரும் பெண்கள். இவ்­வாறே அனைத்து பீடங்­களின் நிலை­மையும் உள்­ளது.

இதே­வேளை, எல்லா துறை­க­ளிலும் பெண்கள் தொழில் செய்ய முடி­யாது. எமது பெண்கள் ஆசி­ரியர் தொழி­லுடன் மாத்­திரம் நிறுத்திக் கொள்­கி­றார்கள்.வேறு தொழில்­து­றை­க­ளுக்கு செல்­வ­தற்கு அவர்­க­ளுக்கு பயம். இந்த நிலைமை மாற வேண்டும். இதற்கு எவ்­வாறு மாற்று தீர்வு என்ன என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்டும்.மேலும் நாம் கல்­வியில் முன்­னேற காட்டும் ஆர்­வத்தை போல சமூ­கத்தை முன்னேற்­று­வ­தற்­கா­கவும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் மாற்று சமூ­கங்கள் மத்­தியில் எமது சமூகம் சார்ந்த புரிந்­த­ுணர்­வு­களும் அவ­சி­ய­மாகும். அதில் நாம் எங்கு தவறு விடு­கிறோம் என்­பதை பற்றி சிந்­திக்க வேண்டும். எமது சமூ­கத்தில் உள்ள அமைப்பு ரீதி­யான அம்­சங்­களின் முக்­கி­யத்­துவம் பற்றி மற்­றை­ய­வர்கள் அறி­யாமல் இருக்­கி­றார்கள். மாற்று சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் எம்மை பற்­றிய தவ­றான அபிப்­பி­ர­யா­யத்தை இல்­லாமல் செய்­வது தொடர்பில் நாம் இன்னும் கவனம் செலுத்­த­வில்லை. சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுக்­காமல் முரண்­பட்டு கொண்டும் அனைத்து விட­யங்­க­ளிலும் மார்க்கம் கூறி­யுள்ள விழு­மி­யங்­களின் வரை­ய­றை­களை முழு­மை­யாக தெரிந்து கொள்­ளா­மலும் அது தொடர்பில் சரி­யான புரிந்­து­ணர்வு இல்­லா­மலும் இருக்­கிறோம்.

ஆனால் இவற்­றை­யெல்லாம் பற்றி சிந்­திக்­காமல் குறிப்­பிட்ட ஒரு சில விட­யங்­களை மாத்­திரம் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு முரண்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம். திரு­மணம் மற்றும் விவா­க­ரத்து சட்ட திருத்தம் தொடர்பில் முஸ்­லிம்­க­ளுக்குள் முரண்­பா­டுகள்.

இவற்றை வைத்துக் கொண்டு கடு­மை­யாக அல்­லோ­லக்கல்லோலப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.

சமூக மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப சில விட­யங்­களை முஸ்லிம் சமூ­கமும் ஏற்­றுக்­கொண்டு தான் ஆக வேண்டும். அதி­க­ள­வி­லான முஸ்லிம் நாடு­களில் பெண்­க­ளையும் காதி நீத­வான்­க­ளாக நிய­மித்து விட்­டது. மலே­சியா இந்­தோ­னே­சியா போன்ற நாடுகள் இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும். ஆனால் நாம் மாத்­திரம் இதற்கு முரண்­பட்டு கொண்­டி­ருக்­கிறோம். நாம் ஷாபி மத்­ஹபை பின்­பற்றி கொண்டு அதற்கு மேல் செல்ல முடி­யாத நிலையில் இருக்­கிறோம். ஒரு கட்­டத்தில் எமக்கு இருக்கும் இந்த தனியார் சட்­டமும் இல்­லாமல் போய் விடும்.
சர்ச்­சை­களை வளர்த்­துக்­கொண்டு முரண்­பட்டு கொண்டு இருக்­காமல் கொஞ்சம் விட்­டு­கொ­டுத்து போகும் போது பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும். மேலும் திரு­மண வயது எல்லை தொடர்­பாகவும் கூறலாம்.

குர்­ஆனில் ஓரி­டத்தில் திரு­மண வய­தெல்லை இது­வாக இருக்க வேண்டும் என குறிப்­பிட்டு சொல்­ல­வில்லை. பக்­குவ வயதை அடையும் போது அதா­வது சொத்து விட­யத்தில் அனா­தைகள் வய­தெல்­லையை அடைந்து விட்டால் அவர்­களின் சொத்­துக்­களை திருப்பி கொடுத்து விடுங்கள் என குர்ஆன் சொல்­கி­றது. சொத்­துக்­களை பற்றி கையா­ளு­வ­தற்கு பேசும் குர்ஆன் திரு­மணம் செய்­வ­தற்கு பக்­குவம் இல்­லாமல் பிள்­ளை­களை தள்­ளி­வி­டுமா என்­பதை சிந்­திக்க வேண்டும். இல்லை. என பல அறி­ஞர்கள் கூறு­கி­றார்கள். கால மாற்­றத்­திற்கு நாம் ஜீர­ணித்­துக்­கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்­பதால் தான் சமூகம் முன்­னேற முடியும்.

எந்­த­வொரு பிரச்­சி­னையும் நீண்­ட­காலம் இழு­பறி நிலையில் தொட­ரும்­போது ஏனைய சமூ­கத்­தினால், முஸ்லிம் சமூ­கத்­தினர் கடும்­போக்­கு­வாதம் மற்றும் ஆணா­திக்­க­வாதம் நிறைந்த சமூ­மா­கவே சித்­த­ரிக்­கப்­ப­டுவர். மாற்று சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் எமது சமூகம் தொடர்பில் நல்ல அபிப்­பி­ரா­யங்­களை ஏற்­ப­டுத்த நாமும் சிறிய சிறிய மாற்­றங்­களை கொண்டு வரு­வதில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது. இஸ்லாம் அனைத்து விட­யங்­க­ளிலும் எளி­மை­யான விட­யங்­களை பின்­பற்­று­கி­றது.

அண்­மையில் ஒரு நிக்காஹ் வைப­வத்­துக்கு சென்­றி­ருந்தேன். அங்கு நிகாஹ் உரை­யாற்­றிய மௌலவி என்­னி­டத்தில் ஒரு விட­யத்தை கூறினார். பயானை ஆண்­க­ளுக்கு மாத்­தி­ரமே செய்­கிறோம். ஏன் நாம் திரை­ம­றைவில் குறித்த மணப்­பெண்­ணையும் வைத்து பயானை கேட்க விட செய்­யக்­கூ­டாது என்றார். பெண்­க­ளையும் ஏன் நிக்காஹ் பயான்­களை கேட்­ப­தற்கு பள்­ளி­வா­ச­லுக்கு அனு­ம­திக்க கூடாது என்றார்.

இஸ்லாம் அனைத்து விட­யங்­க­ளிலும் எளி­மையை விரும்­பு­கி­றது. இஸ்லாம் மிகவும் எளி­மை­யாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட மார்க்கம். ஏன் எமது எளி­மையை பிற சமூ­கங்­க­ளுக்கு தெளி­வுப்­ப­டுத்த கூடாது. நிக்காஹ் வைப­வங்­களின் போது ஏன் முஸ்லிம் அல்லாத நண்பர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது. சில சந்தர்ப்பங்களில் எமது பள்ளிகளை பார்வையிட அனுமதிக்கிறோம். இவற்றில் என்ன பிழை இருக்கிறது.

அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றுபட வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எம்மை பிளவுபடுத்தி மேற்கொள்ளும் அரசியல் சூழ்ச்சிக்கு சிக்கிக்கொள்ளாமல் அதனை பகிரங்கமாக சுட்டிக்காட்ட வேண்டும். முதலில் எமக்குள் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். எங்கு பார்த்தாலும் எமது பிரச்சினைகள் பேசும் பொருளாக காணப்படுகிறது. இந்த நிலைமையை முதலில் இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாம் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.