ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவகாரம்: மனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க மைத்திரிக்கு அவகாசம்

0 786

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு பொது மன்னிப்பை வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாயின், அடுத்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அதனை தெரிவிக்குமாறு குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்றுக் கொள்கைகள் பிரிவின் நிறைவேற்று பணிப்பாளரும் பேராசிரியருமான பாக்கியஜோதி சரவணமுத்து ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த மனு மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இந்த மனுக்களின் பிரதான பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டதரணி பைசர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக சிறிது கால அவகாசம் பெற்றுக் கொடுக்குமாறு சட்டதரணி பைசர் முஸ்தபா கேட்டுக் கொண்டதையடுத்தே மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினர் இவ்வாறு கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இதேவேளை, இந்த மூன்று வாரத்திற்குள் மனுதாரர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்புகள் தெரிவிக்க வேண்டும் என்றால் அதைனையும் அன்றைய தினமே முன்வைக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.