மந்திகளின் அமைச்சரவை சாதிக்கப்போவதென்ன?

0 384

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

மந்­தி­களின் குணம் மரத்­துக்கு மரம், கிளைக்குக் கிளை இரை­தேடித் தாவுதல். இந்தக் குணமே இலங்­கையின் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­திகள் பல­ரையும் தமது சொந்த நல­னுக்­காக, தேச நலன் என்ற பெயரில் கட்­சிக்குக் கட்சி அல்­லது அணிக்கு அணி தாவ வைக்­கின்­றது. ஆகை­யினால் இந்த நாடா­ளு­மன்­றத்தை மந்­தி­களின் மன்றம் என்­ற­ழைப்­பதில் தவ­றேதும் உண்டா? கடந்த சில தினங்­க­ளாக அங்கு இடம்­பெற்ற தாவல்கள் இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. இப்­போது அந்த மந்­தி­களுட் சில அமைச்­ச­ரவை ஒன்­றையும் அமைத்­துள்­ளன. இந்த அமைச்­ச­ரவை சாதிக்­கப்­போ­வ­தென்ன?

பிர­தமர் ரணில்
திட்­ட­மிட்­ட­படி கல­வ­ர­மொன்றை உரு­வாக்­கி­யபின் மகிந்த ராஜ­பக்ச பிர­தமர் பத­வியை ராஜி­னாமாச் செய்து அர­சாங்கச் செலவில் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்­திலே பாது­காப்­பாக இருந்து மீண்டும் தக்க பாது­காப்­புடன் அவ­ரது புதல்வர் ஒரு­வ­ருடன் நாடா­ளு­மன்­றத்­தினுள் நுழைந்­துள்ளார். அவர் விட்­டுச்­சென்ற பிர­தமர் வெற்­றி­டத்தை எதிர்­க்கட்சித் தலைவர்கள் எவ­ரு­டனும் கலந்­தா­லோ­சி­யாது, தன்­னிச்­சை­யாக நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாவித்து ஜனா­தி­பதி ராஜ­பக்ச தேர்தலில் தோல்வி­யுற்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்கு வழங்கி, அந்த நிய­ம­னத்தை நாட்டின் தற்­போ­தைய நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு செய்­த­தாக மக்­க­ளுக்கு அறி­வித்தார். உண்­மை­யி­லேயே அதுதான் கார­ணமா அல்­லது வேறேதும் நோக்­கங்­க­ளுண்டா?

நாடே “கோத்­தாவே போ” என்று குர­லெ­ழுப்­பு­கி­றது. அது மட்­டு­மல்ல. நாட்டின் இன்­றைய பசிப்­பி­ணிக்கும் பண வங்­கு­றோத்­துக்கும் ராஜ­பக்­சாக்­களின் ஆட்­சியும் ஊழல்­க­ளுமே முக்­கிய காரணம் என்றும் அவர்களை குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தி விசா­ரணை செய்ய வேண்டும் என்றும் நாட்டின் இளம் சந்­த­தி­யினர் ஒரு மாதத்­துக்கும் மேலாக அறப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அப்­போ­ராட்­டத்தின் மைய­மாக காலி­மு­கத்­திடல் மாறி­யுள்­ளது. அந்­தத்­திடல் ஒரு நிறை­மாதக் கற்­பி­ணி­யாக நவ­இ­லங்கை என்ற ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுக்க பிர­ச­வ­வே­த­னையால் துடித்­துக்­கொண்­டி­ருக்­கிறாள் என்­பதை கடந்த வாரக் கட்­டுரை விளக்­கி­யது. அந்தக் குழந்­தையை அதன் தாயின் வயிற்­றி­லேயே நசுக்கிக் கொன்­று­விட கடந்த ஒன்­பதாம் திகதி மகிந்த ராஜ­பக்­சவின் அனு­ச­ணை­யுடன் குண்டர்கள் கூட்­ட­மொன்று முயன்று தோல்­வியும் கண்­டனர். நாடே ஒரு போர்க்­க­ள­மாகி உயிர்­களும் உட­மை­களும் பலி­யா­கின. இத்­த­னையும் நடந்தும் மக்கள் தன்னை வெறுக்­கின்­றனர் என்­பதை உணர்ந்தும் கோத்­தா­பய ராஜ­பக்ச பதி­வி­யி­லி­ருந்து வில­காமல் அர­சியல் யாப்பின் சரத்­து­களை அர­ணா­கக்­கொண்டு பாது­காப்­பாக இருப்­பது அவர் வில­கினால் அவரும் ஏனைய அவ­ரது சகோ­தரர்களும் சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து தப்ப முடி­யாது என்­பதை உணர்ந்தே. அறப்­போ­ராட்­டத்தில் குதித்­தி­ருக்கும் இளைய தலை­மு­றை­யினர் ராஜ­பக்­சாக்­களை நீதி­மன்­றத்தின் முன் நிறுத்தி விசா­ரிக்­கும்­வரை ஓய­மாட்­டார்கள். ஐ. நாவின் மனித உரிமை நிறு­வ­னமும் புலம்­பெயர் இலங்­கை­யரும் அதற்­கான அழுத்­தங்­களை கொடுத்­துக்­கொண்டே இருப்பர்.

இந்த நிலையில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஓர­ள­வுக்­கா­வது கட்­டி­யெ­ழுப்பி மக்­களின் உட­னடித் தேவை­க­ளையும் சிறி­த­ள­வா­வது பூர்த்­தி­செய்தால் மக்­களின் வெறுப்பும் தணியும், அதன்பின் மீண்டும் பழை­ய­படி ராஜ­பக்­சாக்­களின் வழ­மை­யான அர­சி­ய­லையும் தொட­ரலாம் என்ற எண்­ணத்தில் தன்­னையும் தனது சகோ­தரர்களையும் காப்­பாற்றி பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய அனு­ப­வமும் நம்­பிக்­கை­யுள்ள ஒரு­வரை தற்­கா­லிகத் தலை­வ­னாக்க முனைந்­ததன் விளைவே ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டமை. அவரும் நாட்டின் நல­னுக்­காக அப்­ப­த­வியை ஏற்­றுக்­கொண்­ட­தாக முழங்கிக் கொண்­டி­ருக்­கிறார். ஒரு ராஜ­பக்­ச­வினால் நிய­மிக்­கப்­பட்டு, அவர் குடும்­பத்தின் மற்­றய ராஜ­பக்­சக்­களின் ஆசீர்­வா­தத்­தைப்­பெற்று, அதே ராஜ­பக்­சக்­களின் அர­சியல் கட்­சியின் ஆத­ர­வுடன் இயங்கும் ரணில் அந்த நன்­றியை மறந்து ராஜ­பக்­சக்­களின் நலன்­களைப் புறக்­க­ணிப்­பாரா? சிலர் ஏற்­க­னவே ரணில் விக்­க­ர­ம­சிங்­ஹவை ‘ரணில் ராஜ­பக்ச‘ என அழைக்கத் தொடங்­கி­விட்­டனர். இருந்தும் பிர­தமர் ரணில் தனது சர்வதேச அனு­ப­வத்­தினால் வெளி­நாட்டு உத­வி­களைப்­பெற்று சர்வதேச நிதி நிறு­வ­னத்தின் ஆலோ­ச­னை­க­ளுடன் ஒரு­வாறு மக்­களின் உட­னடித் தேவை­களை நிறை­வேற்­று­வா­ராயின் அவ­ரது கைகள் ஓங்கி ஜனா­தி­ப­திக்கு அது ஒரு சவா­லா­கவும் முடி­யலாம் அல்­லவா? “கோத்­தாவே போ” என்ற கோஷத்தை அவரே உரக்­கவும் ஒலிக்­கலாம். அது கோத்­தா­வுக்கே ஒரு புதிய தலை­யி­டி­யா­கவும் அமை­யலாம். அந்தப் போட்­டியில் யார் ஜெயிப்பார் என்­ப­தற்கு காலம்தான் பதில் சொல்லும்.

மந்­தி­களின் தாவல்
ரணிலின் தலை­மை­யின்கீழ் இடைக்­கால அர­சொன்றை அமைக்க முடி­வு­செய்யப் பட்­ட­வுடன் எதி­ர­ணியில் வீற்­றி­ருந்த பல பிர­தி­நி­திகள் விரைந்­தோடி அவ­ருடன் சேர­லா­யினர். அவர்களும் நாட்டின் நலன் கரு­தியே நாங்கள் ஒத்­து­ழைக்­கிறோம் என்­றனர். அதுதான் உண்­மையா? அறப்­போ­ரா­ளி­களோ நாடா­ளு­மன்­றத்­தி­லுள்ள 225 பிர­தி­நி­தி­க­ளையும் வீடு செல்­லு­மாறு கோரு­கின்­றனர். அப்­படி அவர்கள் வீடு சென்றால் அவர்களுள் அனேகர் மீண்டும் பிர­தி­நி­தி­க­ளாகத் திரும்­பு­வது கஷ்டம். ஆகவே எஞ்­சி­யுள்ள இரண்­டரை வரு­டங்­களை எப்­ப­டி­யா­யினும் நாடா­ளு­மன்­றத்தில் அமர்ந்து அதன் சுக­போ­கங்­களை அனு­ப­விப்­பதே இவர்களின் பிர­தான நோக்கம். அதற்குப் பெயர் தேசா­பி­மானம் என்றும் கூறு­கின்­றனர். இரை­தேடும் இந்த மந்­தி­க­ளுக்கு இரை­யா­கின்­றது உழைப்­பா­ளிகள் செலுத்தும் வரிப்­பணம்.

அர­சியல் உறு­திப்­பாடு
அறப்­போ­ராட்டம், அதனை முடக்கி ஒழிக்க மேற்­கொள்­ளப்­பட்ட வன்மு­றைகள், பிர­த­மரின் ராஜி­னாமா, அதனை தொடர்ந்த அமைச்சரவையின் கலைப்பு ஆகி­ய­ன­வெல்லாம் சேர்ந்து அர­சியல் உறு­திப்­பாட்டை குலைத்­து­விட்­டன. ஒரு மாற்றுப் பிர­த­ம­ரையும் அவ­ருடன் பணியாற்ற ஒரு அமைச்சரவை­யையும் பல கட்­சி­க­ளி­லி­ருந்தும் பொறுக்கி எடுத்து ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள போதிலும் அந்த அவைக்கு மக்­களின் ஆத­ரவு கிடை­யாது. இது­வரை ஒரு நிதி அமைச்­ச­ரையும் ஜனா­தி­பதி நிய­மிக்­காமல் இருப்­பது இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டியில் ஒரு பார­தூ­ர­மான குறை­பாடு. சர்வதேச நிதி நிறு­வ­னத்­து­ட­னான முக்­கி­ய­மான பேச்­சு­வார்த்­த­தைகள் முடி­வாகும் வேளையில் அந்த அறிக்­கையில் கைச்­சாத்­திட நிதி அமைச்சர் அவ­சியம்.

அந்த அறிக்கை உத்­தி­யோக பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும்­வரை அந்­நி­று­வ­னத்தின் ஆலோ­ச­னை­களை அமுல்­ப­டுத்த முடி­யாது. அந்­நி­று­வ­னத்தின் பொரு­ளா­தார உத­வி­களும் தடைப்­படும். இவை­யெல்லாம் அர­சியல் உறு­திப்­பாடு இன்னும் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையே விளக்­கு­கின்­றன.

நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயே அர­சியல் உறு­திப்­பாடு இல்­லை­யென்றால் வெளியே அது இருக்­குமா? அது இல்­லாமல் இந்த இடைக்­கால அரசும் அதன் பிர­த­மரும் எடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மக்­களின் ஆத­ரவை எதிர்­பார்க்க முடி­யாது. எனவே ஒரு பொதுத் தேர்தலை விரைவில் நடத்­தாமல் உறு­தி­யான அர­சாங்­கத்தை நிலைப்­ப­டுத்த முடி­யாது.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி
பொதுத் தேர்தல்­ மூலம் அர­சாங்­க­மொன்றை அமைத்து அர­சியல் உறு­திப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­னாலும் பொரு­ளா­தார வளர்ச்சி காண்­ப­தற்கு ஆட்­சிக்­கு­வரும் அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தார அமைப்பில் அடிப்­படை மாற்­றங்­களைக் கொண்­டு­வரும் திற­னு­டை­ய­தாக இருக்­குமா என்­பது ஒரு கேள்விக் குறி. அறப்­போ­ராட்­டத்தின் ஓர் அடிப்­படைக் கோரிக்கை அவ்­வா­றான மாற்­றங்கள் வேண்டும் என்­பதே. சர்வதேச நிதி நிறு­வ­னத்தின் அனைத்து ஆலோ­ச­னை­களும் சந்தைப் பொரு­ளா­தாரம் தங்­கு­த­டை­யின்றி நடை­பெ­று­வ­தற்­கு­ரிய வழி­வ­கை­களை செப்­ப­னிட்டுக் கொடுப்­ப­தா­கவே அமையும். ஆனால் அந்த நிறு­வ­னமும் சில அடிப்­படை மாற்­றங்­களை உட­ன­டி­யாகக் கொண்­டு­வ­ராமல் பொரு­ளா­தா­ரத்தைச் சீர்­ப­டுத்த முடி­யாது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. உதா­ர­ண­மாக, ஊழல் ஒழிப்பு, இலங்கை விமான சேவை போன்ற அரச நிறு­வ­னங்­களின் சீர­மைப்பு, மாபி­யாக்­களின் ஒழிப்பு போன்­றவை தற்­போது இருக்கும் பொரு­ளா­தார அமைப்பின் சீர்­கே­டு­க­ளுக்கு தக்க சான்­றுகள். இந்த அமைப்­புக்குப் பாது­கா­வலர்களாக பல­முள்ள சக்­திகள் நாட்டில் இயங்­கு­கின்­றன. அந்தச் சக்­தி­களை எதிர்த்துப் போரா­டக்­கூ­டிய வலு­வுள்ள ஓர் அர­சாங்கம் மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டும்­வரை பொரு­ளா­தார வளர்ச்சி துரி­தப்­பட முடி­யாது. அந்த வலு ரணில் அர­சாங்­கத்­துக்கு கிடை­யாது. இதனை பின்­வரும் சம்­பவம் தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

இலங்கை மத்­திய வங்­கியின் புதிய ஆளுனர் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்ஹ ஒரு துணி­க­ர­மான வேண்­டு­கோளை அண்­மையில் விடுத்­துள்ளார். அதா­வது, நாடு எதிர்­கொண்­டுள்ள டொலர் நாணயப் பிரச்­சி­னையைப் போக்­கு­வ­தற்கு உள்­நாட்­டிலே அந்த நாண­யத்தைப் பதுக்கி வைத்­துள்­ளவர்கள் அவற்றை உட­ன­டி­யாக உள்­நாட்டு வங்­கி­களில் வைப்­புக்­க­ளா­கவோ அல்­லது அதி­கப்­ப­டி­யான மாற்று வீதத்தில் ரூபா­யா­கவோ வெளிக்­கொ­ண­ர­வேண்டும் என்­பதே அந்த வேண்­டுகோள். அதைச் செய்­யாத பட்­சத்தில் அரசு அந்தப் பதுக்­கல்­களை உட­ன­டி­யாகக் கைப்­பற்றி நாட்­டுக்­காகச் செல­வி­ட­வேண்டும் என்­பதும் அந்த வேண்­டு­கோளின் ஒரு பகுதி. இந்த வேண்­டு­கோளை நாட்டின் புதி­னப்­பத்­தி­ரி­கைகள் இது­வரை பிரபல்­யப்­ப­டுத்­தா­ததும், ரணிலின் அர­சாங்­கமும் அதைப்­பற்றி எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கா­ததும் மர்மமே. இந்த வேண்­டுகோள் நாட்டின் கடந்­த­காலப் பொரு­ளா­தார வர­லாற்றின் ஒரு முக்­கி­ய­மான சீர்­கேட்டை அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது.
பணம் பதுக்கல் ஊழலின் மற்­றுமோர் அங்கம். அதுவே மாபி­யாக்­களின் அதி­கா­ரத்­துக்கும் ஆணிவேர். சந்தைச் சக்­தி­களை வழி­ம­றித்து அவற்றை தங்­கு­த­டை­யின்றி இயங்­க­வி­டாமல் திசை­தி­ருப்பும் ஓர் ஆயு­தமே பணம் பதுக்கல். வரு­மா­ன­வரி இலா­கா­வுக்கு உண்­மை­யான வரு­மா­னத்தை மறைத்து பணத்தைப் பதுக்­கு­வது தேசத்­து­ரோகம். இத்­து­ரோ­கி­க­ளுக்குப் பாடம் புகட்­டு­வ­தற்­கா­கத்தான் 1970இல் கலா­நி­நிதி என். எம். பெரேரா அவர்கள் நிதி அமைச்­ச­ராகப் பணி­யாற்றும் போது 100, 500, 1000 ரூபா பண­நோட்­டு­களை செல்­லு­ப­டி­ய­ற்றன­வாக்கி அவற்றை வங்­கி­களில் சமர்ப்பித்துப் புதிய நோட்­டு­களைப் பெறு­மாறு கட்­டளை பிறப்­பித்தார். அதன் நோக்கம் பணப்­ப­துக்­கலை ஒழித்து வரு­மான வரிக்­க­ணக்­கு­களை சீர­மைப்­ப­தாகும். பணத்தை பதுக்கி வைத்­துக்­கொண்டு ஏழை­கள்போல் வெளியில் நட­மா­டிய எத்­த­னையோ பேர் இந்தத் திட்­டத்­தினால் பிடி­பட்­டனர். இப்­போது நந்­தலால் அவர்கள் குறி­வைத்­தி­ருப்­பது ரூபா நோட்­டு­க­ளை­யல்ல, டொலர் நோட்­டு­களை. அதனை இலங்கை அர­சாங்கம் செல்­லாக்­கா­சாக மாற்ற முடி­யாது. அது வெளி­நாட்டு நாணயம். ஆனால் சட்­டத்தின் துணை­யுடன் அவற்றை பதுக்­கி­யவர்களி­ட­மி­ருந்து அப­க­ரிக்க முடியும். இங்­கேதான் ரணில் அர­சாங்­கத்­திடம் ஒரு கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

அவருடைய அமைச்சர்களும் அவரின் அரசுக்கு ஆதரவு வழங்கும் ஏனைய பிரதிநிதிகளும் நாட்டுக்காகவே அதாவது தேசாபிமானப் பற்றினாலேயே அந்த ஆதரவை வழங்கியுள்ளதாகப் பறைசாற்றுகின்றனர். அவ்வாறானால் ஏன் பிரதமர் அவர்கள் இந்தத் தேசாபிமானிகளை தமது டொலர் இருக்கைகளைப்பற்றிய விபரங்களை வெளிப்படுத்துமாறு கேட்க முடியாது? நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் தமது டொலர் இருப்புகளைப்பற்றிய விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த அரசாங்கம் கட்டளை பிறப்பிக்க வேண்டும். அதே போன்று நாட்டிலுள்ள ஏனைய டொலர் பதுக்கிகளின் இருப்புகளையும் அரசாங்க அதிகாரிகளால் கைப்பற்றுவதற்கும் உடனடியாக கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு அபகரிக்கப்படும் டொலர்களால் மட்டும் நாட்டின் பிரச்சினை முற்றாகத் தீர்ந்துவிடப்போவதில்லை. ஆனால் ஊழலையும் மாபியாக்களையும் ஒழிப்பதற்கு இது ஓர் ஆரம்பமாக அமையும். அதைச் செயற்படுத்த இந்த அரசாங்கத்துக்குத் துணிவுண்டா என்பது சந்தேகமே.

அரசியல் அமைப்பிலும் பொருளாதார அமைப்பிலும் மாற்றம் வேண்டும் என்று அறப் போராளிகள் கேட்பதை ரணில் அரசாங்கம் ஆதரிப்பதாயின் அதனைச் செயலிலே காட்டுவதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம். இதையாவது சர்வகட்சி அரசாங்கம் சாதிக்குமா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.