மட்டக்களப்பில் சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்

காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் வேண்டுகோள்

0 675

அண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை சீர்குலைக்கும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.இவர்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சமாதான பேரவையின் தலைவர் யூ.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, அண்மையில் களுவங்கேணி பாடசாலை மாணவி ஒருவர் பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார் என்ற வதந்தியை பரப்பி சில தீய சக்திகள் குளிர்காய நினைக்கின்றனர். உண்மை அதுவன்று. கடந்த 29.12.2018 அன்று குறித்த மாணவி காத்தான்குடிக்கு தனியாக வருகை தந்து வீதியில் தடுமாறியதை அவதானித்த நபரொருவர் காத்தான்குடி சம்மேளனத்தின் சமூக நலன்புரி அமைப்புக்கு தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து உடனடியாக தலையிட்ட சம்மேளனம் இவ் யுவதியின் பாதுகாப்பை கருதி குறித்தவொரு பெண் சகோதரியின் வீட்டில் பாதுகாப்பாக தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தது.  மறுநாள் விஷேட ஆலோசனை கூட்டத்தை நடாத்தி மேற்படி மாணவியை விசாரித்தபோது, தான் தனது 12 வயதிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு அதை ஆராய்ந்து வந்ததாக கூறியதற்கேற்ப இவ்விடயம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனக்கருதிய சம்மேளனம் 01.01.2019 இல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி முறைப்பாடும் செய்ய வைத்ததுடன் பெற்றோருக்கும் தகவல் அனுப்பியது. தற்போது பொலிஸுக்கூடாக வைத்திய பரிசோதனையின் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை இவ்வாறிருக்க பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி அப்பாவி மக்களை மோத வைக்க முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலையில் இதுவரை எந்த பாடசாலையிலாவது முஸ்லிம் ஆசிரியர்கள் மதமாற்றம் செய்துள்ளதாக எந்தவொரு சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் மிகப் பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டிய காலம் எம்மை நோக்கி வரவிருக்கிறது. இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது. அரசியல் பதவியை அடைவதற்காக மக்களிடையே இனவாதத்தை தூண்டி வாக்குகளை கொள்ளையடிக்க சில தீய சக்திகள் களமிறங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இரண்டு சமூகமும் பிரிந்து நின்று செயற்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளை நாமே தலையில் சுமந்து அனுபவித்தோம். நம் இரண்டு சமூகத்தையும் திட்டமிட்டு மூன்றாம் சக்தி பிரித்ததையும் நாம் அனுபவித்துள்ளோம்.

மேற்சொன்ன குறித்த மாணவியின் விவகாரம் மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பில்  பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், மட்டக்களப்பு சர்வமத சமாதான பேரவை மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பன அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகின்றன. கடந்த 13.01. 2019 அன்று சம்மேளன மண்டபத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதோடு தீய சக்திகளின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.