ஒக்டோபர் 26 இல் நடந்தது அரசியல் சதி நடவடிக்கை?

விசாரணை செய்யுமாறு சி.ஐ.டி.க்கு முறைப்பாடு

0 581

சட்டரீதியான அரசாங்கமொன்றைக் கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியிலிருந்து அகற்றியமை தொடர்பில் விசாரணைகளை நடாத்தி,  அந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. புரவசி பலய மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில்  இந்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சி.ஐ.டி.  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

புரவசி பலய மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில் இந்த முறைப்பாடுகள் பேராசிரியர் சரத் விஜேசூரிய, பேராசிரியர் காமினி வெயங்கொட மற்றும் கே.டப்ளியூ. ஜனரஞ்ஜன சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே குறித்த முறைப்பாட்டின் மீது விசாரணைகளை ஆரம்பிப்பது, அது சார்ந்த சட்டபூர்வ தன்மை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாகஹமுல்ல மற்றும் பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் ஆராய்ந்து வருவதாக சி.ஐ.டி.யின் தகவல்கள் தெரிவித்தன.  இந்த முறைப்பாடுகள் சி.ஐ.டிக்கு கிடைக்கப்பெற்று  10 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் மிக விரைவில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

குரிப்பாக  இந்த சதி நடவடிக்கைகள் ஊடாக அம்பலத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பணத்துக்கு கொள்வனவு செய்தல் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தவும், சதியின் ஆரம்பமாக தாம் கருதும் நாமல் குமாரவின் ஜனாதிபதி, கோத்தா கொலை சதி விவகாரம் தொடர்பிலான வெளிப்படுத்தல் தொடர்பில் விசாரிக்கவும் இதன்போது கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி, கோத்தா கொலைசதி விவகாரத்தில் ஏற்கனவே நாமல் குமாரவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அவ்விசாரணைகளில் அவர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியது அரசியல் அல்லது அது சார்ந்த சதி விவகாரமொன்றின் நிக்ழச்சி நிரலுக்கு அமையவா எனவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் தகவல்கள் தெரிவித்தன.

எதிர்காலத்தில் இவ்வாறான சதி நடவடிக்கைகள் இடம்பெறாமலிருப்பதை உறுதிசெய்ய இந்த அரசியல்சதி குறித்து விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சி.ஐ.டி. முறைப்பாட்டில் முறைப்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.