பூகோள முதலாளித்துவத்தின் பாதுகாவலனே சர்வதேச நாணய நிதி

0 180

(இக்­கட்­டுரை பொரு­ளியல் கற்கும் மாண­வர்­க­ளுக்­காக வரை­யப்­பட்­டது. இது பல மணித்­தி­யாலப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­களின் சுருக்கம். இலங்­கையை மையப்­ப­டுத்தி விளக்­கு­கி­றது.)

சுதந்­திர இலங்­கை­யின் ­வ­ர­லாற்­றிலே என்றும் ஏற்­ப­டாத ஒரு பொரு­ளா­தார வங்­கு­ரோத்தை 2022 இல் இலங்கை அனு­ப­விக்கத் தொடங்­கி­யதால் பதி­னே­ழா­வது முறை­யாக சர்­வ­தேச நாணய நிதியின் கடன் உத­வி­யையும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி சம்­பந்­த­மான ஆலோ­ச­னை­க­ளையும் இலங்கை அரசு நாட­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. மொத்தம் சுமார் மூவா­யிரம் கோடி டொலர்­களை ஒன்­பது தவ­ணை­களில் கட­னாக வழங்க இணங்­கிய அந்­நிதி ஒவ்­வொரு தவ­ணையும் கடனின் ஒரு பகு­தியைப் பெறுமுன் அது சிபார்சு செய்யும் சில நட­வ­டிக்­கை­களை அரசு நிறை­வேற்றி இருக்க வேண்டும் என்றும் அது எதிர்­பார்க்­கி­றது. அதற்­கி­ணங்க இலங்கை அரசும் தனது வரு­டாந்த வரவு செலவு அறிக்­கை­களை தயார் செய்­ய­வேண்­டிய கட்­டாயம் ஏற்­ப­ட­லா­யிற்று. 2022-–23, 2023-–24 வரவு செலவு அறிக்­கைகள் அவ்­வாறு தயா­ரிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­வையே. இருந்தும் சர்­வ­தேச நாணய நிதி நிறு­வ­னத்தின் உத­வியும் ஆலோ­ச­னை­களும் இடிந்து விழுந்து கிடக்கும் இலங்கைப் பொரு­ளா­தாரக் கோட்­டையை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யுமா? இதற்கு முன்­னரும் சுமார் 35 குறைவு விருத்தி நாடுகள் தமது பொரு­ளா­தாரச் சரிவை நிறுத்த அந்­நி­தியின் உத­வி­யைப்­பெற்று அதன் கட்­ட­ளை­க­ளுக்குப் பணிந்து முயற்­சி­களை மேற்­கொண்­டன. ஆனால் அவை தொடர்ந்தும் குறை­வு­ விருத்தி நாடு­க­ளா­கவே இருப்­ப­தேனோ? இவ்­வி­னா­வுக்­கு­ரிய விடையை அந்­நிதி நிறு­வனம் அமைக்­கப்­பட்ட நோக்­கத்தை விளங்­கு­வ­தன்­மூலம் புரிந்து கொள்­ளலாம்.

1929ல் ஆரம்­பித்த உலகப் பொரு­ளா­தார மந்தம் வளர்ச்­சி­கண்ட பல பொரு­ளா­தா­ரங்­களைச் சீர­ழித்து 1939வரை நீடிக்க, அதனைத் தொடர்ந்து இரண்­டா­வது உலகப் போர் ஆரம்­ப­மாகி அமெ­ரிக்கா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகள் எல்­லா­வற்­றையும் சீர்­கு­லைத்து 1944ல் முடி­வ­டைய, பொது­வு­ட­மை­வாத சோவியத் தலை­மை­யி­லான உல­குக்கும் தனி­யு­டை­மை­வாத அமெ­ரிக்கா தலை­மை­யி­லான சந்தைப் பொரு­ளா­தார உல­குக்­கு­மி­டையே பனிப்போர் ஆரம்­ப­மா­கி­யது. அந்தச் சூழலில் சந்தைப் பொரு­ளா­தா­ரங்கள் சரிந்­து­வி­டாமல் இருப்­ப­தற்கும் வறிய நாடுகள் பொது­வு­ட­மை­வாதக் கொள்­கை­களைத் தழுவி சோவியத் தலை­மையை நாடாமல் இருப்­ப­தற்­கு­மாக அமெ­ரிக்­காவின் தலை­மையில் சில நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

முத­லா­வ­தாக, 1944ல் அதா­வது யுத்தம் நடந்து கொண்­டி­ருக்­கும்­போதே அமெ­ரிக்­காவின் பிரட்­டன்வூட்ஸ் என்னும் நகரின் உண­வு­வி­டுதி ஒன்றில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, கனடா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்­தி­ரே­லியா அடங்­கிய 44 நாடு­களின் 730 பிர­தி­நி­தி­க­ளுடன் ஒரு மகா­நாடு நடை­பெற்­றது. அதில் பல பொரு­ளியல், நிதி­யியல் நிபு­ணர்கள் பங்­கு­பற்­றினர். அவர்­களுள் ஒரு­வரின் பெயரை பொரு­ளியல் என்றும் மறக்­காது. அவர்தான் இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஜோன் மெய்னாட் கீன்ஸ். அந்த நிபு­ணர்­களின் சிபார்சில் இரண்டு சர்­வ­தேச நிறு­வ­னங்கள் தோற்­று­விக்­கப்­பட்­டன. அவற்றுள் ஒன்­றுதான் சர்­வ­தேச நாணய நிதி (International Monetary Fund). அதற்கு வழங்­கப்­பட்ட கடமை சந்தைப் பொரு­ளா­தா­ர நாடுகள் சென்­மதி நிலு­வையில் தொடர்ச்­சி­யாகப் பற்­றாக்­குறை கண்டு வங்­கு­ரோத்­த­டையும் ஆபத்தில் சிக்­கி­யி­ருந்தால் அவற்­றிற்கு குறுங்­காலக் கடன்­வ­ழங்கி மீண்டும் முத­லா­ளித்­துவக் கடலில் நீந்­து­வ­தற்கு வழி­செய்­த­லாகும். அடுத்த நிறு­வனம் இன்று உலக வங்­கி­யாக இயங்கும் அன்­றைய புன­ருத்­தா­ரண அபி­வி­ருத்திச் சர்­வ­தேச வங்கி (International Bank for Reconstruction and Development). அதன் கடமை வறிய சந்தைப் பொரு­ளா­தார நாடு­களின் வளர்ச்­சிக்­கான நீண்­ட­கால நிதி­யு­தவி வழங்­குதல். ஆனால் அந்த உத­வியால் அதிக இலாபம் பெற்­றவை வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களே என்­பது வேறு விடயம். இவற்­றுடன் 1964ல் ஐக்­கிய நாடுகள் சபையின் ஓர் அங்­க­மாக வர்த்­தக அபி­வி­ருத்­திக்­கான ஐக்­கி­ய­நா­டுகள் மகா­நாடும் (United Nations Conference on Trade and Development) தோற்­று­விக்­கப்­பட்டு அது இன்று உலக வாத்­தக நிறு­வ­ன­மாக (World Trade Organization) இயங்­கு­கி­றது. அதன் ­க­டமை முத­லா­ளித்­துவ சர்­வ­தேச வர்த்­தகம் தங்­கு­த­டை­க­ளின்றிச் சுழி­க­ளற்ற ஒரு சமுத்­தி­ர­மாகச் செயற்­படச் செய்­வதே. சுருக்­க­மாகச் சொன்னால் இவை மூன்றும் முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தார உலகின் முக்­கிய தூண்கள். இம்­மூன்­றி­னதும் பிர­தான கடமை முத­லா­ளித்­து­வத்தைக் கட்­டிக்­காப்­பது.

மேலே குறிப்­பட்ட மூன்று நிறு­வ­னங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்ட பனிப்போர் சூழல் இன்­றில்லை. 1980க்குப் பின்னர் பொது­வு­டமைப் பொரு­ளா­தா­ரங்கள் வலு­வி­ழக்கத் தொடங்கி பதி­னொரு ஆண்­டு­களின் பின்; 1991ல் பொது­வு­ட­மையின் தாய­க­மாக விளங்­கிய சோவியத் அமைப்பே சீர்­கு­லை­ய­லா­யிற்று. அதற்கு முன்பே சீனாவும் சந்தைப் பொரு­ளா­தா­ரத்தைச் சீன முகத்­துடன் தழுவத் தொடங்­கிற்று. அதன்­பின்னர் குறை­வு­வி­ருத்தி நாடுகள் பொரு­ளா­தார வளர்ச்­சி­ காண ஒரே வழி முத­லா­ளித்­துவ அடிப்­ப­டையில் அமைந்த தடை­க­ளற்ற சந்தைப் பொரு­ளா­தா­ரமே என்ற ஒரு நிலைப்­பாடு உரு­வா­கிற்று. அதனால் முத­லா­ளித்­துவம் ஒரு பூகோள தத்­து­வ­மாக இன்று மாறி­யுள்­ளது. 1978லிருந்து இலங்­கையும் திறந்த சந்தைப் பொரு­ளா­தார முத­லா­ளித்துப் பாதை­யிலே கால­டி ­வைத்­தது. ஆனால், ஊழல் நிறைந்த இன­வாத அர­சியல் அமைப்பின் மடியில் தடை­யற்ற சந்தைப் பொரு­ளா­தார அமைப்பைத் தவ­ழ­விட்­டதன் பலனை இன்று நாடு அனு­ப­விக்­கின்­றது. அதனைச் சீர்­ப­டுத்தும் பொறுப்பு சர்­வ­தேச நிதி நிறு­வ­னத்தின் தலையில் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் ஒன்­று­மட்டும் உண்மை. இலங்கை ஆட்­சி­ய­மைப்பின் அடிப்­படைப் பேரி­ன­வாதச் சித்­தாந்தம் நீக்­கப்­பட்டு இன­ம­த­வா­த­மற்ற ஜன­நா­யகச் சித்­தாந்­தத்தில் அர­சியல் யாப்­பொன்று நடை­மு­றைக்கு வரா­விடில் சர்­வ­தேச நாணய நிதியின் பொரு­ளா­தாரப் பரி­காரம் நிரந்­தர வளர்ச்­சியைத் தராது. அந்த நிதி நிறு­வனம் பதி­னெட்­டா­வது முறையும் தலை­யிட வேண்­டிய அவ­சியம் வெகு தூரத்தில் இல்லை.

முத­லா­ளித்­து­வத்தின் இன்­றைய பூகோளக் கதா­நா­யகன் அமெ­ரிக்கா. அந்த அமெ­ரிக்­காவின் ஏகா­தி­பத்­தியப் பர­வ­லுக்கும் முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தாரப் பூகோ­ள­ம­ய­வாக்­கத்­துக்கும் இடையே இணை­பி­ரி­யாத ஓர் உற­வுண்டு. இந்த உற­வையும் வலுப்­ப­டுத்தப் பாடு­படும் சர்­வ­தேச தாப­னங்­களுள் சர்­வ­தேச நாணய நிதி முக்­கிய இடத்தை வகிக்­கி­றது.

முத­லா­ளித்­து­வத்தின் பொரு­ளா­தார வளர்ச்சிக் கொள்கை நுகர்­வோ­னுக்கும் உற்­பத்­தி­யா­ள­னுக்கும் இடையே பால­மாக விளங்கும் சந்தை எந்­தத்­த­டை­க­ளு­மின்றி இயங்­க­வேண்டும் என்­பதே. அவ்­வாறு இயங்­கினால் குறைந்த செலவில் நிறைந்த அளவில் உற்­பத்­தி­பெ­ருகி மலிந்த விலையில் நுகர்­வோ­ருக்கு விற்­கப்­படும் என்­பதே அந்தக் கொள்­கையின் தாரக மந்­திரம். பொரு­ளி­யலின் நிறை­போட்டித் தத்­துவம் இதனை துல்­லி­ய­மாக விளக்கும். இதில் நுகர்­வோ­னையும் உற்­பத்­தி­யா­ள­னையும் இணைப்­பது பணம். ஆகவே பணம் ஒரு பண்­ட­மாற்று ஊடகம். ஆனால் பணம் ஒரு ஊட­க­மாக மட்டும் பயன்­ப­ட­வில்லை. கால­வோட்­டத்தில் பொரு­ளா­தா­ரங்கள் பன்­மு­கப்­பட்­ட­வை­யாக மாற பணமும் ஒரு செல்­வத்­தி­ரட்டு என்ற உரு­வத்­தை­யெ­டுத்து பண­முள்­ளவன் சந்­தை­யையே தனது அடி­மை­யாக்­கலாம் என்ற ஒரு நிலை தோன்­ற­லா­யிற்று. ஆகவே உற்­பத்­தி­யை­விட பணம் திரட்­டு­வ­தி­லேயே முயற்­சி­யா­ளர்கள் தமது சிந்­த­னை­யையும் செய­லையும் முடக்­க­லா­யினர். பண்­ட­மாற்றுப் பரி­வர்த்­த­னையை நீக்கி பொருள்­க­ளி­னதும் சேவை­க­ளி­னதும் உற்­பத்­தியை இல­கு­வாக்க எழுந்த பணம் அந்த உற்­பத்­தி­யையே விழுங்­கி­யுள்­ளதால் பொரு­ளா­தா­ரங்கள் பண­வா­தா­ரங்­க­ளாக மாறின. வங்­கிகள் அந்த மாற்­றத்தை முன்­னின்று வழி­ந­டத்­தின என்றால் அது மிகை­யா­காது. அதை இங்கே விரி­வாக விளக்க கட்­டுரை நீளம் இடந்­த­ராது. சுருக்­க­மாகச் சொன்னால் மனித முயற்சி உற்­பத்தி என்ற பெயரில் இன்று பணத்­தையே உற்­பத்தி செய்­கி­றது. ஆகவே முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தாரம் பணம் திரட்டும் ஒரு பொரு­ளா­தாரம் என்­பது புல­னா­க­வில்­லையா? முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தா­ரத்தின் உயிர் நாடி­யாக விளங்­கு­வது பணமும் அதனைத் திரட்­டு­வோனும். இந்தப் பின்­ன­ணியில் சர்­வ­தேச நாணய நிதி இலங்­கையின் வங்­கு­ரோத்தை நீக்கி மீண்டும் துரித வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தக் கையாளும் வகை­களை ஆராய்வோம்.

சர்­வ­தேச நாணய நிதியின் பார்­வையில் இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர­ழிவைத் தீர்க்க வேண்­டு­மாயின் பணக்­கார வர்க்­கத்தைப் பாது­காக்க வேண்டும். ஆதலால் இலங்கை மத்­திய வங்­கி­யி­னூ­டாக நாட்டின் நிதித் துறையை முதலில் சீர்­ப­டுத்­து­வ­தி­லேயே அதன் கவனம் சென்­றது. அதற்கு முதற்­ப­டி­யாக அர­சாங்க வரவு செலவில் சிக்­கனம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­மானம் அதி­க­ரித்துச் செலவு குறைக்­கப்­பட வேண்­டு­மென அது ஆலோ­சனை வழங்­கி­யது. ஏனெனில் வர­வுக்கு மிஞ்­சிய சென­வி­னங்­களைச் சமா­ளிக்க திறை­சேரி உண்­டியல் மூலம் உள்­நாட்டு வங்­கி­க­ளிடம் இருந்தோ வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தோ கடன்­பெறும் தேவை ஏற்­பட்டு நாடே கட­னா­ளி­யாக மாறி­யுள்­ளது. மேலும் அச்­செ­ல­வி­னங்கள் கட்­டுப்­பா­டின்றிப் பெரு­கி­யுள்ள அரச நிர்­வா­கி­களின் ஊதி­யங்­களை வழங்­கு­வ­தற்கும், ஓய்­வு­பெற்ற அரச ஊழி­யர்­களின் இளைப்­பாற்றுச் சம்­பளம் வழங்­கு­வ­தற்கும், தமி­ழி­னத்தை எதிர்த்துப் போரா­ட­வென வளர்த்த ஓர் இரா­ணு­வப்­ப­டையை போர் முடிந்­த­பின்னும் வைத்­துக்­கொண்டு அதன் செலவைச் சமா­ளிப்­ப­தற்கும், கல்வி, சுகா­தாரம் போன்ற பொதுச் சேவை­களை வழங்­கு­வ­தற்கும், இலங்கை விமா­னச்­சேவை, மின்­சாரக் கூட்­டுத்­தா­பனம் போன்ற ஊழல்­நி­றைந்த பொதுத்­துறை நிறு­வ­னங்­களின் நஷ்­டத்தை ஈடு­செய்­வ­தற்­கு­மாகச் செல­வ­ழிக்­கப்­ப­டு­வதால் அந்தச் செல­வி­னங்­களைக் கட்­டுப்­ப­டுத்தி வரி­வ­ரு­மா­னங்­களைக் கூட்­ட­வேண்டும். இந்த ஆலோ­ச­னை­களின் பின்­பு­லத்தில் பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனியார் துறை­யிடம் கொடுத்­து­விட்டால் அவை இலாப நோக்­கத்தை மைய­மா­கக்­கொண்டு நிர்­வ­கிக்­கப்­பட்டு திற­மை­யுடன் இயங்கும் என்­பது முத­லா­ளித்­து­வத்தின் முடிவு. சர்­வ­தேச நாணய நிதியும் அதையே வற்­பு­றுத்­தி­யது. தனியார் மயப்­ப­டுத்தல் என்ற கோஷம் இந்தத் தத்­து­வத்­தையே உள்­ள­டக்­கி­யுள்­ளது. ஆகவே உள்­நாட்டு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளிடம் இலங்­கையின் பொதுச் சொத்­துகள் கைமா­று­வ­தையே சர்­வ­தேச நாணய நிதி விரும்­பு­கி­றது என்­பது புல­னா­க­வில்­லையா?

அர­சாங்க வரு­மா­னத்தை எப்­படி அதி­க­ரிப்­பது? ஒரே வார்த்­தையில் கூறினால், வரி­களால். அர­சாங்கம் மக்­க­ளி­ட­மி­ருந்து திரட்டும் வரி­களைக் கொண்டே தனது செல­வி­னங்­களைச் சமா­ளிக்க வேண்டும் என்­பது நிதியின் ஆலோ­சனை. அதில் உண்­மையும் உண்டு, ஆனால் பிரச்­சினை யாரி­ட­மி­ருந்து அந்த வரி­களைத் திரட்­டு­வது என்­ப­துதான். இங்­கேதான் சர்­வ­தேச நாண­ய­நி­தியின் முக­மூடி களை­யப்­பட்டு அதன் உண்­மை­யான முத­லா­ளித்­துவச் சொரூபம் வெளிப்­ப­டு­கி­றது. முத­லா­ளித்­து­வத்தின் உயிர்­நாடி பணக்­கார வர்க்கம். அது பொன் முட்டை இடும் வாத்துப் பறவை அல்­லவா? அந்த வர்க்­கத்தின் முத­லீ­டு­க­ளி­னால்­தானே பொரு­ளா­தாரம் இயங்­கு­கி­றது? வளர்­கி­றது? மக்­களும் நலன் பெறு­கின்­றனர்? ஆகவே அதனைப் பேணிப் பாது­காக்க வேண்டும். இந்த உபா­யத்­தைப்­பற்றி அமெ­ரிக்கப் பொரு­ளியல் நிபுணர் கெனத் கல்­பிரைத் பின்­வ­ரு­மாறு வரு­ணித்தார். “குதி­ரைக்குக் கொள்­ளுப்­போட்டால் அதன் பின் துவா­ரத்தால் தள்­ளப்­படும் சாணம் சில பற­வை­க­ளுக்கு உண­வா­கு­வ­து­போன்­றது.” ஆதலால் செல்­வந்­தர்­களின் சொத்­து­க­ளுக்கும் வரு­மா­னத்­துக்கும் பங்கம் ஏற்­ப­டாமல் வரி­களைத் திரட்ட வேண்டும். அதற்கு ஒரே­வழி வரு­மான வரி, சொத்து வரி போன்ற நேர்­வ­ரி­களைக் குறைத்து நேரில்­வ­ரி­களை அதி­க­ரித்தல். அதா­வது சாதா­ரண நுகர்வோர் கொள்­வ­னவு செய்யும் பொருள்­கள்­மீது வரி விதித்தல். இந்த வரி­களால் பொது­வாக எல்லாப் பொருள்­களின் விலை­க­ளுமே உயர்ந்­துள்­ளன. எப்­படி என்­ப­தற்கு ஓர் உதா­ரணம்: ஒரு பச்சை மிளகாய் 15 ரூபா­வுக்கும் ஒரு கிலோ முருங்­கக்காய் 2,000 ரூபா­வுக்கும் எந்தக் காலத்தில் ஐயா இலங்­கையில் விற்­கப்­பட்­டது? இந்த விலை­யேற்­றத்­துக்கு முக்­கிய காரணம் அர­சாங்­கத்தின் நேரில் வரிகள். மரக்­கறி வகை­க­ளுக்கு இந்த வரிகள் விதிக்­கப்­ப­டா­விட்­டாலும் விதிக்­கப்­பட்ட பொருள்­களின் விலை உயர்வை அள­வு­கோ­லாகக் கொண்டு வியா­பாரி எல்லாப் பொருள்­க­ளுக்­குமே விலையை உயர்த்­தி­யுள்ளான். ஏன் என்று அவ­னிடம் கேட்டால் உற்­பத்தி குறைந்து விட்­டது அல்­லது டொலர் மதிப்பு அதி­க­ரித்­து­விட்­ட­தென சம்­பந்­த­மில்­லாத கார­ணங்­களை முன்­வைக்­கிறான். அதன் விளைவால் சாதா­ரண கூலித்­தொ­ழி­லா­ளி­கூட பச்­சை­மி­ளகாய் வாங்­கும்­போது வரி செலுத்­து­கிறான். அதி­லி­ருந்து தப்­பு­வ­தற்கு அவ­னுக்குத் தெரிந்த ஒரே வழி அந்த மிளகாய் இல்­லாமல் கறி­ச­மைப்­பது, அல்­லது கறியே இல்­லாமல் சோற்றை மட்டும் உண்­பது. இந்த வரியின் பழுவை நாளொன்­றுக்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏன் இலட்­சக்­க­ணக்­கான ரூபா வரு­மா­னத்தைப் பெறும் பணக்­கார வர்க்கம் உண­ராது. இது­போன்ற ஆயி­ரக்­க­ணக்­கான சம்­ப­வங்­களை நாளாந்தம் இலங்­கை­யி­லி­ருந்து அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.எனவே எந்த வர்க்­கத்தின் நல­னுக்­காக சர்­வ­தேச நாணய நிதி செயற்­ப­டு­கின்­றது என்­பதை இன்னும் விளக்க வேண்­டுமா?

ஆனால் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி பல­வி­த­மான நெருக்­க­டி­களுள் ஒன்று. அர­சாங்க ஊழல், இன­வாதம், பொறுப்­பற்ற ஆட்சி, நிர்­வாகச் சீர்­கேடு என்ற பல பிரச்­சி­னை­களால் உரு­வா­னதே பொரு­ளா­தார நெருக்­கடி. இலங்கை அரசு சர்­வ­தேச நாணய நிதியை நாடி­ய­போது ஏன் முதலில் மேற்­கூ­றிய பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­விட்டு வாருங்கள். உதவி தருவோம் என்று கூற­வில்லை? ஏனெனில் தவித்த முயலை அடிப்­பது இலேசு என்று முதியோர் கூறு­வது போல அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் வலைக்குள் சிக்­க­வைக்க இது­வல்­லவா தருணம்? நழுவ விட­லாமா? இந்து சமுத்­தி­ரத்­தினுள் பெருகும் சீனாவின் ஆதிக்­கத்தை மட்­டுப்­ப­டுத்த இலங்கை போன்ற கேந்­தி­ர­மான நாடு­களை மேற்­கி­னுடன் அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன் இணைக்கும் தந்திரத்தின் ஒரு அமிசமே அந்நிதியின் பொருளாதாரத் தீர்வு. ஆகவே சர்வதேச நாணய நிதியின் தலையீட்டை வெறுமனே பொருளியல் கண்கொண்டுமட்டும் நோக்கக் கூடாது. அது முதலாளித்துவத்தினதும் அதன் சர்வலோகக் கதாநாயகன் அமெரிக்காவினதும் ஏகாதிபத்தியத்தின் இன்னொரு பக்கம் என்பதை மறுத்தலாகாது.

இந்த நிதி நிறுவனம் முதலாளித்துவத்தின் பங்காளி என்பதற்கு இன்னுமொரு சான்று இலங்கை அரசு உதவி கேட்டபோது அது முன்வைத்த முதலாவது நிபந்தனை கடன்காரர்களுடன் முதலில் ஒரு சமரசத்துக்கு வரவேண்டும் என்பதாகும். அந்தக் கடன்காரர்கள் யார்? சீனா ஒரு புறமிருக்க பாரிஸ் கிளப் என்றழைக்கப்படும் முதலாளித்துவ மேற்கு நிதி நிறுவனங்களின் கூட்டு. ஆகவே சர்வதேச நாணயநிதி யாரின் நலனை முன்வைத்து இலங்கைக்கு உதவ முன்வந்தது என்பதை இன்னுமா விளக்க வேண்டும்? ஏன் அந்தக்கடனை இறுக்கத் தேவையில்லை என்று கூறியிருக்க முடியாது? ஏனெனில் அது முதலாளித்துவ உலகுக்கே சாவுமணி அடிப்பது போலாகிவிடும்.

எனவேதான் இன்றைய எதிர்க்கட்சிகளுள் பெரும்பாலானவை கூறுவதுபோன்று சர்வதேச நாணய நிதியின் சில நிபந்தனைகளை மட்டும் மறுபரிசீலனை செய்து நிதியின் ஒத்துழைப்புடன் மாற்றங்கள் கொண்டுவந்து அதே நிதியின் பொருளாதார மீட்சித் திட்டத்தை அமுல் நடத்துவதால் இலங்கையின் பொருளாதாரச் சீரழிவை நிரந்தரமாக நீக்க முடியாது. நாட்டின் அடிப்படை அரசியல் தத்துவத்தையே மாற்றி அரகலய இளைஞர் கோரியது போன்று ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே அதற்கான ஒரே வழி. அது என்ன அமைப்பு என்பதை எனது கொழும்பு தெலிகிராப் ஆங்கிலக் கட்டுரைகள் விளக்கியுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.