கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்

0 972
  • எம்.எம்.ஏ.ஸமட்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு  காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

21ஆம் நூற்றாண்டைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, துயரக் காவியமாக பதியச் செய்த 2004ஆம் ஆண்டின் சுனாமிக் கடற்கோள் பேரனர்த்தத்தின் பெரும் துயர நினைவுகள், அத்துயரை எதிர்கொண்டவர்களினதும் அவற்றை நேரில் கண்டவர்களினதும்  உள்ளங்களை ஒவ்வொரு வருடத்தினதும் டிசம்பர் 26ஆம் திகதியில்  சஞ்சரிக்கச் செய்யும்.  எதிர்வரும் 26ஆம் திகதியிலும் அந்நினைவலைகள் இதயங்களை கவலைகளினால் நனைக்கும் என்பது நிச்சயம்.

2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்நூற்றாண்டின் மறக்க முடியாத ஒரு நாள். சுனாமிப் பேரலை என பெயர் சூட்டப்பட்டு உலகத்தையே அதிர வைத்த நாள். ஆயிரமாயிரம் கனவுகளோடு பல உயிர்கள் கடலில் சங்கமித்த நாள். 14 வருடங்கள் ஆகியும் இன்னும் அதன் வடுக்கள் மாறவில்லை. அதன் எச்சங்கள் இன்னும் சில பிரதேசங்களில் எஞ்சியிருக்கிறது. மக்கள் வடிவில் மனிதாபிமானம் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்நாளின் பின்னர் இந்ந மண்ணில் பிறந்தவர்கள் அந்நாள் பற்றியும் சுனாமிப் பேரலை மனித வாழ்வில் ஏற்படுத்திய காயங்கள், அதன் வடுக்கள் பற்றிம் அறிந்து கொள்வதும் அவசியம்தான. அந்தவகையில், சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை சு + னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுகப் பேரலை ஆகும். சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்தச் சுனாமி.

கடலுக்கடியில் உருவாகும் பூகம்பத்தால் சுனாமி ஏற்படுகிறது. அதாவது பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து அழிகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.

இறைவனின் படைப்புக்களில் ஒன்றுதான் இந்தப்பூமி. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்தான் (புவித்தகடு) இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால், கண்டங்களாக பிரியப்பிரிய அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு பிளேட்கள் உருவாகின. இந்தப் பிளேட்கள் மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள்தான். இதைத்தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறான பிளேட்களில் யுரேஷின் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும் இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் கடலுக்கடியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. அதனால் தோன்றிய பேரலைகள்தான் இந்துமாக்கடலில் சுனாமிக் கடற்கோலை ஏற்படுத்தியது.

2004ஆம் டிசம்பர் மாதம் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்திரவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனிசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தது. சுமார் 2,20,000 உயிர்களை இச்சுனாமி பேரலைகள்  காவுகொண்டன.

சர்வதேச புள்ளிவிபரங்களின்படி சுனாமியினால் அதிகளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தோனேசியாவே முதலிடம் உள்ளது. இந்தோனேசியாவில் 1,26,473 பேரையும், இந்தியாவில் 10,749 பேரயும் தாய்லாந்தில் 5,595 பேரையும் சுனாமிப் பேரலைகள் பறித்தெடுத்தன. இலங்கையில் சுனாமியினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காணமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 36,594 ஆகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு தென், மேல், வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமியினால் பலமாகத் தாக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம், கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேங்கள் சுனாமிப் பேரலைகளினால் மிக அதிகமாகப் பாதிக்கபட்டன.

புள்ளிவிபரங்களின்படி மாவட்ட மட்டத்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது தென் மாகாணத்தின் காலி மாவட்டதில் 1,785 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1,102 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 1,153 பேரும், வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 901 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,652 பேரும் அடங்குகினறனர்.

 

சுனாமியும் அம்பாறை மாவட்டமும்

 

சுனாமியினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் 13 மாவட்டங்களிலும் அதிகளவிலான இழப்பைச் எதிர்கொண்டது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டமாகும். அதிலும் கல்முனைத் தேர்தல் தொகுதியே உச்ச உயிர் மற்றும் சொத்தழிவை எதிர்கொண்டது. கல்முனைக் கரையோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவு பாதிக்கப்பட்டனர்.

தொகை மதிப்பீட்டுப் புள்ளி விபரத்திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் படி அம்பாறை மாவட்டத்தில் சுனாமிப் பேரலையினால் 21,201 வீடுகள் முற்றாகவும் பகுதியாகவும் சேதமடைந்தது. இதில் அதிகளவு பாதிக்கபட்ட வீடுகளைக் கொண்ட பிரதேசமும் கல்முனைப் பிரதேசம்தான்.

இக்கல்முனைப் பிரதேசத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிராமங்களில்  சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத்தொகுதி, கல்முனைக்குடி கிறீன் பீல்ட் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்டிருப்பு, மருதமுனை சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த வீட்டுத்தொகுதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டன. இருப்பினும், இவ்வீட்டுத் திட்டங்களுக்கான போதிய  அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை தற்போதும் கேட்கக் கூடியதாகவுள்ள நிலையில் கல்முனை கீறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திலுள்ள 10க்கு மேற்பட்ட வீடுகளும், மருதமுனை வீட்டுத்திட்டத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளும் உரிய பயனாளிகளுக்கு இன்னுமே வழங்கப்பாடதுள்ளது.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளை அம்மக்களுக்கு அல்லது வீடற்றோருக்கு வழங்காது காலம் கடத்தப்படுவதிலுள்ள பின்னணிகள் என்ன என்பது உரிய தரப்புக்களினால் தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகும். ஏனெனில், இப்பிரதேசங்களில் வாழும் ஏழைகள் பலர் குடியிருப்பதற்கு வீடின்றி வாடகை வீடுகளில் தங்களது வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கையில் இவ்வீட்டுத்திட்டங்களிலுள்ள வீடுகள் பயன்படுத்தப்படாது பாழடைந்து கிடப்பது எத்தைகய நியாயத்தின் பெயரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும்.

இந்நிலையில்தான் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட  முஸ்லிம்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் கட்டப்பட்ட 500 வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாது எவ்வித பயனுமின்றி பற்றைகள் வளர்ந்து காடுகளாக ஏறக்குறைய 10 வருடங்களாக காட்சியளிப்பதுடன் அவ்வீடுகள் கரைந்து கொண்டுமிருக்கின்றன.

 

கரைதலின் பின்னணி

 

அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசமென்பதால் சுனாமியினால் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் முஸ்லிம்கள்தான். புள்ளிவிபரங்களின் பிரகாரம், இம்மாவட்டத்தில் ஏறக்குறை 20,980 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு இழப்புக்களை இம்மாவட்ட முஸ்லிம்கள் எதிர் கொண்டிருந்தும் இம்மக்கள் வாழ்ந்த ஏறக்குறைய 11,376 வீடுகள் சுனாமியினால் முற்றாக அழிக்கப்பட்டன. அத்துடன் 5,970 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்குள்ளானது. இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 11 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலைப் பிரதேசத்தில் ஏறக்குறைய 40 ஏக்கர் காணியில் சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தினால் இலங்கை நாணயப் பெறுமதியில் 552 மில்லியன் நிதியில் ஆண், பெண்களுக்கான தனியான பாடசாலைகள், வைத்தியசாலை, சந்தைத் தொகுதி, பொது பைவங்களுக்கான மண்டபம், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் நிறுத்தும் சாலையும் கொண்டதொரு நவீன நகரமாக நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வீட்டுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்வீட்டுத்திட்டத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதைய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார் என்பதும் அவரின் முயற்சியினாலேயே இவ்வீட்டுத்திட்டம் இப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டது என்பதும் நினைவு கூறத்தக்கது.

இத்தருணத்தில்தான் ஜாதிக ஹெல உறுமய, நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வழக்கின் பிரகாரம் நுரைச்சோலை வீடுகளை தனி இனமொன்றுக்கு வழங்கக்கூடாது என்றும் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி இவ்வீடுகள் நீதியாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினால் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பு வழங்கப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் இவ்வீடுகள் இன்று வரை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்படுவதன் பின்னணிகள் பல காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வீட்டுத்திட்டம் தீகவாபி புனித பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள்  உள்ளதால் இவ்வீட்டுத்திட்டம் தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரம் சென்று விடக் கூடாது அல்லது இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேறக் கூடாது என்பதில் அம்பாறைப் பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் மிகவும் அவதானமாக இருந்து வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 2015ல் உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் மூலம் இந்த வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று அம்மக்கள் எதிர்பார்த்தார்கள். ஏனெனில், நல்லாட்சி உருவாவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்களும் இம்மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம்களும் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு வாக்களித்தும் இம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வில்லை.

அமைச்சுப் பதவிகளையும், வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளையும், நிறுவனத்தலைவர்கள் பதவிகளையும் தங்களுக்கும், தங்களது கட்சிக் காரர்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சியளவிற்கு சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த இம்மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பெற்றுக்கொடுக்க  ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற இம்மக்களின் குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லாமலில்லை.

அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குடியேறி வாழ்வதற்கு மேட்டு நிலப் பிரதேசங்கள் உள்ள போதிலும் முஸ்லிம்களுக்கு அவ்வாறன நிலப்பரப்பு இல்லை என்பது இம்மாவட்டத்திலுள்ள  முஸ்லிம்களின் நீண்ட நாள் ஏக்கமாகவுள்ளது.

பொத்துவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை,  நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வீடுகளைக் கட்டுவதற்கும் வியாபார நடவடிக்கைளுக்கான வர்த்தக நிலையங்களைக் கட்டுவதற்கும் நிலமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனா.

ஆனால், இம்மாவட்டத்தின்  சிங்கள மற்றும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் குடியிருப்பதற்கும் வர்த்தக நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் போதுமான நிலங்கள் காணப்படுகின்றன என்பது வெளிப்படையான விடயமாகும்.

குடியேறி வாழ்வதற்கு காணி நிலம் இல்லாது இம்மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கால இருப்புக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்ற அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் 40 ஏக்கர் காணி வழங்கப்பட்டு இவ்வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு குடியேறி வாழ்வதற்கு காணி நிலமற்ற பெரும்பான்மைக் குடித்தொகையாக வாழும் இம்மாவட்டத்தின் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்ட வீடுகளை பாதிக்கப்படாதவர்களும் பங்கு கேட்பது எவ்வகையில் நியாயமாகும்.

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு காணிக்கச்சேரி வைத்து காணி இல்லாதவர்களுக்கு இவ்விடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டு வந்த போதிலும் இந்நடவடிக்கைகள்  மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது.

இருப்பினும், தற்போது அது தொடர்பான தரவுகள் அல்லது விண்ணப்பங்கள் பெண் பிள்ளைகள் அதிகம் கொண்ட குடும்பம், வீடு, வளவு இல்லாதோர், விதவை, விதவைகளின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், குறைந்த வருமானம் கொண்டோர் இவ்வீடுகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகக் கடந்த மாதம் கோரப்பட்டு கடந்த 6ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் திகதி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிபந்தனைகளைக் கொண்ட நபர்கள் இந்த வீடுகளுக்காக விண்ணப்பித்து இவ்வீடுகள் தங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும், தற்போதைய நிலையில் இங்குள்ள வீடுகள் மக்கள் வாழும் நிலையிலில்லை. இவ்வீடுகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழலும்  காடு நிறைந்து காணப்படுகிறது.

ஏறக்குறைய 40 ஏக்கர் காணியில் சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தினால் இலங்கை நாணயப் பெறுமதியில் 552 மில்லியன் நிதியில் ஆண், பெண்களுக்கான தனியான பாடசாலைகள், வைத்தியசாலை, சந்தைத் தொகுதி, பொது பைவங்களுக்கான மண்டபம், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல், வீடுகள் என்பன பயன்படுத்தப்படாது காலம் கடந்து கரைந்து கொண்டிருப்பதன் பின்னணியில் இனவாதமும், அரசியல் சுயநலமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இயலாமையும் ஒற்றுமையின்மையுமெ முதன்மையானவையாகும்.

மக்கள் நலன்களில் அக்கறை கொண்ட காந்திகளும், நெல்சன் மண்டேலாக்களும், டி.எஸ் சேனநாயக்களும், செல்வநாகயங்களும், அஷ்ரப்புக்களும் இந்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை. அவர்களாக தங்களை அடையாளங்காட்டி ஆட்சி செய்பவர்களும், அரசியல் நடத்துபவர்களும் மக்களின் மனங்களை இன்னும் வெற்றிகொள்ளவில்லை. வெற்றி கொள்ள முயன்றாலும், சுயநலமும், சுகபோகங்களும், மதவாதமும், பேரினவாதமும் அவற்றிற்குச் சோதனைச் சாவடிகளாக அமைந்துவிடுகின்றன. இவற்றினொரு வெளிப்பாடே 10 வருடங்கள் அடைந்தும் ஏறக்குறைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான இவ்வீடுகள் பயனாளிகளின் கரங்களுக்குக் கிடைக்காது கரைந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு கரையும் இவ்வீடுகள் மீண்டும் புனரைக்கப்பட்டு உரியவர்களுக்கு எப்போது  வழங்கப்படும் என்பதே சுனாமியின் 14வது வருடத்தில் வினவப்படும் வினாவாகும்.

Leave A Reply

Your email address will not be published.