உண்மைகள் உறங்குவதில்லை

0 1,104

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

அறி­முகம்

இந்தக் கட்­டு­ரைக்கு அறி­மு­க­மாக ஒரு விட­யத்தை வாச­கர்­க­ளுக்கு விளக்க விரும்­பு­கிறேன். தீவி­ர­வாதம், பயங்­க­ர­வாதம், தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் ஆகிய சொற்­க­ளுக்கு சட்­ட­வியல் அடிப்­ப­டை­யி­லான ஒரு வரை­வி­லக்­கணம் இன்­று­வரை எந்த மொழி­யிலும் இல்லை. அவை அர­சியல் தலை­வர்கள் தமது அநி­யா­யங்­க­ளையும், கொலை­க­ளையும், அழி­வு­க­ளையும் மறைப்­ப­தற்­காகக் கையாளும் ஒரு சொற்­போர்வை.

2001 புரட்­டாதி பதி­னொன்றில் அமெ­ரிக்க முத­லா­ளித்­துவக் கோட்டை ஒன்­றின்­மீது நான்கு விமா­னங்­களை மோதி உயிர்ச் சேதங்­க­ளையும் அழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அல்­கை­தா­மீது அமெ­ரிக்க அரசு சூட்­டிய மகு­டமே இஸ்­லா­மியப் பயங்­க­ர­வா­த­மென்ற பெயர். அமெ­ரிக்­கா­வுடன் ஒசாமா பின் லாதனும் அவரின் போரா­ளி­களும் இணைந்து ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து ருஷ்­யாவை விரட்­டி­ய­டிக்கப் போரிட்­ட­போது தலி­பானும் அல்­கை­தாவும் விடு­தலை வீரர்கள், ஆனால் அமெ­ரிக்கா ஆப்­கா­னிஸ்­தானை ஆள்­வதை அவர்கள் எதிர்த்­த­வுடன் அதே வீரர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளா­னது ஏன்? எனினும் அமெ­ரிக்­காவின் 9/11 இலிருந்து இலங்­கையின் 2019 ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்­பு­வரை உலகில் எங்­கெல்லாம் எதற்­கெல்லாம் குண்டு வெடிப்­பு­களும் திடீர் தாக்­கு­தல்­களும் நடை­பெற்று அதிலே முஸ்­லிம்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்தால் அவற்­றுக்கு முஸ்லிம் அல்­லது இஸ்­லா­மியப் பயங்­க­ர­வாதம் என்று முடி­வு­கட்­டு­வது சாதா­ரண வழக்­காகி விட்­டது. இதில் புதுமை என்­ன­வென்றால் உலகின் சனத்­தொ­கையில் ஏறத்­தாழ கால்­வா­சி­யினர் முஸ்­லிம்­க­ளாக இருந்தும் அவர்­க­ளையே பெரும்­பான்­மை­யாகக்­கொண்ட 57 நாடு­களும் அவற்றுள் சில உல­கத்­தையே தமது பணத்தால் விலை­பே­சக்­கூ­டிய தகைமை பெற்­றி­ருந்தும் இஸ்­லா­மியப் பயங்­க­ர­வாதம் என்ற இழிப்­பெ­யரை இன்­றைய அர­சியல் அக­ரா­தி­யி­லி­ருந்து அகற்ற வலு­வற்­றி­ருப்­பதே. இதை அவ­மானம் என்­பதா? கோழைத்­தனம் என்­பதா? வாச­கர்­களே சிந்­தி­யுங்கள்.

ஈஸ்டர் கொலை மர்மம்

2019 ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்பு நடந்து நாலாண்­டுகள் கழிந்­து­விட்­டன. நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி உயிர்­க­ளையும் கோடிக்­க­ணக்­கான உட­மை­க­ளையும் பலி­கொண்டு அதனால் அர­சியல் இலாபம் பெற்ற ஒரு கூட்டம் இன்னும் ஆட்­சி­மோ­கத்தால் காய்­களை நகர்த்­தி­ய­வண்ணம் நட­மாடிக் கொண்­டி­ருக்­கி­றது. இரண்டு விசா­ர­ணை­களை இரண்டு அர­சாங்­கங்கள் மேற்­கொண்­ட­போ­திலும் அந்தக் கோர நிகழ்வின் பின்­னணி என்ன அதன் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்ற உண்­மைகள் இன்­று­வரை மூடி­ம­றைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த நல்­லாட்சி அரசு அதற்குக் கிடைத்த இர­க­சிய தக­வல்­களை உதா­சீனம் செய்­யாது உட­ன­டி­யாக செயற்­பட்­டி­ருந்தால் அந்தக் கொடு­மையை தடுத்­தி­ருக்­கலாம். அதுதான் போகட்டும், அந்தக் கொலை நாடகம் நடந்­தே­றி­யபின் சுயா­தீ­ன­மான ஒரு விசா­ர­ணையை மேற்­கொண்டு அதன் சூத்­தி­ர­தா­ரி­களை நீதிமுன் நிறுத்தி தக்க தண்­டனை வழங்கி இருந்­தா­லா­வது மக்கள் மன ஆறுதல் அடைந்­தி­ருப்பர். ஆனால் அவற்றுள் எதை­யுமே செய்­யாது ஆட்­சி­யினர் தமது பாது­காப்புத் துறை­யி­னரைக் கொண்டு நூற்­றுக்­க­ணக்­கான அப்­பா­வி­களை சந்­தே­கத்­தின்­பேரில் சிறை­யி­ல­டைத்து குற்­ற­வா­ளி­களைப் பிடித்­து­விட்டோம் என்ற ஒரு மாயையைச் சிருட்­டித்து தமது கடமை முடிந்­து­விட்­ட­தென தூங்கத் தொடங்­கினர். அந்தத் தூக்­கத்தைக் கலைத்­து­விட்­டது ஒரு தொலைக்­காட்சிக் காணொளி.

சிலரை எக்­கா­லமும் ஏமாற்­றலாம், எல்­லோ­ரையும் சில காலங்கள் ஏமாற்­றலாம், ஆனால் எல்­லோ­ரையும் எக்­கா­லமும் ஏமாற்ற முடி­யாது என்­ப­தற்கு அந்தக் காணொளி ஒரு சான்று. அது­மட்­டு­மல்ல, “அர­சியல் பிழைத்­தோர்க்கு அறம் கூற்­றா­கும்” என்ற இளங்கோ அடி­க­ளாரின் தீர்க்­க­த­ரி­சன வார்த்­தை­க­ளுக்கு உயி­ரூட்­டவும் முனை­கி­றது அந்தக் காணொளி. ஆகையால் அக்­கா­ணொளி வெளிப்­ப­டுத்­திய சில உண்­மை­களால் கலக்­க­முற்றுக் குறு­கு­றுக்கும் குற்ற நெஞ்­சங்கள் அத­னைப்­பற்­றிய அவ­தூ­று­களைப் பரப்பத் தொடங்­கி­யதில் எந்த ஆச்­ச­ரி­யமும் இல்லை. ஆனால் உண்­மைகள் என்­றுமே உறங்­கு­வ­தில்லை.

நான் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது போன்று இன்­று­வரை ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் அவர்­களின் நிபு­ணத்­துவ ஆலோ­ச­கர்­க­ளாலும் கைக்­கூலி ஆய்­வா­ளர்­க­ளாலும் உல­குக்கு உணர்த்­தி­ய­தெல்லாம் 2019 ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்பு ஸஹ்ரான் என்ற ஓர் இஸ்­லா­மியப் பயங்­க­ர­வா­தியின் தலை­மையில் வெளி­நாட்டு இஸ்­லா­மியக் கும்­ப­லொன்றின் அதா­வது ஐஎஸ்­ஐஎஸ் என்ற இயக்­கத்தின் தூண்­டு­த­லுடன் இலங்­கையை இஸ்­லா­மிய கிலா­பத்­தா­க­ மாற்ற எடுத்த முயற்­சியே என்ற அபாண்­ட­மாகும். ஆனால் அந்த நிகழ்வு ஒரு குறிப்­பிட்ட அர­சியல் கும்பல் பாது­காப்புத் துறையின் துணை­யுடன் நாட்டின் ஆட்­சியைக் கைப்­பற்ற திட்­ட­மிட்டுச் செய்த ஒரு பயங்­கரச் சதி என்ற மர்­மத்தை இப்­போது இக்­கா­ணொ­ளியும் அத­னைத்­தொ­டர்ந்து வரும் பல தக­வல்­களும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்தச் சதி அரங்­கே­று­வ­தற்கு இலங்­கையின் பாது­காப்புத் துறையின் உயர்­மட்ட அதி­கா­ரி­களும் துணையாய் இருந்­தனர் என்­பதும் புல­னா­கி­றது. அந்தச் சதி­கா­ரர்­களின் கைக்­கூ­லி­களே ஸஹ்­ரானும் அவனின் கூட்­டத்­தி­னரும் என்­பதும் வெள்­ளி­டை­மலை. அவ­னையும் அவனின் கூட்­டத்­தி­ன­ரையும் சுட்டுத் தள்­ளி­விட்டு முஸ்லிம் சமூ­கத்­தின்மேல் மொத்தப் பழி­யையும் சுமத்­தி­யபின் தப்­பித்தோம் பிழைத்தோம் என்று வாழ்­கின்­றனர் சதி­கா­ரர்கள். இனி­யா­வது இந்தச் சதியின் உண்­மை­களை ஆராய்ந்து குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு உரிய தண்­ட­னையை வழங்க உலக அரங்கு ஒரு சுயா­தீ­ன­மான விசா­ரணைக் குழுவை நிய­மிக்­குமா? மீண்டும் அந்தப் பணியை இன்­றைய ஜனா­தி­ப­தி­யி­டமோ அல்­லது அவர் நிய­மிக்கும் ஒரு குழு­வி­டமோ விடு­வதால் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. அது காலத்தைக் கடத்தும் செய­லன்றி வேறில்லை.

முஸ்லிம் சமூ­கத்தின் கடமை

இந்த விட­யத்தை ஆற­வி­டாது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்­டிய ஒரு கடமை இலங்கை முஸ்லிம் சமூ­கத்­துக்கும் அதன் தலை­மைத்­து­வத்­துக்கும் உண்டு. அதை வலி­யு­றுத்­து­வதே இக்­கட்­டுரை. ஏனெனில் அந்த நிகழ்வால் பாதிக்­கப்­பட்ட சமூ­கங்கள் இரண்டு. ஒன்று கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ மக்கள் மற்­றது முஸ்­லிம்கள். இருந்தும் தனது கத்­தோ­லிக்க சமூ­கத்­துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாட்­டுக்கு உள்­ளேயும் வெளி­யேயும் அய­ராது குரல் கொடுத்­துக்­கொண்டும், ஈஸ்டர் கொலை­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் இன்னும் வெளியே நட­மா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்றும், ஸஹ்ரான் கும்பல் அச்­சூத்­தி­ர­தா­ரி­களின் வெறும் கைப்­பா­வை­களே என்றும் கத்­தோ­லிக்கப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் போராடிக் கொண்­­டி­ருப்­பதை யாரும் பாராட்­டாமல் இருக்க முடி­யாது. ஆனால் அவரின் போராட்­டத்தின் நூற்றில் ஒரு வீதத்­தை­யா­வது முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் அதன் அர­சியல் தலை­வர்­களோ மதத் தலை­வர்­களோ மேற்­கொள்­ளா­தி­ருப்­பது ஏனோ?

ஸஹ்ரான் பிறந்த ஊர் காத்­தான்­குடி என்­ப­தற்­காக அந்த ஊரே இஸ்­லா­மியப் பயங்­க­ர­வா­தத்தின் இருப்­பிடம் என்று கரு­திக்­கொண்டு அரசுப் படை­வீ­ரர்கள் அந்த ஊர் மக்­க­ளையும் அவ்­வூரின் புனிதத் தலங்­க­ளையும் எப்­ப­டி­யெல்லாம் உருட்டிப் புரட்­டி­னார்கள் என்­பதை விப­ரிக்­கவும் வேண்­டுமா? அந்த ஊர் வைதீக முஸ்­லிம்கள் வாழும் ஓர் இடம் என்­பதை மறுக்­க­வில்லை. ஆனால் வைதீ­க­ரெல்லாம் பயங்­க­ர­வா­தி­க­ளென்றால் பௌத்த சங்­கத்­தி­னரே பயங்­க­ர­வா­தி­க­ளா­காரா? காவி­யுடை தரித்த ஓரி­ரண்டு காவா­லிகள் கலகம் செய்தால் அதற்­காக பௌத்த துற­விகள் யாவ­ரையும் அந்தக் கூட்­டுக்குள் தள்ளி விடு­வதா? அதைத்தான் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அர­சாங்கம் செய்­துள்­ளது. ஆகவே உண்மை என்ன என்­பதை அறிய ஒரு சுயா­தீ­ன­மான விசா­ரணை வேண்டும். அதுவும் உலக அரங்­கி­லி­ருந்து அது உரு­வாக்­கப்­படல் வேண்டும். பேரா­யரும் அதைத்தான் வேண்­டு­கிறார். தொலைக்­காட்சிக் காணொ­ளிக்குப் பிறகு எதிர்க்­கட்சித் தவைவர் ஒரு­வரும் அதை ஆமோ­தித்­துள்ளார். ஆனால் எங்கே முஸ்லிம் தலை­வர்­களின் குரல்கள்?

இன்­றைய அரசின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஒரு முஸ்லிம். அவர் முன்­னைய ஜனா­தி­ப­தியின் ஆப்­த­நண்­பரும் வழக்­கு­ரை­ஞரும் ஆவார். அது மட்­டு­மல்ல, அந்த ஜனா­தி­ப­தி­யா­லேதான் பின் வாசலால் அர­சி­ய­லுக்குள் நுழைந்து நீதி அமைச்­ச­ரா­கினார். அந்­தப்­ப­த­வியை ராஜி­னாமாச் செய்த பின்பும் மீண்டும் அவரை இழுத்­து­வந்து நிதி அமைச்­ச­ராக்­கினார் அந்த ஜனா­தி­பதி. இன்று காணொளி இந்த ஜனா­தி­ப­திமேல் சுமத்­திய பழி­யைக்­கேட்டு இது­வரை மௌனி­யாக இருந்த அவர் கொதித்­தெ­ழுந்து தான் நிர­ப­ரா­தி­யென வாதா­டு­கிறார். அமைச்சர் அவர்­களே உங்கள் நண்பர் கூறு­வ­தெல்லாம் உண்­மை­தானா? உங்­க­ளுக்கு அச்­சம்­ப­வம்­பற்றி எது­வுமே தெரி­யாதா? அவர் கூறு­வது உண்மை என்ற நீங்­களும் கரு­தினால் முஸ்லிம் சமூ­கமே ஈஸ்டர் கொலை­க­ளுக்கு முழுப்­ப­ழி­யையும் ஏற்­க­வேண்டும். அத­னா­லேதான் சுமூ­கத்­துக்­காக நீங்கள் உங்­களின் மௌனத்தைக் கலைக்க வேண்டும். இதை முஸ்லிம் சமூ­கத்தின் சார்­பாக உங்­க­ளிடம் இக்­கட்­டுரை முன்­வைக்­கின்­றது.

2024 இல் வரப்­போகும் ஒரு தேர்­தலை இலக்­காக வைத்து வழ­மை­போன்று தமது பத­வி­களை காப்­பாற்ற எடுக்கும் உத்­தியா முஸ்லிம் தலை­மைத்­து­வத்தின் இந்த அதி­சய மௌனம்? இந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தமது இனத்­தின்­மீது உண்­மை­யான பற்று இருந்­தி­ருந்தால் முன்­னைய ஜனா­தி­பதி அன்று கோவிட் தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களை தகனம் செய்ய வேண்­டு­மென்று கட்­டளை பிறப்­பித்­த­வு­ட­னேயே ஒட்­டு­மொத்­த­மாக நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்புச் செய்­தி­ருக்க வேண்டும். அந்தக் கட்­ட­ளையை நாங்கள் எதிர்த்தோம் என்று இப்­போது கூறு­வதில் என்ன பயன் கோழை­களே?

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் மௌனத்தை விளங்கிக் கொண்­டாலும் ஏன் ஜம்இய்­யத்துல் உலமா என்ற இஸ்­லா­மிய நிறு­வ­னமும் ஊமை­யாகி விட்­டது? சுயா­தீ­ன­மான விசா­ரணை ஒன்று உலக அரங்கின் பங்­க­ளிப்­புடன் அவ­சரம் வேண்டும் என்ற கத்­தோ­லிக்கப் பேரா­யரின் கோரிக்­கைக்கு வலு­வூட்டி ஏன் இந்த மதத்­த­லை­வர்கள் அவ­ருடன் இணைந்து செயற்­ப­டாமல் இருக்­கின்­ற­னரோ? ஜனா­தி­ப­தி­யையும் அமைச்­சர்­க­ளையும் வர­வேற்று பூமாலை போட்டு புரி­யா­ணியும் வட்­டி­லப்­பமும் கொடுத்து மகஜர் ஒன்றை அவர்­க­ளிடம் கைய­ளிப்­பதால் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை உலமா சபை­யி­னரே. உங்­களின் எதிர்ப்புக் குரல் உலக அரங்­கினை எட்­ட­வேண்டும். அவ்­வாறு நீங்கள் குரல் எழுப்­பி­னா­லன்றி புக­லிடம் புகுந்து வாழும் இலங்கை முஸ்­லிம்­களும் உங்­களின் குர­லுக்கு வலு­வூட்­டு­மாறு குர­லெ­ழுப்­புவர். இது நீங்கள் தமி­ழ­ரி­ட­மி­ருந்து கற்­க­வேண்­டிய ஒரு பாடம். இப்­போது சர்ச்­சைக்­குள்­ளாகி இருக்கும் காணொ­ளி­யிலும் புக­லிடத் தமி­ழரின் செல்­வாக்கு உண்டு என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. நீங்­களும் உங்­களின் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மௌன­மாக இருந்தால் என்­ன­வாகும் என்­பதை சற்றுச் சிந்­தித்துப் பாருங்கள்.

பேரி­ன­வா­தத்­துக்குக் கிடைத்த பரிசு

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி விரை­விலே தீர்க்க முடி­யாத ஒன்று. அதைத் தீர்ப்­ப­தற்­காகச் சர்­வ­தேச நாணய நிதியின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் பெரும்­பான்­மை­யான மக்­களின் வாழ்க்­கையை மேலும் கஷ்­டத்­துக்குள் தள்­ளி­விடும். அந்தக் கஷ்­டங்­களை நீண்­ட­கால சுபீட்­சத்­துக்­காக குறு­கிய காலத்­துக்கு அனு­ப­விக்க வேண்­டி­யவை என்ற அரசின் வாதம் அர்த்­த­மற்­றது. ஏனெனில் இன்­றைய பொரு­ளா­தாரப் பிரச்­சினை கடந்த இரண்டு வரு­டத்­துக்குள் மட்டும் உரு­வா­கிய ஒன்­றல்ல. அது கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டை ஆண்­டு­வரும் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு விளைவு. எனவே அந்தப் பேரி­ன­வா­தத்தின் அடித்­த­ளத்­திலே கட்­டப்­பட்­டி­ருக்கும் அரசியல் சமூக அமைப்புகள் தகர்த்தெறியப்படல் வேண்டும். அதனைத் தகர்த்தெறிவதற்கு தேசிய மக்கள் சக்தியைத்தவிர வேறு எந்த ஒரு கட்சியும் தயாராக இல்லை. ஆகையினால் எதிர்வரப்போகும் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவோ பொதுத் தேர்தலாகவோ ஊராட்சி மன்றத் தேர்தலாகவோ எதுவாக இருந்தாலும் அது இனவாத அடிப்படையிலேயே நடைபெறும். அதற்கு வழி சமைத்துள்ளது இந்தத் தொலைக்காட்சிக் காணொளி. அது பேரினவாதிளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதாம்.

முல்லைத்தீவிலே குருந்தூர் மலை தொடக்கம் திருகோணமலை விகாரைகள் வரையும், கிழக்கு மாகாணத்திலே இந்துத்துவத்தின் பரவல் தொடங்கி ஈஸ்டர் குண்டுவெடிப்பின் காணொளி தொடக்கியுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் வரை யாவும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் தேர்தல் விஷமப் பிரச்சாரத்துக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. அது எப்போது என்ன வடிவில் எந்த இனத்துக்கு எதிராக வெடிக்குமோ என்பது தெரியாது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு எதிராக வெடிப்பதை தடுக்கவேண்டுமாயின் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பூரண உண்மையை அம்பலப்படுத்துவது அவசியம். எனவே சுயாதீனமான ஒரு விசாரணைக் குழு காலத்தைத் தாழ்த்தாது சர்வதேசத்தின் தலையீட்டுடன் நியமிக்கப்படல் வேண்டும். அதற்காகக் குரல் எழுப்புவது முஸ்லிம் தலைமைத்துவத்தின் கடமை. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.