அநீதிக்கு எதிராக தொடர்ந்தும் எழுதுவேன் – கவிஞர் அஹ்னாப் ஜெஸீம்

0 872

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, கைது செய்­யப்­பட்டு
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள, மன்­னாரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீம், நேற்­றைய தினம் வெளி­யான த மோர்னிங் ஆங்­கிலப் பத்­தி­ரி­கைக்கு நேர்­காணல் ஒன்றை வழங்­கி­யுள்ளார். பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர் அவர் ஊடகம் ஒன்­றுக்கு வழங்கிய முதல் நேர்­காணல் இது­வாகும். அதனை விடிவெள்ளி வாச­கர்­க­ளுக்­காக தமிழில் தரு­கிறோம்.

நேர்­காணல் : பமோதி வர­விட்ட
நன்றி : த மோர்னிங்

நீங்கள் எப்­போது கைது செய்­யப்­பட்­டீர்கள், கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு என்ன செய்து கொண்­டி­ருந்­தீர்கள் என்­பதை கூறமுடி­யுமா?
நான் 16 மே 2020 அன்று கைது செய்­யப்­பட்டேன். நான் புத்­த­ளத்தில் உள்ள ஒரு சர்­வ­தேச பாட­சா­லையில் கற்­பித்தேன். – அது ஒரு தனியார் பாட­சாலை. நான் அங்கு கற்­பித்துக் கொண்­டி­ருந்­த­போது, அவர்கள் எனக்கு தங்­கு­மி­டத்தை வழங்­கினர். நான் மூன்று மாதங்கள் விடு­தியில் தங்­கி­யி­ருந்த பிறகு, கொரோனா வைரஸ் தொற்­று­நோயால் நாடு முடக்­கப்­பட்­டதால் வீட்­டிற்குச் சென்றேன். நான் வீட்­டிற்குச் செல்லும் போதுதான், சேவ் த பேர்ள்ஸ் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா விவ­காரம் பேசு பொரு­ளா­னது. அவர்கள் (பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் [T­I­D] அதி­கா­ரிகள்) நான் தங்­கி­யி­ருந்த கட்­டி­டத்தை சோதனை செய்­தனர். எனது உடைகள், எனது சொந்த புத்­த­கங்கள், நான் வாசித்த புத்­த­கங்கள் ஆகி­ய­வற்றை அங்­கேயே விட்­டு­விட்டு வந்­தி­ருந்தேன். அந்தப் புத்­த­கங்கள் அனைத்­தையும் அவர்கள் எடுத்­துக்­கொண்­டார்கள்.

அதன் பிற­குதான் எனது வீட்­டுக்கு வந்து என்னைக் கைது செய்­தனர். நான் 2019 ஜூன் அல்­லது ஜூலை­யில்தான் அப் பாட­சா­லையில் பணி­பு­ரியத் தொடங்­கினேன். நான் அந்த தங்­கு­மி­டத்தில் மூன்று மாதங்கள் மட்­டுமே இருந்தேன். 2012 முதல் 2019 வரை, நான் பேரு­வளை ஜாமிஆ நளீ­மியா இஸ்­லா­மிய நிறு­வ­னத்தில் படித்தேன், அங்கு நான் அரபு, இஸ்­லா­மிய ஆய்­வுகள், இலக்­கியம் மற்றும் சமூ­க­வியல் பாடங்­களைக் கற்றேன். நான் எனது உயர்­த­ரத்­தையும் அங்­கேயே செய்தேன். நான் 2019 இல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வெளி­வாரிப் பட்­டப்­ப­டிப்பில் ஒரு வரு­டத்தைப் பூர்த்தி செய்தேன், அதனை முடிப்­ப­தற்­காக இன்னும் காத்­தி­ருக்­கிறேன். நான் பாட­சா­லையில் தரம் 9,10 மற்றும் சாதா­ரண தர வகுப்பு மாண­வர்­க­ளுக்கு தமிழ் மற்றும் தமிழ் இலக்­கியம் கற்­பித்தேன்.

நீங்கள் சேவ் த பேர்ள்ஸ் அமைப்­புடன் தொடர்பு வைத்­தி­ருந்­தீர்கள் என்­பது அவர்­க­ளது ஆரம்பக் குற்­றச்­சாட்டு. அது உண்­மையா? நீங்கள் அவர்­க­ளுடன் எந்த வகையிலேனும் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றீர்­களா?
நான் சேவ் த பேர்­ளுடன் எந்த வகை­யிலும் தொடர்­பு­ப­ட­வில்லை. நான் வசித்த விடுதிக் கட்­டிடம் சேவ் த பேர்ள்ஸ் நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மா­னது, ஆனால் பாட­சாலை நிறு­வனம் நான் தங்­கு­வ­தற்­காக வழங்­கிய இடம் என்ற அடிப்­ப­டை­யில்தான் அதில் தங்­கி­யி­ருந்தேன். நான் கைது செய்­யப்­பட்ட பிற­குதான், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் என்­னிடம் இது­பற்றி விசா­ரித்­த­போ­துதான், சேவ் த பேர்ள்ஸ் பற்றி அறிந்தேன். ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கைது செய்­யப்­பட்ட செய்­தியின் மூலம் தான் அவரைப் பற்­றியும் நான் அறிந்து கொண்டேன்.

‘நவ­ரசம்’ நூலை எப்­போது வெளி­யிட்­டீர்கள்?
2017 ஜூலையில் நவ­ரசம் புத்­த­கத்தை வெளி­யிட்டேன். அதற்கு முன் கவி­தை­களை எழுதி தொகுத்தேன். அதுவே என்­னு­டைய முதல் புத்­தகம். எனக்கு 26 வய­துதான் ஆகி­றது.

உங்­களை கைது செய்யும் போது அதி­கா­ரிகள் என்ன சொன்­னார்கள்?
என் வீட்­டுக்கு வந்­ததும் நவ­ரசம் பற்றி நிறைய கேள்­விகள் கேட்டு அலு­மா­ரியில் இருந்த புத்­த­கங்கள் அனைத்­தையும் பார்த்­தார்கள். என்­னிடம் அப்­போது நவ­ரசம் நூலின் சுமார் 105 பிர­திகள் இருந்­தன, அவற்­றையும் மேலும் வேறு 50 புத்­த­கங்­க­ளையும் எடுத்துச் சென்­றனர். அவர்கள் என்னைக் கைது செய்­த­போது, “சிறிய விசா­ரணை” என்­றுதான் சொன்­னார்கள். ஒரு மொழி­பெ­யர்ப்­பா­ள­ருடன் நான்கு அல்­லது ஐந்து அதி­கா­ரிகள் வந்­தி­ருந்­தனர்.

உங்­களால் என்ன மொழி­களைப் பேச முடியும்?
எனக்கு மொழி­களை மிகவும் பிடிக்கும். என்னால் தமிழ் மற்றும் அரபு மொழி­களை பேச முடியும். என்னால் ஆங்­கிலம் மற்றும் சிங்­கள மொழி­களை சமா­ளிக்க முடியும். – ஆனால் அவற்றை சர­ள­மாக பேச முடி­யாது.

கைது செய்­யப்­பட்ட பிறகு உங்­களை எங்கே அழைத்துச் சென்­றார்கள்?
அவர்கள் என்னை கைது செய்த பின்னர் வவு­னியா பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் முகா­முக்கு அழைத்துச் சென்­றனர். நான் எந்தத் தவறும் செய்­ய­வில்லை என்று நினைத்­த­வாறே, அர­சுக்கும், அதி­கா­ரி­க­ளுக்கும் ஒத்­து­ழைக்கும் நோக்­கத்­தில்தான் விசா­ர­ணைக்குச் சென்றேன். அத­னால்தான் அவர்­க­ளுடன் சென்றேன். அந் நேரத்தில் எனக்­கென்று சட்­டத்­த­ர­ணிகள் எவரும் இருக்­க­வில்லை.

நீங்கள் வவு­னியா பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் முகா­முக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட பின்னர் என்ன நடந்­தது?
நான் வவு­னி­யா­வுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­போது, ‘பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு’ என்ற பெயர்ப் பல­கையைக் கண்டு, அச்­ச­ம­டைந்தேன். நான் எந்தத் தவறும் செய்­ய­வில்லை. பாட­சா­லையின் செயற்­பா­டுகள் மற்றும் மாண­வர்­க­ளுக்கு நான் என்ன கற்றுக் கொடுத்தேன் என்­பது பற்றி என்­னிடம் கேள்­வி­களை எழுப்­பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பயங்­க­ர­வாதம் பற்­றிய வீடி­யோக்­களை மாண­வர்­க­ளுக்கு காண்­பித்­த­தா­கவும், சஹ்­ரானை ஆத­ரித்து நான் விரி­வு­ரை­களை நடத்­தி­ய­தா­கவும் அவர்கள் என் மீது குற்றம் சாட்­டினர். நவ­ரசம் புத்­தகம் சஹ்ரா­னுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தா­கவும், அவ­ரு­டைய கருத்­து­களை ஆத­ரிப்­ப­தா­கவும் குற்றம் சாட்­டினர்.

மறுநாள் காலை வரை இதைப் பற்றி என்­னிடம் கேட்­டார்கள். எனக்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும், தீவி­ர­வா­தத்­திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நான் எனது நூலில் எழு­தி­யுள்­ள­வற்றைப் படிக்­கும்­படி கேட்டுக் கொண்டேன். தொடர்ந்தும் என்­னிடம் நிறைய விசா­ரித்­தார்கள். என்­னிடம் கிறிஸ்­தவ புத்­த­கங்கள், இந்து புத்­த­கங்கள் மற்றும் இஸ்­லா­மிய புத்­த­கங்கள் இருப்­ப­தா­கவும் ஆனால் என்­னிடம் பௌத்த சமயம் சார்ந்த புத்­த­கங்கள் இல்லை என்றும் சொன்­னார்கள். இதற்­கான காரணம் என்ன என்றும் கேட்­டனர். நான் இரண்டு அல்­லது மூன்று பௌத்த நூல்­களைப் படித்­தி­ருக்­கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவை எனக்குச் சொந்­த­மா­ன­வை­யல்ல என்று கூறினேன். பௌத்த புத்­த­கங்கள் என்­னிடம் இல்­லா­ததால் நான் தீவி­ர­வாதி என்று அதி­கா­ரிகள் கூறினர்.

வவு­னி­யாவில் எவ்­வ­ளவு காலம் உங்­களை தடுத்து வைத்து விசா­ரித்­தார்கள்?
வவு­னி­யாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் என்­னிடம் விசா­ரணை நடத்­தி­னார்கள். அவர்கள் என்­னிடம் சிங்­க­ளத்தில் கேள்­விகள் கேட்­டார்கள், அதை ஒரு மொழி­பெ­யர்ப்­பாளர் தமிழில் மொழி­பெ­யர்த்தார். காலை வரை என்­னிடம் விசா­ரித்­தார்கள் – என்னை தூங்­கு­வ­தற்கும் அனு­ம­திக்­க­வில்லை. நான் மிகவும் சோர்­வாக இருந்­த­போது, ​​அவர்கள் என்னை அதி­காலை 5.30 மணி­ய­ளவில் தூங்க அனு­ம­தித்­தனர், ஆனால் விசா­ர­ணைக்­காக காலை 8 மணிக்கு மீண்டும் என்னை எழுப்­பினர். நவ­ரசம் புத்­த­கத்தின் அனைத்துப் பிர­தி­க­ளையும் சேக­ரித்து அவர்­க­ளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொன்­னார்கள். அதற்கு நான், இப் புத்­தகம் நாடெங்­கிலும் விநி­யோகம் செய்­யப்­பட்டு விற்­கப்­பட்­டுள்­ளதால் அதனை மீள சேகரிக்க எந்த வழி­யு­மில்லை என்று கூறினேன்.

பின்னர் என்னை ஒரு வாக­னத்தில் ஏற்றி எனது வீட்டின் அருகே அழைத்துச் சென்­றனர். புத்­த­கத்தின் சுமார் 10 பிர­தி­களை அய­ல­வர்­க­ளிடம் இருந்து சேக­ரித்தோம். அப்­போது இரா­ணு­வத்தில் இருந்து இரண்டு பேர் வந்­தனர். அவர்கள் என்னை கடு­மை­யாக நோக்கி, “நீ சஹ்­ரா­னுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கிறாய். உன்னை கொழும்­புக்கு அழைத்துச் சென்று நான்கு வரு­டங்கள் இருட்டு அறையில் அடைக்கப் போகிறோம். உனக்கு என்ன நடந்­தது என்று கூட யாருக்கும் தெரிய வராது” எனக் கூறி­னார்கள்.

எனக்கு எதுவும் தெரி­யாது என்­றுதான் என்னால் சொல்ல முடிந்­தது. என்னை பய­மு­றுத்­து­வ­தற்­காக இரண்டு மொழி­க­ளிலும் கதைத்­தார்கள். நான் சஹ்­ரானின் வகுப்­பிற்குச் சென்­ற­தா­கவும் ஏன் அங்கு சென்றேன் என்றும் ஏன் நவ­ரசம் புத்­த­கத்தை எழு­தினேன் என்றும் கேட்­டார்கள். இரண்டு நாட்­க­ளுக்குப் பிறகு, நான் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்டேன். அப்­போது எனக்­கென சட்­டத்­த­ர­ணிகள் இருக்­க­வில்லை.

கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட பிறகு என்ன நடந்­தது?
கொழும்பில், மீண்டும் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க, என்னை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­திற்கு அழைத்துச் சென்­றார்கள். அங்கும் என்னை பயங்­க­ர­வாதி என்று குற்றம் சாட்­டினர். நான் 18 மே 2020 முதல் 31 மே 2020 வரை 14 நாட்­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் இரண்­டா­வது மாடியில் கழித்தேன். தீவி­ர­வாத புத்­தகம் ஒன்றை எழு­தி­யுள்ளேன் என்றும் அந்த புத்­த­கத்தின் மூலம் மாண­வர்­க­ளிடம் பயங்­க­ர­வாத கருத்­துக்­களை பரப்பி வரு­கிறேன் என்றும் கூறினர்.

இது சஹ்­ரா­னுடன் தொடர்­பு­டை­யது என்றும், அவ­னது குண்­டுத்­தாக்­கு­தல்கள் நல்ல விட­யங்கள் என்றும் மாண­வர்­க­ளுக்கு நான் கற்­பித்­த­தாக கூறினார்கள். நான் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை என்றும், நான் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­னவன் என்றும், எனது எழுத்­துக்கள் அனைத்தும் அதற்கு எதி­ரா­னது என்றும் அவர்­க­ளிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது என்றும் நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அவர்கள் என்னை கைவி­லங்­கிட்டு 14 நாட்கள் தனி­மைப்­ப­டுத்­தி­னார்கள்.

இந்த நேரத்தில் ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளிக்­கும்­படி என்னை வற்­பு­றுத்­தி­னார்கள். என்னை 15 அல்­லது 20 ஆண்­டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்­டி­னார்கள். அப்­போது, எனக்கு திரு­மணம் செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. நான் திரு­மணம் செய்து கொள்­ள­வி­ருந்த பெண்­ணையும் கைது செய்வோம் எனக் கூறி என்னை மிரட்­டினர். இவ்­வா­றுதான் என்­னிடம் ஒப்­புதல் வாக்­கு­மூலம் கேட்டு மிரட்­டி­னார்கள்.

இந்த நேரத்தில் உங்கள் குடும்­பத்­தி­னரை தொடர்பு கொள்ள அல்­லது ஒரு சட்­டத்­த­ர­ணியைப் பெற்றுக் கொள்ள நீங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டீர்­களா?
நான் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட ஒரு வாரத்­திற்குப் பிறகு, வீட்­டாரைத் தொடர்பு கொள்ள எனக்கு அனு­மதி கிடைத்­தது.- அதா­வது நான் உயி­ரு­டன்தான் இருக்­கிறேன் என்று சொல்ல எனக்கு அனு­மதி கிடைத்­தது. அதை­விட அவர்கள் வேறு எதுவும் சொல்ல என்னை அனு­ம­திக்­க­வில்லை. – நான் எங்கே இருக்­கிறேன் என்­பதும் அப்­போது எனக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை. அவர்கள் விசா­ரணை மேற்­கொள்­ளும்­போது, எனக்­கென சட்­டத்­த­ர­ணிகள் இல்லை என்றும், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ், என்னை ஒன்று அல்­லது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு தடுத்து வைத்­தி­ருக்­கலாம் என்றும் சொன்­னார்கள். என்னை நீதி­மன்­றத்­திற்கு அழைத்துச் செல்­லாமல் 10 வரு­டங்கள் கூட வைத்­தி­ருக்­கலாம் என்றும் சொன்­னார்கள்.

14 நாட்­க­ளுக்குப் பிறகு, நான் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் கட்­டி­டத்தின் ஆறா­வது மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டேன், அங்கு மூன்று மாதங்கள் கைவி­லங்­கி­டப்­பட்டு வைக்­கப்­பட்டேன். அந்த மூன்று மாதங்­களில், அவர்கள் விரும்பும் போதெல்லாம், ​​சில நேரங்­களில் நள்­ளி­ரவில் கூட என்னை விசா­ரிப்­பார்கள், சில சம­யங்­களில் அவர்கள் என்னை விசா­ரிப்­ப­தற்­காக கட்­டா­யப்­ப­டுத்தி தூக்­கத்­தி­லி­ருந்து எழுப்­பு­வார்கள். நான் தூங்கும் போது கூட, என் கை ஒரு மேசையின் காலுடன் சேர்த்து இணைத்து விலங்­கி­டப்­பட்­டி­ருக்கும். இவ்­வாறு மொத்தம் சுமார் ஐந்து மாதங்­கள நான் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் இருந்தேன்.

நான் காலை­யிலும் மாலை­யி­லு­மாக ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்­டுமே கழி­வ­றையைப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்டேன். அந்த 14 நாட்­களில், கைகளை பின்னால் கட்­டி­ய­படி மண்­டி­யிட வைத்­தார்கள். மேலும் நான் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்­லது அல் கைதா­வுடன் தொடர்பு வைத்­துள்­ள­தாக ஒப்­புக்­கொள்­ளும்­படி கடு­மை­யான வார்த்­தை­களால் மிரட்­டி­னார்கள். நான் பார்த்துக் கொண்­டி­ருக்கும் போதே அவர்கள் ஏனை­ய­வர்­களை அடிப்­பார்கள். “நாங்கள் சொல்­வதைச் செய்­வாயா அல்­லது இப்­படி அடி வாங்கப் போகி­றாயா?” என்று கேட்­பார்கள்.

உண்­மை­யா­கவே அவர்கள் உங்­க­ளிடம் என்­னதான் கேட்­டார்கள்?
நான் பாட­சா­லையில் கற்­பிக்கும் போது ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா எனக்கு சம்­பளம் வழங்­கி­ய­தாக நான் கூற வேண்டும் என அவர்கள் விரும்­பினர். ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது என்றும், அவரை என் வாழ்­நாளில் பார்த்­தது கூட இல்லை என்றும் கூறினேன். பின்னர் புத்­தக வெளி­யீட்டு விழாவின் போது ரிசாத் பதி­யுதீன் வந்து தீவி­ர­வாத சிந்­தனை கொண்ட இப் புத்­த­கத்தை வெளி­யிட பணம் கொடுத்­த­தாக சொல்லச் சொன்­னார்கள். எனக்கு அவ­ரையும் தெரி­யாது என்றும் புத்­த­கத்தை வெளி­யிட்­டது நான்தான் என்றும் கூறினேன்.

பின்னர் ஜமாத்தே இஸ்­லாமி மாணவர் இயக்­கத்­திற்கு எதி­ரான ஆதா­ரங்­களை தரு­மாறு என்று கேட்­டனர். எனக்கு அவர்­க­ளுடன் தொடர்­பில்லை, நான் அந்த அமைப்பின் உறுப்­பி­னரும் இல்லை என்றேன். இறு­தி­யாக, ஜாமிஆ நளீ­மியா நிறு­வனம் எனக்கு தீவி­ர­வாத சிந்­த­னை­களை கற்­பித்­த­தா­கவும், நான் அதனை மாண­வர்­க­ளுக்கு போதித்­த­தா­கவும் ஒப்­புக்­கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னை வற்­பு­றுத்­தினர்.

இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மாதங்­களில், அவர்கள் என்னை என் குடும்­பத்­தா­ருடன் தொலை­பே­சியில் பேச அனு­ம­திப்­பார்கள். நாம் பேசிக் கொள்­வது வெளியில் கேட்கும் வகையில் தொலை­பே­சியை செயற்­ப­டுத்­து­வார்கள். இந்த சம­யத்தில் என்னைச் சூழ மூன்று அல்­லது நான்கு அதி­கா­ரிகள் நிற்­பார்கள். அவர்கள் நான் பேசு­வ­தை­யெல்லாம் கேட்டு, குறிப்­பெ­டுத்துக் கொள்­வார்கள். வழக்கு தொடர்­பான எதையும் பேச அனு­ம­திக்­க­மாட்­டார்கள். நான் நல­மாக இருக்­கிறேன் என்று மட்­டுமே கூற அனு­ம­திக்­கப்­பட்டேன். நான் வழக்கு சம்­பந்­த­மாக ஏதா­வது பேச ஆரம்­பித்தால், அவர்கள் தொடர்பை துண்­டித்­து­வி­டு­வார்கள்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் ஆறா­வது மாடியில் 100 நாட்­களும், அதற்குப் பிறகு இரண்­டா­வது மாடியில் 40 நாட்­களும் கழித்தேன். நான் இப் பிரிவில் மாத்­திரம் மொத்தம் ஐந்து மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் இருந்தேன்.

இக் காலப்­ப­கு­தியில் உங்கள் குடும்பம் என்ன செய்­தது?
நான் கைது செய்­யப்­பட்ட பின்னர் எனது குடும்­பத்­தினர் சில பயங்­க­ர­வாத புல­னாய்வு அதி­கா­ரி­களைச் சந்­தித்து என்னை விடு­தலை செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். முதல் 14 நாட்­களில் நான் ஒப்­புதல் வாக்­கு­மூலம் வழங்­கி­ய­தாக அவர்கள் எனது பெற்­றோ­ரிடம் கூறி­யுள்­ளனர். ஆனால் நான் சொன்­ன­படி அவர்கள் வாக்­கு­மூ­லத்தை எழு­த­வில்லை. அவர்கள் என்ன எழு­தி­னார்கள் என்று எனக்குத் தெரி­ய­வில்லை,

ஏனென்றால் நான் தமிழில் கூறு­வதை, மொழி­பெ­யர்ப்­பாளர் சிங்­கள மொழி பேசும் அதி­கா­ரிக்கு சிங்­க­ளத்தில் கூறுவார், பின்னர் அந்த அதி­காரி பதிவு செய்யும் அதி­காரி தமிழில் என்ன எழுத வேண்டும் என சிங்­க­ளத்தில் கட்­ட­ளை­யி­டுவார். ஜாமிஆ நளீ­மியா கல்வி நிறு­வ­னத்தில் கல்வி கற்கும் போது எனக்கு தீவி­ர­வாத சிந்­த­னைகள் வந்­த­தா­கவும், அதனை மாண­வர்­க­ளுக்கு நான் கற்­பித்­த­தா­கவும் வாக்­கு­மூ­லத்தில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. வாக்­கு­மூ­லத்தைப் படிக்க நான் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை, அதில் கையெ­ழுத்­திடச் சொன்­ன­போது, நான் கையெ­ழுத்­தி­டா­விட்டால் 20 ஆண்­டு­க­ளுக்கு வீட்­டிற்கு அனுப்­ப ­மாட்டோம் என்று மிரட்­டினர்.

மூன்று மாதங்­க­ளுக்குப் பிறகு, நான் வீட்­டிற்குச் செல்ல வேண்­டு­மானால், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் (ஏஎஸ்பி) சி.பி. ரத்­நா­யக்­க­விடம் வாக்­கு­மூலம் அளிக்­கு­மாறும், நீதி­பதி ஒரு­வ­ருக்கு முன் வாக்­கு­மூலம் அளிக்­கு­மாறும் என்­னிடம் கேட்டுக் கொண்­டனர். நான் அதற்கு சம்­ம­திக்­க­வில்லை. அதன்­பி­றகு, எனது குடும்­பத்­தி­ன­ருக்கு தொலை­பேசி அழைப்­பு­களை எடுக்க விடாமல் தடுத்­த­துடன், என்னை அதிகம் திட்­டவும் ஆரம்­பித்­தனர். அவர்கள் என் தந்­தையை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு, தாங்கள் சொல்­வது போன்று நடந்து கொள்­ளு­மாறு என்­னிடம் கூறு­மாறும் இன்றேல் என்னை 20 வரு­டங்கள் சிறைக்கு அனுப்­புவோம் என்று கூறி­னார்கள். பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ளரே தந்­தை­யிடம் இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

சுமார் ஐந்து மாதங்­க­ளுக்குப் பிறகு, அவர்கள் என்னை ஏஎஸ்­பி­யிடம் அழைத்துச் சென்­றனர். நான் அங்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­வதை அறிந்­தி­ருக்­க­வில்லை. – எனது கேள்­வி­க­ளுக்கும் அவர்கள் பதி­ல­ளிக்­க­வில்லை. நாங்கள் கால்­ந­டை­களைப் போல அழைத்துச் செல்­லப்­பட்டோம். – எங்­க­ளுக்கு அங்கு எந்த உரி­மையும் அங்கு வழங்­கப்­ப­ட­வில்லை. அங்கு ஏஎஸ்பி ரத்­நா­யக்க, “மகன், உனக்கு எங்­கி­ருந்து தீவி­ர­வாத சிந்­த­னைகள் வந்­தன, அவற்றை மாண­வர்­க­ளுக்கு எப்­படிக் கற்றுக் கொடுத்தாய்?” எனக் கேட்டார். எனக்கு யாரும் தீவி­ர­வாதக் கருத்­துக்­களைக் கற்­பிக்­க­வில்லை என்றும், நான் யாருக்கும் தீவி­ர­வா­தத்தைக் கற்­பிக்­க­வில்லை என்றும் தமிழில் பதி­ல­ளித்தேன். என் உம்­மா­வையும் வாப்­பா­வையும் நேசிப்­பது குற்றம் என்றால், நான் அதைச் செய்தேன் என்று, என் மீது வழக்குத் தொடுத்து என்னைக் கொல்­லுங்கள் என்று அவ­ரிடம் சொன்னேன். அதன்பின், நீதி­பதி முன் வாக்­கு­மூலம் அளிக்­கும்­படி என்னை வற்­பு­றுத்த முயன்­றனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் எனக்கு சரி­யாக உணவு வழங்­க­வில்லை, அவர்கள் என்னை வீட்­டா­ருக்கு தொலை­பேசி அழைப்­பு­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­க­வில்லை. அவர்கள் மற்ற கைதி­க­ளுக்கு அழைப்­பு­களை மேற்­கொள்ள அனு­ம­திப்­பார்கள், நான் ஒப்­புக்­கொண்டால் மட்­டுமே எனக்கு தொலை­பேசி அழைப்­பெ­டுக்க அனு­ம­திக்­கப்­படும் என்று கூறு­வார்கள். ஒப்­புக்­கொள்­ளா­விட்டால் 15 அல்­லது 20 ஆண்­டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்­பார்கள். அவை சிறைக் கூண்­டு­களில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்­சிகள் இருந்­தன. தேவை­யான மருந்துப் பொருட்கள் தரப்­ப­ட­வில்லை.

நீங்கள் சட்­டத்­த­ர­ணியை அணு­கிய பிறகு என்ன நடந்­தது?
நான் எனது சட்­டத்­த­ர­ணியை முதன்­மு­றை­யாகச் சந்­தித்­த­போது, எனக்கு சரி­யான உணவு அல்­லது வச­திகள் கிடைக்­க­வில்லை என்­ப­தற்­காக, அவர்கள் என்­னிடம் வாக்­கு­மூலம் கேட்­பதைப் பற்றி நான் எதுவும் கூற­வில்லை. ஏதேனும் சட்­டத்­த­ர­ணி­யிடம் முறை­யிட்டால் என்னை அடிப்­பார்கள் என்று தெரிந்­ததால் வேறு எதுவும் நான் பேச­வில்லை. ஆனால் சட்­டத்­த­ரணி சென்­ற­வு­ட­னேயே என்னை கைவி­லங்­கிட்டு, திட்­டி­விட்டு அன்று முழு­வதும் அப்­ப­டியே வைத்­தி­ருந்­தார்கள். பின்னர் அவர்கள் என்னை கடற்­படை முகா­முக்கு அரு­கி­லுள்ள ஒரு சிறையில் ஒரு மாதம் வைத்­தார்கள்.- மனி­தர்கள் இருக்க முடி­யாத இடம் அது. அங்கு மிகவும் சூடாக இருக்கும், உங்­களால் சுவா­சிக்க முடி­யாது. ஒரு மிருகம் கூட அதில் வாழ முடி­யாது.

அதன் பின்னர் அவர்கள் என்னை இரண்டு மாதங்­க­ளுக்கு தங்­காலை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்தனர். பின்னர் என்னை மீண்டும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் ஆறாவது மாடிக்கு மாற்றினர். பின்னர் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறையில் அடைத்தனர். காவலர்கள் என்னைப் பார்த்து உரக்க கத்துவார்கள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று திட்டுவார்கள். எங்களால் அங்கு குளிக்க முடியவில்லை, சரியான உணவு இல்லை. ஒரு அறையில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மட்டுமே இருக்க முடியும், ஆனால் ஒரு அறையில் சுமார் 50 பேர் இருந்தனர்.

இப்­போது என்ன செய்ய திட்­ட­மிட்­டுள்­ளீர்கள்? எழு­து­வதை நிறுத்தப் போகி­றீர்­களா?
இந்த நாட்டில் பேசவோ எழு­தவோ முடி­யாது. எழு­து­வது என் பொழு­து­போக்கு. எங்­களால் எழுத முடி­யா­விட்டால் எங்களால் வாழ முடி­யாது. எங்­களால் கால்­ந­டை­களைப் போல வாழ முடி­யாது. நான் எழு­து­வதை நிறுத்தப் போவ­தில்லை. நான் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் எழுதிக் கொண்டே இருந்தேன், விடு­த­லை­யான பிறகு இன்னும் அதி­க­மாக எழு­து­கிறேன். – அநீ­திக்கு எதி­ராக தொடர்ந்து எழு­துவேன்.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் பற்றி உங்கள் அபிப்­பி­ராயம் என்ன?
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்ள அனை­வ­ரையும் விடு­விக்க வேண்டும். அவர்கள் மக்­களைக் கைது­செய்து விட்டு பின்னர் குற்­றச்­சாட்­டுக்­களைச் சோடிக்­கி­றார்கள். இந்த சட்டம் இருக்கும் வரை எங்­களால் வாழ முடி­யாது.
எனது சட்­டத்­த­ர­ணிகள் குழு­விற்கும், கருத்துச் சுதந்­தி­ரத்தைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்கைக் குழு­விற்கும் ஏனைய மனித உரிமை அமைப்­பு­க­ளுக்கும், ஊட­கங்கள் மற்றும் எனக்­காக குரல் கொடுத்து எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.