2020 மார்ச் வரை அருவாக்காலுவில் குப்பைகளை கொட்ட இடைக்கால தடை
தீர்ப்பையடுத்து புத்தளம் மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆராவாரம்
புத்தளம் அருவாக்காலு குப்பைத் திட்டத்திற்கு எதிராக புத்தளம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை நேற்று இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 2020.03.12 வரை அப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டடுள்ளது. க்ளீன் புத்தளம் அமைப்பு மற்றும் பிரதேசவாசிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றித்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இத்தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டுவந்து புத்தளத்தில் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என களீன் புத்தளம் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு மீண்டும் 2020.03.12 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புத்தளம் நகரில் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தீர்ப்பானது மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது வெற்றி என க்ளீன் புத்தளம் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் கடந்த சில வாரங்களாக கொழும்பிலிருந்து லொறிகளில் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு அருவாக்காலுவில் கொட்டப்பட்டு வரும் நிலையில் குறித்த லொறிகள் மீது சிலர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
vidivelli