பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்

0 802

ஹொர­வ­பொத்­தான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  கிரலா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்து அதனை முகநூல் சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­ய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் எண்மர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப் புகைப்படங்கள் தொடர்பில் தொல்­பொருள் அதி­கா­ரிகள் வழங்­கிய முறைப்­பாட்­டினை அடுத்து அவர்கள்  பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கைது செய்ப்­பட்ட எட்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் கடந்த 24 ஆம் திகதி கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். கெப்­பித்­தி­கொல்­லாவ நீதி­மன்ற நீதிவான் , அவர்­களை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளார். இந்த எட்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் 24 – 26 வய­துக்­குட்­பட்டவர்கள்.  இவர்கள் ஹொர­வப்­பொத்­தான, நாவ­லப்­பிட்டி, புத்­தளம், ஓட்­ட­மா­வடி, கம்­பளை, சாய்ந்­த­ம­ருது, குளி­யாப்­பிட்டி மற்றும் ஏறா­வூரைச் சேர்ந்­த­வர்கள்.

2018  ஜன­வரி மாத­ம­ளவில் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயிலும் மாண­வர்கள் குழு­வொன்று தனிப்பட்ட சுற்றுலா  சென்ற சமயமே குறித்த புராதன சின்னத்தின் மீதேறி நின்று புகைப்­படம் எடுத்­துள்­ளனர். இந்தப் புகைப்படங்களையும் அதே காலப்பகுதியிலேயே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். எனினும் அன்று யாரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. துரதிஷ்டவசமாக ஒரு வருடம் சென்று, குறித்த மாணவர்கள் இறுதிப் பரீட்சைக்கும் தோற்றி தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தபோதே இந்த விடயம் பேசுபொருளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் சிலர் திட்டமிட்ட சதி ஒன்றை அரங்கேற்றியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை பௌத்­தர்­களின் வர­லாற்றுச் சின்­னங்­களை தன்­ன­கத்தே கொண்டு நாட்டின் பல பிர­தே­சங்கள் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளன. அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, சீகி­ரியா, கண்டி,  தம்­புள்ளை போன்ற பிர­தே­சங்­களை இவற்றுள் குறிப்­பிட்டுக் கூறலாம்.

இலங்­கையை ஆண்ட மன்­னர்கள் நிறு­விய பல சமய தூபிகள், விகா­ரைகள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் வர­லாற்றுச் சின்­னங்­க­ளாக பாது­காக்­கப்­பட வேண்­டிய தொல்­பொ­ருட்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

இலங்­கைக்கு வருகை தரும் வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் இந்தப் பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்து தொன்மை மிகு எமது நாட்டின் வர­லாற்றுச் சின்­னங்­களைப் பார்வையிடுகிறார்கள். அவை எந்த சம­யத்­துக்கு உரி­யன என்­றாலும் அவற்றைப் பாது­காக்க வேண்­டி­யதும் புனித ஸ்தலங்­க­ளாக கௌர­வப்­ப­டுத்த வேண்­டி­யதும் இலங்­கையர் என்ற ரீதியில் எம் அனை­வ­ரதும் கட­மை­யாகும்.

எனினும் இம் மாணவர்கள் புராதன சின்னத்தின் மீதேறி நின்று புகைப்படங்களை எடுத்தமையானது தமது அறியாமையினாலேயாகும். குறித்த சின்னங்களை அவமதிக்கும் நோக்கில் இவர்கள் செயற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. குறித்த பகுதியில் இவை புராதனச் சின்னங்கள் என்றோ அவற்றில் ஏறவோ புகைப்படங்கள் எடுக்கவோ வேண்டாம் என்றோ எந்தவித அறிவித்தல் பலகைகளும் இதுவரை இடப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் குறித்த அறிவுறுத்தல்களை வழங்காமையே இம் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணமாகும்.

அந்த வகையில் இம் மாணவர்களின் வாக்குமூலங்களுக்கமையவும் அவர்களது அறியாமையை கருத்திற் கொண்டும் இவர்களை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் தற்போது தலையிட்டுள்ளனர். இம் மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இம் மாணவர்களை விடுவிக்குமாறும் கோரியுள்ளனர். அந்த வகையில் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாது, மாணவர்கள் அறியாமல் செய்த தவறு என்ற வகையில் குறைந்தபட்ச அபாரதத்துடன் அவர்களை விடுவிப்பதே சிறந்ததாகும். இதற்கான முயற்சிகளை சகல தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.