அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள்: ஞானசார தேரருக்கு எதிரான பரிந்துரைகளை சமர்ப்பிக்குக

சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0 108
  • ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் கேள்வி;
    அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை தொடர்கிறது

(எப்.அய்னா)
அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன் வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை சமர்ப்­பிக்குமா­று உயர் நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த வாரம் (02) மீண்டும் இடம்­பெற்­றன‌.

கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் உயர் நீதி­மன்றின் 404 ஆம் விசா­ரணை அறையில், விசா­ர­ணைக்கு வந்­தது. நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட‌ தலை­மை­யி­லான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் குறித்த மனுக்கள் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இம்­ம­னுக்கள் தொடர்பில் மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரத்னம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கின்­ற‌னர்.

ஏற்­க­னவே மனுக்கள் மீதான விசா­ர­ணையின் ஆரம்ப வாத­மாக சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன மன்றில் வாதங்­களை முன்­வைத்­தி­ருந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்­னமும், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபும் வாதங்­களை முன்­வைத்­தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமி­டங்­களும் ஆற்­றிய உரை ( அப­ச­ரண உரை என அறி­யப்­படும் உரை) ஏற்­க­னவே உயர் நீதி­மன்றில் காணொ­ளி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அக்­கா­ணொ­ளியின் திரை வசன அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இக்­கூட்டம் தொடர்பில் முன் கூட்­டியே அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்­தி­ருந்தும் அக்­கூட்­டத்தை நடாத்த அனு­ம­தி­ய­ளித்து, பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தை சரி­வர அமுல் செய்ய பொலிஸார் தவ­றி­யுள்­ள­தா­கவும் பொலி­ஸாரும் அர­சாங்­கமும் தமது பொறுப்­புக்­களை சரி­வர அமுல் செய்ய தவ­றி­ய­தா­கவும் அதன் விளைவே அளுத்­கம மற்றும் அதனை அண்­மித்த முஸ்லிம் கிரா­மங்கள் மீதான அத்­து­மீ­றிய தாக்­குதல் எனவும் மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்ணம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் மன்றில் சுட்­டிக்­காட்­டினர்.

இதன்­போது மன்றில் வாதங்­களை முன் வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், ‘உண்­மையில் இந்த கல­வரம் ஒரு போக்­கு­வ­ரத்து சம்­ப­வத்­தி­லி­ருந்து ஆரம்­பித்­தது. இரு முச்­சக்­கர வண்டி சார­தி­க­ளுக்கு இடையே வழ­மை­யாக பாதையில் நடக்கும் ஒரு வார்த்தை பிர­யோக சம்­பவம், திரி­பு­ப­டுத்­தப்­பட்டு கல­வ­ரத்­துக்­கான அஸ்­தி­வாரம் இடப்­பட்­டது. திக­னை­யிலும் இதுதான் நடந்­தது. போக்­கு­வ­ரத்து சம்­ப­வத்தை மையப்­ப‌­டுத்தி நடந்­த­தாக கூறப்­பட்ட தேரர் மீதான தாக்­குதல் தொடர்பில் அளுத்­கம பொலிஸார் 3 பேருக்கு எதி­ராக களுத்­துறை நீதி­மன்றில் வழக்குத் தொடுத்­தனர். அதில் அம்­மூ­வரும் நிர­ப­ரா­திகள் என கூறி, அப்­படி ஒரு தாக்­குதல் நடந்­த­மைக்­கான சான்­றுகள் இல்லை எனக் கூறி விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்’ என குறிப்­பிட்டார்.

இதன்­போது குறித்த தாக்­குதல் சம்­பவ வழக்கு தொடர்பில் சட்ட மா அதி­ப­ரிடம் நீதி­ய­ர­சர்கள் விளக்கம் கேட்­டனர்.

அதற்கு பதி­ல­ளித்த பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான‌ பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மாலி கரு­ணா­நா­யக்க, அவ்­வ­ழக்கு பொலி­ஸாரால் தொடுக்­கப்­பட்­டது எனவும் சட்ட மா அதி­ப­ருக்கு அது­கு­றித்த தகவல் இல்லை எனவும், விப­ரங்­களைப் பெற்று மன்­றுக்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் வாதங்­களை முன் வைக்கும் போது, ‘ இந்த போக்­கு­வ­ரத்து சம்­ப­வத்­துக்கு மேல­தி­க­மாக அளுத்­கம நகரில் சிட்டி சென்டர் எனும் வர்த்­தக கட்­டிடம் எரி­யூட்­டப்­பட்­டது. இவ்­வா­றான பின்­னணி சம்­ப­வங்கள் இருக்கும் போது, அப்­போ­தைய பதற்ற சூழலில் ஞான­சார தேரரின் குறித்த கூட்­டத்­துக்கு தடை விதிக்க பல தரப்­பி­னரும் கோரினர். இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் கூட பொலிஸ் மா அதி­ப­ருக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்­பி­யது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, அளுத்­கம, பேரு­வளை மற்றும் திகன உள்­ளிட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடந்த வன்­மு­றைகள் தொடர்பிலும் ஆராய்ந்­துள்­ளது. அதில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்)கீழ் நட­வ­டிக்கை எடுக்க சட்ட மா அதி­ப­ருக்கு பரிந்­து­ரையும் செய்­துள்­ளது’ என நீதி­ய­ர­சர்­களின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

இதன்­போது பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான‌ பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மாலி கரு­ணா­நா­யக்­கவை நோக்கி ஞான­சார தேர­ருக்கு எதி­ராக ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா, தற்­போது அவர் சிறையில் இருப்­பது அதன் கீழா என நீதி­ய­ர­சர்கள் வின­வினர்.

அதற்கு பதி­ல­ளித்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மாலி கரு­ணா­நா­யக்க, ஞான­சார தேரர் தற்­போது சிறையில் இருப்­பது தண்­டனைச் சட்டக் கோவையின் கீழான குற்­றத்­துக்­காக என்­பதை உறுதி செய்­த­துடன், ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் ஏதும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் என குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன் வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை உயர் நீதி­மன்றில் சமர்­ப்பிக்­கு­மாறு நீதி­ய­ர­சர்கள் குழாம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்டது. இத­னை­ய­டுத்து இவ்­வ­ழக்கு எதிர்­வரும் ஜூன் 17 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி தர்­கா­நகர் அதி­கா­ரி­கொட, வெலி­பிட்­டிய, சீனன் வத்த, துந்­துவ, பேரு­வளை, வெலிப்­பன்னை உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் பதி­வா­கின. இந்த வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தவ­றி­யதன் ஊடாக தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. விஷே­ட­மாக, இதன் பின்னர் இவ்­வா­றான வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதை தடுக்க பொறி­முறை ஒன்­றினை உயர் நீதி­மன்றம் தனது தீர்ப்­பூடாக வழங்கி அதனை அமுல் செய்ய சட்­டத்தை அமுல் செய்­ப­வர்­க­ளுக்கு உத்­த­ர­விட வேண்டும் எனவும் இம்­ம­னுக்கள் ஊடாக கோரப்­பட்­டுள்­ளது.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் , அப்­போ­தைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, அப்­போ­தைய பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை கட்­டளைத் தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்­ளியூ.சி.என். ரண­வன, அபோ­தைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்­லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நிய­மிக்­கப்­பட்ட பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட 9 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறை காரணமாக 48 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ( சூட்டுக் காயங்கள் உட்பட), 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், 2248 முஸ்லிம்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்ததாகவும், 79 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் ( 17 வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிப்பு) மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையிலேயே தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், வன்முறைகளுடன் தொடர்புடையோருக்கு, அதற்கு காரணமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.