காஸாவில் வசித்துவந்த இரண்டு குடும்பங்கள் இலங்கை திரும்பின

0 129

(அஷ்ரப் ஏ சமத்)
காஸாவில் வசித்து வந்த இரண்டு குடும்­பங்கள் இலங்­கையை வந்­த­­டைந்­துள்­ளன. இந்த இரு குடும்­பங்­களினதும் தாய்மார் இலங்­கை­யைப் பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்களாவர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்­கு­­தல்­க­ளி­னால் காஸாவில் தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்து நிராதரவாகிவிட்டதாக இவர்கள் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தினம் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ர­கத்தில் இலங்­கைக்கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் தார் ஸைட் தலை­மை­யில் நடைபெற்ற இந்த செய்­தி­­யாளர் மாநாட்டில் இக் குடும்­பங்கள் கலந்து கொண்டு தமது அனு­ப­வங்­­களை வெளிப்­ப­டுத்­தினர்.

இவர்­களில் ஒரு தாய்க்கு 4 பிள்ளை­களும் மற்­றொரு தாய்க்கு 5 பிள்­ளை­களும் உள்­ளனர். தனது கண­வரின் உற­வி­னர்கள் சுமார் 50 பேர் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக இங்கு கருத்து வெளி­யிட்ட பெண் ஒருவர் கூறினார்.

“எங்களிடம் கடவுச்சீட்டுகள் இல்லை, இலங்கைத் தூதரகம் தான் கடவுச்சீட்டுகளைப் பெற எங்களுக்கு உதவியது” என இலங்­கையை வந்­த­டை­ந்த 16 வயதான சயீத் அல்-ஹபாஷ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஓர் இரவு பள்­ளி­வா­ச­லில் கழித்தோம். பிறகு இலங்கை வரும் வரை பாட­சா­லை­க­ளில் தஞ்சம் அடைய வேண்டியதாயிற்று. எனக்கு வாழ வருமானம் இல்லாததால் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். என் குழந்தைகள் மோதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வி தடைப்­பட்­டுள்­ள­து. மொழிப் பிரச்சினையால் கல்வியைத் தொடங்குவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. எனது கணவரையும் இலங்கைக்கு வரச் செய்வதே எனது எண்ணம். நாங்கள் தற்போது கேகாலையில் வசித்து வருகிறோம். எனினும் எனது பிள்ளைகள் கொழும்பிலேயே இருக்க விரும்புகிறார்கள்” என சயீத்தின் தாய் சித்தி சுஹைனா தெரிவித்தார்.

மற்­றொரு குடும்பத் தலைவி பாத்திமா ரிகாசா கூறுகையில், ‘‘இந்த மோதலால் நாம் கடு­மை­யா­கப் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்களும் பாது­காப்­புக்­காக ஓரி­டத்­தி­லி­ரு­ந்து இன்­­னு­மோர் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டோம், பின்னர் வெளி­யே­று­மாறு அறி­வு­றுத்­தி­னர். நாங்கள் ஒரு பாட­சா­லை­யில் தங்க வேண்டியிருந்தது. அந்த பாட­சாலை மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தால் அங்கிருந்தும் வெளியேற வேண்டியிருந்தது. எனது  கணவரின் தாய் சுக­வீ­ன­முற்­­றுள்­ள­தால் அவ­ரை அங்­கு­விட்­டு­விட்டே இலங்­கைக்கு வந்­துள்ளோம். நாங்கள் ஆரம்பத்தில் இலங்கையிலேயே வசித்து வந்தோம், ஆனால் எனது கணவரின் தாய் நோய்வாய்ப்பட்டதால் நான் பலஸ்தீனத்திற்கு செல்ல வேண்டியிருந்தது ”என்று அவர் தனது கஷ்­டங்­களை விப­ரித்­தார்.

இரண்டு குடும்பங்களும் காஸா பகுதியில் இருந்து வெளி­யே­ற உதவிய இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூது­வ­­ருக்கும் நன்றி தெரிவித்தனர். “காஸாவில் அமைதியை நிலை­நாட்­டு­மா­று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். பலஸ்தீன மக்களை அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்ற இஸ்ரேல் விரும்புகிறது. காஸாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது, அதை நிறுத்த வேண்டும். அங்குள்ள மக்கள் கடு­மை­யா­ன சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்” என்றும் அவர் குறிப்­பிட்­டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.