அரு­கி­வரும் முஸ்­லிம்­களின் இசைப் பாரம்­ப­ரியம்

0 588

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இந்தத் தலைப்பை பற்றி ஆவ­ணப்­பட இயக்­குனர் நாதியா பெரே­ராவின் வர­லாற்று முக்­கி­யம்­பெற்ற படைப்­பொன்றை அண்­மையில் யூரியுப் வழி­யாகப் பார்த்து ரசிக்க நேர்ந்­தது. அது இலங்கை முஸ்­லிம்­களின் கலாச்­சாரச் செழிப்புக் கால­மொன்றை நினை­வுக்குக் கொண்­டு­ வந்­த­தாலும், அதனை அச்­ச­மூ­கத்தின் இளம் சந்­த­தி­யினர் மறந்து வாழ்­வ­தை­யிட்டு மனம் நொந்­த­தாலும், அந்த முது­சத்­துக்குப் புத்­துயிர் அளிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தாலும் இக்­கட்­டு­ரையை எழுதத் துணிந்தேன். இதி­லே வரும் சில கருத்­துக்கள் பல­ருக்கு மனக்­கி­லே­சத்தை ஏற்­ப­டுத்­து­மாயின் அதற்­காக வருந்­து­கிறேன்.

வைசி­ய­ராக வந்த முஸ்­லிம்கள் வைசி­யத்­தையே பிர­தான வாழ்­வா­தா­ர­மா­கக் ­கொண்டு வைதீகப் பாதை­யிலே போதிக்­கப்­பட்ட இஸ்­லா­மிய மார்க்­கத்தைத் தழுவி, வியா­பார மையம், பள்­ளி­வாசல், குடும்பம் என்ற முக்­கோ­ணத்­துக்­குள்­ளேயே தமது வாழ்வை வரை­ய­றை­யிட்டு, வெறும் ஜடத்­துவ தேவை­க­ளையும் ஆன்­மிக தேவை­க­ளையும் மட்­டுமே பூர்த்தி செய்­து­கொண்டு வாழ்­வதால் ரசா­ஞான தேவை என்ற ஒன்றை அவர்கள் மறந்­து­விட்­டனர். அதனால் அவர்­களின் வாழ்வு ஒரு பூர­ண­வாழ்­வல்ல என்ற ஓர் சமூ­க­வியல் உண்­மையை காலஞ் சென்ற காத்­தான்­குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை தனது பூரண வாழ்வு என்ற சிறு நூலில் யதார்த்­தத்­துடன் விளக்­கி­யுள்ளார். அந்த நூலை எத்­தனை முஸ்­லிம்கள் வாசித்­துள்­ள­னரோ தெரி­யாது. ஆனால் அவர் படம்­பி­டித்­துக்­காட்­டிய முஸ்லிம் சமூகம் 1950களுக்குப் பின்னர் உரு­வா­ன­தொன்று என்­ப­தையும் அதற்கு முன்னர் இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வு கலா­ர­ச­னையும் ரசா­ஞா­னமும் கலந்­தி­ருந்­தது என்­ப­தையும் அந்த வாழ்வு மீண்டும் மறு­ம­லர்ச்சி காண­வேண்டும் என்­ப­தை­யுமே இக்­கட்­டுரை வலி­யு­றுத்­து­கி­றது. அதற்­கொரு தூண்­டு­த­லாக அமைந்­துள்­ளது நாதியா பெரே­ராவின் ஆவ­ணப்­படம். அவ­ருக்கு இக்­கட்­டு­ரை­யா­ளனின் நன்­றிகள்.

இஸ்­லாத்­துக்கும் இசைக்கும் நெருங்­கிய தொடர்­புண்டு. திருக்­குர்­ஆனே ஒரு இசைப் பொய்கை என்றால் அது மிகை­யா­காது. அதன் ஒவ்­வொரு வச­னங்­க­ளையும் பயிற்­றப்­பட்ட காரிகள் மீட்­கும்­போது மொழி விளங்­கா­த­வர்­களும் அந்தத் திரு­வ­ச­னங்­களில் மெய்­ம­றந்­தி­டுவர். எட்டாம் நூற்­றாண்­டி­லேயே யூனுஸ் அல் காதிப் என்­பவர் இசை­பற்­றிய முத­லா­வது நூலை அரபு மொழியில் வெளி­யிட்டு பல பாடல்­க­ளையும் அவர் அதிலே கோர்வை செய்தார். இஸ்­லா­மிய கிலாபத் காலத்தில் பக்­தாதும் கொர்­டோ­பாவும் இஸ்­தாம்­புலும் இஸ்­ப­கானும் தில்­லியும் மற்றும் தலை­ந­கர்­களும் இஸ்­லாத்தின் அர­சியல் மையங்­க­ளா­கவும் பொருள்­வளம் கொண்ட பொக்­கிஷச் சாலை­க­ளா­கவும் மட்­டு­மல்­லாது கலைப் பீடங்­க­ளா­கவும் திகழ்ந்­தன என்­பதை வர­லாறு காட்டும். கிலாபத் ஆட்சி முடி­வுக்­கு­வந்து தேசிய உணர்வின் வெளிப்­பா­டு­க­ளாக முஸ்லிம் நாடுகள் உரு­வா­கி­யதன் பின்­னரும் கலை வளர்ச்சி அங்கே பல கோணங்­களில் மிளிரத் தொடங்­கி­யது.
வானம்­பா­டி­யென சுற்றித் திரிந்து தன் இனி­மை­யான குரலால் அரபு உல­கத்­தையே மயக்­கிய உம்மு குல்­துமை யாரும் மறக்க முடி­யுமா? அதே­போன்று பாக்­கிஸ்­தானின் நுஸ்ரத் பதே அலி­கானின் கவாலி ராகக் கானங்கள் மேற்­கு­லகின் பொப் இசைப் பாட­கர்­க­ளையும் பிர­மிக்க வைத்­ததை மறுக்­கத்தான் முடி­யுமா? இலங்­கை­யி­லும்­கூட காலஞ்­சென்ற மொகிதீன் பேக் பாடிய புத்தம் சரணம் கச்­சாமே என்ற பாடல் பௌத்த மக்­க­ளையே மெய்­சி­லிர்க்க வைத்­த­தையும் யாரும் மறுப்­பரோ? அந்­தப்­பாடல் கவாலி இசையில் பாடப்­பட்­ட­தென்­பது எத்­தனை பேருக்குத் தெரி­யுமோ? இந்த வளர்ச்சி 1950களுக்­குப்பின் மங்கத் தொடங்­கி­யதேன்? அதற்கு விடை­காணும் முன்னர் இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை இன்னும் சில உண்­மை­களை வாச­கர்முன் சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ளது.

களிக்­கம்பு, ஊஞ்சல் பாட்டு, பக்கீர் பைத், றப்­பாணம், நாட்­டுக்­கவி, மீன் வலை இழுப்­போரின் ஏலேலேப் பாடல்கள், விருத்தம், பதம் என்­ற­வாறு எத்­த­னையோ வகை­யான இசை மர­பு­க­ளுக்குச் சொந்­தக்­கா­ரர்கள் இலங்கை முஸ்­லிம்கள். நெல் வய­லிலே ஏர் பூட்டி உழு­கை­யிலும், கன்­னியர் களை பிடுங்­கும்­போதும், பற­வை­களை விரட்­டும்­போதும், வயற்­கட்­டிலே பரண் அமைத்து ஆண்­க­ளுடன் பெண்­களும் களிப்­புடன் போட்­டிக்குக் கவிபாடு­தலை கிழக்­கி­லங்­கையின் வர­லாறு எடுத்துக் காட்­டு­கி­றது. அறு­வடை செய்த தானி­யத்தை மாட்டு வண்­டி­க­ளிலே ஏற்­றிக்­கொண்டு முஸ்லிம் முல்­லைக்­கா­ரர்கள் கரை­வா­குப்­பற்­றி­லி­ருந்து காத்­தான்­கு­டி­வரை போடிமார் வீட்­டுக்கு இர­வோ­டி­ர­வாகக் கொண்டு செல்­லும்­போது கண் விழித்­தி­ருப்­ப­தற்­காக அவர்கள் பாடும் கவி­களில் காதற் சுவையும், பக்திப் பர­வ­சமும், நையாண்டிச் சுவையும், வசை­களும் மலிந்து காணப்­படும். பள்­ளிக்­கூடப் படிக்­கட்­டிலும் கால்­வைத்­தி­ராத பாமர முஸ்லிம் பெண்­களும் இயல்­பா­கவே கவி­பாடும் திறமை பெற்­றி­ருந்­ததை என்­னென்று வியப்­பதோ?

ஊரிலே களிக்­கம்பு விழா அந்தே ஊரே களை­கட்டி நிற்கும். களிக்­கம்பு மேடைக்குக் கதா­நா­யகன் அண்­ணா­வியார். அவ­ருக்குச் சமூ­கத்தில் ஊர் வைத்­தியர், பள்ளி மரைக்­காயர் போன்­ற­வர்­களின் அந்­தஸ்­துக்குச் சம­மான மதிப்பு இருந்­தது. அவரை வெற்­றிலை வட்டா வைத்து களிக்­கம்பு மேடைக்கு அழைத்து வருவர். பெண்கள் குரை­வை­யிட்டு அவரின் ஊர்­வ­லத்­துக்கு மெரு­கூட்­டுவர். அந்த நிகழ்வைக் கண்­டு­ர­சிக்க ஆண்­களும் பெண்­களும் வெண்­ணி­லவு நாட்­க­ளிலே திரள்­வதால் ஊரே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்கும். அதே போன்று நபி­பெ­ரு­மா­னாரின் பிறந்த தினக் கொண்­டாட்­டங்­க­ளிலும் மற்றும் பெருநாள் பண்­டிகைக் காலங்­க­ளிலும் திறந்த வெளி­யிலே பேரூஞ்சல் அமைத்து ஆண்கள் விருத்­தம்­பாடி இர­விலே ஆடுவர். பெண்­க­ளுக்கும் தன­வந்தர் வீட்டு வள­வு­க­ளுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடச் செய்வர்.

பக்கீர் பாடல்­களோ அலா­தி­யா­னது. மின்­சார வெளிச்சம் இல்­லா­தி­ருந்த காலத்தில் றம­ழா­னிலே சஹர் வேளைக்கு தூக்­கத்­தி­லி­ருக்கும் மக்­களை தட்­டி­யெ­ழுப்­பு­வது பக்­கீர்­களின் தக­ராவும் அவர்­களின் பாடல்­க­ளுமே. அது­மட்­டு­மல்­லாமல் சில பள்­ளி­வா­சல்­களில் கொடி­யேற்ற காலத்தில் இர­வி­ர­வாக அவர்­களின் பைத்­து­களைக் கேட்­கலாம். கல்­முனை கடற்­கரைப் பள்­ளியின் கொடி­யேற்­ற­மென்றால் வெளி­யூர்­க­ளி­லி­ருந்தும் மக்கள் திரள்வர். அவர்­களை ஈர்ப்­பது பக்­தி­யல்ல, பக்­கீர்­களின் சாகச விளை­யாட்­டு­களும் பாடல்­க­ளுமே என்­பதை யதார்த்­த­வா­திகள் உணர்வர்.

இந்த இசை மர­பு­களை கட்­டிக்­காத்து அவற்றை ரசித்துக் களித்த ஒரு காலம் முஸ்­லிம்­க­ளி­டையே இருந்­தது. கிழக்­கி­லங்கை இந்துக் கோயில் முற்­றங்­க­ளிலே வரு­டா­வ­ருடம் சித்­திரை மாதத்தில் கூத்து நாடகம் அரங்­கே­று­வது வழக்கம். அவை இந்­துக்­களின் விழா என நினைத்து முஸ்­லிம்கள் அதிகம் அங்கே செல்­வ­தில்லை. ஆனால் அவற்­றிற்கு ஈடா­கவே மேற்­கூ­றிய களி­யாட்­டங்கள் முஸ்லிம் கிரா­மங்­களில் நடை­பெற்று வந்­தன என்றும் கூறலாம். இவ்­வாறு கலா­ர­ச­னை­யுடன் வாழ்ந்த முஸ்­லிம்கள் ஏன் 1950களுக்­குப்­பின்னர் ஜடத்­துவ தேவை­க­ளுக்கும் ஆன்­மீக தேவை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுத்து ரசா­ஞான தேவை­களைக் கைவிடத் தொடங்­கினர் என­ப­தற்கு விடை காண்போம்.

1950களுக்குப் பின் தப்லீக் இயக்­கமும் 1970களுக்­குப்பின் வஹ்­ஹா­பித்­து­வமும் நுழையத் தொடங்கி மதப் புன­ருத்­த­ாரணம் என்ற பெயரில் அறி­மு­கப்­ப­டுத்­திய சில கொள்­கைகள் முஸ்­லிம்­களின் இசை மர­பு­க­ளுக்கு ஓர் இடியாய் விழுந்து அவர்­களின் கலா­ர­ச­னைக்கும் ஒரு புதிய விளக்­கத்தை கொடுத்­தன. அதற்கு இன்­னொரு காரணம் தமிழ், ஹிந்தி, சிங்­களத் திரைப் படங்­களின் தாக்கம் என்றும் கூறலாம். இவை இரண்­டி­னதும் விளை­வாக உரு­வா­கி­யதே இஸ்­லா­மிய கீதம் என்ற கலப்­பட இசையின் வளர்ச்சி. அதை வளர்ப்­ப­தற்கு ஊன்­று­கோ­லாக விளங்­கி­யது இலங்கை வானொ­லியின் இஸ்­லா­மிய நிகழ்ச்சி. இஸ்­லா­மிய கீதம் என்­பது பெரும்­பாலும் சினிமாப் பாடல்­களின் நக­லே­த­விர அவற்றில் எந்தத் தற்­பண்பும் இல்லை. ஆனால் அதன் மோகத்­தாலும் மௌட்­டீக மதக் கொள்­கை­க­ளாலும் பரம்­பரை இசை மர­புகள் படிப்­ப­டி­யாகத் தேயத் தொடங்கி இன்­றைய முஸ்லிம் இளஞ்­சந்­த­திக்கு அவ்­வா­றான ஒரு மரபு இருந்­த­தென்ற ஞாப­கமே இல்­லாமல் போய்­விட்­டமை அச்­ச­மூ­கத்தின் துர­திஷ்டம்.

இசைக்கு மொழி, மதம், இனம் என்ற பிரி­வுகள் கிடையா. அது மனித இத­யங்­களின் பசிக்குக் கிடைக்கும் மிகச்­சு­வை­யான உணவு. ரசா­ஞான தேவையின் மிகவும் முக்­கி­ய­மான ஒரு பிரிவு இசை. அதனை வழங்­கு­வோரை சர்வ உல­கமே பாராட்டும். இல்­லை­யென்றால் ஏ. ஆர். ரகு­மா­னுக்கு அமெ­ரிக்­கா­விலே ஏன் ஆஸ்கார் விருது இரு முறை கிடைக்க வேண்டும்? பிஸ்­மில்லா கானின் ஷெனாய் வாசிப்­புக்கு ஏன் இங்­கி­லாந்­து­வரை புகழ்­ப­ரவ வேண்டும்? எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஏன் இறைவன் தாவுத் நபிக்கு இசையை அருட்­கொ­டை­யாக வழங்க வேண்டும்? திருக்­கு­ர்ஆனின் திரு வச­னங்கள் ஏன் இசை­யோடு கலந்­தி­ருக்க வேண்டும்? இவற்றை மதத்தின் புனி­த­வா­திகள் என்று கூறுவோர் சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும்.

இன்­றைய இளம் சந்­த­தியை ஒன்­றி­ணைக்கும் சக்­தி­களுள் இரண்டு மிகவும் வலு­வா­னவை. ஓன்று விளை­யாட்டு, மற்­றது இசை. இரண்­டி­லுமே இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று பின் நிற்­கி­றது. ஏன்? இரண்டு கோடி மக்­களைக் கொண்ட இச்­ச­மூ­கத்தில் ஏன் பெயர் சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு ஓர் இசைக் குழு இல்லை? முஸ்லிம் இளை­ஞர்­க­ளிடம் திறமை இல்­லையா அல்­லது அத்­தி­ற­மைக்குத் தடை­யாய் அமைந்­துள்ள மதக் கொள்­கை­களா? 1970களிலே அன்­றைய முஸ்லிம் கல்வி அமைச்சர் பதி­யுத்தீன் மஹ்முத் இசையை கவின்­க­லை­களுள் ஒரு பாட­மாக முஸ்லிம் பாட­சா­லை­களில் புகுத்த முயன்­ற­போது முல்­லாக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் சேர்ந்து நடாத்­திய எதிர்ப்புப் போராட்டம் இஸ்­லா­மிய வைதீ­க­வா­தத்தின் எதி­ரொலி என்­பதை இக்­கட்­டுரை வலிந்­து­ரைக்­கி­றது.

இலங்கை இன்று இன­வா­தத்தால் சீர­ழிக்­கப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டையே உள்ள உற­வுகள் அற்ப அர­சியல் நோக்­கத்­துக்­காக மட்­டு­மே­யன்றி மனித நேயத்­துக்­காக அல்ல என்ற ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. இதனை இன்­றைய இளந் தலை­முறை உணர்ந்­துள்­ள­தற்குக் கடந்த வருடம் காலி­முகத் திடலில் நடை­பெற்ற இளைஞர் போராட்டம் ஓர் எடுத்­துக்­காட்டு. அதே வேளை கடந்த சுமார் அரை நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­க­ளி­டையே வளர்ச்­சி­பெற்ற மத­வாதம் அவர்­களின் நடை­யுடை பாவ­னை­களில் சர்ச்­சைக்­கு­ரிய மாற்­றங்­களைப் புகுத்­தி­யது மட்­டு­மல்­லாமல் அவர்­க­ளுக்கும் மற்­றைய இனங்­க­ளுக்கும் இடையே உள்ள சமூக உற­வையும் பாதித்­துள்­ளது. அந்த உறவை மீண்டும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இசை ஒரு சிறந்த கரு­வி­யா­கலாம். அதற்கு ஒரு வழி மறைந்­து­வரும் முஸ்லிம் இசை மர­பு­க­ளுக்குப் புத்­துயிர் அளிப்­பது. இதனை ஒரு சிறு உதா­ர­ணத்தைக் கொண்டு இக்­கட்­டுரை விளக்­கு­கி­றது.

வருடா வருடம் கண்டி மாந­க­ரிலே நடை­பெறும் எசல பவனி பௌத்த விழா­வா­கவே ஆரம்­பித்­தது என்­பது உண்­மைதான். ஆனால் அது இன்று வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­க­ளையும் அவர்கள் கொண்­டு­வரும் அன்­னியச் செலா­வ­ணி­யையும் கவரும் ஒரு கவர்ச்சிக் கலாச்­சாரக் கொண்­டாட்­ட­மாக மாறி­யுள்­ளது. பத்து இர­வு­க­ளாகப் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் பார்­வையை ஈர்க்கும் ஒரு விழா அது. அந்தப் பவ­னியில் அலங்­க­ரிக்­கப்­பட்ட யானைகள் முன் செல்ல அவற்றைப் பின்­தொ­டர்ந்து கண்­டிய நட­னங்கள், காவடிக் கூத்­துகள், மேளங்­களின் ஓசைகள் என்­ற­வாறு பல களிப்பூட்டும் காட்­சிகள் இடம்­பெறும். அதிலே தமி­ழி­னமும் கலந்து கொண்டு சிறப்­பிப்­பது அச்­ச­மூ­கத்­தின்மேல் பௌத்த மக்­க­ளுக்கு ஒரு மதிப்பை ஏற்­ப­டுத்­து­வதை மறுக்க முடி­யாது. ஆனால் எங்கே முஸ்­லிம்கள்? பக்கீர் தகரா பவ­னி­யொன்று அதற்­கு­ரிய கலாச்­சார ஆடை­க­ளுடன் அவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றினால் அல்­லது ஓர் அண்­ணா­வியார் தலை­மையில் களிக்­கம்பு ஆட்டம் அந்த விழாவில் இடம்­பெற்றால் இன உறவு வலுப்­பெ­றாதா? இதனால் இஸ்லாம் மாச­டைந்து விடுமா? வாச­கர்­களே சிந்­தி­யுங்கள்.

சிங்­களக் கிரா­மங்­க­ளுக்குள் முடங்கிக் கிடந்த கிரா­மிய நாடகக் கலைக்கு புது­மெ­ருகு ஊட்டி நாடே கண்டு களிக்கும் ஒரு கலாச்­சார பர­ரம்­ப­ரியச் சொத்­தாக மாற்­றி­யவர் பேரா­சி­ரியர் சரச்­சந்­திர. அதே­போன்று கோயில் வள­வு­க­ளுக்குள் சிறை­யுண்­டி­ருந்த அண்­ணாவி மரபுக் கூத்து நாட­கங்­க­ளுக்குப் புத்­து­யி­ர­ளித்து அதனை தமி­ழரின் வாழும் கலை­யாக மாற்­றி­யவர் பேரா­சி­ரியர் வித்­தி­யா­னந்தன். அவர்­களை நாடும் சமூ­கமும் மறக்­காது. அவ்­வாறு கவ­னிப்­பா­ரற்று அரு­கி­வரும் முஸ்­லிம்­களின் இசைப் பாரம்­ப­ரி­யத்­துக்கு மறு­வாழ்­வ­ழித்து கலை மறு­ம­லர்ச்சி ஒன்றைத் தோற்­று­விக்க இன்­றைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பணி­யாற்றும் முஸ்லிம் விரி­வு­ரை­யா­ளர்கள் அல்­லது பேரா­சி­ரியர்கள் எவரும் முன்­வ­ரு­வார்­களா? இது காலத்தின் தேவை. நாதியா பெரே­ராவின் ஆவ­ணப்­படம் அந்த வகையில் ஒரு விழிப்­பூட்டும் சித்­தி­ர­மாக அமை­கின்­றது.

இறு­தி­யாக ஒன்று. இது சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விடயம். அந்தத் திரை ஓவி­யத்­திலே பங்­கு­கொண்ட ஓரி­ருவர் முஸ்லிம் கன்­னியர் பதின்ம வய­துக்­குமேல் இசையில் ஈடு­பட்டால் அவர்­க­ளுக்கு வாழ்க்கைத் துணை தேடு­வது கஷ்­ட­மா­கி­விடும் என்ற ஓர் ஆணாதிக்கக் கருத்தை முன்வைத்தனர். இது குர்ஆனின் போதனைக்கு எதிர்மாறானது. அத்திருமறை மூன்று இடங்களில் இறைவன் வானத்­தையும் பூமி­யையும் அவற்­றிற்­கி­டை­யே­யுள்ள யாவற்­றையும் விைள­யாட்­டுக்­காகப் படைக்­க­வில்லை என்று கூறு­கி­றது. அவ்­வா­றாயின் எதற்­காக அவை படைக்­கப்­பட்­டன? இதற்கு விடை­காண சமூ­வி­ய­லைத்தான் நாட­வேண்டும். மனிதன் உட்­பட ஒவ்­வொரு படைப்­புக்­குள்ளும் ஏதோ ஓர் இர­க­சி­யத்தை அல்­லது திற­மையை இறைவன் பொதித்­துள்ளான். அதனை வெளிப்­ப­டுத்­து­வ­துதான் சமூ­கத்தின் கடமை. அதனை வெளிப்­ப­டுத்­து­வதன் மூலம்தான் அந்தச் சமூகம் செழிப்­புறும். அந்த வழியில் பார்த்தால் உம்மு குல்­துமின் இசை­வன்­மையும் நுஸ்ரத் பத்தே அலி­கானின் பாடல்­தி­றனும் இறைவன் அவர்­க­ளுக்குக் கொடுத்த வரன். அதை வெளிப்­ப­டுத்­தி­ய­தனா­லேதான் அவர்­களின் நாமம் இன்றும் மங்­கா­தி­ருக்­கி­றது. இதை உணர்ந்தால் ஆணோ பெண்ணோ என்ற பேதம் இல்­லாமல் இசைத் திற­னுள்ள எந்த உயி­ரையும் திரு­ம­ணத்­தின் ­பெ­யரால் மட்­டந்­தட்­டு­வது குர்­ஆனின் போத­னைக்கு மாறா­னது. முஸ்லிம் சமூ­கத்தின் ஆணா­திக்கம் பெண்­களை படுக்­கை­யை­றைக்கும் சமையற் கூடத்­துக்­கு­மட்­டுமே தேவை­யான ஜீவன்கள் என்­ற­வாறு ஒதுக்கி வைத்­துள்­ளது. அந்தக் கோட்­டையைத் தகர்த்­துக்­கொண்டு இன்றைய முஸ்லிம் பெண்கள் வெளிவருகின்றனர். அதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.