உளவியல் நோக்கில் சமகாலம்

0 6,057
  • எம்.எம்.ஏ.ஸமட்

மனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆன்மிகம் ஆகிய 3 விடயங்களும் முக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றபோது, அப்பாதிப்பானது பெருமளவில் அம்மனிதனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றபோது, அதன் தாக்கம் அம்மனிதனை மட்டும் பாதிப்பதில்லை.

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள ஆரோக்கியத்தின் பங்கு அத்தியாவசிமானதொன்றாகும். ஏனெனில, பொருளாதாரத்திற்கும் உளநோய்களுக்கும் இடையில் தொடர்புகள் நிலவுகின்றன. ஒருவர் உள நோயினால் பாதிக்கப்படுவாராயின் அப்பாதிப்பானது அவருக்கு மாத்திரமின்றி குடும்ப, சமூக, பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உள ஆரோக்கியம் ஏன் பாதிக்கப்படுகிறது. அதன் விளைவு என்ன? குற்றச் செயல்கள் எதன் தொடாக்கத்திலிருந்து பிறக்கிறது? குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கான காரணங்கள் என்ன என்ற பல கேள்விகள் தற்போது சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படுகின்றன.

உளவியல் பாதிப்புக்களும் நிகழ்வுகளும்;
நாட்டில் குற்றச்செயல்கள் வீரியம் பெற்றிருப்பதை அன்றாடம் பரவலாக இடம்பெறும் துன்பகரமான சம்பவங்கள் சான்று பகிர்கின்றன. கொலை, தற்கொலை, கொள்ளை, கடத்தல், விவாகரத்து, பெண்கள் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை, போதைப்பொருள் பாவனை – விற்பனை – கடத்தல் என தொடர் சங்கிலியாக தொடரும் குற்றச் செயல்களினால் ஏற்படும் பல்வேறு விளைவுகளுக்கு குடும்பங்களும், சமூகங்களும் முகம்கொடுக்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன

நவீன உலகின் இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் சமூகத்திலும், சுற்றாடலிலும், கலாசாரத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பல கோணங்களில் மனிதரிடையே உளப்பாதிப்புக்களைத் தோற்றுவிக்கின்றன. கையடக்கத் தொலைபேசி பாவைனயும், தேவையற்ற சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடும், திரைப்படங்களும், சின்னத்திரை நாடகங்களும், ஊடகங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும் அவற்றின் தொடரில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளும் இளம் தலைமுறையினரை உளப் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நவீன யுகத்தில் இளைஞர், யுவதிகள் ஏன் முதியவர்கள்கூட இணையத்தளப் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக கணினி அறிவுள்ளவர்களில் முகநூல் பாவனையில் மூழ்காதவர்கள் எவரும் இல்லை என்றதொரு நிலை சமகாலத்தில் உருவாகியுள்ளது. இந்த முகநூல் மற்றும் ஏனைய சமூகத் தளங்களின் அளவுகடந்த பாவனையானது மேனியா (பித்து) எனப்படும் உளநோயை ஏற்படுத்துவதாக அண்மைய மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இது தவிர, இணையத்தளங்களுக்கு அடிமையாவதனால் மனச்சோர்வு, தனிமை உணர்வு, இணையத்தளங்களில் உள்ளதெல்லாம் உண்மை என நம்பும் எண்ணம், அதீத இயலாமை உணர்வு, மனவுளைச்சல் மற்றும் பாலியல் குறித்த தவறான வக்கிர எண்ணங்கள் என்பனவும் அளவு கடந்த இணையத்தளப் பாவனையினால் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறு எண்ணத்தில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்கள் ஆளுமைக் கோளாறுகளை மனதளவில் உருவாக்கி பல்வேறு குற்றச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. சமகாலத்தில் தாய், தந்தையைக் கொல்லும் மகன், தங்கையைக் கொல்லும் அண்ணன், பிள்ளையைக் கொல்லும் தந்தை, மனவியைக் கொல்லும் கணவன், கணவனைக் கொல்லும் மனைவி என நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் மனதை நெகிழ வைக்கின்றன.

அதேபோன்று சின்னச் சின்ன விடயங்களுக்காக தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. பாடசாலை மாணவர்கள் முதல் முதியோர் வரை தற்கொலைகளுக்குச் செல்லும் அளவிற்கு அவர்களது உள்ளம் பாதிப்படைகிறது என்பது எதிர்கால உள ஆரோக்கியததை கேள்விக்குட்படுத்துகிறது.

அது தவிர, பாலகர்கள், மூதாட்டிகள் என்றும் பாராது இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் போன்ற குற்றச் செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றவேளை அக்குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் ஏதோவொரு வகையில் உளப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பது தெரியவருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார மாற்றங்களினால் மக்கள் தமது பாரம்பரிய, சமூக, கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர். இளம் சந்ததியினரின் மனப்பாங்கு, சிந்தனை, உடை, நடை, பாவனை என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்குமிடையில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உருவாகின்றன.

இலங்கையின் சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வயது எல்லையினராக 15-30 வயது வரையிலானோரும் 60 வயதுக்கு மேற்பட்டோரும் உள்ளனர். இவ்வயதுப் பிரிவினரே உளநோய் அதிகளவில் காணப்படும் வயதுப் பிரிவினர் என்ற காரணத்தினால் இலங்கையில் உளநோயாளர்கள் அதிகரிக்கும் விடயத்தில் இந்த வயது நிலையும் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

மேலைத்தேய நாகரிகத் தாக்கங்களின் விளைவாக ஏற்பட்டுள்ள குடும்பக் கட்டமைப்பு மாற்றங்களினால் குழந்தை வளர்ப்பு, கணவன் – மனைவி உறவு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றிலும் பல்வேறு பிரச்சினைகள் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கின்றன. வறுமை, மாணவர் – ஆசிரியர் தொடர்பாடலில் இடைவெளி, காதல் வயப்படல், பாலியல் பிரச்சினைகள் மற்றும் சமவயது நண்பர்களின் அழுத்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தல், பாடசாலைக்கு ஒழுங்காக சமுகமளிக்காமை, பாடங்களில் கவனம் செலுத்தாமை, தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். போதைபொருள் பாவனை மற்றும விற்பனையில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுது கவலையளிக்கும் விடயங்களாகும்.

பல்வேறு காரணங்கள் மூலம் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையாமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இயந்திரமயமாதல் மூலம் கணினிகளோடு மட்டுப்படுத்தப்படுவதனாலும் உளநெருக்கீடு, மனித உறவுகளில் சிக்கல் போன்றவற்றை பலர் எதிர்நோக்குகின்றனர். பசுமை நிறைந்த கிராம வாழ்க்கைச் சூழலிலிருந்து நகர வாழ்க்கையை நோக்கிச் செல்வதால் அமைதியின்மை, கவலை, என்பவற்றுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது.

இவ்வாறு குறைபாடுகளுக்கும் அதனோடு இணைந்த குற்றச் செயல்களுக்கும் தீர்வாக அமைவது ஒவ்வொருவரினதும் உள்ளம் வளப்படுத்தப்பட வேண்டும், ஆரோக்கியம் பெறவேண்டும். இதனால், உள்ளத்தை வளப்படுத்தும் செயற்பாடான உளவளத்துணை சேவை ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்புப் பொறிமுறையினூடாக கிராம மட்டம்தோறும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கூடிய அக்கறை அவசியமாகவுள்ளது.

உள ஆற்றுப்படுத்தலும் ஆரோக்கியமும்
மருந்துகளால் குணப்படுத்தக் கூடிய பாரிய உளநோய்களைத் தவிர ஏனைய உள நோய்களை உளவளத்துணை அல்லது உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சை முறையினால் குணப்படுத்த முடியும். அந்த வகையில் உளவளத்துணை பற்றிய விழிப்புணர்வும் அது பற்றிய அறிவும் நமக்கு இன்றியமையாததாகும்.
உளவளத்துணையானது “ஒருவர் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது முகங்கொடுக்கும் எதிர்பார்த்த, எதிர்பாராத சம்பவங்களினால் ஏற்படுகின்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படும் உள்ளார்ந்த சக்தி, திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்து, ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளுக்கு அவராகவே தீர்வு காண்பதற்கு உதவுகின்றதொரு அறிவியல் ரீதியான தொழில்வாண்மையான பணியே உளவளத்துணையாகும்.

தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய துறைகளைப் போன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. உளவியல் உளவளத்துணை, கல்வி உளவளத்துணை, தனிநபர் உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை, குழு உளவளத்துணை, தொழில் உளவளத்துணை விஷேட உளவளத்துணை என பல்வேறு துறைகளில் இன்று உளவளத்துணை பயன்படுத்தப்படுகிறது.

மிகப் புராதன காலந்தொட்டே உளவளத்துணை செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பிரச்சினை ஏற்படும்போது வீட்டிலிருக்கும் முதியோர் அல்லது அனுபவமிக்கவர்கள் மற்றும் மதபோதகர்கள் போன்றோர் அதற்கான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி வந்தனர். ஆனால் தற்காலத்தில் அத்தகையதொரு நிலையை குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புக்களில் காணமுடியாதுள்ளது. இதனால் உளவளத்துணை நடவடிக்கையானது சேவை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலத்தில் ஏதோவொரு வகையில் ஏற்படுகின்ற உளப்பாதிப்புக்களினால் நிகழ்கின்ற குற்றச் செயல்கள் மற்றும் இதர சம்பவங்கள் அத்தேவையினை உறுதிப்படுத்துகின்றன.

பாரிய உளக்கோளாறுகள் எனக் கருதப்படுகின்ற. பித்து, மனச்சோர்வு, இருதுருவக்கோளாறு, சுற்றுக்கோளாறு, தீவிர உளமாய நோய், நாட்பட்ட உளமாய நோய் போன்ற உளக்கோளாறுகள் தவிர்ந்த எளிய உளக்கோளாறுகளாக நிர்ணைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான நெருக்கீடு, பதகளிப்பு, பாலியல் உளக்கோளாறுகள், உடல்மெய்பாட்டுக் உளக்கோளாறுகள், ஆளுமை உளக்கோளாறுகள் போன்றவற்றை உளவளத்துணையினுடாக அடையாளம்கண்டு உளவளத்துணைத் திறன்களைப் பயன்படுத்தி, சிறந்த உளவளத்துணை திட்டமிடல் மற்றும் சிகிச்சை முறைகளினூடாகக் குணப்படுத்த முடியும். இந்நிலையில் இலங்கையில் எளிய உளக்கோளாறுகளால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

தற்காலத்தில் உளவளத்துணையானது ஒரு முக்கிய துறையாக வளர்ந்து வருகின்றமையை உலகளாவிய ரீதியில் மாத்திரமின்றி இலங்கையிலும் காணக் கூடியதாகவுள்ளது. இருப்பினும், உளவளத்துணையின் அவசியம் பூரணமாக உணரப்படுத்தப்படவில்லையென்றே கூற வேண்டும்.

உளவளத்துணையின் அவசியத்தை மக்கள் மத்தியில் உணரச் செய்ய வேண்டிய பொறுப்பு அச்சேவையைச் சார்ந்தோரின் பணியாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் தகாத செயற்பாடுகள் போன்றன இலங்கை மக்களின் பலரை உளக்கோளாறுகளுக்கு உள்ளாக்குகின்றன.

உளப்பிரச்சினை தொடர்பான அறிவூட்டல் சிறந்த முறையில் வழங்கப்படுவதுடன் உளவளத்துணையும் வழங்கப்படுவது அவசியமாகும். உடலியல் நோய் அறிகுறிகளைக் கண்டு அவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் உளவியல் நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றபோதும் கொடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், இலங்கை மக்கள் மத்தியில் உளப்பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லையென்றே தெரிகிறது.

உளப்பாதிப்புக்களினால் ஏற்படுகின்ற குற்றச் செயல்களை குறைப்பதற்கு உள்ளத்தை வளப்படுத்தும் உளவளத்துணை சேவை அவசியமாக்கப்படுவது அவசியமாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் இன்று உளவளத்துணையின் அவசியம் வெகுவாக உணரப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியம் எவ்வளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு உள ஆரோக்கியமும் முக்கியம் என்ற கருத்தியலுக்கு ஏற்ப உலகளாவிய ரீதியில் உளவளத்துணை சேவை விரிபடுத்தப்பட்டு வருகிறது.

சிறுவர்கள் வளர்ந்தவர்கள் முதியவர்கள் இவர்களின் உள நிலைக்கேற்ப உள ஆற்றுப்படுத்தல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியம். பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரச தனியார் நிவவனங்களிலும் அவரவருக்குரிய தேவைகளைக் கருத்திற்கொண்டு உள ஆற்றுப்படுத்தல் சேவை முன்னெடுக்கப்படுவது உள ஆரோக்கிய முள்ள எதிர்கால சமுதயாத்தை உருவாக்கும்
.
அது மாத்திரமின்றி, சமூக விரோத எண்ணங்களின் வெளிபாட்டால் ஏற்படுகின்ற மிகவும் கொடூரமான குற்றச் செயல்களின் பின்னணியில் அவற்றைப் புரிகின்றவர்கள் பலமான உள நோய்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆளுமை உளக்கோளாறு மற்றும் பாலியல் உளக்கோளாறுகளினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களால் புரியப்படுகின்ற குற்றங்கள் பாலகர்களைக் கூட பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமைகளிலிருந்து எதிர்கால சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கிராம மட்டம்தோறும் தொடர்ச்சியாக உளவளத்துணை சேவைகள் தொழிலவாண்மை உளவளத்துணையாளர்களைக் கொண்டு அவசரமாக முன்னெடுக்கப்படுவது அவசியமாகியுள்ளது.

இந்த சேவையினை ஒரு நீண்டகால திட்டமாக சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும்போதுதான் நாட்டின் முக்கிய மூலதனமான மனித வளம் அநியாயமாக மடிந்துபோதைத் தடுத்து அம்மனித வளத்தை நாட்டின் அபிவிருத்தியில் வெற்றிகரமாக பயன்படுத்த இயலுமாகும். ஒவ்வொருவரும் உடல், உள ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியது அவசியம். அந்த அவசியத்தை முன்னிலைப்படுத்தி உள்ளத்தை வளப்படுத்தும் இந்த சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்போது உள ஆரோக்கியம் சீர்குலைந்து புரியப்படும் பாதகச் செயல்களிலிருந்து எதிர்கால சந்ததியினை காப்பாற்ற முடியும் என்ற ஆரோக்கிய எண்ணம் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொறுப்புதாரிகள் மத்தியில் ஏற்படுவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

ஏனெனில், சமகால நிகழ்வுகளை உளவியல் பார்வைக்கு உட்படுத்துகின்றபோது, நாட்டில் நடந்தேறும் குற்றச் செயல்கள். அதில் சம்பந்தப்பட்டவர்களின் சிந்தனைகள் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் புரியும் குற்றச் செயல்கள் உணர்த்தி நிற்கின்றன. இதனால் இந்த உளப்பாதிப்பிலிருந்து சமூக மட்டத்திலிருப்பவர்களை காப்பாற்றுவதற்கு உள ஆற்றுப்படுத்தல் முறையாக திட்டமிடப்பட்ட முறையில் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது உணரப்படும்போதுதான் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களின் மனங்களில் நேர்சிந்தனைகளை ஏற்படுத்தி உள ஆரோக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.