கிரலாகல தூபி புகைப்பட விவகாரம்: மாணவர்களை விடுவிக்குமாறு கோரிய பிணை மனு நிராகரிப்பு

0 699

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களின் பிணை மனு நேற்று கெப்பித்திகொல்லாவ நீதிவான் நிதிமன்ற நீதிவானால் நிராகரிக்கப்பட்டது.

சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த பிணை மனு கோரிக்கையையே நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹர்ஷன அல்விஸ் நிராகரித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைகக்கழகத்தினைச் சேர்ந்த 8 மாணவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிரலாகல தொல்பொருள் வலையத்துக்குள் பிரவேசித்து தூபி மேல் ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந் நிலையிலேயே குறித்த மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறும் அவர்களை உடன் விடுவிக்குமாறும் கோரி சட்டத்தரணிகளால் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட பிணை மனுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணிகள் குழு எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி மீண்டும் ஆஜராகி மாணவர்களை விடுவிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.