சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்

0 85

எம்.எச்.எம். ஹஸன் (M.Ed).
உதவிப் பொதுச் செயலாளர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.

‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்­றுதான் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தில் மௌலவி இப்­ராஹிம் அவர்­க­ளு­டைய பட்­டப்­ப­டிப்பின் பெறு­பே­றுகள் வெளி­யான நாள். அவ­ருக்கு அது தெரிய முன்பே பல்­கலைக்கழக கீழைத்­தேய மொழிகள் பீடா­தி­பதி பேரா­சி­ரியர். டப்­ளியூ. எஸ். கரு­ணா­ரத்ன. தனது சொந்தக் காரில் உயன்­வத்­தையை நோக்கி புறப்­ப­டு­கிறார். வீட்­டுக்குச் சென்று இப்­ராஹீம் மௌலவி அவர்­களை அழைக்­கிறார். அவ­ருக்கு ஒரே ஆச்­ச­ரியம். இந்தப் பெரிய மனிதர் எனது வீடு தேடி வந்­தி­ருக்­கிறார். வாங்க சேர் உள்ளே என்று அன்­பாக அழைக்­கிறார். பேரா­சி­ரியர் மகிழ்ச்­சி­யோடு அவ­ருக்கு கை குலுக்கி கங்­கு­ரா­ஜி­லேசன் என்று சொல்­கிறார். என்ன விஷயம் சேர் என்று கேட்­ட­தற்கு உங்­க­ளு­டைய பெறு­பே­றுகள் இன்று செனட்­டினால் வெளி­யி­டப்­பட்­டது. அதில் நீங்கள் முதல் தரத்தில் சித்தி பெற்­றி­ருக்­கி­றீர்கள். அது மட்­டு­மல்ல நான் 20 வரு­டங்­க­ளுக்கு முன் நிகழ்த்­திய சாத­னையை நீங்கள் முறி­ய­டித்­திருக்­கி­றீர்கள். இறுதிப் பரீட்­சை­யிலே 9 பாடங்­க­ளிலும் ஏ சித்­தியை பெற்­றி­ருக்­கி­றீர்கள்.கடை­சி­யாக அந்த சாத­னையை நான் தான் நிலை நாட்­டினேன். இன்று நீங்கள் அந்த சாத­னையை முறி­ய­டிக்­கி­றீர்கள். அதற்கு வாழ்த்துக் கூறவே உங்­க­ளு­டைய வீடு தேடி வந்தேன்’’ என்று பேரா­சி­ரியர் அவர்கள் குறிப்­பிட்டார். இப்­ராஹீம் மௌலவி அவர்­க­ளு­டைய திற­மைக்கு இது ஓர் அறி­முகம்.

1937 ஆம் ஆண்டு அஸன் லெவ்வை தம்­ப­தி­க­ளுக்கு புதல்­வ­ராக உயன்­வத்­தையில் பிறந்த மௌலவி ஏ.எல்.எம். இப்­ராஹீம் தனது ஆரம்பக் கல்­வியை உயன்­வத்தை நூரா­ணிய மகா­ வித்­தி­யா­ல­யத்தில் கற்று 1947 ஆம் ஆண்டில் மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரியில் சேர்க்­கப்­பட்டார். 9 வரு­டங்கள் அங்கே கற்று உயர்­வாகச் சித்­தி­ய­டைந்து அங்­கேயே விரி­வு­ரை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். கபூ­ரி­யாவில் படிக்கும் காலத்­தி­லேயே அவ­ருக்கு இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மி­யோடு தொடர்பு இருந்­தது. 1957 இல் கபூ­ரி­யாவில் இருந்து வெளி­யே­றி­யது முதல் ஜமா­அத்தில் அங்­கத்­த­வ­ராகி அதன் பணி­களில் ஈடு­பட்டார்.

மௌலவி ஆசி­ரி­ய­ராக நிய­மனம் பெற்ற அவர் அட்­டு­ளு­கம உட்­பட பல இடங்­களில் பணி­யாற்­றினார். அதே காலத்தில் அவர் ஜீ.சீ.ஈ சாதா­ரண பரீட்­சையில் தோற்றி அதில் சித்­தி­ய­டைந்தார். 1963 ஆம் ஆண்டில் அட்­டாளைச் சேனை ஆசி­ரியர் பயிற்சிக் கல்­லூ­ரிக்கு தெரிவு செய்­யப்­பட்டு பயிற்­சியை முடித்துக் கொண்டு 1965 முதல் பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­ய­ராக தனது பணியைத் தொடர்ந்தார். இதே காலத்தில் அவர் ஜீ.சீ.ஈ உயர்­தரப் பரீட்­சைக்கு தயா­ராகி அதில் தேர்ச்சி பெற்றார். 1967 ஆம் ஆண்டில் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்­துக்கு பிர­வே­சிக்கும் வாய்ப்பு அவ­ருக்குக் கிடைத்­தது. அங்கே அரபு மொழியை விஷேட பாட­மாகக் கற்று அவ­ரு­டைய ஆசான் பேரா­சி­ரியர் எஸ்.ஏ. இமாம் அவர்­க­ளு­டைய பாராட்­டையும் பெற்று முதல் வகுப்பில் சித்­தி­ய­டைந்தார். அதன் பெறு­பே­றுகள் வந்த தினத்தின் நிகழ்வு பற்­றித்தான் நாம் மேலே குறிப்­பிட்­டி­ருந்தோம்.

பட்­டப்­ப­டிப்பின் பெறு­பேறு வந்த சிறிது காலத்தில் அவர் களனிப் பல்­கலைக் கழ­கத்­திலும் அதனைத் தொடர்ந்து பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்­திலும் அரபு இஸ்­லா­மிய நாக­ரீகத் துறையின் விரி­வு­ரை­யா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டார். பல்­கலைக் கழ­கத்தில் அவர் படிக்கும் போது அவ­ரது சக­பா­டி­க­ளாக இருந்­த­வர்கள் மர்ஹூம் முக்தார் ஏ முகம்மத் அவர்­களும் பன்­னூ­லா­சி­ரியர் கலா­நிதி எம்.ஐ.எம். அமீன் அவர்­க­ளு­மாவார்.

ஜமா­அத்தே இஸ்­லா­மியில் 1957ம் ஆண்டு அங்­கத்­த­வ­ராக இணைந்து கொண்ட அவர் 1958ம் ஆண்டு தனது 21வது வயதில் அதன் பொதுச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். 1970 ஆம் ஆண்டில் அல் ஹஸனாத் சஞ்­சி­கையை வெளிக் கொண்டு வரு­வதில் அவ­ருக்கு மகத்­தா­ன பங்­குண்டு. அதன் முத­லா­வது இதழ் 1970 ஆம் ஆண்டு மே மாதம் மாவ­னல்­லையில் வெளி­யி­டப்­பட்­டது. அல் ஹஸ­னாத்தில் தொடர்ந்து கட்­டு­ரை­களை எழுதி வந்த அவர் அதன் பிர­தம ஆசி­ரி­ய­ராக பல வரு­டங்கள் சேவை­யாற்­றி­னார்.

உலகின் பல மொழி­களில் பெயர்க்­கப்­பட்­டுள்ள ‘இதுதான் இஸ்லாம்” என்ற நூலை சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்த்து ‘இஸ்லாம் யனு­கு­மக்த” என்ற பெயரில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுத்தார். பேரா­சி­ரியர் நயீம் சித்­தீக்கி எழு­திய ரஸூல் ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் பற்­றிய ஆங்­கில நூலை ‘மாணவ ஹித­வாதி மஹ நபித்­துமா” என்ற பெயரில் சிங்­கள மொழியில் வெளி­யிட்டார். அவ­ரு­டைய காலத்தில் அரபு, ஆங்­கில மொழி­க­ளி­லி­ருந்து பல நூல்கள் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டன. அவற்றில் சில­வற்றை அவரே மொழி­பெ­யர்த்தார்.

1984 ஆம் ஆண்டு ‘பிர­போ­தய” என்ற சிங்­கள இஸ்­லா­மிய மாசி­கையை வெளி­யிட்டார். தொடர்ந்து அதன் நிரு­வா­கி­யா­கவும் செயற்­பட்டார்.

தலை­சி­றந்த தப்­ஸீர்­களுள் ஒன்­றான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்­களின் தப்­ஹீமுல் குர்ஆன் தப்­ஸீரை பன்­னி­ரண்டு தொகு­தி­க­ளாக சிங்­கள மொழியில் மொழி­பெ­யர்த்து வெளி­யிடும் குழு­வுக்கு தலை­மை­தாங்­கினார். 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக இப்­ப­ணி­யிலே அவர் தொடர்ந்து செயற்­பட்டார். அதன் வெளி­யீடு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மகா­நாட்டு மண்­ட­பத்தில் அன்­றைய பிர­தமர் டீ.எம். ஜய­ரத்ன அவர்­க­ளது தலை­மையில் வெகு விமர்­சை­யாக நடை­பெற்­றது.

1960 களில் சோனக இஸ்­லா­மிய கலாச்­சார நிலையம் வெளி­யிட்ட குர்­ஆனின் சிங்­கள தர்­ஜ­மா­வுக்குப் பின்னர் எளி­மை­யான சிங்­கள மொழியில் அடிக்­கு­றிப்­பு­க­ளோடு அல்­குர்­ஆனை சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்த்து வெளி­யி­டு­வதில் முன்­னோ­டி­யாக செயற்­பட்டார். இன்­று­வரை அது பல பதிப்­பு­களைக் கடந்து பல­ராலும் விரும்பி கேட்­கப்­ப­டு­கின்ற ஒரு தர்­ஜ­மா­வாக இருக்­கி­றது.

பல்­கலைக் கழ­கத்தில் முழு­நேர விரி­வு­ரை­யா­ள­ராக இருந்து கொண்டே ஜமா­அத்தே இஸ்­லா­மியின் பணி­க­ளிலும் வேறு சமய சமூகப் பணி­க­ளிலும் ஆர்­வ­மாக ஈடு­பட்டார். 1976ம் ஆண்டு முதல் தட­வை­யாக ஜமா­அத்தின் அமீ­ராக பத­வி­யேற்ற அவர் 1977ம் ஆண்டு உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்லும் வரை அப்­ப­த­வியில் இருந்தார். மீணடும் 1982ம் ஆண்டு அமீ­ராகத் தெரிவு செய்­யப்­பட்ட அவர் 1994 வரை பதவி வகித்தார்.

சம­கால உல­மா­க்­க­ளான மர்ஹூம் மஸுத் ஆலிம், ஜே.எம். ரியாழ் மௌலவி, மௌலவி ரூஹுல் ஹக் ஆகி­யோ­ரோடு இணைந்து ‘இத்­தி­ஹாதுல் முஸ்­லிமீன்’ என்ற முஸ்லிம் ஒற்­றுமை இயக்­கத்தை ஆரம்­பிப்­ப­திலே பெரும் பங்­காற்­றினார். பல வரு­டங்­களின் பின் அவ்­வ­மைப்பு செய­லி­ழந்து போனதைப் பற்றி அவர் மிகவும் கவ­லைப்­பட்டார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிறை­வேற்று நிரு­வாக சபை உறுப்­பி­ன­ரா­கவும் அதன் உப தலை­வ­ரா­கவும் நீண்ட காலம் பணி­யாற்­றினார். இஸ்லாம், இஸ்­லா­மிய நாக­ரீகம் ஆகிய பாடங்கள் தொடர்­பி­லான பல்­கலைக் கழக மற்றும் தேசிய கல்வி நிறு­வக -கல்வித் திட்டக் குழுவில் அவர் தொடர்ந்து பங்­க­ளிப்புச் செய்தார்.

ஜீ.சீ.ஈ. சாதா­ரண தர, உயர் தர அரபு மொழி பிர­தம பரீட்­ச­க­ராக இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்­தோடு இணைந்து நீண்ட காலம் சேவை­யாற்­றினார். அல் ஆலிம் பரீட்­சையின் பாடத்­திட்ட மற்றும் பரீட்சை விட­யங்­க­ளிலும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஈடு­பட்டார்.

இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்கி (IsDB) புலமைப் பரிசில் திட்­டத்தின் மாணவ ஆலோ­ச­க­ரா­கவும் பணி­யாற்­றினார்.

ச­ம­கால முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளோடும் அவர் கௌர­வ­மான தொடர்­பு­களைப் பேணி வந்தார். காலம் சென்ற அமைச்­சா­களான எம்.எச். முஹம்மத் ஏ.சீ.எஸ். ஹமீத் ஆகியோர் இப்­ராஹீம் மௌலவி அவர்­களின் நட்பை மிகவும் விரும்­பினர். எந்த ஒரு பிரச்­சி­னையின் போதும் நேர­டி­யாக அவர்­க­ளோடு தொலை­பே­சியில் உரை­யாடி அவற்றைத் தீர்த்து வைக்கும் அள­வுக்கு தொடர்­பு­களைப் பேணி வந்தார்.

மிகவும் திறமை வாய்ந்­த­வ­ராக இருந்த மௌலவி ஏ.எல்.எம். இப்­ராஹிம் அவர்கள் ஒரு கலா­நிதிப் பட்­டத்தைப் பெற்று பேரா­சி­ரி­யா­ராக வந்­தி­ருக்­க­வேண்­டி­யவர். ஜமா­அத்தே இஸ்­லா­மி­யிலும் சமூ­கத்­திலும் பல்­கலைக் கழ­கத்­திலும் முழு­நே­ர­மாக பணி­களில் ஈடு­பட்­டி­ருந்­தமை அதற்குத் தடை­யாக இருந்­தி­ருக்­கலாம்.

பாகிஸ்தான் சென்று ஒரு முது­மானிப் பட்­டத்தைப் பெற்றுக் கொண்டார். ரியா­தி­லுள்ள இமாம் பல்­கலைக் கழ­கத்தில் முது­மாணி கற்­கைக்­காக சென்று அங்கு சில காலம் ஆய்­வு­களில் ஈடு­பட்­டி­ருந்த சமயம் அவ­ரு­டைய மூத்த மகன் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்டு சிகிச்­சைக்­காக இந்­தி­யா­வுக்கு அழைத்துச் செல்­ல­வேண்­டிய நிலை உரு­வா­கி­ய­போது படிப்பை நிறுத்தி விட்டு இலங்கை வந்தார். அதன் பின்­னரும் ஒரு தடவை இங்­கி­லாந்­துக்குச் சென்று தனது கலா­நிதிப் பட்­டத்தை மேற்­கொள்ள முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது குடும்ப மற்றும் சமூக நெருக்­கு­தல்கள் அதற்குத் தடை­யாக அமைந்­தன.

இலங்­கையின் இஸ்­லா­மிய ஷரீஆக் கல்வித் துறையில் அவர் காட்­டிய ஈடு­பாடு மகத்­தா­னது. மாதம்பை இஸ்­லா­ஹிய்யா அரபுக் கல்­லூரி, புத்­தளம் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அர­புக்­கல்­லூரி, மாவ­னல்லை ஆயிஷா சித்­தீக்கா பெண்கள் உயர்­கல்வி நிறு­வனம், ஓட்­ட­மா­வடி பாத்­திமா ஸஹ்ரா பெண்கள் அர­புக்­கல்­லூரி, திஹா­ரிய தன்வீர் எக­டமி ஆகிய கல்வி நிறு­வ­னங்­களை அமைப்­பதில் முன்­னோ­டி­யாக இருந்தார். ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்தின் ஆரம்ப கல்­வித்­திட்டக் குழுவின் ஒரு அங்­கத்­த­வ­ராக இருந்தார். ஹெம்­மா­த­க­மையில் அமைந்­துள்ள தாருல் ஹஸனாத் சிறுவர் இல்­லத்தை அமைப்­ப­திலும் அவ­ருக்கு பிர­தான பங்கு உள்­ளது.

நாட்டில் பல இடங்­களில் முஸ்லிம் பெற்­றோர்கள் விடு­தலைப் புலி­களால் கொலை செய்ய­ப­பட்டு சிறு­வர்கள் அனா­தை­யாக்­கப்­பட்ட சூழலில் அவர்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுக்க அவ­ச­ர­மான ஒரு நிறு­வனம் தேவை என்ற அடிப்­ப­டையில் அது பற்றி கலா­நிதி எம்.ஐ.எம். அமீன் அவர்­க­ளோடு ஆலோ­சித்து சிறுவர் இல்லம் அமைக்கும் திட்­டத்­துக்கு ஆலோ­சனை வழங்­கினார்.
சமூக விவ­கா­ரங்­களை ஆய்வு செய்­வ­தற்­காக ஒரு நிறு­வனம் இல்­லாத குறையைப் போக்க ஆய்வு மற்றும் அபி­வி­ருத்­திக்­கான செரன்திப் நிறு­வனம் (SIRD) என்ற பெயரில் ஒரு ஆய்வு நிறு­வ­னத்தை உரு­வாக்கி அதன் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டார். அத­னூ­டாக கூட்டு ஸக்காத் தொடர்­பான பல கருத்­த­ரங்­கு­களை நாட­ளா­விய ரீதியில் நடத்­தினார். இஸ்­லா­மிய பாலர் பாட­சாலை தொடர்­பாக அமெ­ரிக்­காவில் வெளி­யான ஒரு நூலையும் மொழி­பெ­யர்த்து வெளி­யிட ஆவன செய்தார்.

ஸக்­காத்தை கூட்­டாகக் கொடுக்க வேண்டும் என்­ப­திலும் அல் குர்­ஆனை விளங்கும் தப்ஸீர் வகுப்­புகள் பள்­ளி­வா­யில்கள் தோறும் நடை­பெறல் வேண்டும் என்று அவர் மிகவும் கரி­சனை காட்­டினார். நீண்ட கால­மாக ஜமா­அத்தின் தலை­மை­யகத்தில் அல் குர்ஆன் விளக்க வகுப்பை நடத்தி வந்தார். அல்­குர்­ஆனை ஓதுவோம், விளங்­குவோம், அதன்­படி நடப்போம், அதன்பால் அழைப்போம் என்ற தொனிப்­பொ­ருளில் வரு­டாந்தம் சுவ­ரொட்­டி­களை தயா­ரித்து நாடு முழு­வதும் காட்­சிப்­ப­டுத்தும் ஒரு திட்­டத்தை அவர் ஆரம்­பித்து நடத்­தினார்.

ஜமா­அத்தே இஸ்­லா­மியில் நீண்ட காலம் பல்­வேறு பணி­களில் ஈடு­பட்ட போதும் அவற்­றுக்­காக எந்­த­வொரு கொடுப்­ப­ன­வையும் அவர் பெற்றுக் கொண்­ட­தில்லை. அவர் பல்­கலைக் கழ­கத்தில் நீண்ட காலம் பணி­யாற்­றி­ய­மைக்­காக அவ­ருக்கு கிடைத்த பல்­கலைக் கழக ஊழியர் சேம­லாப நிதி (UPF) கொடுப்­ப­னவை அப்­ப­டியே ஜமா­அத்தே இஸ்­லா­மியின் கட்­டிட நிதிக்­காக அன்­ப­ளிப்புச் செய்தார். தலை­மையகக் கட்­டிட வேலை­க­ளுக்கு அந்­நேரம் அது மிகவும் பேரு­த­வி­யாக அமைந்­தது.

இப்­ராஹீம் மௌலவி ஒரு வித்­தி­யா­ச­மான மனிதர். அழ­கா­க நேர்த்­தி­யாக ஆனால் எளி­மை­யாக உடை அணிவார். அனை­வ­ரோடும் புன்முறுவலோடு உரையாடுவார். எல்லோருடைய பெயர்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து அழைப்பார். அவரைச் சந்தித்த எவரும் மீண்டும் சந்திக்க வேண்டாமா என்று நினைக்கின்ற அளவுக்கு அவர் மனிதர்களைக் கவர்ந்திழுத்தார். இயக்க வேறுபாடுகள் அமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து உலமாக்களாலும் அறிஞர்களாலும் சாதாரண மக்களாலும் ஏகோபித்து விரும்பப்பட்ட ஒரு மனிதராக இப்ராஹீம் ஹஸரத் அவர்கள் வாழ்ந்து காட்டினார்.

அவர் முற்போக்குச் சிந்தனையுள்ள ஒரு ஆலிம். இன்னும் பத்து வருடங்களுக்குப் பின் நாடும் உலகமும் எங்கே போகும் என்பதை திட்டமிட்டுத் தீர்மானித்து அதற்கான நகர்வுகளில் ஈடுபட்டவர். அவர் பணம் சம்­பா­தித்­ததில் ஒரு­போதும் ஈடு­பட்­ட­தில்லை. மக்­களைச் சம்­பா­தித்தார். மறு­மைக்­கான சொத்­து­களைச் சம்­பா­தித்தார். ஒரு தனி மனி­தனால் இவ்­வ­ளவு பணி­க­ளையும் வெற்­றி­க­ர­மாக செய்ய முடி­யுமா என்ற கேள்வி எழலாம். முடியும் என்­ப­தற்கு மௌலவி இப்­ராஹீம் அவர்கள் சான்று பகர்ந்தார். அவ­ருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்­னத்துல் பிர்­தௌஸை வழங்க நாமும் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.