150 பேர் ஹஜ் பதிவுக்கட்டணத்தை மீளப்பெற்றனர்

0 639

இவ்வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்து கொரோனா வைரஸ் காரணமாக கடமையை மேற்கொள்ள முடியாமற்போன 4500 விண்ணப்பதாரிகளில் 850 பேரே அடுத்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார்கள். மேலும் சுமார் 150 பேர் தாம் செலுத்திய பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவை மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இவ்வருட ஹஜ் கடமைக்காக 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தியுள்ள ஹஜ் யாத்திரிகர்கள் தங்களது பதிவுக்கட்டணங்களை மீளப்பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அல்லது அடுத்த வருடம் ஹஜ் கடமை மேற்கொள்ளவதற்கு உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்திருத்தது. கடந்த 31 ஆம் திகதிக்கு முன் இதற்காக விண்ணப்பிக்கும் படியும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திணைக்களப் பயணிப்பாளர் அஷ்ரப் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுமார் 3000 இற்கும் மேற்பட்டோர் இது தொடர்பில் மெளனமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது பதிவுக்கட்டணங்களை மீளப்பெற்றுக் கொள்ளவில்லை. அடுத்த வருடத்துக்கு கடமை மேற்கொள்ளவதை உறுதி செய்யவுமில்லை என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.