ஹஜ் விவகாரத்தில் அரசியல் தலையீட்டுக்கு இடமளிக்கலாகாது

0 614

எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்துள்ளன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளின் போது கடந்த காலங்களில் பாரிய சவால்கள் ஏற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே. இலங்கைக்கு குறிப்பிட்டளவு ஹஜ் கோட்டா கிடைப்பதால் அக்கோட்டாவின் எண்ணிக்கையை அதிகளவில் பகிர்ந்து கொள்வதற்கு ஹஜ் முகவர்கள் அமைச்சருடனும் அரச ஹஜ் குழுவினருடனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் முரண்பட்டுக்கொண்டனர். இதற்காக நீதிமன்றப் படிகளிலும் ஏறினார்கள். இவ்வாறான நிலைமையினைத் தவிர்ப்பதற்கும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கருதியுமே ஹஜ் சட்டமூலமொன்றின் தேவை உணரப்பட்டு தற்போது அது சட்ட வரைபாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச ஹஜ் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைபில் அடங்கியுள்ள விடயங்களை மீளாய்வு செய்து தேவையான விடயங்களை உள்வாங்கிக் கொள்வதற்காக இதுவரை பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ, இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்கள், ஹஜ் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அபிப்பிராயங்களை முன்வைத்துள்ளனர்.

ஹஜ் சட்ட வரைபில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. அரச ஹஜ் குழு உறுப்பினர்களின் நியமனம் அமைச்சரினால் வழங்கப்படும் என்று வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழு சுயாதீனமாகவே இயங்கவேண்டும். அமைச்சரினால் அந்நியமனம் வழங்கப்படக்கூடாது என்றும் மேற்படி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹஜ் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி நடவடிக்கைளிலும் ஊழல்களிலும் ஈடுபடும் ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ஹஜ் விவகாரத்தில் குளறுபடிகள் தோன்றுவதற்குக் காரணம் அதில் அரசியல் தலையீடுகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிப்பதேயாகும். கடந்த காலங்களில் ஹஜ் விவகாரத்தைக் கையாண்ட சகல அரசியல்வாதிகள் தொடர்பிலும் பலத்த விமர்சனங்கள் உள்ளன. அந்த வகையில் அரசியல் தலையீடு இடம்பெறாத வகையில், ஹஜ் சட்ட வரைபு வரையப்பட வேண்டியதே அவசியமாகும். ஹஜ் குழுவின் பிரதிநிதிகளை அமைச்சர் நியமிப்பதானது, அதில் அரசியல் தலையீடு தொடரவே வழிவகுக்கும். எனவேதான் குழுவின் உறுப்பினர்களை சுயாதீன குழு ஒன்று தகைமைகள், அனுபவங்களின் அடிப்படையில் தெரிவு செய்வதே பொருத்தமானதாகும்.

எனினும் இந்த சட்ட வரைபினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவது வரவேற்கத்தக்கதல்ல. ஆட்சி மாற்றங்கள் ஏற்படுமாயின் இந்த விடயம் மீண்டும் கிடப்பில் போடப்பட வாய்ப்புகள் அதிகம். ஹஜ் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

-vidivelli

Leave A Reply

Your email address will not be published.