ஈரானில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும் அணு நிலைகளை அழிக்கவும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தோல்வி
பலஸ்தீன விடயத்தில் இலங்கை அறிக்கை விடுவது மாத்திரம் போதாது
பலஸ்தீன விவகாரம் தொடர்பான மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 01.06.2025 அன்று கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் சர்வதேச நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்
ஆற்றிய உரையின் தொகுப்பு:
இன்று, பலஸ்தீன மக்களின் துயரங்கள் குறித்து பரவி வரும் தவறான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மூன்று முக்கிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. இந்த புத்தகங்கள் பல தசாப்த காலமான முன்னெடுக்கப்படும் பலஸ்தீன் பற்றிய தவறான பிரசாரங்களை சரிசெய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
காசா மற்றும் பலஸ்தீன மக்கள் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருப்பதை உலகளாவிய சமூகம் பெரும்பாலும் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில், இஸ்ரேலால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புகள் ஈரானை நோக்கிப் பாய்ந்ததையும் கண்டோம். இந்த நடவடிக்கைகள் இராணுவ மோதலைத் தூண்டியது மட்டுமல்லாமல், பரவலான சர்வதேச கண்டனத்தையும் சந்தித்தன.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அப்பாவி பொதுமக்கள் துன்பப்படும் போது, உலகெங்கிலும் உள்ள உள்ளங்களையும் மனங்களையும் தொடர்ந்து தவறாக கதைகள் மூலம் வழிநடத்த முற்படுவதாகும். ஒவ்வொரு நாளும், தொலைக்காட்சித் திரைகள் பலஸ்தீனில் நடக்கும் திகிலூட்டும் நேரடி காட்சிகளைக் காட்டுகின்றன. இஸ்ரேலின் தாக்குதல்களில் முழு குடும்பங்களும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்படுகின்றன. குழந்தைகள் அனாதைகளாகின்றன. வாழ்க்கைகள் முற்றாக அழிக்கப்படுகின்றன.
சராசரியாக, காசாவில் ஒரு நாளைக்கு 85 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் -மேலும் பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் கணக்கிடப்படாமல் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள். அவர்கள் ஆயுததாரிகள் அல்லர். அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் அச்சுறுத்தல் விடுப்பவர்கள் அல்லர். அவர்கள் பசியில் வாடும் பலஸ்தீனியர்கள். உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள். உணவுக்கும் உயிர் பிழைப்பதற்கும் அவதிப்படும் இந்த மனிதர்களும் இஸ்ரேலின் ஆயுதங்களால் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இது எங்கோ தொலைதூரத்தில் நடக்கும் போர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது இலங்கையில் உள்ள நம்மையும் நேரடியாக பாதிக்கிறது. முந்தைய பதற்றங்களின் போது, எமது உணவு விலைகள் உயர்ந்தன. இதற்கு உலகளாவிய மோதலின் விளைவாகவே இந்த அதிகரிப்பு என அதிகாரிகள் கூறினர். ஆனால் இந்த மோதலின் தன்மை என்ன? இஸ்ரேலால் நடத்தப்படும் இந்தப் போர் – காசாவின் மீது மட்டுமல்ல, ஈரானின் மீதும் – மேற்குலக சக்திகளால் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் ஒவ்வொரு இலங்கை குடும்பத்தையும், ஏன் பாடசாலை செல்லும் நமது குழந்தைகளையும் கூட பாதிக்கிறது.
எமது சுயநலத்திற்காகவாவது, நாம் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்த போர் சட்டவிரோதமானது, அநீதியானது, மிகவும் கொடூரமானது. இது மிகப் பெரும் படுகொலை. இது நாளைக்கோ அல்லது மற்றொரு சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தையின் பிறகோ அல்ல, இப்போதே நிறுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் எமது அரசாங்கத்திற்கும் கடமை உள்ளது. வெறும் பகுப்பாய்வு செய்வது மட்டும் போதாது. அப்பாவி பொது மக்களைக் கொல்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாம் அங்கீகரிக்கத் தொடங்க வேண்டும். குறிப்பாக காசாவில், மக்கள் பல தசாப்தங்களாக வன்முறையை அனுபவித்து வருகின்றனர்.
ஹமாஸின் தூண்டுதலே இந்த வன்முறைகளுக்கு காரணம் என்ற கதை ஒரு திசைதிருப்பும் முயற்சியாகும். இதை தெளிவுபடுத்துவது முக்கியம்: ஹமாஸ் ஒரு சில நாடுகளால் மட்டுமே பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலோ, சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினராலோ ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்படவில்லை. உங்கள் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டு, உங்கள் மக்கள் இடம்பெயர்ந்து, உலகம் ஒரு ஆக்கிரமிப்பாளரை அங்கீகரிக்குமாறு வற்புறுத்தும்போது, ஆயுதமேந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துவதை ஒருபோதும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்த முடியாது. பலஸ்தீனியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்திற்கு சட்டவிரோத வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் உரிமை உண்டு! அது பயங்கரவாதம் அல்ல!
இந்த நெருக்கடிக்கு ஆழமான வரலாற்று வேர்கள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மத்திய கிழக்கு மோதல் ஒக்டோபர் 2023 அல்லது 2000 இல் தொடங்கவில்லை. இது ஒரு நூற்றாண்டு கால மனிதாபிமானமற்ற இடப்பெயர்வுகள், தவறான சித்தரிப்புகள் மற்றும் துரோகத்தின் விளைவாகும்.
இலங்கைக்கும் இந்த விடயத்தில் ஒரு தனித்துவமான பங்கு உண்டு. இங்கே வேலை தேட முடியாத எமது ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் பிரஜைகள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 7 பில்லியன் டொலர்களை வீட்டிற்கு அனுப்புகிறார்கள் – இது இலங்கைக்கு சுற்றுலாவில் இருந்து கிடைக்கும் வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாகும், இது எமது ஆடை ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாகும். உண்மையில், மத்திய கிழக்கில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்கள், சாரதிகள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம் எமது அந்நியச் செலாவணியின் முதுகெலும்பாக விளங்குகிறது.
இன்று இலங்கைத் தொழிலாளர்களில் பலர் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், மேலும் அவர்கள் தாம் அறியாமலேயே ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பணிபுரிந்து வரலாம். சர்வதேச நீதிமன்றத்தின் சமீபத்திய அறிவுப்புகளின்படி, ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேலுக்கோ அல்லது பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்களுக்கோ எந்தவொரு நேரடி அல்லது மறைமுக உதவியாக இருந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. நாம் அநீதியில் பங்கெடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.
அண்மையில் இடம்பெற்ற நக்பா தின நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் தற்போதைய பிரதமர், இந்த ஆக்கிரமிப்புகளின் சூழலில் நாம் ‘மௌனம் காப்பது அதற்கு உடந்தையாவதற்கு ஒப்பானது’ எனத் தெரிவித்தார். அது ஒரு சக்திவாய்ந்த அறிக்கையாகும். ஆனால் அறிக்கைகள் மட்டும் போதாது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வாதாட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இலங்கை வரலாற்றின் தவறான பக்கத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என நாம் கேள்வி எழுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் பணிகளைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட வேண்டும். அவரது எழுத்துக்கள் வெறும் கல்வி சார்ந்தவை அல்ல -அவை உணர்ச்சிபூர்வமானவை, மனிதாபிமானமானவை மற்றும் தைரியமானவை. நம்மில் பலர் உணரும் ஆனால் வெளிப்படுத்த முடியாத யதார்த்தத்தை அவை பிரதிபலிக்கின்றன. மற்றொரு விமர்சகர் குறிப்பிட்டது போல, இந்த வார்த்தைகள் பெரும்பாலும் கண்ணீரை வரவழைக்கின்றன. மேலும் கண்ணீர் வரவில்லை என்றால், நாம் நமது சொந்த மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
இம்தியாஸின் உரைகளில் ஒன்று “உலக பொதுமக்களின் கருத்துக்கு இஸ்ரேல் தலைவணங்கும் வரை இஸ்ரேலுடனான உறவுகளை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் இருந்தது, இது மிகவும் கட்டாயமானது. செய்தி தெளிவாக உள்ளது: சர்வதேச பொதுமக்கள் கருத்துக்கு இணங்கும் வரை இலங்கை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை இடைநிறுத்த வேண்டும் என்று இம்தியாஸ் வலியுறுத்தியுள்ளார். எமது அரசாங்கம் அந்த தைரியமான நடவடிக்கையை எடுக்குமா?
அவரது நூலில் எழுப்பப்பட்ட மற்றொரு முக்கியமான பிரச்சினை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தின் பயன்பாடு ஆகும். இஸ்ரேல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பொறுப்புக் கூற அழைக்கப்படும் போதெல்லாம், உலகளாவிய கருத்துக்கு முரணாக, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நீதி அநீதியாக மறுக்கப்பட்டுள்ளது. பலமுறை, உலகளாவிய ஒருமித்த கருத்து ஒரு ஒற்றை வீட்டோவால் தடுக்கப்பட்டுள்ளது. இது மில்லியன் கணக்கானவர்களுக்கு நீதியை மறுத்துள்ளது.
வரலாற்றை மீண்டும் பார்ப்போம். 1917 இல், காலனித்துவ சக்தியாக இருந்த பிரிட்டிஷ் உலக சியோனிச கூட்டமைப்பின் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி, பல நூற்றாண்டுகளாக அங்கேயே வாழ்ந்த பலஸ்தீனியர்களின் சம்மதமின்றி, உலகின் யூதர்களுக்கு பலஸ்தீனத்தில் ஒரு இடத்தை உறுதியளித்தது. இதன் விளைவாக, ஒரு வெளிநாட்டு சக்தி சியோனிஸ்டுகளுக்கு, மற்றவர்களின் நிலத்தை பரிசாக அளித்தது. அடுத்த நூறு ஆண்டுகளில் பலஸ்தீனியர்களுக்கு பிரிட்டிஷ் செய்த இந்த துரோகமும், அதன்பிறகு நடந்த பல தொடர்ச்சியான போர்களும் இந்த துரோகத்தின் விளைவுகளை உலகம் முழுவதையும் அனுபவிக்க வைத்துள்ளன.
1917 மற்றும் 1948 க்கு இடையில், தீவிரவாத சியோனிச குழுக்கள் இன்றைய பயங்கரங்களுக்கு முன்னதாகவே வன்முறைச் செயல்களைச் செய்தன. ஆனாலும் 1948 இல், இஸ்ரேல் ஐ.நா.வால் ஒரு முழுமையான நாடாக அங்கீகரிக்கப்பட்டது, அதே நேரத்தில் பல நூற்றாண்டுகளாக அங்கேயே வாழ்ந்த பலஸ்தீனியர்கள் நாடற்றவர்களாகவே இருந்தனர். 2012 இல், ஐ.நா.வில் பலஸ்தீனுக்கு “பார்வையாளர்” அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டது.
1923 இன், உத்தியோகபூர்வ பதிவுகள் அந்தப் பகுதியின் மக்கள் தொகையில் 80 வீதம் அரேபியர்கள், 9 வீதம் யூதர்கள் மற்றும் 11 வீதம் கிறிஸ்தவர்கள் என்று காட்டியது. காலப்போக்கில், இந்த மக்கள் தொகை வன்முறையால் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்தையும் ஈரானின் அணுசக்தி திறன்களை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால் அவை இரண்டிலும் அமெரிக்கா தோல்வியடைந்தது. இன்று ஈரானின் ஆட்சி தாக்குதலுக்கு முன் இருந்ததை விட வலிமையானது. ஈரானின் அணுசக்தி வசதிகள் சிவில் பயன்பாட்டிற்கானவை. அவை அகற்றப்பட வேண்டியவை அல்ல. இருப்பினும் இதில் தாக்குதல் நடத்தியவர்களே பெரும் இழப்பை சந்தித்தனர்.
நான் ஈரானில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். நான் அவர்களின் மக்களையும் தலைவர்களையும் உன்னிப்பாகப் படித்திருக்கிறேன். அவர்கள் அமைதியானவர்கள், புத்திசாலிகள் மற்றும் நிதானமானவர்கள். சமீபத்திய தாக்குதல்களுக்கு அவர்கள் அளித்த பதில் மூலோபாயமானது, பரந்த மோதலைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. ஈரான், இஸ்ரேல், காசா அல்லது வேறு எங்கும் போர் தேவையில்லை. நாங்கள் அமைதியைத் தேடுகிறோம் – ஆனால் நீதியுடன் கூடிய அமைதியை. ஓர் அறிஞர் கூறியது போல, “அமைதிக்கு ஆதரவான முகாம் பலவீனமானது. போருக்கு ஆதரவான முகாம் வலிமையானது.” அதுவே நமக்கு முன் உள்ள சவால்.
மேற்குலகம் பாலஸ்தீனியர்களை கைவிட்டுவிட்டது. ஐ.நா. மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்காவின் வீட்டோவால் சக்தியற்றதாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் அது முடிவல்ல. ஏனெனில் இஸ்ரேல் இப்போது ஈரானை அணு ஆயுதங்களை வாங்கத் தூண்டியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மத்திய கிழக்கை அணு ஆயுதங்களை வாங்கத் தள்ளும்.- Vidivelli