இலங்கையில் பைத்துல்மால் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்க கோரி சபையில் தனிநபர் பிரேரணை
ஹிஸ்புல்லாஹ் எம்.பி. சமர்ப்பிப்பு; ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்ப்பு
இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கீகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப்பத்திரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், ‘பைத்துல்மால் நிதியம்’ என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாசாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாசார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.
இலங்கையிலும் இவ்வாறானதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.
முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றேன். அத்துடன், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராகவும் இருக்கின்றேன்.
அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். – Vidivelli