மாவனெல்லை இளைஞர் 8 மாதங்களாக தடுப்புக் காவலில் – குடும்பத்தினரை நேரில் சந்தித்தது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு

0 51

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) இன் கீழ் கைது­செய்­யப்­பட்டு, 8 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் மாவனல்லையைச் சேர்ந்த சுஹைலின் தந்­தையை, சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) கடந்த சனிக்கிழமை (28.06.2025) மாவ­னெல்­லையில் சந்­தித்­தது.

சுஹைல் PTA இன் கீழ் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்­டது குறித்த முழு விவ­ரங்­க­ளையும் இச்­சந்­திப்பின் போது சமூக நீதிக்­கான சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பின் பிர­தி­நி­திகள் பெற்­றுக்­கொண்­டனர்.

பெற்­றுக்­கொண்ட விவ­ரங்­களின் சுருக்கம் வரு­மாறு:
23.10.2024 – மாவ­னெல்­லையைச் சேர்ந்த 20 வய­தான சுஹைல், கொழும்பில் தனது வேலை நிமித்தம் தங்­கு­வ­தற்­காக ஒரு வாடகை அறையைப் பார்க்கச் சென்ற போது, தெஹி­வ­ளையில் உள்ள இஸ்­ரே­லிய Chabad House இன் அருகே வைத்து பகல் 2.30 –3.00 மணி­ய­ளவில் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­ப­டு­கிறார். கைது செய்­யப்­படும் போது அவ­ரிடம் தேசிய அடை­யாள அட்டை இருக்­க­வில்லை. ஆனால் உட­ன­டி­யாக கைத்­தொ­லை­பே­சியில் உள்ள தேசிய அடை­யாள அட்­டையின் பிரதி பொலி­ஸா­ருக்கு காண்­பிக்­கப்­ப­டு­கி­றது.

24.10.2024 – காலை கல்­கிஸ்ஸை நீதிவான் நீதி­மன்­றத்தில் சுஹைல் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு, மாலை 4.30 மணி­ய­ளவில் கல்­கிஸ்ஸை நீதி­வா­னினால் விடு­விக்­கப்­ப­டு­கிறார்.
அதே நாள் தந்­தையும், மகனும் கொழும்­பி­லி­ருந்து மாவ­னெல்­லையில் உள்ள அவர்­களின் வீட்­டுக்கு இரவு வந்­த­டைய முன்­ன­ரேயே, சம்­பந்­தப்­பட்ட தெஹி­வளைப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி (OIC) தெஹி­வளை மற்றும், மாவ­னெல்லை பொலிஸார் சகிதம் சுஹைலின் வீட்­டுக்கு வருகை தந்­தி­ருந்­தனர்.

தந்­தையும் மகனும் வந்து சேர்ந்­த­வுடன் “உங்கள் மகனை தெஹி­வ­ளைக்கு கொண்டு போய் ஒரு வாக்­கு­மூ­லத்தைப் பெற்­று­விட்டு அடுத்த நாள் காலை திரும்­பவும் விட்­டு­வி­டுவோம். பயப்­பட வேண்டாம்” என்று தெஹி­வளைப் பொலிஸார் கூறி­யி­ருக்­கின்­றனர்.
தந்­தைக்கு இது குறித்து நம்­பிக்­கை­யின்மை ஏற்­ப­டவே, மாவ­னெல்லை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியைத் (OIC) தொடர்­பு­கொண்டு பேச, அவரும் “சுஹைல் காலையில் விடு­விக்­கப்­ப­டுவார்” என்று வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். அந்த அடிப்­ப­டையில் சுஹைலை மீண்டும் தெஹி­வ­ளைக்கு கொண்டு சென்­றி­ருக்­கின்­றனர் தெஹி­வளைப் பொலிஸார்.

ஆனால் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்­தையும் மீறி, “இஸ்­ரே­லிய கொடிக்கு கையால் குத்­து­வது” போன்ற ஒரு ஸட்டிக்கரை கைய­டக்கத் தொலை­பே­சியில் வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­ப­டு­கிறார் சுஹைல்.

எனினும், பொலிஸ் B அறிக்கையில் சுஹைல் மாவ­னெல்­லையில் வைத்து கைது செய்­ததை மறைத்து, “ஒக்­டோபர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் chabad house இற்கு முன்னால் சந்­தே­கப்­படும் படி­யாக உலா­வி­ய­தனால் கைது செய்­யப்­பட்டார்” என்று பொய்­யான ஒரு அறிக்­கையை தாக்கல் செய்­தி­ருக்­கி­றார்கள் பொலிஸார்.

பொலிஸார் 24 ஆம் திகதி இரவு மாவ­னெல்­லையில் உள்ள சுஹைலின் வீட்­டிற்கு வந்து அவரை மீண்டும் தெஹி­வ­ளைக்கு கொண்டு சென்­ற­தற்­கான CCTV மற்றும் வீடியோ ஆதா­ரங்கள் உள்­ளன.

ஒக்­டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்­களும் சுஹைலின் தாயாரும் தந்­தையும் பொலிஸ் நிலை­யமும் கையு­மாக அலைந்­தி­ருக்­கின்­றனர். அப்­போதும் “இன்று விடு­விப்போம், நாளை விடு­விப்போம்” என்று கூறி காலத்தைக் கடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.
27.10.2024 – ஞாயிற்­றுக்­கி­ழமை, கல்­கிஸ்ஸை ‘பதில்’ நீதிவான் முன்­னி­லையில் சுஹைல் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­கிறார். அவ்­வே­ளையில் பதில் நீதிவான் சுஹைலை 5 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டு­கிறார்.

5 நாட்­களின் பின்னர், மீண்டும் கல்­கிஸ்ஸை நீதவான் முன்­னி­லையில் சுஹைல் ஆஜர்­ப­டுத்­தப்­படும் வேளையில், “தன்னால் ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்ட நபரை மீண்டும் ஏன் தடுத்து வைத்­துள்­ளீர்கள்?” என பொலி­ஸா­ரிடம் வின­வினார் கல்­கிஸ்ஸை நீதிவான். அதே போன்று, “நீத­வானின் எவ்­வித உத்­த­ர­வு­மின்றி” குறித்த நபரின் தொலை­பேசி, ஏலவே CID இடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்தும் வின­வப்­பட்­டது.
அவ்வேளையில் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரினால் (ASP) வழங்­கப்­பட்ட ஒரு கடி­தத்தை நீத­வா­னுக்கு சமர்ப்­பித்­தனர்.

பின்னர் 8 நாட்கள், சுஹைல் PTA இன் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டார்.
இவ்­வா­றாக முதலில் 8 நாளுக்கு ஒரு முறை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சுஹைல், மீண்டும் 14 நாட்­க­ளுக்கு ஒரு­முறை நிகழ்­நிலை மூல­மாக (Online hearing) இன்­று­வரை ஆஜர்­ப­டுத்­தப்­ப­டு­கிறார்.

இந்தப் பிரச்­சினை குறித்து பொலிஸ்மா அதி­ப­ருக்கும், மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கும் சுஹைலின் தந்­தையால் எழுத்து மூலம் தெரி­விக்­கப்­பட்டும் எந்­த­வி­த­மான காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையில் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்­கி­ணங்க மஹ­ஜன சஹன மெதி­ரிய மூலம் சில நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும், அதுவும் தெஹி­வளை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் (ASP) குறுக்­கீடு கார­ண­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டது.

சுஹைலை விடுப்­பதா அல்­லது தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைப்­பதா என்­றது குறித்து சட்­டமா அதி­பரின் சட்ட ஆலோ­ச­னையை கோரி 6 மாதங்கள் கடந்து சென்றும் அது­கு­றித்து சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து இது­வரை எந்­த­வித சட்ட ஆலோ­ச­னை­களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

சுஹைலின் தந்­தை­யு­ட­னான சந்­திப்பில் அர்க்கம் முனீர், சட்­டத்­த­ர­ணி­க­ளான ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸ­னலி, அஷ்ரப் முக்தார் மற்றும் இர்பான் பன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுவரை சுஹைலின் பெற்றோர், தனியாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் பல லட்சங்களை செலவழித்து போராடி வருகின்றனர். சுஹைலின் விடுதலைக்காவும், சுஹைலுக்கு நீதியை நிலைநாட்டவும் போராடுவது நம் அனைவரதும் கடமை. அந்த அடிப்படையில் சமூகநீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பானது, சிரேஷ்ட சட்டத்தரணிகளின் உதவியோடு சுஹைலுக்கான சட்ட ரீதியான பிரதிநிதித்துவத்தை (Legal Representation) வழங்க தன்னார்வமாக முன் வந்துள்ளதாக அறிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.