டாக்டர் முகைதீன் படுகொலை வழக்கும் சிவில் சமூகத்தின் முன்னுள்ள பொறுப்பும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது விடயத்தில் அக்கறை காட்டாதது ஏன்?

0 55

மகப்­பேற்று மற்றும் பெண்­ணியல் விசேட வைத்­திய நிபுணர் முஹம்­மது சுல்தான் மீரா முகைதீன் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டதன் மூலம் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வவு­னி­யாவில் இடம்­பெற்­றது.

போர்க்­க­ளத்தில் வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் வாழ்ந்த அரை மில்­லியன் மக்­க­ளுக்கும் மிகவும் உக்­கி­ர­மான வேலைப்­ப­ளு­வுக்கு மத்­தியில் மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் மகப்­பேறு மற்றும் பெண்­ணியல் மருத்­துவ சேவை வழங்­கிய ஒரே விஷேட வைத்­திய நிபுணர் இவராவார். வவு­னியா பொது மருத்­து­வ­ம­னையை மைய­மாக வைத்து தனது சேவையை வழங்கி இருந்தார்.

சம்­பவம் இடம்­பெற்ற போது வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிசே­ரியன் சத்­திர சிகிச்சை செய்ய வேண்­டிய நிலையில் அப்­போது அவர் வவு­னியா கற்­கு­ளியில் அமைந்­துள்ள வன்னி மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வைத்­தியர் சிவ­மேகன் அவர்­களின் அபீஷா தனியார் வைத்­தி­ய­சா­லையில் இருந்து வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு வரும் போதே படு­கொலை செய்­யப்­பட்டார்.

இந்த கோழைத்­த­ன­மான சம்­பவம் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட வவு­னி­யாவை சேர்ந்த நெடு­மாறன் என்று அழைக்­கப்­படும் சிவ­நாதன் பிறே­மநாத் என்ற நபரை குற்­ற­வா­ளி­யாக இனங்­கண்ட வவு­னியா மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன், அவ­ருக்கு மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.

இது தொடர்­பாக நீதி­மன்­றத்­திற்கு வாக்­கு­மூலம் அளித்த குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லையின் உரி­மை­யாளரான முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வைத்­தியர் எஸ். சிவ­மோகன் சம்­பவம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் வைத்­தியர் முகைதீன் அவர்கள் தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்­றி­யுள்ளார். அத்­தோடு, குற்றம் சுமத்­தப்­பட்­டவர் மிக மோச­மான முறையில் அவரை துப்­பாக்கிச் சூடு மேற்­கொண்டு கொலை செய்தார்.

சம்­பவம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நெடு­மாறன் என்ற குறித்த நபர் தமி­ழீழ மக்கள் விடு­தலை கழ­கத்தின் (புளொட்) வவு­னியா வேப்­பங்­குளம் முகா­முக்கு பொறுப்­பாக செயற்­பட்­டி­ருந்தார்.

உயி­ரி­ழந்­த­வரின் உடலில் இருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கித் தோட்­டாக்கள் எதி­ரி­யினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நிரூ­பிக்­கப்­பட்ட நிலையில், எதிரி குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­ப­டு­வ­தாக தீர்ப்­ப­ளித்த நீதி­பதி, அவ­ருக்கு மர­ண ­தண்டை விதித்து தீர்ப்­ப­ளித்தார். குறித்த சந்­தேக நபர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் 14 ஆண்­டு­க­ளாக இடம்பெற்று வந்­தன. இத்­த­கைய ஒரு நீண்ட விசா­ர­ணையின் பின்­னரே சந்­தேக நபர் குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டார்.

நீண்ட விசா­ர­ணை­களின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்­போ­தைய வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யான மா.இளஞ்­செ­ழியன், நெடு­மாறன் என்­ப­வரை குற்­ற­வா­ளி­யாக கண்டு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.
ஒரு திருப்­பு­மு­னை­யாக கடந்த 2025 மே மாதம் இரு­பதாம் திகதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம் நெடு­மாறன் என்­பவர் இந்த குற்­றத்­தி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

தீர்ப்­பினை இருவர் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம் வெளி­யிட்­டது. இதில் நீதி­பதி பி சசி மகேந்­திரன் மற்றும் அமல் ரண­ராஜா ஆகியோர் உள்­ள­டங்­கினர். இந்த தீர்ப்பு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் தீர்ப்பு குறித்து எந்தவித­மான நிலைப்­பாட்­டையும் பொது­வெ­ளியில் வெளிப்­ப­டுத்­து­வது பொருத்­த­மாக அமை­யாது.

எனினும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் தனக்கு கிடைத்த மகப்­பேறு பெண்­ணியல் மருத்­துவ தொழிலை விட்டு இலங்கை வந்து யுத்தம் இடம்­பெற்ற சூழ்­நி­லையில் பொது மக்­க­ளுக்கும் அர­சாங்­கத்­திற்கும் தனது உயிரை பணயம் வைத்து சேவை மனப்­பான்­மை­யோடு கட­மை­யாற்­றிய ஒரு முஸ்லிம் வைத்­தியர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் அனைவராலும் இலகுவாக மறக்கடிக்கப்பட்டமை கவலைக்குரியதாகும். அந்த வகையில் இந்த விடயத்தில் உள்ள சிவில் சமூக கட­மைப்­பாடு பற்றி பேச வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

கொலை முயற்­சி­யோடு சந்­தே­கிக்­கப்­பட்டு அண்­மையில் விடு­விக்­கப்­பட்­டவர் புளொட் இயக்­கத்தின் முக்­கிய செயற்­பாட்­டாளர். இறுதி யுத்­தத்தின் போதும் அதனைத் தொடர்ந்தும் வவு­னியா உள்­ளிட்ட பல்­வேறு பிர­தே­சங்­களில் மனித உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளையும் கொலை முயற்­சி­க­ளையும் நடத்தி வந்­தமை சர்­வ­தேச ரீதி­யாக அறி­யப்­பட்ட உண்­மை­யாகும்.

2007 ஆம் ஆண்டு சர்­வ­தேச மனித உரி­மைகள் நிறு­வ­ன­மான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நிறு­வனம் வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி புளொட் போன்ற அரச ஆத­ர­வுடன் செயல்­படும் ஆயு­தக்­கு­ழுக்கள், காணாமல் போன­வர்­கள் குறித்த உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டுள்­ளன என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் மற்­று­மொரு அறிக்­கையில் (2008) புளொட் அமைப்பு, வவு­னியா போன்ற பகு­தி­களில் சட்­டப்­படி அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத தடுப்பு மத்­தி­ய நிலைங்­களை இயக்­கி­ய­தா­கவும், கைதி­களை துன்­பு­றுத்­தி­ய­தா­கவும் குற்­றச்­சாட்­டப்­பட்­டுள்­ளது. 2013 ஆம் அறிக்­கையில், புளொட்­அ­மைப்பின் உறுப்­பி­னர்கள், கைதி­களை துன்­பு­றுத்தி, பாலியல் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும், சில வழக்­கு­களில், இவ்­வ­மைப்பின் உறுப்­பி­னர்கள் நேர­டி­யாக ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆசியா டைம்ஸ் வெளி­யிட்ட 2002 ஆம் ஆண்டு கட்­டு­ரையில், புளொட் அமைப்பு, “மர­ணக் ­கு­ழுக்கள்” எனப்­படும் குழுக்­களில் ஈடு­பட்­ட­தா­கவும், விடு­த­லைப்­ பு­லி­ ஆ­த­ர­வா­ளர்­களை அடை­யாளம் காண்­பதில், புளொட் உறுப்­பி­னர்கள் முக்­கிய பங்கு வகித்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புலிட்சர் சென்டர் அறிக்­கையில் (2009) இவ்­வ­மைப்பு, விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தில் இருந்து பிரிந்து, அர­சாங்­கத்­துடன் இணைந்து பர­ாமி­லி­டரி அமைப்­பாக செயல்­பட்­ட­தா­கவும், வவு­னியா போன்ற பகு­தி­களில், கைதி­களை துன்­பு­றுத்­தி­ய­தா­கவும் குற்­றச்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சிவில் சமூகம் மற்றும் இலங்கை வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஆகி­யன கருத்தில் கொள்ள வேண்­டிய மூன்று விட­யங்கள் உள்­ளன.

முத­லா­வது, வைத்­தியர் முகைதீன் அவர்­களின் கொலை­யோடு தொடர்புபட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு இப்­போது நீதி­மன்­றத்தின் மூலம் நிர­ப­ரா­தி­யாக விடு­தலை செய்­யப்­பட்டுள்ள நிலையில் டாக்டர் முகைதீன் அவர்­களின் குடும்­பத்­தி­னரின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­ட முடியும். அவ­ரது பிள்­ளைகள் நாட்­டிலும் நாட்­டுக்கு வெளி­யிலும் வைத்­தி­யத்­து­றையில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருப்­ப­வர்கள். சம்­பவம் இடம்­பெற்­றதை தொடர்ந்து தொடர்ச்­சி­யாக அச்­சத்தின் கார­ண­மாக பாது­காப்­பின்­மையை உணர்ந்­த­வர்கள். சம்­பவம் இடம்­பெற்ற 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து அவர்­க­ளது வாழ்க்கை வவு­னியா பகு­தியில் சுதந்­தி­ர­மா­ன­தாக அமை­ய­வில்லை. எனவே அவ­ரது குடும்­பத்தின் பாது­காப்பு குறித்து அர­சாங்கம் உத்­த­ர­வாதம் அளிக்க வேண்டும்.

இரண்­டா­வது ஒரு அர­சாங்க வைத்­திய அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய ஒருவர் படு­கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் கடமை முடிந்து விடு­வ­தில்லை. படு­கொலை தொடர்­பான ஆவ­ணப்­ப­டுத்­தல்கள், குடும்­பத்­துக்கு நஷ்டஈடு­களை பெற்றுக் கொடுத்தல் போன்­றன இதன் பொறுப்­பு­களில் சில­வாகும்.

ஆனால் பொது­வாக வேறு சம்பவங்களில் அரச வைத்­திய அதி­கா­ரி­களின் சங்கம் காட்டும் அக்­க­றையை ஏன் இந்த சம்­ப­வத்தில் காட்­ட­வில்லை என்­பது பொது­வான நிலைப்­பா­டாகும். இது தொடர்பில் பிர­தேசவாசிகள் மிகுந்த ஏமாற்­றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் அரச வைத்­திய அதி­கா­ரிகள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வங்­களின் போது அல்­லது தனது சேவை நேரத்தில் தாக்­கு­த­லுக்கு உட்­பட்ட போது அரச வைத்­திய அதி­கா­ரி­களின் சங்கம் மிக கடு­மை­யாக செயல்­பட்­டது. அவர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை பெற்றுக் கொடுக்க முற்­பட்­டது. நஷ்ட ஈடு­களை பெற்றுக் கொடுப்­பதில் மும்­மு­ர­மாக செயல்­பட்­டது. ஆனால் வைத்­தியர் முகைதீன் அவர்­களின் விட­யத்தில் அரச வைத்­திய அதி­கா­ரி­களின் சங்கம் தெளி­வான எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளாமை ஏமாற்­றத்தை தரு­கி­றது.

மூன்­றா­வது முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் பொறுப்பும் கட­மையும். மிக கஷ்­ட­மான ஒரு கால­கட்­டத்தில் நாட்­டுக்­கா­கவும் நாட்டு மக்­க­ளுக்­கா­கவும் சேவை­யாற்ற வேண்டும் என்ற மனப்­பான்­மை­யோடு வெளி­நாட்டில் தனக்கு கிடைத்த தொழி­லையும் தூக்கி எறிந்து விட்டு தாய் நாட்டில் கட­மை­யாற்­றிய ஒரு தியா­கி­யா­கவே வைத்­தியர் முகி­தீனைப் பார்க்க வேண்டும். அவ­ரு­டைய படு­கொ­லையை தொடர்ந்து அவ­ரது குடும்­பத்­திற்­கான பாது­காப்­பையும் சட்­ட­ரீ­தி­யான நியா­யத்­தையும் பெற்றுக் கொடுப்­ப­தற்கு முஸ்லிம் சிவில் சமூகம் தவ­றி­யுள்­ளது என்­பதை இந்த சம்­பவம் எடுத்­துக்­காட்­டு­கி­றது.

சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட நபர் தொடர்­பான குற்­றத்­தினை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான சான்­று­களை உரிய தரப்­பினர் முன்­வைக்­காமை இந்த வழக்கில் தீர்ப்பில் ஒரு திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. மிக நீண்ட வழக்கு விசா­ர­ணையின் பின்னர் அப்­போது கிடைத்த ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வவு­னியா நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் அவ­தா­னிக்­கப்­பட்ட சட்டப் பிரச்­ச­ினைகள், ஆவ­ணங்­களை ஒழுங்­கு­ப­டுத்­துதல் தொடர்­பான பிரச்­சினைகள் இருந்­தி­ருக்க முடியும். அவற்றைத் தொகுத்து நீதி­மன்­றத்­திற்கு வழங்­கு­வ­தற்­காக அச்­சத்­தி­லி­ருந்த குடும்­பத்­தி­ன­ருக்கு உதவி செய்யும் சமூக நிறு­வ­னங்கள் செயற்­பட்­ட­தாக அறிய முடி­ய­வில்லை. சந்­தே­கத்­துக்கு அப்பால் குறிப்­பிட்ட நபரின் குற்­றத்தை உறுதி செய்­வ­தற்­கான சான்­று­களை கொலை செய்­யப்­பட்டவர் சார்­பாக ஆஜ­ரா­ன­வர்கள் முன்­வைக்கத் தவறியிருந்­தமையை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் சுட்­டிக்­காட்டி உள்­ளது.

புளொட் அமைப்பு இந்தக் கொலையை செய்­த­தாக பர­வ­லாக நம்­பப்­பட்­டது. இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது வைத்­தி­யரை படு­கொலை செய்­வ­தற்­கான விசே­ட­மான தேவை புளொட் அமைப்­புக்கு இருந்­ததா? இது பதில் தேட வேண்­டிய மிக முக்­கி­ய­மான வினா. ஊட­கத்­து­றை­யி­னரும், சிவில் சமூ­கத்­தி­னரும், அர­சாங்கப் புல­னாய்வுத் துறை­யி­னரும், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் இதற்­கான பதிலை தேடு­வது மிக முக்­கி­ய­மாகும்.

வவு­னியா மாவட்­டத்தில் பல்­வேறு பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் இந்த கொலைக்கும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­திற்கும் எந்த வித­மான தொடர்­பு­களும் இல்லை என நம்­பினர். ஒரு சிலர் இந்த கொலையை விடு­தலைப் புலி­களின் தலையில் கட்டுவதற்கு முயற்சித்தனர். எனினும், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்பதே பலரதும் நம்பிக்கையாக உள்ளது. விடுதலைப் புலிகளை ஆத்திரமூட்டக்கூடிய எந்த ஒரு செயற்பாட்டிலும் வைத்தியர் ஈடுபட்டமைக்கான சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசி யுத்­தத்தின் போது பாலியல் வன்­பு­ணர்­வு­க­ளுக்கு உட்­பட்ட பெண்கள் தொடர்­பான வைத்­திய நட­வ­டிக்­கை­களை இவர் மேற்­கொண்­டுள்ளார். யுத்த சூழ்­நி­லையை மைய­மாகக் கொண்டு பல்­வேறு தரப்­பி­னரும் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­பு­ணர்வு சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றன. அவை பற்­றிய பல இரக­சி­யங்கள் வைத்தியரிடம் இருந்­துள்­ளன. வண்­பு­ணர்வு சம்­ப­வங்­களை சட்­டத்தின் முன் மறைப்­ப­தற்­காக அல்­லது அத்­தாட்­சி­களை அழிப்­ப­தற்­காக இவரை சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் படு­கொலை செய்­தி­ருக்­கலாம். புளொட் அமைப்பு அரச இராணு­வத்தின் ஏவல் படை­யாக செயல்­பட்­டமை தொடர்­பான சர்­வ­தேச அறிக்­கைகள் உள்­ளன. அவற்றின் பின்­ன­ணியில் அப்­போ­தைய இராணு­வத்­து­றை­யி­ன­ருக்கும் புளொட் அமைப்­புக்கும் இந்த சம்பவத்தோடு ஏதாவது தொடர்பு உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.