கடந்த 12 நாட்களாக உலக நாடுகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்திய ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்திருப்பது, அனைவருக்கும் சற்று பெருமூச்சு விடக்கூடிய ஒரு செய்தியாகும். இந்தப் போர், ஈரானால் தொடங்கப்படவில்லை, மாறாக இஸ்ரேலின் காரணமற்ற தாக்குதல்களாலேயே தொடங்கியது என்பது சர்வதேச அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். எவ்வாறாயினும், இந்த மோதல் நீண்ட காலம் தொடராமல் ஒரு முடிவுக்கு வந்தமை பெரும் ஆறுதலான ஒரு செய்தியாகும்.
இந்த குறுகிய காலப் போர் இரு தரப்பிலும் பாரிய இழப்புகளையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 4,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலின் போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கியதுடன், ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, எந்தவொரு அணுக்கசிவு சேதங்களும் பதிவாகவில்லை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த 12 நாள் மோதலின் மூலம், ஈரான் தனது இராணுவ வலிமையையும், குறிப்பாக ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்களையும் உலகிற்கு நிரூபித்துள்ளது. சுமார் 500 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் இஸ்ரேல் மீது செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டாலும், ஈரானின் இராணுவ பலம் வெளிப்பட்டது. இனிமேல், இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ ஈரானுடன் நேரடியாக போர் தொடுப்பதைத் தவிர்ப்பது, பிராந்திய அமைதிக்கும், உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் மிக அவசியமான ஒன்றாகும். இந்தப் போர் நீடித்திருந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80 டொலர்களைத் தாண்டி, 100 டொலர்கள் வரைகூட உயர்ந்திருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தால், உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் எண்ணெய் விலைகள் 7% சரிவடைந்தமை, இந்த மோதலின் பொருளாதார தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது.
தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், காஸா பகுதியில் நிலவும் சூழல் இன்னும் உலகின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டடுள்ளனர். ஒக்டோபர் 7, 2023 முதல் சுமார் 620 நாட்களுக்கும் மேலாக இந்த துயரமான போர் தொடர்கிறது. காஸா சுகாதார அமைச்சகத்தின்படி, ஜூன் 18, 2025 நிலவரப்படி, காஸா போரில் 56,152க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களும், 1,706 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா.வின் ஆய்வுகளின்படி, பலஸ்தீனிய உயிரிழப்புகளில் சுமார் 80% பொதுமக்கள், அவர்களில் 59.1% பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள். இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் நடைபெறும் மனித பேரழிவின் தீவிரத்தை பறைசாற்றுகின்றன.
காஸாவில் போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடைகளை நீக்குதல் மற்றும் அனைத்து எல்லைக் கடப்புகளையும் திறத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்த தீர்மானங்கள் இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உட்பட பல சர்வதேச அமைப்புகள், நாடுகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளன. எனினும் இந்தக் கோரிக்கைகள் வலுவற்றுப் போயுள்ளன.
எனவே, இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் மற்றும் பிற உலக நாடுகள் அனைத்தும் இணைந்து காஸா போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தீவிரமாக பணியாற்ற வேண்டும். காஸாவிலும் நிரந்தரமான அமைதியும், நீதியும், மக்களின் பாதுகாப்புடன் கூடிய இயல்பு வாழ்க்கையும் திரும்புவது இன்றியமையாதது. உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, காஸாவில் அப்பாவி மக்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும், பிராந்தியத்தில் அமைதி நிலவும்.- Vidivelli