அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகளா? உண்மை என்ன?

0 66

ஃபேக்ட் கிர­ஸண்டோ

அறு­கம்பை குடா­விற்கு (Arugam Bay) வரு­கை­தரும் வெளி­நாட்­டினர் பிகினி அணி­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்ட தகவல் சமூக ஊட­கங்­களில் அண்மையில் பகி­ரப்­பட்டது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிர­ஸண்டோ நிறு­வனம் ஆய்­வொன்றை மேற்­கொண்­டது.

அறு­கம்பை குடா­விற்கு வருகைத் தரும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களை அறி­வு­றுத்தும் வித­மாக “No Bikini” என தெரி­விக்­கப்­பட்ட அறி­வித்­த­லொன்று அந்த பகு­தி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தே குறித்த சமூக ஊட­கப்­ப­தி­வு­களில் பகி­ரப்­பட்­டி­ருந்­தது. குறித்த அறி­வித்தல் ஆங்­கில மொழி­யி­லேயே வெளி­யிடப்­பட்­டி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. அதன் தமிழாக்கம் பின்வருமாறு..

“பிகினி வேண்டாம்!
அன்­பார்ந்த விருந்­தி­னர்­க­ளுக்கு,
அறு­கம்பை குடா­விற்கு உங்­களை அன்­புடன் வர­வேற்­கின்றோம்! நீங்கள் இங்கு வந்­த­தற்கு நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம், உங்கள் இருப்பை உண்­மை­யி­லேயே பாராட்­டு­கிறோம். நமது உள்ளூர் கலா­சா­ரத்தை மதிக்கும் வகையில், பொது இடங்­களில் பிகினி அணி­வதைத் தவிர்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம். எங்கள் மர­புகள் மீதான உங்கள் மரி­யா­தையை எங்கள் சமூகம் பாராட்­டு­கி­றது. உங்கள் புரி­த­லுக்கு நன்றி, அழ­கான அறு­கம்பை குடாவில் உங்கள் நேரத்தை கழிப்­பீர்கள் என்று நம்­பு­கிறோம்!
இங்­கனம்
பிர­தேச மக்கள்
“அறு­கம்பை குடா, பொத்­துவில்.”

என்றே அந்த அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
அத்­துடன் குறித்த அறி­வித்­தலை வெளி­யிட்டு சமூக ஊட­கங்­களில் பலர் வெவ்­வேறு வித­மான கருத்­துக்­களை பகிர்ந்திருந்தனர்.

உண்­மையில் அறு­கம்பை கடற்­கரை பகு­தி­களில் அவ்­வா­றான சுவ­ரொட்­டிகள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னவா என்­பது தொடர்பில் நாம் பொத்­துவில் பிர­தேச சபையை தொடர்­பு­கொண்டு வின­வி­யி­ருந்தோம்.

இதன்­போது பொத்­துவில் நகர சபை­யினால் அவ்­வா­றான அறித்­தல்கள் எதுவும் வைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துடன் அறு­கம்பை கடற்­க­ரையை அண்­டிய பகு­தி­களில் மேற்­கு­றிப்­பிட்ட விதத்­தி­லான எந்­த­வித சுவ­ரொட்­டி­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என பொத்­துவில் பிர­தேச சபையின் தலைமை நிர்­வாக அதி­காரி எம்­மிடம் தெரி­வித்தார்.

பொத்­துவில் பொலிஸ் நிலையம்
பொத்­துவில் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு கீழ் இயங்கும் அறு­கம்பை குடா சுற்­றுலா காவல் நிலை­யத்தின் மூத்த அதி­காரி ஒரு­வரை நாம் தொடர்­பு­கொண்டு இது குறித்து வின­வி­ய­போது, இது­போன்ற சுவ­ரொட்­டியை ஒட்­டவோ அல்­லது வெளி­நாட்­டி­ன­ருக்குத் தெரி­விக்க நட­வ­டிக்கை எடுக்­கவோ எந்த உத்­த­ரவும் வர­வில்லை என்றும், அறு­கம்பை குடா கடற்­க­ரையில் அத்­த­கைய சுவ­ரொட்­டிகள் எதுவும் காணப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார்.

வெளி­நாட்டு பெண் சுற்­றுலாப் பய­ணிகள் பிகினி போன்ற கடற்­கரை உடை­களை அணிந்­தாலும், அவர்கள் பெரும்­பாலும் அந்த ஆடை­களில் வீதி­களில் பய­ணிப்­ப­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அறு­கம்பை சுற்­றுலா
ஹோட்­டல்கள்
சுற்­று­லாவைச் சார்ந்து வாழும் அறு­கம்பை பகு­தியில் உள்ள பல ஹோட்­டல்­க­ளிடம் இது குறித்து வின­வி­யி­ருந்தோம், இதன்­போது, சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­படும் அறி­வித்­த­லா­னது அறு­கம்பை குடாவைச் சுற்­றியோ அல்­லது கடற்­க­ரை­யிலோ ஒட்­டப்­பட்­டி­ருப்­ப­தனை காண­வில்லை என தெரி­வித்­தனர்.

இருப்­பினும், இந்தப் பகு­தியில் அனைத்து மதத்­தி­னரும் வசிப்­ப­தனால், சுற்­றுலாப் பய­ணி­களை தெளி­வு­ப­டுத்தும் வகையில் 2017/2018 ஆம் ஆண்­டு­களில் “NO Bikini On Street” என்ற கரு­பொ­ருளில் ஒரு விழிப்­பு­ணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்­பட்­ட­தா­கவும், பல முச்­சக்­கர வண்­டி­க­ளிலும், அறு­கம்பை குடா பகு­தியின் பல்­வேறு இடங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், சுற்­றுலாத் துறையைப் பாது­காக்க, இந்தப் பகு­தியில் வசிப்­ப­வர்­களால் நடத்­தப்­படும் “Arugam bay development forum” இனா­லேயே இது முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

தற்­போது அந்த சுவ­ரொட்­டிகள் எங்கும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும், பெரும்­பா­லான வெளி­நாட்­டினர் பிகினி அணிந்து வீதி­களில் பய­ணிப்­ப­தில்லை என்றும், எனினும் சில சந்­தர்ப்­பங்­க­ளிலி பிகினி அணிந்து வீதி­களில் பய­ணிக்கும் வெளி­நாட்­டி­ன­ரிடம் அவ்­வாறு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை மாத்­தி­ரமே முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­கவும், அவர்கள் பெரும்­பாலும் கடற்­க­ரையில் மட்­டுமே பிகினி அணிந்து செல்­வார்கள் என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

“NO Bikini On Street” என்று ஏதேனும் விளம்­ப­ரங்கள் உள்­ளதா என நாம் ஆராய்ந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த விளம்­ப­ரத்தின் புகைப்­படம் ஒன்றை எம்மால் காண­மு­டிந்­தது.

வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் குறித்து மேலும் கருத்து தெரி­வித்த அறு­கம்பை சுற்­றுலா ஹோட்­டல்கள், அறு­கம்பை பகு­திக்கு வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் அதிக அளவில் வரும் காலம் இது என்று கூறு­கின்­றனர்.

சில வெளி­நாட்­டினர் ஹெல்மெட் இல்­லாமல் மோட்டார் சைக்­கிள்­களை ஓட்ட ஆசைப்­ப­டு­கி­றார்கள், மேலும் இது குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி சுற்­றுலாத் துறையைப் பாது­காக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன எனவும் குறிப்­பிட்­டனர்.
இருப்­பினும், சுற்­றுலாப் பய­ணிகள் தங்­கி­யி­ருக்கும் ஹோட்­டல்­க­ளுக்கு அருகில் பிகினி அணிய வேண்டாம் என்று எந்த விளம்­ப­ரங்­களும் வைக்­கப்­ப­ட­வில்லை, மேலும் வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வது போன்ற எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை அவர்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றனர்.

இருப்­பினும், மேற்­கண்ட சமூக ஊடகப் பதி­வு­களில் காட்­டப்­பட்­டுள்­ள­படி, பொது இடங்­களில் பிகினி அணி­வதைத் தவிர்க்­கு­மாறு மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டாலும், கடற்­க­ரையும் ஒரு பொது இடம் என்­பதால் அது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றது என்றும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

முஸ்லிம்கள் ஆட்சேபனையா?
சில­ருக்கு தனிப்­பட்ட கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம் என்­றாலும், அப்­ப­கு­தியில் உள்ள முஸ்லிம் சமூகம் ஒட்­டு­மொத்­த­மாக அத்­த­கைய ஆட்­சே­ப­னையை எழுப்­ப­வில்லை என்று அறு­கம்பை பகு­தியைச் சேர்ந்த பிராந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்கள் குறிப்­பிட்­டனர்.
அறு­கம்பை பகு­தியில் அனைத்து சமூ­கத்­தி­னரும் வசிப்­ப­தா­கவும், பல ஆண்டு கால­மாக வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இந்தப் பகு­திக்கு வருகை தரு­வ­தாலும், அவர்கள் அத்­த­கைய ஆடை­களை அணிந்­துதான் பயணம் செய்­த­தா­கவும், தற்­போது உள்ளூர் மக்கள் அவற்­றுக்குப் பழ­கி­விட்­ட­தா­கவும் அவர்கள் கூறினர்.

மேலும், அந்தப் பகு­தியில் உள்ள முஸ்லிம் மதத் தலங்­க­ளி­லி­ருந்து எந்த எதிர்ப்பும் வர­வில்லை என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர். இருப்­பினும், சிலர் தமது தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­காக பிரச்­சி­னை­களை உரு­வாக்க இதைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

குறித்த அறி­விப்­பா­னது சமூக ஊட­கங்­களில் வைர­லாக பகி­ரப்­ப­டு­வ­தற்கு முகநூல் கணக்கு ஒன்றில் இந்த அறி­விப்பு முதலில் பதி­வேற்­றப்­பட்­ட­மையே கார­ண­மாக அமைந்­தது.

மேலும் கடந்த 18 ஆம் திகதி அறு­கம்பை கடற்­க­ரையை அண்­மித்து அமைந்­துள்ள தனது உண­வ­கத்­திற்கு முன்பாக வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர் நிர்­வா­ண­மாக சென்­ற­தா­க­வும், வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் இவ்­வா­றான செயல்கள் அப்­ப­கு­தியில் வசிக்கும் மக்­களை பெரிதும் சிர­மத்­திற்­குள்­ளாக்­கு­வ­தா­கவும் முகநூலில் இதனைப் பதிவிட்ட நபர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் குறித்த சுற்­று­லாப்­ப­யணி நிர்­வா­ண­மாக செல்லும் காட்சி அவரின் உண­வ­கத்­திற்கு முன்னால் உள்ள சிசி­டி­வியில் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்தார்.

கடந்த ஆண்டு (2024) ஜன­வரி 17 ஆம் திகதி, வெலி­கம, அஹங்­கம பகு­தி­களில் ஆங்­கிலம், ஜேர்மன் மற்றும் ரஷ்ய மொழி­களில் “கடற்­க­ரையில் மட்­டுமே நீச்சல் உடை அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது” என்று பொருள்­படும் ஒரு விளம்­ப­ரத்தின் காணொ­ளியை அவர் தனது பேஸ்புக் பக்­கத்தில் பதி­வேற்­றி­யி­ருந்தார்.

சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வசிக்கும் வெலி­கம பகு­தியில் இது­போன்ற சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தாலும், முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் பெரும்­பான்­மை­யாக வசிக்கும் அறு­கம்­பையில் ஏன் இது­போன்ற சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­ப­ட­வில்லை என்று அவர் அந்த காணொ­ளியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் வெலி­கம பொல்­வத்த பாலத்­திற்கு அருகில் இது­போன்ற மற்­றொரு அறி­வித்­தலை தான் கண்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

மேலும் இவ்­வா­றான விளம்­ப­ரங்கள் நாட்டின் வேறு இடங்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னவா என நாம் ஆராய்ந்­த­போது,கடற்­க­ரையில் மட்­டுமே நீச்­ச­லுடை அணிய முடியும் என்ற விளப்­ப­ரங்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல இடங்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட்­டி­ருந்­த­மையை எம்மால் காண­மு­டிந்­தது.

இருப்­பினும், அறு­கம்பை பகு­தியில் அத்­த­கைய விளம்­பரம் எதுவும் காணப்­ப­ட­வில்லை என்று அந்தப் பகு­தியில் சுற்­றுலாத் துறையில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களால் எமக்கு உறு­தி­யா­னது.

இதேபோல், பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரு­மான சட்­டத்­த­ரணி புத்­திக மன­துங்­கவும், அரு­கம்பை பகு­தியில் வன்­முறை சூழ்­நிலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் அல்­லது பாது­காப்பு பிரச்­சினை எதுவும் இல்லை என தெரி­வித்­துள்ளார்.

எனவே எமது ஆய்வின் அடிப்­ப­டையில், “No Bikini” என தெரி­விக்­கப்­பட்டு சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்ட அறி­வித்­த­லா­னது, அறு­கம்பை கடற்­க­ரை­யிலோ அல்­லது அறு­கம்­பை­யி­லுள்ள வேறு எந்த பொது இடத்­திலோ உண்­மையில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது தெளி­வா­கி­றது.

மேலும் அண்­மையில் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர் அறு­கம்பை பகு­தி­யி­லுள்ள பிர­தான வீதியில் நிர்­வா­ண­மாக சென்­ற­த­னை­ய­டுத்து, பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால், பிரதேசவாசி ஒருவரினால் உருவாக்கப்பட்ட அறிவித்தல் சமூக உடகங்களில் பகிரப்பட்டதனை அடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், “NO Bikini On Street” என்ற கருப்பொருளைக் கொண்ட சுவரொட்டிகள் இதற்கு முன்பு 2017/2018 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமூக ஊடகப் பதி­வு­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­படி, அறு­கம்­பை­யி­லுள்ள முஸ்லிம் சமூ­கத்­தினர் ஒன்­றி­ணைந்து இவ்­வா­றான சுவ­ரொட்­டிகள் மற்றும் விளம்­ப­ரங்­களை வெளி­யி­ட­வில்லை என்­ப­தனை அறு­கம்­பை­யி­லுள்ள முஸ்லிம் சமூகத் தலை­வர்கள், பொலிஸார் மற்றும் பிராந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
மேலும் கடற்­க­ரையும் ஒரு பொது இடம் என்­பதால், அனைத்து பொது இடங்­க­ளிலும் பிகினி அணி­யக்­கூ­டாது என்று சமூக ஊடகப் பதிவில் கூறப்­பட்­டாலும், அந்தப் பதிவின் கருத்தை அறு­கம்பை மக்­களின் கருத்­தாகக் எடுத்­துக்­கொள்ள முடி­யாது.

அத்­துடன் பிகினி அணி­வதை கட­லுக்கும் கடற்­க­ரைக்கும் மட்­டுப்­ப­டுத்­து­வதும், வீதி­களில் அப்­படி அணிந்து செல்­லக்­கூ­டாது என்­பது மாத்­தி­ரமே அந்த மக்­களின் நோக்­க­மாக உள்­ளதே தவிர கடற்­க­ரையில் பிகினி அணியக் கூடாது என்பது அவர்களின் நோக்கம் அல்ல என்பதுவும் புலனாகின்றது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.