தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்த சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானது
கபீர் ஹாசிம் சபையில் தெரிவிப்பு; ம.வி.மு.வினர் வித்தைக்காரர்கள் எனவும் சாடல்
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
மக்கள் விடுதலை முன்னணியினர் முற்பிறவியில் வித்தைக்காரர்களாக இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் (பல்டி) குத்துக்கரணம் அடிக்கிறார்கள். தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் தொழில்நுட்ப மட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படுவதைப் போன்று ஜனநாயக அம்சங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாளை அரசாங்கத்துக்கு வரலாம், அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு செல்ல நேரிடும்.
2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அன்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.தரவு பாதுகாப்பு அதிகாரசபை ஒன்றை நிறுவ வேண்டும்.இதற்கான நியமனங்கள் அரசியலமைப்பு பேரவையால் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு பல திருத்தங்களை முன்வைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அன்று குறிப்பிட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபை இன்று முன்வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை. இந்த சட்டமூலம் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானதாக அமையும்.
மக்கள் விடுதலை முன்னணியினர் முற்பிறவியில் வித்தைக்காரர்களாக இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை ஏனெனில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் (பல்டி) குத்துக்கரணம் அடிக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறிப்பிட்டது ஒன்று, தற்போது செய்வது பிறிதொன்று. இந்த சட்டமூலத்துக்கு பல திருத்தங்களை நாங்கள் முன்வைப்போம் என்றார்.- Vidivelli