(எம்.ஆர்.எம்.வசீம்,இரா.ஹஷான்)
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மேலும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கூடியபோது சபாநாயகரின் அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார்.
இதுதொடர்பாக சபாநாயகர் தொடர்ந்து அறிவிப்பு செய்கையில்,
2025 மார்ச் 19ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்கு எஸ்.எம்.மரிக்கார் பெயரிடப்பட்டுள்ளார்.
அதேபோன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற, ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பரும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் தெரிவாகி இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.- Vidivelli