சமகாலத்தில் இலங்கை கண்ட விஞ்­ஞானி பேரா­சி­ரியர் மர்ஹூம் அச்சி முஹம்மத் இஸ்ஹாக்

0 78

அட்­டா­ளைச்­சேனை கிழக்­கி­லங்கை அறபுக்கல்­லூ­ரியில் 01.05.2025 அன்று நடை­பெற்ற முப்­பெரும் விழாவில் ஓர் அங்­க­மான இக்­கல்­லூ­ரியின் பணிப்­பாளர் சபையின் ஆயுட்­கா­லத்­த­லைவராக கடமையாற்றிய பேரா­சி­ரியர் மர்ஹூம் அச்சி.எம்.இஸ்ஹாக் பற்­றி தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அறபு மொழிப் பீட முன்னாள் பீடா­தி­பதி, பேரா­சி­ரியர், மெள­லவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் ஆற்றிய நினைவுப் பேருரை

பேரா­சி­ரியர் அச்சி முஹம்மத் இஸ்ஹாக் பற்றி, அன்­னா­ரது கல்விச் சாத­னைகள் பற்றி, நாம் தெளி­வான ஓர் ஆய்வைச் செய்­வ­தாயின், அவர் வாழ்ந்த காலப்­ப­குதி, உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் கல்வி கற்ற அவ­ரது பின்­புலம், குறிப்­பாக அக்­கால இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி நிலை என்­பன பற்­றிய தெளி­வான ஒரு பார்வை எம்­மிடம் இருக்க வேண்டும். இவ்­வா­றான பின்­பு­லத்தை நாம் அறி­யாமல் பேரா­சி­ரியர் இஸ்ஹாக் பற்­றிய ஒரு தெளி­வான முடி­வுக்கோ ஆய்வின் கருக்­கோ­ட­லுக்கோ (Research Finding) நாம் வர முடி­யாது.

1939ஆம் ஆண்டில் கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள நிந்­த­வூரில் முத்து முஹம்­மது ஹாஜி­யாரின் மக­னாக ஒரு சரா­சரிக் குடும்­பத்தில் பிறந்து, அக்­கால சூழலில் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டத்தில் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த இஸ்­லா­மிய பாடத்­திட்­டத்­தையும், அல் – குர்ஆன், அல்­ஹதீஸ் கல்­வி­யையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்த உள்ளூர் மத்­ரஸா ஒன்­றி­லேயே தனது ஆரம்­பக்­கல்­வியை (Primary Education) பெற்­றுக்­கொண்டார்.

ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்த
மத்­ரஸாக் கல்வி
இக்­காலப் பகு­தியில் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே மத்­ர­ஸாக்கள் எனப்­படும் இஸ்­லா­மியக் கல்வி நிலை­யங்கள் செல்­வாக்குப் பெற்­றி­ருந்­த­மைக்கு பல விஷேட கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. 16ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்­தி­லி­ருந்து (கி.பி. 1505இல்) இலங்­கையைக் கைப்­பற்றி தமது குடி­யேற்ற நாடாக ஆட்சி செய்த ஒல்­லாந்தர், போர்த்­துக்­கேயர், பிரித்­தா­னியர் என்ற மூன்று கால­னித்­துவ ஆட்­சியா ளர்­களும் தொடர்ஞ்­சேற்­றி­யாக இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்த கல்விக் கொள்கை முழுக்க முழுக்க கிறிஸ்­தவ மதப் பிர­சா­ரத்தின் அச்­சா­ணி­யா­கவே காணப்­பட்­டது. அதிலும் குறிப்­பாக பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் கிறிஸ்­தவ மதப் பிர­சா­ரத்­தையே தமது மூல மந்­தி­ர­மாகக் கொண்­டி­ருந்­தனர்.

இலங்­கையின் கல்வி நூற்­றாண்டை முன்­னிட்டு 1969ஆம் ஆண்டில் இலங்கை அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட “இலங்­கையின் கல்வி” (The Education of Ceylon) என்ற நான்கு வால்­யூம்­களைக் கொண்ட நூலில் இது­பற்­றிய தெளி­வான விளக்கம் காணப்­ப­டு­கி­றது. முழுக்க முழுக்க கிறிஸ்­தவ மதகுரு­மா­ரிடம் விடப்­பட்­டி­ருந்த இலங்­கையின் கல்வித் துறை கிறிஸ்­தவ மதப் பிர­சா­ரத்­துக்கும், அதன் பர­வ­லுக்கும் ஏற்ற வகையில் போர்த்­துக்­கேய அர­சாங்­கத்தால் திட்­ட­மிட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. இது­பற்றி கிறிஸ்­தவ பாதி­ரி­யானஎம்.எல்.ஏ.தொன்­பீற்றர் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார். “உண்­மையில் தங்கள் குடி­யேற்ற நாட்டு மக்­களை தங்கள் சம­யத்­துக்கு மாற்ற வேண்டும் என்­பதே போர்த்­துக்­கேய அர­சாங்­கத்தின் நிலை­யான கொள்­கை­யாகும். கிறிஸ்­தவ சம­யத்­துக்கு அர­சர்கள் அளித்த ஆத­ரவை போப்­பாண்­ட­வர்கள் உவந்­தேற்­றார்கள்.” (Sirisene – 1969)
இவ்­வாறு போர்த்­துக்­கேய, ஒல்­லாந்த காலப்­பி­ரிவின் அனைத்து தக­வல்­க­ளையும் சான்­று­க­ளையும் தொகுத்துப் பார்க்­கின்ற போது அக்­காலப் பிரிவில் இலங்கை முஸ்­லிம்கள் ஐரோப்­பி­யரின் கல்விக் கூடங்­க­ளிலோ, கல்வி நட­வ­டிக்­கை­க­ளிலோ சிறிதும் அக்­க­றை­யின்றி தமது தொழில் நட­வ­டிக்­கை­க­ளி­லேயே கவனம் செலுத்­தி­யமை ஆய்­வுகள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­களின் கத்­தோ­லிக்க மத­மாற்­றத்­துக்­கான கல்விக் கொள்­கையில் சிக்கி சிங்­கள மக்கள் மட்­டு­மன்றி, தமிழ் மக்­களும் இரை­யாகிப் போயி­ருந்­ததை ஒரு போர்த்­துக்­கேய எழுத்­தா­ளரே பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றார். “யாழ்ப்­பாணத் தமிழ் மக்­களும், பெளத்த மக்­களும் மிக இல­கு­வாக கிறிஸ்­வத மதத்தை தழுவிக் கொண்­டார்­க­ளா­யினும் முஸ்­லிம்கள் எவ்­வ­கை­யிலும் கிறிஸ்­தவ மதத்தைத் தழு­வ­வில்லை” (Koloniei – 1965)

இவ்­வா­றான கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­களின் மத­மாற்ற சூழ்ச்­சிக்கு எவ்­வி­தத்­திலும் இரை­யா­காத இலங்­கைவாழ் முஸ்­லிம்கள், அப்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மேலைத்­தேய கல்வி முறைக்கு இடங்­கொ­டாது தமது பண்­டைய மூதா­தையர் அறி­மு­கப்­ப­டுத்­திய இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே வலு­வுற்­றி­ருந்த தமது மத­சார்­பான பள்­ளி­வா­யல்­க­ளோடு ஒட்­டிய மத்­ரஸா, மக்தப் கல்­வியில் மட்­டுமே ஊறி, அதையே தமது குழந்­தை­க­ளுக்கு கல்வி என்ற பெயரில் புகட்டி வந்­த­தையும் நாம் காணலாம்.

இவ்­வாறு இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி மக்தப், மத்­ர­ஸாக்­களை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு காணப்­பட்­டாலும், இலங்­கையின் பல பாகங்­களில் மேலை நாட்டுக் கல்­வியில் தேறிய சில முஸ்­லிம்கள் சிலரும் பர­வ­லாகக் காணப்­பட்­டார்கள் என்­பதை எமக்குக் கிடைக்கும் ஆய்­வுகள் நிரூ­பிக்­கின்­றன.

முஸ்­லிம்கள் தமது உறு­தி­யான ஈமா­னியப் பற்­று­த­லினால் மேற்­கு­லக ஆங்­கில மொழிக் கல்­வி­யையே உதா­சீனம் செய்து, தமது மக்­க­ளையும், தமது எண்­ணங்­க­ளையும் பூர­ண­மாகக் காப்­பாற்றிக் கொண்­டார்கள். ஆனாலும் எமது சமூகம் கல்­வியின் ஏணிப் படி­களில் மிகவும் பின்­தங்கி சில வேளை­களில் எமது அர­சியல் குடிசார் உரி­மை­க­ளையும் இழக்க வேண்டி ஏற்­பட்­டது வர­லா­றாகும். நவீன கல்வி அமைப்பில் ஏனைய சமூ­கங்­க­ளை­விட அதல பாதா­ளத்தில் நாம் வீற்­றி­ருந்தோம் என்­ப­தையும், அப்­பின்­ன­டைவு இன்றும் கூட எமது சம­கால ஏனைய சமூ­கத்­தி­ன­ரி­டையே சுமார் அரை நூற்­றாண்­டுக்­கப்பால் எம்மைத் தள்ளிவிட்­டது என்­ப­தையும் நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.
ஆங்­கிலக் கல்வி இன்­மையால் இலங்­கையின் சிறு­பான்மை சமூ­கங்­களின் அர­சியல் உரிமை, பிர­தி­நி­தித்­துவம் என்­ப­வற்றை நோக்காகக் கொண்டு 1879ஆம் ஆண்டில் பிரித்­தா­னிய அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்ட சட்ட சபையில் (Legislative Council) எமது பிர­தி­நி­தித்­துவம் ஆட்­சி­யா­ளர்­களால் வழங்­கப்­ப­டாது, முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வமும் சேர். பொன்­னம்­பலம் ராம­நா­த­னுக்கே வழங்­கப்­பட்­டமை எமது வர­லாற்றில் ஒரு கறுப்பு அத்­தி­யா­ய­மாகும்.

இவ்­வாறு இலங்கை முஸ்­லிம்கள் பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­திய இறு­திக்­காலம் வரை (1900 வரை) சர்­வ­தேச ரீதி­யி­லான கல்­வியில் மிகப் பின் தங்­கி­யி­ருந்­தாலும், அறிஞர் சித்­தி­லெப்பை, டி.பி.ஜாயா, ஒராபி பாஷா, வாப்­பிச்­சி­ ம­ரைக்கார், சேர். ராஸிக் பரீத், கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், டாக்டர் எம்.ஸி.எம். கலீல் போன்ற பல அறி­ஞர்­களின் முயற்­சி­யினால் கல்­வியில் குறிப்­பாக ஆங்­கிலக் கல்­வியில் படிப்­ப­டி­யாக ஏற்றம் காணத் தொடங்­கி­னார்கள்.

1884ஆம் ஆண்டில் கொழும்பில் முஸ்­லிம்­களின் கல்வி மறு­ம­லர்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முதலில் தோற்­று­விக்­கப்­பட்ட “அல்– மத்­ர­ஸதுல் கைரி­யத்துல் இஸ்­லா­மிய்யா” பாட­சா­லையும், தொடர்ந்து 1892ஆம் ஆண்டில் உரு­வாக்­கப்­பட்ட கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியும் இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி மறு­ம­லர்ச்­சிக்கு வித்­திட்­டது என்று கூறலாம். அப்­போது பிரித்­தா­னியா போன்ற ஐரோப்­பிய நாடு­களில் இலங்­கையின் சிங்­கள, தமிழ் மக்கள் கணி­ச­மான அளவு அங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு சென்று பல்­து­றை­களில் சித்தி பெற்ற போதும் இலங்கை முஸ்­லிம்­களின் இவ்­வா­றான மேலை­நாட்டு பல்­க­லைக்­க­ழக நுழைவு ஒப்­பீட்­ட­ளவில் மிகப் பின்­தங்­கியே காணப்­பட்­டது. கி.பி. 1890 – 1906 ஆண்டு காலப் பகு­தி­களில் லண்டன் கேம்­பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்­சையில் இலங்­கையில் மொத்தம் 437 மாண­வர்கள் தேறி­யி­ருந்­தார்கள். இவர்­களில் 06 பேர் மட்­டுமே (1.48%) முஸ்லிம் மாண­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. (Wimalaratne – 1986)

கிழக்கு மண்­ணி­லி­ருந்து
ஒரு மகன் – மகான்
இவ்­வா­றான முஸ்­லிம்­களின் கல்விப் பின்­ன­ணி­யி­லேயே 1939 இல் பிறந்த கிழக்கு மாகாண புதல்­வ­ரான அச்சு முஹம்­மது இஸ்ஹாக் அவர்­களின் கல்வி எழுச்­சியை நாம் நோக்க வேண்­டி­யுள்­ளது. தனது ஆரம்­பக்­கல்­வியை தம­தூரில் மத்­ரஸா மற்றும் முழுமை பெறாத பாட­சா­லை­களில் பெற்­றுக்­கொண்ட இஸ்ஹாக் தொடர்ந்து கொழும்பு ஸாஹி­ராவில் தனது உயர் கல்­வியை பெற்றுக் கொண்டார். கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியில் தனது 14 வயதில் இணைந்து கொள்­வ­தற்கு முன் கல்­மு­னையில் உள்ள “வீஸ் ஹை ஸ்கூல்” (தற்­போ­தைய Wesley High School) இலும் தனது இடை­நிலைக் கல்­வியை தொடர்ந்தார்.

இஸ்ஹாக் கொழும்பு ஸாஹி­ராவில் சேர்ந்­தி­ருந்த காலம் ஸாஹி­ராவின் வர­லாற்றில் ஒரு பொற்­காலம் என்று கூறலாம். ஸாஹி­ராவின் வர­லாற்றில் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே அக்­கால கட்­டத்தில் அறி­வியல் உலகில் புகழ் பெற்­றி­ருந்த டி.பி.ஜாயா, ஏ.எம்.ஏ.அஸீஸ், ஐ.எல்.எம்.மஸுர், எஸ்.எல்.எம். ஷாபி மரைக்கார் போன்ற தலை­சி­றந்த பலர் அதி­பர்­க­ளாகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள். இப்­பட்­டி­யலில் ஸாஹி­ராவின் பொற்­கா­ல­மென வர்­ணிக்­கப்­படும் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்­களின் காலப்­ப­குதி 1948 முதல் 1961ஆம் ஆண்டு வரை­யு­மாகும்.

ஏ.எம்.ஏ.அஸீஸ் அக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே இப்­போதும் நம்­மி­டையே வாழ்ந்து கொண்­டி­ருக்கும் அல்­லது மிக அண்­மையில் மர­ணித்த கலா­நிதி.எம்.ஏ.எம். சுக்ரி, பேரா­சி­ரியர் அமீ­ரலி, பேரா­சி­ரியர் அப்துல் காதர், எஸ்.எச்.எம்.ஜமீல், ஏ.எம்.சமீம், எம்.எம்.எம்.மஃறூப் போன்ற தலை­சி­றந்த அறி­ஞர்கள் கல்­வி ­கற்று அறி­வி­யலின் உச்­சத்­துக்கே சென்­றார்கள் என்று கூறலாம்.

1953ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியில் இணைந்து தனது கல்­வியைத் தொடர்ந்த (பேரா­சி­ரியர்) இஸ்ஹாக் அக்­கா­லப்­ப­கு­தியில் அழைக்­கப்­பட்­டு­வந்த சிரேஷ்ட பாட­சாலைச் சான்­றிதழ் பரீட்சை (Senior School Certificate Examination:SSC)க்கான வகுப்பில் சேர்ந்து தனது இடை­நிலைக் கல்­வியைத் தொடர்ந்தார். அதன் பெறு­பே­றாக தற்­போ­தைய க.பொ.த. உயர்த தர (G.C.E. Advance Level) பரீட்­சைக்கு சம­னாக அப்­போது செயல்­ப­டுத்­தப்­பட்டு வந்த அதி சிரேஷ்ட பாட­சாலை சான்­றிதழ் பரீட்சை (Higher Senior School Certificate Examination: HSC)க்கு தகுதி பெற்று தொடர்ந்து கல்­வியைப் பூர்த்தி செய்து 1957/1958 காலப்­ப­கு­தியில் இலங்­கையில் காணப்­பட்ட ஒரே ஒரு பல்­க­லைக்­க­ழ­க­மான இலங்கை பல்­க­லைக்­க­ழ­கத்தில் (University of Ceylon) இணைந்து 1962 பொறி­யியல் பீட பட்­ட­தா­ரி­யாக மிகச் சிறந்த சித்­தி­யுடன் வெளி­யானார். பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்ற அதே ஆண்­டி­லேயே (1962/1963) உதவி விரி­வு­ரை­யா­ள­ராக பத­வியைப் பெற்­றுக்­கொண்டார். 1963,1964 காலப்­ப­கு­தியில் நீர்­வள உதவி முகா­மைத்­துவ நிபு­ண­ராக (Assistant Superintent of Surveys (Water Resources)) நிய­மிக்­கப்­பட்டார்.

இலங்கை பல்­க­லைக்­க­ழக
தோற்­றத்தின் ஆரம்­பத்தில்
இலங்கை பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு 1942ஆம் ஆண்­டி­லேயே இலங்கை பல்­க­லைக்­க­ழகம் (University of Ceylon) என்ற பெய­ரி­லேயே பிரித்­தா­னிய அர­சாங்­கத்தால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இவ்­வாறு பல்­க­லைக்­க­ழகம் தோன்றி இரு­பது வரு­டங்­க­ளுக்குள் அங்கு கல்வி கற்று பொறி­யியல்/விஞ்­ஞானத் துறைப் பட்­ட­தா­ரி­யாக வெளி­யா­னதன் மூலம் இத்­துறை சார்ந்த கிழக்கு மாகாண முதல் முஸ்லிம் பட்­ட­தாரி என்ற பெரு­மையை இஸ்ஹாக் அவர்கள் பெற்றுக் கொள்­கின்றார்.

விளை­யாட்டுத் துறை­யிலும்
பேரா­சி­ரியர் இஸ்ஹாக் பல்­க­லைக்­க­ழக கல்வித் துறையில் மட்­டு­மன்றி, பாட­சாலை, பல்­க­லைக்­க­ழக பல்­து­றைசார் விளை­யாட்­டுக்­க­ளிலும் பல்­வேறு சாதனை படைத்­துள்ளார். பல்­க­லைக்­க­ழக காலத்தில் உதை­பந்­தாட்டம் (Soccer), றக்பி, கூடைப்­பந்­தாட்டம் (Volley Ball), மல்­யுத்தம் (wrestling) போன்ற விளை­யாட்­டுக்­களில் 1958–1962 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பல திற­மை­களை வெளிக்­காட்­டி­ய­துடன், அதி உயர் விரு­தான வர்ண விரு­தையும் (Colors Men (Letterman)) பெற்­றுக்­கொண்­டுள்­ளமை, கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மல்ல, இலங்கை முஸ்லிம் கல்­வி­யி­ய­லாளர் சமு­தா­யத்­துக்கே ஒரு பெருமை தரும் விட­ய­மாகும். அது­மட்­டு­மன்றி இலங்கை பல்­க­லைக்­க­ழ­கத்தின் விளை­யாட்டுக் கழக தலை­வ­ரா­கவும் செய­லா­ள­ரா­கவும் 1960–1962 காலப்­ப­கு­தியில் கட­மை­யாற்றி சாதனை படைத்­துள்ளார்.

இவ்­வாறு பாட­சாலைக் காலம், பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பல்­வேறு விளை­யாட்டுத் துறை­களில் சாதனை படைத்த ஒரே கல்­வி­ய­லா­ள­ரா­கவும் இஸ்ஹாக் திகழ்ந்­தார்கள்.

வெளி­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில்
பேராசிரியர் இஸ்ஹாக் 1962 இல் இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது முத­லா­வது விஞ்­ஞானத் துறைப் பட்­டத்தை பெற்றவுட­னேயே பல வெளி­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் புல­மைப்­ப­ரிசில் மூல­மாக தனது பட்­டப்பின் படிப்புக் கல்­வியை தொடரும் வாய்ப்பை மிக இல­கு­வாகப் பெற்­றுக்­கொண்டார். உதா­ர­ண­மாக 1965ஆம் ஆண்டில் ஒல்­லாந்து (Holland) நாட்டில் புல­மைப்­ப­ரிசில் மூலம் பொறி­யியல் துறையில் டிப்­ளோமா கல்­வியைப் பூர்த்தி செய்தார். அதைத் தொடர்ந்து அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் புல­மைப்­ப­ரிசில் மூலம் 1971ஆம் ஆண்டில் பட்­டப்பின் படிப்பு விஞ்­ஞான பட்­டத்­தையும் (M.S.), 1975 ஆம் ஆண்டில் அமெ­ரிக்­காவின் மற்­றொரு பல்­க­லைக்­க­ழ­க­மான “வின்­கொன்ஸின்” பல்­க­லைக்­க­ழ­கத்தில் (University of Winconsin) தனது கலா­நிதிப் பட்­டத்­தையும் (PhD) பெற்றுக் கொண்டார். இவ­ரது பட்­டப்­ப­டிப்­புகள் யாவும் குடிசார் பொறி­யியல் துறை சார்ந்­த­தா­கவும் (Civil Engineering) அதில் விஷேட ஆய்வுக் கரு­வாக “நீர்­வளம்– தொலை உணர்தல்” (Water Resources, Remote Sensing) என்­பது பற்றி அமைந்­தி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும். அது­மட்­டு­மன்றி இவர் ஓர் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பட்­டய குடிசார் பொறி­யி­ய­லாளர் (Chartered Civil Engineer of the UK) ஆகவும் தனது பதவி நிலையை உயர்த்திக் கொண்டார். இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அக்­காலப் பிரிவில் இவ்­வா­றான தொழில்சார் தகை­மை­களை யாரும் பெற்­றி­ருக்­க­வில்லை என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இவை மட்­டு­மன்றி, அமெ­ரிக்க குடிசார் பொறி­யி­ய­லா­ளர்கள் சங்­கத்தின் (American Society & Civil engineering) கெள­ரவ உறுப்­பி­ன­ரா­கவும், லண்டன் குடிசார் பொறி­யி­ய­லா­ளர்கள் நிறு­வனம், சர்­வ­தேச நீர்­வள நிறு­வனம், அமெ­ரிக்க நீர்­வள நிறு­வனம் போன்­ற­வற்­றிலும் அங்­கத்­துவம் பெற்­றி­ருந்தார்.

இவர் கல்வி கற்ற அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­க­மான வின்­கொன்ஸின் பல்­க­லைக்­க­ழகம் உல­கத்­தரம் வாய்ந்­த­தொரு பல்­க­லைக்­க­ழ­க­மாக இன்­று­வரை திகழ்­வ­துடன் உலகின் முதன்­மை­யான நோபல் பரிசு பெற்ற சுமார் இரு­பது விஞ்­ஞா­னிகள் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்து பட்டம் பெற்­ற­வர்­க­ளாகும்.

அதேபோல் இவர் கல்வி கற்ற அமெ­ரிக்க வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்து பட்டம் பெற்ற எட்டு விஞ்­ஞா­னிகள் இன்­று­வரை நோபல் பரிசு பெற்­றுள்­ளனர். 2004 ஆம் ஆண்டில் இள­வ­ரசர் சுல்தான் சர்­வ­தேச ஆய்வுக் கல்­விக்கும் இவர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டமை இவரின் சர்­வ­தேச ரீதி­யி­லான அங்­கீ­கா­ரத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் துறையில் உதவி விரி­வு­ரை­யா­ள­ராக 1971–1974 காலப் பகு­தியில் இணைந்து கொண்ட பேரா­சி­ரியர் இஸ்ஹாக் 1974 – 1975 காலப்­ப­கு­தியில் மிச்­சிகன் அரச பல்­க­லைக்­க­ழ­கத்தில் (Michigan State University) உதவி பேரா­சி­ரி­ய­ரா­கவும் கட­மை­யாற்றி 1975ஆம் ஆண்­ட­ளவில் பதவி உயர்வு பெற்று சவூதி அரே­பிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் கட­மை­யாற்றத் தொடங்­கினார். 1975ஆம் ஆண்டில் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள மன்னர் பஹ்த் பெற்­றோ­லிய கனி­ம­வள பல்­க­லைக்­க­ழ­கத்தில் குடிசார் பொறி­யியல் துறையில் உதவி பேரா­சி­ரி­ய­ராக, துணைப் பேரா­சி­ரி­ய­ராக கட­மை­யாற்றி, 1999 ஆம் ஆண்டில் ஒரு முழுமை பெற்ற பேரா­சி­ரி­ய­ரா­கவும் (Merit Professor) பல்­வேறு பதவி உயர்­வு­களை தொடர்ந்து பெற்றார்.

இவர் கட­மை­யாற்­றிய அமெ­ரிக்கா, சவூதி அரே­பிய மல்­க­லைக்­க­ழ­கங்­களில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் பட்டப்பின் படிப்பு, கலாநிதி கற்கை நெறிகளில் வழிகாட்டியாகவும் மேற்பார்வையாளராகவும் (Supervisor) கடமையாற்றி அம்மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பல வழிகளில் அத்திவாரமிட்டுள்ளார். அதுமட்டுமன்றி உலகத்தரம் வாய்ந்த பல்வேறு சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளில் நூற்றுக்கணக்கான துறைசார் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

தனது பல்கலைக்கழக பணிகளை முடித்துக்கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பிய பேராசிரியர் இஸ்ஹாக் 2007ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக (Chancellor) பலமுறை இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். நிந்தவூரில் ஸகாத் நிதியத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியாகவும் பேராசிரியர் இஸ்ஹாக் விளங்கினார்கள். சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 30 வருடங்கள் பேராசிரியராக கடமையாற்றிய பெருமை அவருக்கே உரியதாகும். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சு, சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் அமைச்சுகளிலும் பல வருடங்கள் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையின் தலைசிறந்த மத்ரஸாக்களில் ஒன்றான கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி (அட்டாளைச்சேனை) நிர்வாகத் தலைவராக இருபது வருடங்களுக்கு மேல் பணியாற்றி தனது ஈருலக வெற்றிக்கும் இறை அருளை பெற்றுக்கொண்ட பேராசிரியர் இஸ்ஹாக் தனது 85 ஆவது வயதில் 25.12.2024 இல் புனித மக்காவில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்) அன்னாரின் மறுமை வெற்றிக்கு துஆ செய்வோமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.