சென்ற 2025.04.17இல் வெளிவந்த விடிவெள்ளி வார இதழில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் ஐந்தாம் பந்தியிலும், இறுதிப் பந்தியிலும் மாவட்ட அல்லது பிரதேச கிளைகளில் பதவி தாங்குபவர்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டு வேட்பாளர்களாக செயற்படுகின்றமை ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கும் பாதகமாக அமையும் என நிறைவேற்றுக்குழுவின் அவசர கூட்டத்தின்போது கலந்து கொண்ட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும். இதற்காக ஜம்இய்யாவை எவ்வளவு தூரம் பாராட்டினாலும் தகும்.
அதேவேளை இந்த விதி மாவட்ட அல்லது பிரதேச கிளைகளில் அங்கத்தவர்களாக பதவி வகிக்கிறவர்களாக இருப்பவர்களுக்கு மட்டும்தானா ஏற்புடையது? என்ற ஒரு சந்தேகத்தை எம்போன்றோருக்கு எழுப்பிக் கொண்டிருக்கிறது.
ஏனெனில் இன்றுவரை முஸ்லிம் அரசியல் கட்சியொன்றில் உயர்பீட உறுப்பினராக, அக்கட்சியின் சூறா சபைத்தலைவராக பதவி வகிப்பவர்கள் சிலர் ஜம்இய்யாவின் மத்திய குழு உறுப்பினராக, நிறைவேற்றுக்குழு உறுப்பினராக, பொருளாளராக, உப தலைவராக செயற்படுவது மத்திய குழு உறுப்பினர்களுக்கு அல்லது பதவி வகிப்பவர்களுக்கு தெரியாதா? அல்லது மூடி மறைக்கின்றார்களா? அல்லது மத்திய குழுவிற்கு இந்தத் தீர்மானம் பொருந்தாதா?
மாவட்ட பிரதேச கிளைகளில் பதவி தாங்குனர்களுக்கு ஹராமாக்கப்பட்ட ஒரு செயல் மத்திய குழுவில் பதவி தாங்குனர்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளதா?
சென்ற 20 வருடங்களுக்கு மேல் மத்திய குழுவில் அங்கம் வகிப்பவர்கள் இப்பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்களே! இவர்களுக்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காத ஜம்இய்யாவுக்கு இப்போது பிரதேச மாவட்ட கிளைகளில் பதவி தாங்குனர்களாக இருப்பது மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்ததா? இன்றைய தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் பதவியேற்ற காலம் முதல் இச்செயல் நடைபெற்று வருகிறதே! இதுகூட அவரது கவனத்தை ஈர்க்கவில்லையா? அல்லது எப்போதும் போல ஏனோதானோவென்று அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணுகிறாரா? அல்லது இது சம்மந்தமாகப் பேசுபவர்கள் சோடா போத்தல் கேஸ் மாதிரி கொதித்தெழுவார்கள், பின்னர் அமைதியடைந்து விடுவார்கள் என்ற எண்ணமா? சகலரையும் சமாளிப்பது போல் அல்லாஹ்விடமும் இதற்காக பதில் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள் இந்த கேள்வியை தலைவரிடம் கேட்பார்களா?
தீர்மானங்கள் எடுக்கும்போது அது அனைவருக்கும் நீதியானதாக அமைதல் வேண்டும். மத்திய குழுவுக்கு ஒரு சட்டம் கிளைகளுக்கு ஒரு சட்டம் போடுவது எந்தவகையில் நியாயம்?
– மெளலவி அகமட்
- Vidivelli