ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் : விசாரணையின் போது உரிய முறைமைகளை பின்பற்றவில்லை
குறுக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்ட சி.ஐ.டி. அதிகாரி
எப்.அய்னா
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகளின் போது, பிரதான சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாநந்த ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை ஏற்றுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம்கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த வாரம் (மே 2 ஆம் திகதி) நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சகீல்கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் கனிஷ்ட சட்டத்தரணி தலைமையில் குழுவினர் ஆஜராகினர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆகியோர் ஆஜராகினர்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற்பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக்குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசின் பிரதான சாட்சியாளரான மலிக் எனும் சாட்சியாளரின் சாட்சியத்தை கடந்த 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவு செய்ததாக கூறப்படும் சி.ஐ.டி. பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாநந்தவிடம் ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ரதிஸ்ஸ குறுக்கு கேள்வி எழுப்பினார்.
இதன்போது முதல் சாட்சியாளர் மலிக்கின் சாட்சியத்துடன் பரஸ்பர வேறுபாடு கொண்ட சாட்சியத்தை தயாநந்த மன்றில் வெளிப்படுத்தினார்.
குறிப்பாக 2021 ஏப்ரல் 21ஆம் திகதி வாக்கு மூலம் பதிவு செய்ய மலிக்கை சி.ஐ.டி.க்கு அழைத்து வந்த நேரம் முதல் அனைத்தும், மலிக்கின் சாட்சியத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. அத்துடன் இவ்வாறான விசாரணைகளின் போது பொலிஸார் அவர்கள் செல்லும் இடம், அழைத்து வரும் நபர்கள் உள்ளிட்டவை தொடர்பில் பதிவுப் புத்தகத்தில் பதிவிட வேண்டும் என நிர்ப்பந்தம் உள்ள நிலையில், அவ்வாறான எவையும் பதிவிடப்படவில்லை என்பது உறுதியானது.
இதனை விட, முதல் சாட்சியாளருக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படத்தை, பொலிஸ் திணைக்கள கட்டளைகளுக்கு, மாற்றமாக அதனை காட்டியுள்ளமை தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாநந்த ஒப்புக்கொன்டார்.
இந்த நிலையில் அவரிடம் 2ஆம் பிரதிவாதி சார்பிலான குறுக்கு விசாரணைகளுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் மே 16 வரை ஒத்தி வைக்கப்பட்டது. – Vidivelli