உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலில் 43.26 சதவீத வாக்குகளையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சரிவை சந்தித்துள்ளது.
அதேவேளை, 339 உள்ளூராட்சி மன்றங்களில் 3927 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள போதிலும் பல சபைகளில் ஆட்சியினை நிறுவத் தேவையான ஆசனங்களை பெறத் தவறியுள்ளது. இதனால் ஏனைய கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கட்சிகளோடு கூட்டுச் சேரும் எண்ணம் இல்லை என்றும் சுயாதீன குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது பற்றிச் சிந்திக்கிறோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று தெரிவித்திருக்கிறார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவிலான வாக்கினை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வழங்கியிருந்தனர். இக்கட்சி மீதும் அதன் தலைமையான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதும் கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாக அதிக வாக்குகளை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வழங்கினர்.
எனினும், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கவோ அல்லது கணிசமான வாக்குகளைப் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மிகப் பெரிய முஸ்லிம் கட்சி தேசிய மக்கள் சக்தி என்றும், மிகப் பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்தி என்றும் அடிக்கடி அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையிலேயே வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்தளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அந்தக் கட்சி விரிவான ஆய்வொன்றினை மேற்கொண்டு சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வதற்கான வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளது. இல்லையேல் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இதைவிடப் பாரிய சவால்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் சந்திக்க வேண்டி வரும் என்பதையே கள நிலைவரங்கள் உணர்த்துகின்றன.
கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அதிக வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்தனர். தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரசாரங்களையும் மீறியே அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவளித்திருந்தனர்.
எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இக்கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மாற்றமாக கடந்த காலங்களில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் உள்ளீர்க்கப்படாமை, ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினருக்கு இடமில்லை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்றிறனின்மை, பயங்கரவாத தடைச்சத்தை தொடர்ந்தும் பயன்படுத்துதல் போன்ற பல காரணங்கள் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அக்கட்சிக்கு அதிக வாக்குகளை வழங்கவில்லை.
இதன் ஊடாக தேசிய மக்கள் சக்திக்கு செய்தியொன்றினை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் சொல்லியுள்ளனர். அதாவது, எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை அரவணைத்துக்கொண்டு தான் இந்த அரசாங்கம் பயணிக்க வேண்டும் என்பதே அந்த செய்தி.
இந்தத் தேர்தலின் ஊடாக மக்கள் சொல்கின்ற செய்தியினை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டிய நிலையிலுள்ளது.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு மாநகர சபை, புத்தளம் மாநகர சபை, காலி மாநகர சபை, கொலன்னாவ நகர சபை மற்றும் பேருவளை பிரதேச சபை போன்ற பல உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
இதற்கு மேலதிமாக சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு பல முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வழங்கியுள்ள செய்தியினை கொஞ்சம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலைக்கு தேசிய மக்கள் சக்தி தள்ளப்பட்டுள்ளது.அவ்வா றில்லாவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.- Vidivelli