பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா
26 பேர் கொல்லப்பட்டதாகவும் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறுகிறது பாகிஸ்தான்
‘பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக’ இந்தியா நேற்று நள்ளிரவில் அறிவித்தது.
ஆனால், இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை, இந்திய அரசு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பொதுமக்களில் யாரும் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை என கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா சிந்து நதி ஒப்பந்தம் இரத்து உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மறுபுறம் பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம் என்றும் 9 இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன என்றும் இந்தியா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.40 மணியளவில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் கட்டுப்பாட்டுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
முசாபராபாத், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட கோட்லி மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் ஆகிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
அஹமத்பூர் ஷர்கியா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹாவல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். “இந்தப் பகுதியில் உள்ள சுபன் மசூதி இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, சுற்றியுள்ள மக்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது” என பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்தத் தாக்குதல்களில் மூன்று வயது பெண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முரிட்கே என்கிற நகரம். இது லாஹுரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
“முரிட்கே மாவட்டத்தில் உள்ள அல்-குரா பள்ளிவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நான்கு இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்து, ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரைக் காணவில்லை” என இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் தலைநகரமான இங்கு பல முக்கிய அலுவலகங்களும் அரசாங்க கட்டடங்களும் உள்ளன.
ஷுவாய் நல்லா என்கிற இடத்தில் அமைந்துள்ள பிலால் பள்ளிவாசல் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அமைந்துள்ள கோட்லி இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது.
கோட்லியில் உள்ள பள்ளிவாசல் மீது நடைபெற்ற தாக்குதலில், 16 வயது பெண் ஒருவரும் 18 வயது இளைஞரும் உயிரிழந்தாகவும், இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷகர்கர் என்பது பஞ்சாப் மாகாணத்தின் நரோபல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஷகர்கர் மீது வீசப்பட்ட இரண்டு குண்டுகளால் ஒரு மருந்தகம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், ஜியோ தொலைக்காட்சியிடம் பேசும்போது, இந்தியா பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்கியதாகவும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக இந்தியா கூறுவது தவறு என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர் இந்தியாவின் இந்தத் தாக்குதலை “போர்ச் செயல்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். மொத்தம் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர், அவற்றில் மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் தமது இராணுவம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார். மேலும் இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார்.- Vidivelli