எம்.ஐ.அப்துல் நஸார்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்த சில மணி நேரங்களின் பின்னர், இஸ்ரேலில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன.
இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, காஸாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேலிய அமைச்சரவை காஸாவை முழுமையாக கைப்பற்றி, காலவரையறையின்றி பாலஸ்தீன பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்ததாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அங்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் பெருமளவில் விரிவுபடுத்தப்படும்; மேலும் கடுமையான சர்வதேச விமர்சனங்களும் உருவாகும்.
‘இந்த யுத்தத்தைத் தொடர எந்த காரணமும் இல்லை. நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்தோம்? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்மால் வெற்றிபெற முடியவில்லை, தொடர்ந்தும் அதைச் செய்ய முடியாது,’ என்று போராட்டக்காரர்களில் ஒருவரான மிரி வுல்ப் தெரிவித்தார்.
‘இஸ்ரேலிய அரசாங்கம் காஸா பகுதியைத் தக்கவைத்துக்கொண்டு அங்கு ஒரு புதிய குடியேற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது. படையினர் அங்கேயே இருப்பார்கள், வீரர்கள் கொல்லப்படுவார்கள், பணயக்கைதிகள் கறுப்புநிற சாக்குகளில் திரும்பி வருவார்கள். அதுதான் நடக்கும்,’ என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹமாஸைத் தோற்கடித்து பணயக்கைதிகளை விடுவிப்பது என்ற இஸ்ரேலின் போர் நோக்கங்களை அடைய உதவும் என அதிகாரிகள் தெரிவித்த புதிய திட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான பலஸ்தீனர்களை தெற்கு காஸாவிற்கு நகர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள் 2023 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்றபோது போர் தொடங்கியது, கொல்லப்படடவர்களுள் பெரும்பாலானோர் பொதுமக்களாவார்.
ஹமாஸ் போராளிகள் 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர், தற்போது 59 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. – Vidivelli