வினைத்திறனான ஆட்சியை அனைத்து கட்சிகளும் உறுதிப்படுத்த வேண்டும்

0 55

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த சபைகளில் ஆட்சியமைப்பது பற்றிய கதையாடல்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தேசிய மக்கள் சக்தி 250க்கும் மேற்பட்ட சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் எல்லா சபைகளிலும் அக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாதுள்ள நிலையில் சுயாதீனக் குழுக்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கத் தயார் என அக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும் எதிர்க் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையைப் பெற முடியாது போன சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் தத்தமது பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மைக் கட்சிகளுக்கே இம்முறை வாக்களித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியானது தாம் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி எனப் பிரசாரங்களில் குறிப்பிட்ட போதிலும் சிறுபான்மை மக்கள் மத்தியில் இன்னமும் நம்பிக்கையீனம் நிலவுகிறது என்பதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. தேசிய மக்கள் சக்தி இம்முறை பொருத்தமான வேட்பாளர்களை நியமிக்கவில்லை என்பதும் அக் கட்சியின் உள்ளூர் கட்டமைப்புகள் பலவீனமாகவிருப்பதும் வடக்கு கிழக்கில் போதிய ஆதரவைப் பெற முடியாமைக்கான காரணங்கள் என்பதையும் அக் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எது எப்படியிருப்பினும் அடுத்த 4 வருடங்களுக்கு 339 சபைகளினதும் ஆட்சி தங்குதடையின்றி முன்கொண்டு செல்லப்பட வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியது அந்தந்த சபைகளில் ஆட்சியமைக்கவுள்ள கட்சிகளின் கடப்பாடாகும். அடுத்து வரும் நாட்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் பெரும்பாலான சபைகளில் பாரிய குளறுபடிகள் தோற்றம் பெறும் என எதிர்பார்க்கலாம். பதவிச் சண்டைகளை ஒருபுறம் வைத்துவிட்டு பின்தங்கியுள்ள உள்ளூராட்சி மன்றங்களையும் அவற்றின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றுவதற்கு சகல தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மோசடிகள் பாரியளவு புரையோடிப் போயிருந்தன. அவற்றுக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய அரசியலில் ஊழலற்ற ஆட்சியை வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவது போல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கக் கூடாது. இது விடயத்தில் அரசாங்கம் சிறந்ததொரு கண்காணிப்பு பொறிமுறையை அமுல்படுத்த வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உட்கட்டமைப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2018 இன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாததால் கடந்த சில வருடங்களாக இம்மன்றங்களின் நிர்வாகங்கள் சரி வர முன்னெடுக்கப்படவில்லை. பல பிரதேசங்களில் வீதிகள் முறையாக நிர்மாணிக்கப்படாததால் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். உள்ளூராட்சி மன்றங்கள் மக்களிடமிருந்து வரிகளை அறவிடுகின்ற போதிலும் அவற்றினால் மக்களுக்கு உரிய நன்மைகள் சென்றடைவதில்லை.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் உறுப்பினர்களுமே இப் பதவிகளைக் கொண்டு நன்மைகளை அனுபவித்தனர். அபிவிருத்திப் பணிகளில் தமக்கும் இத்தனை வீதம் வேண்டும் என்று பகிரங்கமாகவே கேட்டுப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறான நிலைமைகளுக்கு அமையப் பெறவுள்ள புதிய சபைகளில் இடமளிக்க முடியாது. மாறாக மக்கள் நேயமிக்க பொது நலனை மாத்திரமே முன்னிறுத்தி வினைத்திறனான ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டியது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமன்றி ஆட்சியமைக்கவுள்ள அனைத்து கட்சிகளினதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.