எதிர்வருகின்ற மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளன. இதனால், கட்சிகளினாலும் சுயேட்சைக் குழுக்களினாலும் தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், வாக்காளர்களாகிய பொதுமக்கள் இத்தேர்தலில் அதிக ஆர்வம் செலுத்தாமையினை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த ஒன்பது மாத காலப் பகுதிக்குள் மூன்றாவது தேர்தலை இலங்கை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறு இதற்கு முன்னர் குறுகிய காலப்பகுதிக்கு தொடர்ச்சியாக இலங்கை மக்கள் மூன்று தேர்தல்களை எதிர்நோக்கவில்லை. புது வருட கொண்டாட்டங்களில் மக்கள் திளைத்திருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆர்வமின்றி காணப்படுகின்றனர்.
எனினும், இந்த தேர்தலில் மக்களின் ஆர்வத்தினை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை பிரசார மேடைகளில் கேட்கக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆட்சியாளர்களினால் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களின் போது வழஙக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இந்தத் தேர்தலில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள் என்ற கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து என்ன பயன் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆளும் தரப்புக்கு வாய்ப்பாகவும் மாறியுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு கூட கிடைக்காத அதிகாரங்கள் உள்ளூராட்சி மன்றத்தின் தலைவரொருவருக்கு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளூராட்சி மன்றத்தின் நிதியினை நேரடியாக கையாளுதல், சபைக்கு தேவையான நிதியினை திரட்டுதல் போன்ற முக்கிய பல அதிகாரங்கள் உள்ளூராட்சி மன்றத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பல அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது அதன் வரம்பிற்குட்பட்ட வாக்குறுதிகளே வழங்கப்பட வேண்டும்.
எனினும், தற்கால பிரசார மேடைகளில் தேசிய ரீதியான வாக்குறுதிகள் தேர்தல் மேடைகளில் வழங்கப்படுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. அதேவேளை, மக்களை கவர்வதற்காக சில அரசியல் தலைவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற உரைகள் அவர்களுடைய எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குகின்றன.
எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அரசியல் கலாசாரத்தினை மாற்ற முடியாது என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. அதிலும் குறிப்பாக தேர்தல் பிரசார மேடைகளில் பொய் மூட்டைகளை அள்ளி வீசும் கலாசாரம் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். வாக்காளர்களை ஏமாற்றும் அரசியலை இன்னும் தொடராமல் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.
அதேவேளை, தேர்தல் பிரசார மேடைகளில் பொய் மூட்டைகளை அள்ளி வீசுகின்ற அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும். தத்தமது பிரதேசங்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கவுள்ள இந்தக் குட்டித் தேர்தலில் ஊழலற்ற, பொய் வாக்குறுதிகளை வழங்காத, அற்ப சலுகைகளுக்காக மக்களின் வாக்குகளை விலை பேசாத, பொருத்தமான நபர்களை இனங்கண்டு வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதே சிறந்த தெரிவாக அமையும்.- Vidivelli