எப்.அய்னா
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இனவாதத்தை வென்ற 9 ‘ஏ’– ஷாபியின் மகள் ஸைனப் சொல்லும் செய்தி என்ன?’ எனும் தலைப்பில் விடிவெள்ளி ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது.
அக்கட்டுரையின் முதல் பந்தி ‘2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை -பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது. பரீட்சை பெறுபேறுகள் வெளியானது முதல் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வாறான செய்திகளில் மிக்க கவனத்தை ஈர்த்ததும், உணர்வுபூர்வமான பல உண்மைகளை போட்டுடைக்கும் வண்ணமும் அமைந்த விடயம், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனப் பெற்ற 9 ‘ஏ ’ சித்திகள் குறித்த செய்திகளாகும்.’ என ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி, இனவாதிகளுக்கு தகுந்த பதிலடியாக, வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனப் கடந்த 2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் தோற்றி 3 ஏ சித்திகளைப் பெற்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளமை அதனை ஒத்த ஒரு கட்டுரையை வரைய மீண்டும் அவசியத்தை ஏற்படுத்தியது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 177 588 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 329 704 விண்ணப்பதாரிகளில் 274 361 பேர் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
9457 பேர் (3.45 சதவீதமானோர்) சகல பாடங்களில் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 29 244 பேர் (10.66 சதவீதமானோர்) எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை. வடமேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். இம்மாகாணத்தில் 66.36 சதவீதமானோரும், வட மாகாணத்தில் 65.95 சதவீதமானோரும், மேல் மாகாணத்தில் 65.89 சதவீதமானோரும், சப்ரகமுவ மாகாணத்தில் 65.87 சதவீதமானோரும், தென் மாகாணத்தில் 65.74 சதவீதமானோரும் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
உயிரியல் அமைப்பு தொழிநுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். அதற்கமைய இப்பிரிவில் 74.37 சதவீதமானோரும், வணிகப்பிரிவில் 69.61 சதவீதமானோரும், பொறியியல் பிரிவில் 68.11 சதவீதமானோரும், கலைப்பிரிவில் 65.21 சதவீதமானோரும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 63.02 சதவீதமானோரும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 58.82 சதவீதமானோரும் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த அடிப்படையில், 9457 பேர் 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றிருந்தாலும் உயர்தர பெறுபேறுகளின் பின்னர் சமூக வலைத் தளங்களிலும், சமூக மட்டத்திலும் அதிகமாக பேசப்பட்ட 3 ஏ சித்தி வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனபின் சித்தியாகும்.
அவர் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3 ‘ஏ’ சித்திகளைப் பெற்று, மாவட்ட அளவில் 12 ஆவது இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் தக்க வைத்துக்கொண்டு தனது மருத்துவ கனவை நனவாக்க அடித்தளம் இட்டுள்ளார்.
அவர் தேசிய மட்டத்தில் அல்லது மாவட்ட மட்டத்தில் பெற்ற இடத்தைவிட, 2019 ஆம் ஆண்டின் பின்னர் ஸைனபின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களை, சவால்களை தாண்டி அவர் பெற்ற வெற்றியே அனைவரையும் பேச வைத்துள்ளது. பல இனவாதிகளின் வாயை மூடவைத்துள்ளது.
பாத்திமா ஸைனப் 2022 ஆம் ஆண்டு பெற்ற 9 ஏ சித்திகள், தற்போது பெற்றுள்ள 3 ஏ சித்திகள் சாதாரணமானதல்ல. இனவாதம், மதவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, வதந்திகள், போலிகள், ஏமாற்றங்கள், அதர்மம் என ஏராளமான சவால்களை வெற்றிகொண்டு பெறப்பட்ட பெறுபேறுகள் அவை. எனவே தான் ஸைனபின் பெறுபேறு விஷேடமானது.
பாத்திமா ஸைனப் குருணாகல் – திருக் குடும்ப கன்னியர் மடம் பாடசாலையில் தனது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர். பின்னர் குருணாகல் மாவட்டத்திலேயே மிகப் பிரபலமான மலியதேவ மகளிர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகும் போதும் அவர் அப்பாடசாலையிலேயே தரம் 9 இல் கல்வி பயின்றுகொண்டிருந்தார். அப்போதுதான் அவரது வாழ்வில் என்றும் கண்டிராத பல சவால்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.
ஸைனபின் தந்தை வைத்தியர் ஷாபி மீது இனவாத சக்திகள் முன்வைத்த போலியான குற்றச்சாட்டுக்கள், அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டமை பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்து நாம் அறிவோம். எனினும் டாக்டர் ஷாபியின் குடும்பத்தினர் குறிப்பாக அவரது பிள்ளைகள் கூட இந்த இனவாதத்தினால் குறிவைக்கப்பட்டார்கள்.
இந் நிலையில், தனது தந்தையின் கைதின் பின்னர் கூட பாத்திமா ஸைனப், குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியிலேயே கற்றுக்கொண்டிருந்தார். இதன்போது தந்தை ஷாபி சிஹாப்தீன் மீது முன் வைத்த அபாண்டத்தை விஞ்சிய குற்றச்சாட்டை, ஸைனப் மீது எந்த அடிப்படையுமின்றி சிலர் பரப்பினர்.
ஒரு சிறுமி (ஸைனப்) தனது சக தோழிக்கு உதவிக்காக வழங்கிய, செனிடரி நப்கின் ஒன்றினை மையப்படுத்தி மிக மோசமாக, கீழ்த்தரமாக அடிப்படையின்றி சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கருத்தடையை உண்டாக்க வல்ல செனிடரி நப்கின்கள் பகிரப்பட்டதாக அச் செய்திகள் ஊடாக கூறப்பட்டன. இது ஸைனபின் கற்றல் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது. அவரது வாழ்வின் மிகப் பெரும் சவாலாக அது மாறியது.
இது தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாத்திமா ஸைனப் விடிவெள்ளிக்கு தெரிவித்த கருத்துக்களின் போது குறிப்பிட்ட விடயங்கள் இன்றும் ஞாபகப்படுத்தவல்லது.
” ஆம்… நான் 9 ஆம் தரத்தில் கற்கும் போது, பாடசாலை மாணவிகளிடையே ‘ செனிடரி நப்கின்களை ‘ பகிர்ந்ததாக கதை ஒன்று பரப்பட்டது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. அது தொடர்பில் நான் வெட்கமடைகின்றேன். அதனை எழுதியவர்கள் தொடர்பில் நான் பரிதாபப்படுகின்றேன். அந்தளவு தூரம் கீழ்த் தரமாக ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியுமா?
எனக்கு எந்த கோபங்களும் இல்லை. அந்த குற்றச்சாட்டுக்களால் நான் அன்று மிக வேதனை அடைந்தேன். இன்றும் அது தொடர்பில் ஏதோ ஒரு ஏமாற்றத்தை உணர்கின்றேன். இவ்வளவு கீழ்த்தரமாக குற்றச்சாட்டு முன் வைத்தாலும் எனக்கு யாருடனும் கோபம் இல்லை. அன்று சமூக மயப்படுத்தப்பட்டிருந்த விஷம் காரணமாகவே மக்களின் மனங்கள் இவ்வாறு கீழ்த்தரமான விடயங்களை உள்வாங்கின. அதனாலேயே இனவாதம் எனும் ஆயுதம் கொண்டு, என்னை, எனது தந்தையை, எனது குடும்பத்தினரை தாக்குவதற்கான தேவை ஏற்பட்டது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்த முன்னர், அவ்வாறானதொரு நிலைமைக்கு தான் ஆளாக்கப்பட்டால் எனது மன நிலை எப்படி இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்தித்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் சாதாரண தர பரீட்சை நெருங்கும் வேளையில், சிங்கள மொழியில் கற்ற ஸைனப் கல்முனைக்கு கட்டாய இடம் பெயர்வை சந்தித்து தமிழ் மொழி மூலம் கற்கலானார். பின்னர் மீண்டும் கண்டிக்கு இடம்பெயர்ந்து அங்கு சிங்கள மொழியில் கற்று சாதாரண தர பரீட்சையை வெற்றிகொண்டார். பின்னர் ஸைனபுக்கு உயர் தரத்தை ஆங்கில மொழி மூலம் தொடர்வதற்கான தேவை இருந்த நிலையில், கடந்த கால அனுபவங்கள், ஏனைய ஆலோசனைகளுக்கு அமைய அவர் தனிப்பட்ட ரீதியிலேயே உயர் தர பரீட்சைக்கு தோற்றினார். வீட்டில் இருந்து இணையம் ஊடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பாத்திமா ஸைனப், தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றி மிகச் சிறந்த பதிலடியை அவர் வழங்கியுள்ளார்.
இவ்வாறான நேரத்தில், போலிக் குற்றச்சாட்டுக்களை உருவாக்கிய, ஒரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய, எதுவும் அறியாத பிள்ளைகளைக் கூட விட்டு வைக்காத இனவாதிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் ஸைனப் சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சையில் வெற்றி பெற்ற பின்னர் அதனை நாம் கொண்டாடுகின்றோம். எனினும் அவ்வெற்றியின் பின்னால் உள்ள வலிகள், வடுக்கள் என்றும் ஆறாதவை. வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் குற்றச்சாட்டுக்களில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டிருக்கலாம். அவரது மகள் ஸைனப் பரீட்சையை வெற்றிகொண்டு சமூகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம்.
அதன் பின்னால் இருந்த சவால்கள், கஷ்டங்கள் ஏராளமாக இருந்தாலும், இந்த போலி குற்றச்சாட்டுக்களை உருவாக்கி, இனவாதத்தை விதைத்தவர்கள் எந்த சிரமமும் இன்றி தமது பதவி நிலைகளிலும், ஏனைய சலுகைகளைப் பெற்றுக்கொள்வதிலும் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்த போக்கு மிக ஆபத்தானது.
வைத்தியர் ஷாபி விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு ஒரு முறைப்பாட்டை அளித்திருந்தார். தனக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டை முன் வைத்த அப்போதைய குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான கித்சிறி ஜயலத், அப்போதைய குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான மஹிந்த திஸாநாயக்க போன்றோருக்கு எதிரான அந்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை விசாரணை கூட ஆரம்பிக்கப்படவில்லை.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இந்த முறைப்பாடு தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் ஸைனபின் வெற்றியை கொண்டாடும் நாம், வைத்தியர் ஷாபிக்கும் அவரது குடும்பத்தாரினதும் நிம்மதியான வாழ்வை குட்டிச் சுவராக்கிய, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேள்விக்கு உட்படுத்திய இனவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இனவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாகவே, பல சவால்களை கடந்து தனது கல்வி நடவடிக்கையை ஆயுதமாக கொண்டு வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள வைத்தியர் ஷாபியின் மகள் பாத்திமா ஸைனபுக்கான ஒரு பரிசிலை வழங்க முடியும். இதுவே என்னைக் கேட்டால் நான் சொல்லும் பதில். அதற்காக இந்த சமூகமும், அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- Vidivelli