கவன ஈர்ப்பு பொருளாதாரம்
(Attention Economy)
சகல இலத்திரனியல் கருவிகளும் அவற்றுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிற சமூக வலைப்பின்னல் தளங்களும் கவன ஈர்ப்புப் பொருளாதாரம் என்கிற ஒரு விடயத்தை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இது நாம் தொழில்நுட்பத்தில் செலவிடுகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஏதோ ஒரு சர்வதேச நிறுவனம் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. முகப்புத்தகம், யூடியுப் (Youtube) அல்லது வேறொரு சமுக ஊடகத் தளத்தில் தென்படுகின்ற வீடியோ உள்ளடக்கத்தை நாம் பார்வையிடுகின்ற பொழுது அதற்காக நாம் கட்டணம் செலுத்துவதில்லை. சமூக ஊடகத் தளங்கள் இலவசமாகவும் இலகுவாகவும் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. ஒருவரது கருத்துக்கு லைக் செய்யலாம். பின்னூட்டம் வழங்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பதிவேற்றலாம். நமது உள்ளடக்கங்கள் தொடர்பான கருத்துக்களை சேகரிக்கலாம். சக நண்பர்கள் நமது உள்ளடக்கங்களை பார்வையிடும்படி டேக் (Tag) செய்யலாம். இவை யாவற்றுக்கும் நாம் எந்தவிதமான கட்டணங்களையும் செலுத்துவதில்லை. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. ஏன் இவை இலகுவாக அல்லது இலவசமாக கிடைக்க வேண்டும்?
நம்மைக் கவரக்கூடிய எண்ணிலடங்காத கவர்ச்சி அம்சங்களை சமூக ஊடகங்கள் அள்ளி வழங்குவது நமது கவனத்தை ஈர்த்துக் கொள்ள. நாம் செலவிடும் நேரத்தையும் நமது அவதானத்தையும் அவர்கள் மூலதனமாக பயன்படுத்துகின்றனர். இலவசமான கவர்ச்சிகளை நமக்கு வழங்கி நமது நேரத்தை அதற்கு பதிலாக பெற்றுக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நாம் செலவிடும் ஒவ்வொரு நொடியும் சமூக வலைத்தளங்களை நடத்துகின்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது. நாம் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் நாம் அறியாமலேயே அவர்களது விளம்பரங்களை உள்வாங்கிக் கொள்கின்றோம். அதிகமானவர்கள் பார்வையிடுகின்ற ஒரு சமூக தளம் அதிகமான விளம்பரத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை பெறுகிறது. விளம்பரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழியாக அந் நிறுவனங்கள் கையாள்வது நமது நேரத்தையும் அவதானத்தையும் பறித்தெடுப்பதற்கான கவனப் பறிப்பான்களை உருவாக்குவதாகும்.
எனவே, இலகுவாக கிடைக்கும் சமூக ஊடகத் தளங்களின் வரப்பிரசாதங்கள் யாவும் வர்த்தக உத்திகளே. நமது அவதானத்தை பறித்தெடுப்பதற்காக சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் தம்மிடையே போட்டி போட்டுக் கொள்கின்றன. இங்கு நேரம் பறிபோவதோ எமது அவதானம் கலைக்கப்படுவது பாதிப்பின் ஒரு சிறு பகுதியாகும். அடுத்த பகுதி, நமது அவதானத்துக்குள் மறைந்திருக்கிற எமது தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்படுவதாகும்.
அண்மையில், University of Wollongong பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான, இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட, கலாநிதி சுமூது மல்லவராச்சி என்பவர் சமூக வலைத்தளங்களில் உள்ள சாதாரண லைக் பொத்தனை நாம் அழுத்துகின்ற போது, குறைந்தது 10 முதல் 15 வகையான எமது தனிப்பட்ட தகவல்களை அது சேகரித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டார்.
எனவே. சமூக ஊடகங்களில் நாம் செலவழிக்கின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் பணமாக்கப்படுகின்றது. அனைத்து சமூக வலைத்தளங்களும் எமது அவதானத்தை ஈர்த்தெடுக்க புதுப்புது கருவிகளை இலவசமாக வெளிப்படுத்துகின்றன. Youtube நிறுவனம் ஷார்ட்ஸ் என்கின்ற குறு வீடியோவை அறிமுகப்படுத்திய போது அதற்கு மாற்றாக Facebook நிறுவனம் ரீல்ஸ் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது.
சமூக ஊடகங்கள் இளம் தலைமுறையின் கருத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது உண்மைதான். ஆனால், இத்தகைய சமூக ஊடகங்கள் எமது கவனத்தை கலைத்து, கருத்தியல் ரீதியாக எம்மை பிளவுபடுத்தி, கூட்டாக செயல்படுவதற்கு எம்மிடம் உள்ள சக்தியை மலினப்படுத்தி, பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக் கொள்வதற்கான எமது ஆற்றலை மழுங்கடிக்கச் செய்கின்றன .
சமூக ஊடகத் தளங்கள் எந்த விதமான கட்டுப்பாடுகளும் வரையறைகளும் இல்லாமல் மனித உணர்வுகளை தூண்டிவிட்டு, அவனது சிந்தனையின் ஆழத்தை தோண்டி எடுத்து பல்வேறு பராக்குகளில் எமது கவனத்தை செலுத்த முற்படுகின்றன. எமது கவனம் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு வளம். ஒரு நாளில் அத்தியாவசிய தேவைகளுக்காக நாம் பயன்படுத்துகின்ற நேரங்கள் போக எஞ்சி இருப்பது மிகக் குறைந்த கால அளவே. எனவே, இத்தகைய குறைந்த கால அளவில் மிக சிலவற்றின் மீது மாத்திரமே எம்மால் கவனம் செலுத்த முடியும். சமூக வலைத்தளங்களில் உள்ள கவன ஈர்ப்பு அம்சங்களின் மீது எமது ஒட்டுமொத்த அவதானத்தையும் செலுத்தும் பேது, நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய சமூகக் கடப்பாடுகளின் மீதான அவதானம் குறைந்துவிடுகிறது. தொழில்நுட்பத்தின் காரணமாக எமது வாழ்வு அதிக சிக்கல் தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு ஆயிரக்கணக்கான செய்திகளும் தகவல்களும் எமது விரல் நுனியில் உள்ளன. செய்திகளில் இருந்து நாம் விடுபட்டு வாழ்வதற்கான சந்தர்ப்பமே இல்லாமல் போயுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் எமது அவதானத்தை இலக்கு வைத்து செயல்படுகிறது. இவ்வாறு, இதனால், விளம்பரதாரர்களின் இலக்குகளை அடைவதற்காகவே சமூக ஊடகங்களின் உருவாக்கம் அமைகின்றது. பாரம்பரிய ஊடகங்களில் – குறிப்பாக, தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, சஞ்சிகைகள் என்பனவற்றில் விளம்பரங்கள் நேரடியாகவே எம்மை வந்து சேர்கின்றன. இத்தகைய ஊடகங்கள் தமது கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்துகின்றன. இதற்காக, நாம் எமது தனிப்பட்ட எந்த ஒரு தகவல்களையும் பாரம்பரிய ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், சமூக ஊடகங்கள் தம் பணம் சம்பாதிக்கின்ற விளம்பர உத்திகளை நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் செய்கின்றன. விளம்பரங்களை சமூக ஊடக தளங்களில் பார்வையிடுகின்ற பொழுது என்னிடமிருந்து அத்தலங்கள் எத்தகைய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கின்றன என்பது தொடர்பில் எதுவும் வெளிப்படையாக தெரிவதில்லை. இத்தகைய ஊடகங்கள், நமது அவதானத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு உத்திகளை கையாளுகின்றன. இனி அவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு: பெரும்பாலான சமூக ஊடகத் தளங்கள் நாம் இடுகின்ற லைக், கமெண்ட், ஷேரிங் என்பனவற்றின் மூலம் எம்மை கவர்ந்திழுக்கின்றன. நாம் அதிகம் தேட விரும்புகின்றவை, கொள்வனவு செய்ய விரும்புகின்றவை, தொடர்பாடல் மேற்கொள்ள விரும்புகின்றவர்கள், எமது நண்பர் வட்டாரம், பிடித்தவை பிடிக்காதவை என்பன பற்றிய தரவுகளை மிக லாவகமாக தொகுத்துக் கொள்கின்றன.
சமூக ஊடக நிறுவனங்கள், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவினை (Generative Artificial Intelligence) பயன்படுத்தி, இணையத்தளங்களுக்கு வந்து சேரும் தகவல்களை தொகுக்கின்ற பணியை செய்கின்றன. இத்தகைய தகவல்கள் குறித்த சமூக ஊடகங்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரது பெயரிலும் சேகரிக்கப்படும். இதனால், தனிப்பட்டவர்களை எந்த நேரத்தில் சென்றடைய வேண்டும் என்ற கணிப்பு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் காணப்படுகின்றன.
ஹரிஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் (Harrisburg University) இணைய பாதுகாப்பு தொடர்பான பேராசிரியர் புரூஸ் யங் (Bruce Young, 2021) என்பவர் இணையத்தளத் திருட்டில் ஈடுபடுகின்றவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மிக சாதுரியமாக தனிப்பட்டவர்களின் தகவல்களை திரட்டி அவற்றை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர், இணையதள திருடர்கள் எவ்வாறு வெகு விரைவில் நமது தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் (How AI May Soon Help Hackers Steal Your Information) எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை இது பற்றி ஆழமாக விவரிக்கின்றது. அவரது ஆய்வில் இருந்து, ஒரு சிறு பகுதி முக்கியத்துவம் கருதி இங்கு வழங்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் துணையோடு இடம்பெறுகின்ற இணையத் தாக்குதல்கள் அதிக எண்ணிக்கையிலான தனிப்பட்ட தகவல்களை திருடும் வல்லமை உள்ளது. இணைய பாதுகாப்பு குறைவாக உள்ள, நலிவுற்ற கணினிகளை திருடர்கள் இலக்கு வைக்கின்றனர். சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற, டாஸ்க்ரெப்பீட் (TaskRabbit) எனப்படுகின்ற, பகுதி நேர தொழில்வாண்மையாளர்களையும் சேவை தேவைப்படுகின்ற மக்களையும் இணைக்கின்ற நிகழ்நிலை சந்தைத் தளத்திலிருந்து, 2018 ஆம் ஆண்டு, சுமார் 3.75 மில்லியன் பாவனையாளர்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
24/7 தாக்கம்: 24 மணித்தியாலங்கள் பூராவும் நாம் இணையத்தின் தாக்கத்திற்கு உட்படுவதை இது குறிக்கின்றது. நாம் இணையதளத்தை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதன் தாக்கம் 24 மணி நேரமும் உள்ளது. குறுஞ்செய்திகள், அரசியல் தகவல்கள், வீட்டில் உள்ளவர்களின் வட்ஸ்அப்புக்கு வந்த ஆச்சரியமூட்டும் தகவல்கள் என ஏதோ ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கும். அத்தகைய தகவல்களை நாம் தேடாவிட்டாலும் யாரோ ஒருவர் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார். ஆய்வுகளின் படி பில்லியன் கணக்கான மக்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் சுமார் 150 நிமிடங்களை செலவழிக்கின்றனர். Explodingtopics எனும் ஆய்வு தளம், இவ்வாண்டு மாத்திரம், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றவர்கள் சுமார் 4 ட்ரில்லியன் மணித்தியாலங்களை அத்தளங்களில் செலவிடலாமென கணித்துள்ளது. அதேபோன்று, ஒரு சாதாரண அமெரிக்க பிரஜை நாளொன்றுக்கு 159 தடவைகள் தனது கையடக்க தொலைபேசியை பார்வையிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பேவ் ஆய்வுகளுக்கான நிறுவனம் (Pew Research Centre) இத்தகைய 24 மணி நேர ஆதிக்கம் நன்மை பயப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிந்தனை மற்றும் ஆய்வுகளுக்கான இந்நிறுவனம் துரிதமாக வளர்ந்து வரும் இணையதள சேவைகளின் வளர்ச்சி காத்திரமான தாக்கங்களை வாழ்க்கையில் ஏற்படுத்த முடியும் என்பதையும் வெளிகாட்டியுள்ளது.- Vidivelli