உஸாஹிட் முஹாஸ், காலி
தலைப்பிற்கு செல்ல முன்னால், நான் தற்காலத்தில் கல்விச் சூழலில் கண்ட மற்றும் ஊடகங்களின் ஊடாக அறிந்த சில தவறுகளை வைத்து இதை எழுதுகிறேன். எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் உண்மையிலே சிறந்தவர்கள். தப்பைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்பவர்கள். நான் இதை எழுதுவதற்கு எழுத்துச் சொல்லித் தந்தவர்களும் அவர்களே. அவர்களை அவமதித்து எழுதவில்லை. உலகிற்கே நீதியான ஆட்சி நடாத்திய கலீபா உமரின் தவறையே ஸஹாபாச் சமூகம் சுட்டிக் காட்ட பின்வாங்கவில்லை என்றபோது இதெல்லாம் எம்மாத்திரம் என்ற தைரியத்தை முன் வைத்து எழுதுகிறேன்.
ஒழுக்கம் இல்லாத கல்வி எந்த சந்தர்ப்பத்திலும் பயனளிக்காது.
அண்மையில் இலங்கையில் 16 வயது மாணவர்கள் 6 பேர் சேர்ந்து 15 வயது மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது கல்விச் சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதில் ஐயமில்லை.
இது சிலருக்கு புதிய விடயமாக தெரிந்தாலும் இலங்கையில் வருடா வருடம் பாடசாலை மாணவர்களிடையே இன மத வேறுபாடின்றி பாலியல் துஷ்பிரயோகங்களும் மற்றும் பல கருத்தரிப்பு சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
உலகில் எந்த ஒரு மதமும் கூறாத அளவு ஒழுக்க நெறிமுறைகளையும் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கி எச்சரித்துள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த பல இளைஞர் யுவதிகள் இந்த விபசாரம் என்ற பெரும் பாவத்தில் ஈடுபட பல சமூகவியல், குடும்பவியல் காரணங்கள் இருந்தாலும் இந்த கல்விச் சூழலில் காணப்படும் காரணங்களும் அதை தீர்க்க நமது மார்க்கம் சொன்ன சில ஒழுக்க நெறிமுறைகளையும் இந்த கட்டுரை சற்று அலசுகிறது.
பாடசாலை மட்டத்தில் அதிகரித்து வரும் காதல் தொடர்புகள் இந்த சீர்கேட்டிற்கு பெரிதும் பங்களிக்கிறது. இஸ்லாம் ஒரு போதும் இந்த காதல் தொடர்புகளை சரிகாணவில்லை மட்டுமல்லாமல் இது மார்க்கத்தின் பார்வையில் பாவமாகும். ஒரு ஆண் ஒரு அஜ்னபியான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை எவராலும் சரி காண முடியாது. ஆனால் இன்று அது ஒரு சாதாரண விடயமாக மாறிவிட்டது. பாடசாலைக் காலத்தில் காதல் தொடர்புகளில் இருப்பவர்களை ஹீரோக்களாக பார்க்கும் இளைஞர் சமூகம் பாடசாலைக் காலத்தில் காதல் தொடர்புகளை புறந்தள்ளி இருப்பவர்களை சமூகம் தெரியாத மற்றும் நவீனம் தெரியாத ஒரு குழுவாக ஒரு வகை வேறுபாட்டுடன் பார்க்கிறது. இந்த காதல் தொடர்புகளில் தோல்வி கண்டு தற்கொலை செய்து தமது வாழ்க்கைக்கு பள்ளிப்பருவத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தவர்கள் கூட பலர் இருக்கிறார்கள். இந்த தவறை பாடசாலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தவறாக காண்பதில்லை என்பதே உண்மை.
அதேபோன்று ஒரு ஆண் இன்னொரு ஆண் உடனான நட்பு தான் முற்காலத்தில் உயிர் நண்பன் அல்லது தோழன் என்று காணப்பட்டது. ஆனால் இன்றைய நாகரீகம் வளர்ந்த காலத்தில் மேற்கத்திய மற்றும் சினிமா உலகின் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்களிடையே அதிகம் பரவி வரும் ஒரு உறவு முறை தான் இந்த Bestie என்ற உறவுமுறை. ஒரு மாணவனும் ஒரு மாணவியும் நண்பர்களாக பழகுவதை இந்த வார்த்தை மேலோட்டமாக குறித்து நின்றாலும் இதற்குப் பின்னால் பாரிய கலாசார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இதற்கான வரைவிலக்கணத்தை தேடிய போது பாலியல் ரீதியான உறவுமுறை தவிர்ந்த மற்றைய அனைத்தையும் ஒரு ஆண் மற்றோர் பெண்ணிற்கிடையே பகிர்ந்து கொண்டு வாழும் உறவுமுறை என இது குறிப்பிடுகிறது. இந்த கலாசாரம் கூட ஒரு நவீன ட்ரென்ட் ஆக உலகம் பார்கிறதே ஒழிய இவற்றை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை மறந்து தான் வாழ்கிறது.
இவ்வாறான கலாசார சீர்கேடுகளிற்கு பாடசாலையின் நிகழ்வுகளும் செயற்றிட்டங்களும் உந்து சக்தியாக இருக்கிறது. பாடசாலையில் நடைபெறும் குழு நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் குழு செயற்பாடுகளுக்கும் மாணவ மாணவிகளை கலந்து குழுக்களாக பிரிப்பது, இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பாடசாலை ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஆண் பெண் கலப்புடன் நடைபெறுவது, அரைகுறை ஆடைகளுடன் சினிமாப் பாடல்களை மேடைகளில் ஏறிப் பாடுவதும் ஆடுவதும் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒழுக்கம் விழுப்பத்துக்கே அடி , கல்வியிலே ஒழுக்கம் முதன்மையாம் போன்ற பல வாசகங்கள் பாடசாலை சூழலில் அழகாகக் தொங்கவிடப்பட்டும், பாடசாலைப் புத்தகங்களில் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும் என தலைப்பிட்டும் போதாது. ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகங்களும் சரியான ஒழுக்க நெறிமுறைகளை சட்டமாக்காத வரை.
அடுத்து ஆசிரியர்கள் இந்த மாணவர்கள் ஒழுக்கம் தவறி இவ்வாறான காதல் தொடர்புகள், Bestie உறவுமுறைகள் மற்றும் தேவையற்ற முறையில் ஆண் பெண் மாணவர்கள் கலந்து கதைத்து கூத்தடிப்பது போன்றவற்றை கண்டால் கட்டாயம் தட்டிக் கேட்க வேண்டும். மற்றும் இவற்றின் பாரதூரங்களை மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்துவது ஒவ்வொரு ஆசிரியரினதும் பொறுப்பாகும்.
அதேபோன்று பாடசாலையில் நடைபெறும் குழு நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் பெண் கலப்பை முடியுமான அளவு தவிர்த்து நடைமுறைப்படுத்துங்கள். அந்நிய சமூக ஆசிரியர்களை திருப்திப்படுத்த மற்றும் நவீன உலகின் சமூகமயமாதல் என்ற பெயருக்காக அநாச்சாரங்கள் நடைபெற வித்திடாதீர்கள்.
கவலையான விடயம் என்னவென்றால் நல்லதை ஏவி தீமையை தடு என்று கூறும் மார்க்கத்தில் பிறந்து சமூகத்திற்கு ஒழுக்கமிகு ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்க திடசங்கற்பம் பூண்டு வரும் முஸ்லிம் ஆசிரியர்களில் சில ஆளுமையற்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான அநாச்சாரங்களுக்கு முன்நின்று செயற்படுத்துகிறார்கள் என்பது தான்.
ஆசிரியர் தினத்தில் சக ஆசிரியையோடு சினிமாப் பாடலிற்கு மேடையில் நடனமாடிவிட்டு எந்த முகத்தோடு போய் மாணவர்களிடம் ஒழுக்கம் கற்பிக்க போகிறீர்கள்? சிறுவர் தினத்தில் பாடசாலை அரங்கை தியேட்டராக மாற்றிவிட்டு எந்த முகத்தோடு போய் மாணவர்களிடம் சினிமாக்கள் பார்ப்பது தவறு என சொல்லப் போகிறீர்கள்? தனக்கு நேரமில்லை என்பதால் மாணவனின் விளங்காத பாடத்தை சக மாணவியிடம் போய் கேட்குமாறு நீங்களே பணித்துவிட்டு அஜ்னமி மஹ்ரமி என்ற பாடத்தை எவ்வாறு கற்பிக்க போகிறீர்கள்? ஆசிரியர்களாகிய நீங்களே முறைதவறிய அரைகுறை ஆடைகளையும் மற்றும் இறுக்கமான ஆடைகளை ஆண் மாணவர்களிற்கு முன்னால் அணிந்து வந்துவிட்டு பார்வையை தாழ்த்துமாறு இஸ்லாம் கூறுகிறது என்று எவ்வாறு பாடமெடுக்க போகிறீர்கள்? ஆசிரியர்களாகிய உங்களில் சிலரே சக ஆசிரியைகளோடு பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் கொஞ்சிக் குலாவி அரட்டை அடித்துவிட்டு எந்த முகத்தோடு போய் மாணவர்களின் காதல் தொடர்புகளையும் Bestie உறவுமுறைகளையும் தவறு என்று சொல்லப் போகிறீர்கள்?
இவர் என்னடா ஆசிரியர்களின் தவறை மாத்திரம் சீண்டுகிறார் என சில ஆசிரியர்கள் நினைக்கலாம். ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய இடத்தில் நிற்கும் நீங்களே ஒழுக்கம் தவறி நின்றால் எப்படி மாணவச் சமூகத்தை திருத்துவது. ஆசிரியர்களே உங்கள் கைகளில் வழங்கப்படும் ஒவ்வொரு மாணவர்களும் அமானிதங்களாகும். அவர்கள் வழிதவறினால் அதற்கு கட்டாயம் நீங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
இந்த மாணவர்களின் சீர்கேட்டிற்கு ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சூழல் தான் முழுமையாக பொறுப்பு சொல்ல வேண்டும் என்ற இடத்தில் இருந்து எழுதவில்லை. கண்டிப்பாக அவர்களின் பெற்றோர், சமூகம் மற்றும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்பதை யும் நினைவூட்டுகிறேன். – Vidivelli