கலாநிதி எரின் வால்ஸ் (Erin Walsh) என்பவர் எழுதிய வசீகரமான வடிவமைப்பு மற்றும் வளர்ந்து வரும் மூளைகள் ( Persuasive Design and Growing Brains) கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றி பேசுகின்றது. அவரது கருத்துக்களின் படி, பொதுவாக ஊடகங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் ஊடகங்கள் நன்மைபயப்பதும் தீமை பயப்பதும் அவ்வூடகங்களை பயன்படுத்தும் முறையிலேயே உள்ளது எனும் தத்துவத்தின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. ஆனால், இந்த தத்துவத்தை மீள விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த தத்துவத்தில் ஒரு சிறிய உண்மை இருக்கலாம். எனினும், நன்மையும் தீமையும் நாம் பயன்படுத்தும் முறையில் உள்ளது என்கிற வாதம் ஊடகத்தின் பயன்பாட்டை மாத்திரமே கருத்தில் கொள்கிறது. இங்கு, இத் தத்துவார்த்த விவாதத்திற்கு அப்பால் சென்று சுதந்திரமாக இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்துவதற்கான உந்து சக்தி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதை தேடிப் பார்க்க வேண்டும். இதனால், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றவர்களின் கவனத்தை திட்டமிட்ட அடிப்படையில் பறித்து இழுக்கின்ற தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு பற்றி பேச வேண்டியுள்ளது. நாம் எண்ணியவாறு எமது ஸ்மார்ட் தொலைபேசிகளை பிரிந்து வாழ்வது ஒன்றும் இலகுவான காரியம் கிடையாது.
கலாநிதி வால்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிடும் மற்றுமொரு தகவல் ஓரளவு ஆச்சரியமளிக்கிறது. அதாவது வயது வந்த ஒருவர், ஒரு நாளைக்கு சுமார் 80 தடவைகளுக்கும் அதிகமாக தனது கையடக்க தொலைபேசியை பார்வையிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கட்டுரையாளரால் இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட முறைசாரா பிரயோக ஆய்வு ஒன்றில் அதிகாலை எழுந்ததிலிருந்து சுமார் காலை பத்து மணி வரை எத்தனை தடவைகள் தமது கையடக்கத் தொலைபேசியினை அவர்கள் பார்வையிட்டுள்ளார்கள் என்பது பற்றித் தேடிப் பார்க்கப்பட்டது. உரிய நபர்களின் ஸ்மார்ட் தொலைபேசிகளில் உள்ள தரவுகளை பார்வையிட்ட பொழுது, பல இளைஞர்கள் சுமார் 50 தொடக்கம் 80 தடவைகள் தமது கைபேசியை பார்வையிடுவது கண்டறியப்பட்டது. சிலர் சுய கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு கைபேசியை பார்வையிடுவது உண்டு. எந்த விதமான குறுஞ்செய்திகளோ அழைப்புகளோ வராமல் ஓய்வாக இருக்கின்ற வேளையிலும் ஏதோ ஒரு செய்தியை எதிர்பார்த்து அடிக்கடி தொலைபேசியை பார்வையிடும் பழக்கம் இருப்பதாக மாணவர்கள் குறிப்பிட்டனர். சிந்தனையை வசீகரம் செய்கிற இந்த கையடக்க தொலைபேசி மற்றும் சமூக வலைத்தள தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு வயது வந்தவர்களை விட சிறுவர்களை அதிகம் பாதிக்கின்றது என்பது உண்மையே.
சமகாலத்தில் சிறுவர்கள் எதிர்வினை கவனஈர்ப்பு ஏற்படுத்துகின்ற சூழலில் பிறக்கின்றார்கள். அவர்களது மூளையும் எதிர்வினை அவதானத்தையே இழுத்தெடுக்கின்றது. இவ்வீர்ப்பு அவர்களது மூளையின் ஆழமான பகுதியில் உள்ளதாகும். சடுதியான விடயங்களில் துரிதமாக கவனம் செலுத்துவதற்கான தூண்டலை இப்பகுதி வழங்குகிறது. அத்தோடு, தமது சுற்றாடலில் ஏற்படுகின்ற புதுமைகள் மீது அதிக கவனத்தை செலுத்துவதற்கான உந்துதலும் வழங்கப்படுகிறது. உண்மையில் இது சிறந்தது தான். மூளையில் உள்ள இந்த ஏற்பாடு சிறுவர்களுக்கு பல்லாண்டு காலமாக பயனளித்தே வந்துள்ளது.
குழந்தைகள் பிறந்து வளரும் சூழலில் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புதுமைகளையும் திடீர் மாற்றங்களையும் அறிமுகம் செய்து வைக்கின்றன. கையடக்க தொலைபேசியில் அல்லது ஏனைய இலத்திரனியல் கருவிகளின் திரைகள், அவை உள்ளடக்குகின்ற இசை, இலத்திரனியல் கருவிகளின் நிறங்கள், எழுத்து வடிவங்கள் போன்றவற்றில் ஏற்படுகின்ற முன்னேற்றங்கள்/மாற்றங்கள் சிறுவர்களின் எதிர்வினை கவனஈர்ப்பு முறையை கவர்கின்றன.
மறுபுறம் மூளையில் உள்ள செயற்பாட்டு கட்டுப்பாட்டு வலையமைப்பும் முக்கியமானது. இது சிறுவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைகிறது.- தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது. அன்றாட வாழ்க்கையில், நாங்கள் ஒரு செயலில் கவனம் செலுத்துவதற்காக குறுக்கீடுகளை வடிகட்டும் போது, இந்த கவனம் செலுத்தும் அமைப்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இது இன்னும் முழுமையாக வளராமையினால், சிறிய குழந்தைகள் எளிதில் அவர்களின் எதிர்வினை அமைப்பால் கவனச்சிதறலுக்கு உட்படுகின்றார்கள். தொழில்நுட்பத்தின் வசீகரமான வடிவமைப்பு சிறுவர்களை தீமை விளைவிக்க கூடிய தீர்மானங்களுக்கு இட்டுச் செல்கின்றது.
குழந்தைகள் ஸ்டிக்கர்கள், புள்ளிகள், முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடுகள் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்களை விரும்புகின்றனர். சில கல்வி தொழில்நுட்பங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க இவற்றை பயன்படுத்துகின்றன. கல்வித் தேவைகளுக்காக இத்தகைய வசீகர உத்திகளை பயன்படுத்துவது சிறுவர்களுக்கு பயனளிக்கிறது. தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. ஆனால், இவற்றைவிட நூற்றுக்கணக்கான உத்திகளை சமூக வலைத்தளங்களும், கணினி விளையாட்டு தளங்களும், சூதாட்ட தளங்களும், இணைய அலப்பறைத் தளங்களும் பயன்படுத்துவதால் சிறுவர்களின் நடத்தைகளில் நேர் எதிரான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் சிறுவர்களிடம் இயல்பாகவே உள்ளது. ஆனால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மேலதிக ஆற்றல்களை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். பல் துலக்குவது, குளிப்பது, உடலை சுத்தம் செய்வது, வளரும் நகங்களை வெட்டி எடுப்பது, வளரும் தலைமுடியை சிரைப்பது எவ்வாறு அன்றாட வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக இருக்கிறதோ அதேபோன்று தான் தொழில்நுட்பத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான திறன்களையும் தினமும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.
தொழில்நுட்பம் எப்போதும் எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும். அதேபோல நாமும் தொழில்நுட்பத்தை எப்போதும் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இனி நோக்கலாம்.
கற்றலை கற்றல் (Metacognition)
தெரிதலை தெரிந்து கொள்ளுதல் அல்லது கற்றலை கற்றுக் கொள்ளுதல் (Metacognition). இது வாசிப்பதற்கு ஒரு தத்துவார்த்த எண்ணக்கரு போல தோன்றினாலும் இதனை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இங்கு மெட்டா (Meta என்பது ‘தாண்டி’ என்ற பொருளில் அமையும். அதாவது ஒரு விடயத்தை தாண்டி அல்லது ஒரு விடயத்திற்கு அப்பால் என்ற பொருள்படும். கொக்னிஷன் (Cognition) என்பது தெரிந்து கொள்ளுதல் எனப்படும். எனவே, Metacognition என்பதை தெரிந்து கொள்வதற்கும் அப்பால் சென்று ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுதல் எனக் கொள்ளலாம். அடிப்படையில் நாம் நலிவானவர்கள். நாம் இலகுவில் வசீகரிக்கப்படுகிறோம். தொழில்நுட்பம் நாம் அறியாத வகையில் நம்மில் தாக்கங்களை செலுத்துகின்றது. இத்தாக்கத்தை இயல்பாக நம்மிடம் உள்ள கூர்ந்தறியும் தன்மைக்கு அப்பால் சென்று தர்க்க ரீதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதனையே இங்கு தெரிதலை தெரிந்து கொள்ளுதல் என்கின்றோம்.
சிறுவர்களை பராமரிக்கின்ற பெற்றோர் தொழில்நுட்பம் நம்மில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும். கையடக்க தொலைபேசியோ ஏனைய இலத்திரனியல் கருவிகளோ ஆபத்தானவை என்பதால் அவற்றை கீழே வைத்துவிடும் படி கட்டளையிடுவதற்கு பதிலாக “தொழில்நுட்பத்தை ஏன் எம்மால் பிரிந்து வாழ முடியவில்லை; அது ஏன் எமது அமைதியை பாதிக்கின்றது; ஏன் எம்மை கவர்ந்திழுக்கின்றது; தொழில்நுட்பம் சிறுவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஏன் அமைக்கப்பட வேண்டும்; அதனால் தொழில்நுட்ப கம்பனிகளுக்கு என்ன நன்மை இருக்கிறது” எனக் குழந்தைகளிடம் வினவ முடியும். இத்தகைய வினாக்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தை சிறுவர்களிடம் ஏற்படுத்தலாம். அத்தோடு, சமூக வலைத்தளங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் சிறுவர்களையும் வயது வந்தவர்களையும் வசீகரிக்கிற ஏற்பாடுகளை உண்மையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏன் ஏற்படுத்த வேண்டும், அத்தோடு, இவை எத்தகைய வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கின்றன போன்ற சிக்கலான கேள்விகளை சிறுவர்களிடம் கேட்க முடியும்.
தொழில்நுட்பத்தின் வடிவமைப்பின் வசீகரத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான மற்றுமொரு வழி, வெறுமனே இணையதள உள்ளடக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் நுகர்வோராக இருக்காமல், புத்தாக்க உருவாக்கங்களை தோற்றுவிப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுப்பதாகும். தொழில்நுட்பம் தெரியாத அல்லது தொழில் நுட்பத்தில் நாட்டம் இல்லாத பெற்றோருக்கு இது ஒரு சிரமமான அனுபவமாக அமைய முடியும். புத்தாக்கங்களை உருவாக்குவது என்பது டைப் செய்வதோ அல்லது இணையதளத்தில் உள்ள ஒரு காட்சியை பார்த்து வரைவதோ அல்ல. மாறாக, இணையதளத்தின் நன்மைகளை பயன்படுத்தி புதிய காட்சி வடிவமைப்புகளை உருவாக்குதல், வீடியோ, கார்ட்டூன், காட்சி கதை, மென்பொருள் உருவாக்கத் திட்டம் போன்றவற்றின்பால் ஆர்வத்தை தூண்டி விடலாம்.
ஐக்கிய இராச்சியத்தின் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆப்கம் (Ofcom) நிறுவனம் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளிப்படுத்துகிறது. அதாவது, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், வயது வந்த ஒருவர், தான் விழித்த நிலையில் இருக்கையில், சுமார் 12 நிமிடங்களுக்கு ஒரு தடவையாவது குறைந்தபட்சம் தன்னுடைய கைபேசியை பார்வையிடுகின்றார். இளவயதினரும் ஒப்பீட்டளவில் அதிகமாக இவ்வியல்பினை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அந்நிறுவனத்தின் ஆய்வுகளின் பிரகாரம் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட இள வயதினருள் சுமார் 47%ஆனவர்கள் திரை நேரத்தை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
(தொடரும்…)
-Vidivelli