புத்தரின் புனித தந்தத்தை காண கண்டிக்கு வரும் பௌத்தர்களை அரவணைக்கும் முஸ்லிம்கள்!
பல தரப்பினரின் பாராட்டைப்பெற்றுள்ள கண்டி முஸ்லிம் மக்களின் கூட்டிணைந்த முன்மாதிரி செயற்பாடுகள்!
எஸ்.என்.எம்.சுஹைல்
புத்தரின் புனித தந்த தாது, இலங்கையின் பௌத்தர்களால் மிகுந்த பக்தியுடன் வழிபடப்படும் ஒரு புனிதப் பொருளாகும். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வருடம் இந்த புனித தாது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்த தருணத்தில் கண்டிக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருக்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை அரச அதிகாரிகள், இராணுவம் மற்றும் சிவில் சமூகமும் முன்னெடுக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திடமிருந்து வழங்கப்படும் ஒத்துழைப்பு பலராலும் சிலாகித்துப் பேசப்படுவதை காண்கிறோம்.
முக்கியத்துவம்
பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கண்டி நாட்டின் கடைசி தலைநகரமாக இருந்தது. இந்த நகரம் பலவகைகளிலும் இலங்கை கலாசாரத்தைக் கொண்டிருந்தது. இங்குள்ள தலதா மாளிகை பௌத்தர்களின் மிகவும் புனிதமான இடமாக திகழ்கின்றது. இது புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள ஆலயமாகும். இதைச்சுற்றி தொல்பொருளியல் தொகுதிகளான மன்னனின் மாளிகை, பழைய நகரம் மற்றும் ஏனைய பல மாளிகைகளும் இணைந்து விரிவடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யுனெஸ்கோ நிறுவனம் கண்டி நகரத்தை 1988ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர் குறிப்பிட்டுள்ளது.
வரலாற்றுப் பதிவுகள்
கண்டி தலதா மாளிகை மற்றும் அதன் புனித தந்த தாது தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் சில முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியவை. இவை இலங்கையின் பௌத்த மரபுக்கு மிகவும் முக்கியமானவை. இதன் வரலாறு முதன்முதலில் கிமு 4 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்டது.
இதனிடையே, புத்தரின் புனித தந்த தாது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் போது மழை பெய்யும் என்பது ஒரு பழமையான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை 1815 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நிர்வாகி ஜான் டி’ஓய்லி தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இறுதியாக கண்டி தலதா மாளிகையில் 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற புனித தந்த தாது (Sacred Tooth Relic) கண்காட்சி இடம்பெற்றது. இந்த 12 நாள் நிகழ்வில், 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
2025 யாத்திரை
ஸ்ரீ தலதா மாளிகையிலுள்ள புத்தரின் புனித தந்தத்தை காட்சிப்படுத்தும் நிகழ்வு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிகழ்வு இம்மாதம் 27ஆம் திகதி வரை எதிர்வரும் 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்தத்தின் சிறப்பு கண்காட்சி ‘2025 ஸ்ரீ தலதா மாலிகாவ யாத்திரை’க்கான ஏற்பாடுகளை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மேற்கொண்டதாக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை மற்றும் தியவதன நிலமேவின் ஒப்புதலுடன் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்ட செயலாளர், கண்டி மாநகர ஆணையாளர், மத்திய மாகாண பொலிஸ் பிரிவு, பிற அரச அதிகாரிகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க புனித தந்த ஆலயத்தின் நிலமே ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நிகழ்விற்காக இராணுவத்தினர் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றனர். ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை சுத்தம் செய்தல், பக்தர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்குதல், பக்தர்களை விகாரை வளாகத்திற்கு முறையாக வழிநடத்த தேவையான அணுகும் வீதிகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுகின்றது.
இந்நிலையில் புனித தந்தத்தின் சிறப்பு கண்காட்சி ‘2025 ஸ்ரீ தலதா மாலிகாவ யாத்திரை’க்கான ஏற்பாட்டுகளில் முஸ்லிம் தரப்பு வழங்கும் ஒத்துழைப்பு தற்போது பல தரப்பினராலும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
முஸ்லிம் தரப்பு என்ன செய்கிறது?
கண்டி தலதா புனித தந்த சிறப்பு கண்காட்சி நிகழ்வுக்காக கண்டி நகருக்கு அதிகப்படியான பௌத்த பக்தர்கள் வருகை தருகின்ற இச்சந்தர்ப்பத்தில் கண்டி நகர முஸ்லிம் பள்ளிவாசல்கள் முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, கண்டி நகருக்கு வருகைதரும் பௌத்த பக்தர்களுக்கு உணவுப் பொதி விநியோகம், குடிநீர் வழங்குதல், மாத்திரைகள், தேநீர் வழங்குதல் மற்றும் மலசலகூட ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. குழுவாகவும் தனித்தும் முஸ்லிம் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்பாடானது சகவாழ்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு என பலரும் பாராட்டி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்திடம்
விடுக்கப்பட்ட கோரிக்கை
கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார, மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் முஸ்லிம் தரப்பை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில், கண்டி நகர முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி நகர ஜம்இய்யதுல் உலமா தரப்பினரும் கலந்துகொண்டர்.
இதன்போது, புனித தந்த கண்காட்சி நிகழ்வுக்காக கண்டி நகருக்கு வருகை தரும் பக்தர்களுக்கான உணவுப் பொதி வழங்குதல், குடிநீர் ஏற்பாடுகளை செய்தல் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றிற்கான ஒத்துழைப்பை முஸ்லிம் சமூகம் வழங்க வேண்டும் என அரச தரப்பு கோரிக்கை விடுத்ததாக கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தெரிவித்தார்.
கூட்டாக செயற்படும்
கண்டி முஸ்லிம்கள்
இந்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கண்டி பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் தரப்பினர் கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இலங்கைக்கான பாகிஸ்தான் குடியரசின் கண்டி நகர அலுவலக பிரதிநிதி அப்சால் மரிக்கார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின்போது, முஸ்லிம் தரப்பு கூட்டாக இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக, கண்டிக்கு வரும் பௌத்த பக்தர்களுடன் முஸ்லிம் சமூகம் நடந்துகொள்ள வேண்டிய முறைமைகள் பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் நடவடிக்கைகளை கண்டி நகர ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டது. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது முஸ்லிம் மக்களுக்கு தெளிவூட்டல்கள் செய்யப்பட்டன. அத்துடன், பள்ளிவாசல்கள் ஊடாகவும் மக்களுக்கு பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், பள்ளிவாசல்களில் குடிநீர் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளையும் மலசகூட வசதிகளை ஏற்பாடு செய்யும் திட்டத்தையும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன்படி, கண்டி நகரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் மக்கள் தட்டுப்பாடின்றி இலகுவாக குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நகரின் அனைத்து பள்ளிகளிலும் மலசலகூடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவற்றை சுத்தம் செய்து கண்டிக்கு வரும் பௌத்த பக்தர்கள் தமது தேவைக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி நகர் வர்த்தக சம்மேளனம் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் செயற்திட்டத்தை முன்னெடுப்பதுடன், இரவு நேரங்களில் கோப்பிப் பானம் மற்றும் தேநீர் வழங்கும் திட்டத்தையும் முன்னெடுக்கிறது.
தினமும் இரவு நேரத்தில் 2000 உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படுவதுடன், இரவு வேளைகளில் கண்டி நகரில் குளிர்ந்த காலநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் கோப்பி மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.
இதற்கப்பால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு தரப்பினர் தனித்தும் இந்த உதவி செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். அந்த வகையில், கண்டி ராயிட் ஹோட்டல் ஊடாக 700 இரவு உணவுப் பொதி தினமும் வழங்கப்படுகின்றது. அத்துடன், அவர்களும் கோப்பி பானம் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இதற்கு அப்பால், முஸ்லிம் பாடசாலைகள் மூலமும் கண்டிக்கு வருகை தரும் பௌத்த பக்தர்களின் நலனுக்கான நற்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, கண்டி பதியுதீன் பாலிகா வித்தியாலய மாணவிகள் நேற்றுமுன்தினம் பெனடோல் மாத்திரைகளை தேவையானவர்களுக்கு வழங்கினர். அத்துடன், குடிநீர் போத்தல்களும் அவர்களால் வழங்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கண்டியிலுள்ள தனவந்தர்கள் பெரிதும் உதவி ஒத்தாசைகளை வழங்கி வருவதாக கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் சித்தீக் மேலும் தெரிவித்தார். அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சமூக நல்லிணக்க பணிகளுக்காக பலரும் உதவி ஒத்தாசைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
புத்தரின் புனித தந்த தாது காண்காட்சியை காண கண்டி நகரில் அலைமேதும் பௌத்த பக்தர்களின் நலன்களை முன்னிறுத்தி கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகம் மேற்கொண்டுவரும் இந்த சமூக நலத்திட்டம் பல தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா குமாரி அபேசிங்க, இந்த செயற்திட்டமானது நாட்டின் நல்லிணக்கத்துக்கு நல்ல உதாரணம் என தெரிவித்தார். அத்துடன், முஸ்லிம் சமூகத்திற்கு கண்டி நகர சபையினால் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதுவரை கண்டிக்கு தினமும் மூன்று இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வேலைத்திட்டங்களை பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாம் முன்னெடுக்கிறோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தம்மாலான பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்றும் கண்டி மாநாகர ஆணையாளர் கூறினார்.
புனித தந்த தாதுவை காண வந்த பல பௌத்த பக்தர்களும் முஸ்லிம் சமூகத்தை நன்றியுடன் பாராட்டி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் வியாபிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் இன நல்லிணக்கம் மேலும் வலுப்பெறும் என பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதன் பிரதிபலிப்பை சமூக வலைத்தளங்களில் சிங்கள மக்கள் வெளியிடும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன நல்லிணக்கத்திற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை முஸ்லிம் சமூகம் கூட்டாகவும் தனித்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது இலங்கையில் பெரும்பான்மை மக்கள் மனங்களில் முஸ்லிம் சமூகம் சார்ந்த நல்லபிப்பிராயத்தை தோற்றுவித்து சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.- Vidivelli