முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் தற்காலிக அடிப்படையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
ஆறு மாதங்களுக்கு என்று கூறியே இந்த பயங்கரவாத தடைச் சட்டம் 1978ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வெறும் ஆறு மாதங்களுக்காக நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டம் 45 வருடங்களுக்கு மேல் எமது நாட்டில் அமுலில் இருந்து வருகின்றது.
இந்த சட்டத்தினால் தமிழ் மக்கள் கடுமையான நெருக்குவாரங்களை எதிர்நோக்கியிருந்தனர். சுமார் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டனர். இதனால், குறித்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியது.
இவ்வாறான நிலையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இத்தாக்குதலுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு இந்த சட்டத்தின் கீழ் நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டனர். இந்த சமயத்தில் குறித்த சட்டத்தின் வலிகளை முஸ்லிம் சமூகம் உணர்ந்தது.
இதே போன்று பொருளாதார நெருக்கடி காலத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தமைக்காக சில சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டனர். அச்சமயத்தில் இந்த சட்டத்தின் வலியினை சிங்கள சமூகத்தினாலும் உணர முடிந்தது.
இதன் காரணமாக குறித்த சட்டத்தினை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து சமூகங்களும் கோரிக்கை விடுத்தன. இவ்வாறான நிலையில் அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அனுர குமார திசாநாயக்க இந்த சட்டத்தினை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்.
அது போன்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்த சட்டத்தினை ஒழிப்பேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த சட்டத்தினை இல்லாதொழிக்க எந்தவித நடவடிக்கையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக பாராளுமன்றத்திலும், அரசாங்கத்தின் ஊடக மாநாடுகளிலும் பல தடவைகள் கேள்விகள் எழுப்பப்பட்ட சமயங்களில் விரைவில் ஒழிக்கப்படும் என்று அரசாங்கம் பதிலளித்தது. இவ்வாறான நிலையில்தான் கடந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் நிட்டம்புவயினைச் சேர்ந்த 22 வயதான முஹம்மது லியாவுதீன் முஹம்மது றுஸ்தி கொம்பனித் தெரு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம் தீவிரமடைந்ததுடன் இந்த சட்டத்தினை உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் வழங்கப்பட்டது.
இந்த தடுப்புக் காவல் காரணமாக எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் முஸ்லிம் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெளிப்பட்டன. இந்நிலையில்தான் பாதுகாப்பு அமைச்சு பல்வேறு நிபந்தனைகளுடன் குறித்த இளைஞனை பிணையில் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த இளைஞன் தொடர்பில் பல தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ருஸ்தி தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜயபால வெளியிட்ட அறிக்கைக்கு முற்றிலும் மாற்றமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தினை எமது அரசாங்கம் கொண்டுவரவில்லை. இது நீண்ட காலமாக காணப்படுகின்ற சட்டமொன்று என பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்தும் பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வலுப் பெற்று வருவதாலும் இதற்கு மேலும் இது தொடர்பில் மெளனம் காக்க முடியாது என்பதாலும் இந்த சட்டத்தினை நீக்குவது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அரசகுலரட்ண தலைமையில் குழுவொன்றினை நீதி அமைச்சர் ஹர்ஷன ராஜகருண அண்மையில் நியமித்துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இது முன்னைய அரசாங்கங்கள் போன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார உத்தியாக அமைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
அதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ஒழித்துவிட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டு வரவும் அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஒழித்துவிட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பல்வேறு எதிர்ப்பலைகள் தோன்றியமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஒழிப்பதற்கு சிறுபான்மை சமூகம் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டியது இன்றியமையாததொன்றாகும். ஏற்கனவே தமிழ் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புகள் இச்சட்ட ஒழிப்பு தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றன.
அது போன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை போன்ற முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புக்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. ருஸ்தி போன்று இன்னுமொரு இளைஞன் பயங்கரவாத தடைசட்டத்தின் ஊடாக கைது செய்யப்படும் வரை காத்திருக்காமல் இந்த சட்டத்தினை ஒழிப்பதற்கான அழுத்தத்தினை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தொடர்ந்து வழங்கத் தயாராக வேண்டும்.- Vidivelli