எம்.எம்.சில்வெஸ்டர்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 6 ஆவது ஆண்டு விசேட பிரார்த்தனை, பாதயாத்திரை உள்ளிட்ட நினைவு அஞ்சலி நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றன.
கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த 6 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் முதற் கட்டமாக பாத யாத்திரை நடைபெற்றது.
பாத யாத்திரை
புனித அந்தோனியார் திருத்தலம் வரையிலான பாத யாத்திரை காலை 7 மணியளவில் கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் பேராலயமான கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமானது.
உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் சொரூபம் தாங்கிய ரதத்துக்கு முன்னால் பாத யாத்திரையில் சென்றுகொண்டிருந்த மக்கள் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் படங்களை ஏந்தியும் பலியானவர்களுக்கு நீதிவேண்டியும், குண்டுத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டியும் பாதாதைகள் ஏந்தியிருந்தனர்.
இந்த பேரணியில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை, அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், குண்டுத்தாக்குதலில் பலியானோரின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அஞ்சலி செலுத்தல்
பாத யாத்திரையின் பின்னர், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் விசேட ஆராதனை மற்றும் இறந்த ஆன்மாக்களை நினைவுகூரும் நிகழ்வு காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தேறிய 8.45 மணிக்கு ஆலய மணியோசை எழுப்பப்பட்டு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பிறயன் உடைக்வே, துணை ஆயர் அன்ரன் ரஞ்சித், கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் ஆயர் ஹெரல்ட் அன்தனி பெரேரா, ஓமல்பே சோபித்த தேரர், அஷ்ஷெய்க் மசூக் சஜீர், பொன்னம்பலவனேஸ்வரர் ஆலய பிரதம குருக்கள் சிவசுரேஷ் உள்ளிட்ட மதத்தலைவர்களும், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பலியான உறவினர்கள் சார்பிலும் இரண்டு பேர் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
சர்வ மத பிரார்த்தனை
அஞ்சலி செலுத்தும் நிகழ்வை தொடர்ந்து பலியானோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், நோயுற்றவர்களின் உடற் சுகத்துக்காகவும் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் பெளத்த மத பிரார்த்தனையை ஓமல்பே சோபித்த தேரரும், இந்துமத பிரார்த்தனையை சிவசுரேஷ் குருக்களும், இஸ்லாமிய பிரார்த்தனையை அஷ்ஷெய்க் மசூக் சஜீரும் செய்திருந்தனர்.
விசுவாசிகளின் சாட்சிகளாக பிரகடனம்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க விசுவாசிகள் 167 பேரை விசுவாசத்தின் சாட்சிகளாக வத்திக்கான் பிரகடனப்படுத்தியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வத்திக்கான், குண்டுத்தாக்குதல்களில் தேவாலயங்களில் பலியான கத்தோலிக்க விசுவாசிகள் பட்டியலில் 167 பேர் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார்.
சகல சமூகங்களுக்கும்
வைக்கப்பட்ட தாக்குதலாகும்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலானது, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மாத்திரம் வைக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக இந்த நாட்டில் உள்ள சகல வணக்க ஸ்தலங்களுக்கும் சமூகங்களுக்கும் வைக்கப்பட்ட குண்டுத்தாக்குதலாகும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
இந்த குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும், உடற்சுகவீமுற்றவர்கள் விரைவில் நற்சுகம் பெறவேண்டியும் பிரார்த்திப்பதாக சிவசுரேஷ் குருக்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
மெளலவியின் உருக்கமான உரை
கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முஸ்லிம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவராகவும் சமாதானத் தூதுவராகவும் திகழ்கிறார். நாம் மரணிக்கும் வரையில் அவருக்கான நன்மதிப்பு முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் குறைவடையாது என மசூக் சஜீர் மெளலவி நன்றிப் பெருக்குடன் கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 6 வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்று வரை நீதியைக் கோரி போராடிக் கொண்டிருக்கிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது அந்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவோ இந்த மிலேச்சதனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அன்றும் இன்றும் அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகிறது.
ஒருவனை அநியாயமாக கொலை செய்தவன் முழு மனித சமூகத்தையும் கொலை செய்தவன் போன்றவன் ஆவான் என இஸ்லாம் கூறுகிறது.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டவர்களின் பிரதான நோக்கமாக இருக்கலாம். அனைவரும் முரண்பட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நினைக்கிறேன். எவ்வாறாயினும் ஒரு பகுதியளவு அவர்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர். இருப்பினும் முழுமையாக அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை.
குண்டுதாக்குதலை தொடர்ந்து தாக்குதல்தாரிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் சஹ்ரான் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.இதைக்கேட்டு நாம் கலக்கமடைந்தோம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பதற்றமடைந்தோம். தீவிரவாதிகளின் நோக்கம் வெற்றி பெறுமா என கலக்கமடைந்த போது சமாதான தூதுவராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஊடகங்களுக்கு முன்னால் வந்து இந்த தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஆகவே கத்தோலிக்கர்கள் கலக்கமடைய வேண்டாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க கூற்றை முன்வைத்தார்.
இவரின் தலைமைத்துவத்தை கத்தோலிக்க மதத்தினர் எந்தளவு மதித்தனர் என்பதை நாம் கண்டு வியப்பமடைந்தோம். கர்தினால் ஆண்டகை முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவராக விளங்குகிறார். நாங்கள் இறந்தாலும் அந்த மதிப்பு அவருக்கு இருக்கும். முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனர். கர்தினால் ஆண்டகையை எப்போதாவது கண்டால் அவரை முத்தமிட வேண்டும் என நினைத்தேன். அதற்கான வாய்ப்பு கடந்த வருடம் நீர்கொழும்பில் கிடைத்தது. முஸ்லிம் மக்களின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரை முத்தமிட்டேன். கர்தினால் தேசிய சொத்து.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக முழு சமூகமும் பாதிக்கப்பட்டது. தலைகுனிய நேரிட்டது. முஸ்லிம் என்ற காரணத்தினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வீட்டில் பாண் வெட்டுவதற்கு கூட கத்தி இருக்கவில்லை. பாரிய சவால்களை கடந்து வந்துள்ளோம். இந்த குண்டுத் தாக்குதலினால் உயிரிழந்த அனைவரும் மோட்சம் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமை குணம் தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அநீதிக்கு எதிராக ஒன்றிணைவோம்” என்றார்.
முத்தமிட்ட மெளலவி
இந்நிகழ்வில் பங்கேற்ற சஜீர் மெளலவி, கத்தோலிக்க மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை கட்டியணைத்து தலையில் முத்தமிட்ட சம்பவம் அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்தது.
இந்நிகழ்வில் ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பலியானோரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கர்தினால் உரை
பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, யாருக்கும் அடிபணியாது நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நீதியை நிலைநாட்டுவதற்கு தேவையான விடயங்களை செயற்படுத்தவேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மையை மறைப்பதற்கு கடந்த கால அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த முயற்சியை இன்றும் செயற்படுத்திக்கொண்டு, தோற்றுப்போன அரசியல் சக்திகளின் செயற்பாடுகளுக்கு அடிபணிந்த பல்வேறு விதமான அரச நிறுவனங்கள் இன்னமும் செயற்பட்டு வருகின்ற மோசமான நிலைமை காணப்பட்டு வருவதாக பேராயர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் அறிவித்துள்ளேன். இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
முதலாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து கூடிய விரைவில் அதனை மக்கள் மயப்படுத்த வேண்டும்.
இரண்டாவது, மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்குகளை மேற்பார்வையிட பூரண அதிகாரம் மிக்க சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றை நிறுவுவது அவசியம்.
மூன்றாவது, தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து சக்திகளையும் விசாரித்து, உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்களின் பதவி நிலைகளை பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
நான்காவது 2019 ஆம் செப்டெம்பர் 21 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் சகல பரிந்துரைகளையும் செயற்படுத்த வேண்டும்.
ஐந்தாவது, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கும் தீவிரவாதக் குழுத்தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையிலான உறவு குறித்தும் இங்கிலாந்தில் ‘செனல் 4’இல் ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அதில் முக்கிய சாட்சியாக விளங்கிய அசாத் மௌலானாவின் சாட்சியங்கள் குறித்து ஆழமான விசாரணை நடத்த வேண்டும்.
ஆறாவது, இவ்விடயம் குறித்து கடந்த அரசாங்கத்தின் இமாம் குழுவின் அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பிரதான சாட்சியாக விளங்கிய அசாத் மெளலானாவிடம் எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் முடிவுக்கு வந்துள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு அரசியல் பின்னணியின் தேவைகளை மையப்படுத்திக்கொண்ட கண்கட்டு வித்தையாகும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த சகல ரகசிய சதித்திட்டங்களுக்கும் பின்னால் இருந்த சட்டவிரோத கலாசாரத்தையும், அதைத் தூண்டிய விடயங்களையும் இந்நாட்டிலிருந்து முற்றாக அகற்றுவதற்கு தேவையான சட்ட திட்டங்களை இயற்றும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
அதன் மூலம், நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஏழாவது, நாட்டில் உள்ள அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டு மக்களின் சேவகர்களே தவிர அதிகாரமிக்கவர்கள் அல்லர். தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத நாட்டின் சகல குடிமக்களையும் காப்பாற்றி, சமூகத்துக்குள் சமாதானத்தை ஏற்படுத்தவும், நாட்டில் வன்முறைகளை தோற்றுவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். இதற்காக எமது நாட்டில் புதியதொரு கலாசாரத்தை நோக்கி செல்வதற்கான வழிவகைகைளை ஏற்படுத்த வேண்டும்.
இந்நாட்டில் இனவாதம், மதவாதம் பேசிக்கொண்டு நாட்டில் வன்முறைகளையும் ஏற்படுத்தி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்போரையும், நாட்டை இரத்த வெள்ளமாக மாற்றும் அமைப்புக்களையும் இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும். அரசியல் மற்றும் குண்டர் சக்திகளை அம்பலப்படுத்தி, தேவையான அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்களைச் செய்வதன் மூலம், கொலைகள், காணாமல்ஆக்கப்பட்டோர், வெள்ளை வேன்கள், சித்திரவதைக் கூடங்கள், பாதாள உலக நடவடிக்கைகள், தனியார் படைகள் போன்றவற்றின் மூலம் நமது நாட்டு வரலாற்றைக் கறைபடுத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
தற்போதைய சட்டங்கள் நீதியை நிலைநாட்டவும், நாட்டை சுத்தப்படுத்தவும் போதுமானதாக இல்லாவிட்டால், நாம் செய்ய வேண்டியது அந்தச் சட்டங்களை மாற்ற தைரியத்தைப் பெறுவதுதான்.
இந்த நாட்டின் பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அதன்படி, பயங்கரவாதத்தைத் தூண்டிய இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் செயல்கள் அனைத்தையும் நமது சமூகத்திலிருந்து தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த அக்டோபர் 6 ஆம் திகதியன்று கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்தபடி, இந்தத் தாக்குதலின் உண்மையான பின்னணியை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவீர்கள் என நாம் நம்புகிறோம். இந்த நாட்டை சுதந்திரம் மிக்க நாடாக மாற்ற வேண்டியது அவசியமாகும்” என்றார்.
பலத்த பாதுகாப்பு
இந்த நினைவுதின நிகழ்வுகளுக்காக கொச்சிக்கடை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் மற்றும் முப்படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பல வீதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்களும் காணப்பட்டிருந்தன.
கட்டுவப்பிட்டி தேவாலயத்திலும்
நினைவு கூரல் நிகழ்வுகள்
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காலை 8.15 மணிக்கு கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வல் சில்வா மற்றும் ஜே.டீ. என்தனி ஆண்டகை ஆகியோர் தலைமையில் விசேட ஆராதனைகள் மற்றும் ஆன்ம இளைப்பாற்றிற்கான நிகழ்வுகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன.- Vidivelli