உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு: நீதிக்காக ஏங்கும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம் சமூகமும்!
ஹில்மி அகமட்
இலங்கையை உலுக்கிய 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு நிறைவடையும் இந்த துயரமான நாளில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், தொடர்ச்சியாக கூட்டுப் பழியின் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த கோரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அனைவருடனும் ஒவ்வொரு இலங்கையரும் தமது மனமார்ந்த அனுதாபங்களையும், அசைக்க முடியாத ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இருந்தும், மைத்திரிபால சிறிசேன முதல் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க வரையிலான அடுத்தடுத்த அரச தலைவர்கள் இந்த கொடூரமான பயங்கரவாதச் செயல் குறித்து நம்பகமான பதில்களை வழங்கத் தவறிவிட்டனர்.
இப்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இந்த மௌனத்தையும் தண்டனையின்மையையும் உடைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓரளவு கல்வி அறிவே கொண்ட தீவிரவாதியான சஹ்ரான் ஹாஷிமையும், மூளைச்சலவை செய்யப்பட்ட தற்கொலைப் படை அங்கத்தவர்களான அவனது குழுவையும் தீவிரமயமாக்கிய அரசியல் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இனங்கண்டு ஜனாதிபதி நீதியின் முன் நிறுத்த வேண்டும். (மேலும், சஹ்ரான் ஹாஷிம், இலங்கை புலனாய்வுத்துறைக்கு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்குபவராகவும் அதற்காக ஊதியம் பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.)
ஒரே நேரத்தில், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளை போதிய நிபுணத்துவம் இல்லாதவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. உலகளாவிய செயற்பாட்டு வலையமைப்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளே இத்தகைய நுணுக்கமான, ஒத்திசைவான தாக்குதலை நடத்தியதில்லை. இந்த கொடூரச் செயல்களில் வெளிநாட்டு புலனாய்வு நிபுணர்கள் மற்றும் முகவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்கலாம். ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை மட்டுமே இந்த படுகொலைகளின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை முழுமையாக வெளிக்கொணர முடியும்.
இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர், மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்லாத்தை தவறாக பிரதிநிதித்துவப்படுத்திய தனிநபர்களால் இந்த கொடூரமான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதை நாம் ஆழ்ந்த வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறோம். அவர்களின் செயல்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணானவை, மேலும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தாலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்படுபவை.
இஸ்லாத்தில், போர் காலங்களிலும்கூட பெண்கள், குழந்தைகள் மற்றும் போரில் ஈடுபடாதவர்கள் உட்பட அப்பாவி மக்களைக் கொல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், மேலும் அவர்களுக்கு இஸ்லாமிய மரணச் சடங்குகள் கூட மறுக்கப்பட்டன. அவர்களின் செயல்கள் இஸ்லாமிய மதத்தையோ, அதன் விழுமியங்களையோ அல்லது அதன் மக்களையோ பிரதிபலிக்கவில்லை.
அரசியல் அழுத்தங்களால் பாதிக்கப்படாத ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க, இப்போது துணிச்சலுடன் செயல்பட வேண்டும். அவர் நம்பகமான உள்நாட்டு பொறிமுறை மூலமாகவோ அல்லது சர்வதேச தலையீட்டை கோருவதன் மூலமாகவோ நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இது, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகவும் இருண்ட நாட்களில் ஒன்றாகும். சொல்லொண்ணா துயரமும், அவமானமும் நிறைந்த நாள். சிங்கள -பௌத்த தீவிரவாத சக்திகள், இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி, 21 இலட்சம் முஸ்லிம்கள் மீது பயத்தையும், சந்தேகத்தையும் பரப்பி, அவர்களைத் தவறாக பயங்கரவாதிகளாக முத்திரை குத்தினார்கள். நீர்கொழும்பு, குளியாப்பிட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலான தீவைப்பு, கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. பல முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.
நாடு ஒன்றிணைந்து, அமைதி, நீதி மற்றும் ஆற்றுப்படுத்துவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து வகையான பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் மத வெறுப்பு ஆகியவற்றையும் நாம் திட்டவட்டமாக கண்டிக்க வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக, தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், உண்மையான சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் நாடு ஒரு கணம் கூட தாமதிக்கக்கூடாது. இந்த விசாரணையில் குண்டுவெடிப்பு துயரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாத வன்முறையும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கர்தினாலின் விவேகமான அழைப்பே ஆயிரக்கணக்கான முஸ்லிம் உயிர்களைக் காப்பாற்றியது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நம்பகமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தும்படி இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருந்தும், ஆறு ஆண்டுகள் கடந்தும் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த விசாரணையும் நடைபெறவில்லை, மேலும் இந்த சோகத்தின் உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படாமலும் தண்டிக்கப்படாமலும் உள்ளனர்.
அச்சத்தை ஏற்படுத்தவும், இன வன்முறையைத் தூண்டவும், முஸ்லிம் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், மதப் பிளவுகளை ஆழப்படுத்தவும் இந்த தாக்குதல் அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிடப்பட்டதாக இப்போது பல இலங்கையர்கள் உறுதியாக நம்புகின்றனர். நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டனர், இது குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது.
இன்று வரை நீதியோ, பொறுப்புக்கூறலோ வழங்கப்படவில்லை. பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்கள் உள்நாட்டு நீதி பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துவிட்டன. அதனால்தான் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் சர்வதேச விசாரணைக்கான அழைப்பு – அது வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் மதம் அல்லது இன வேறுபாடின்றி அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை உறுதி செய்வது – ஆழமான எதிரொலியை ஏற்படுத்துகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றவுடன் 21/4 பயங்கரவாத தாக்குதலை விசாரிக்க ஸ்கொட்லாந்தில் இருந்து நிபுணர்களை அழைத்து வருவதாக உறுதியளித்தார். எனினும், அவரது ஜனாதிபதி பதவியின் சில மாதங்களிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற அழுத்தத்திற்கு பணிந்து, இந்த வாக்குறுதியை கைவிட்டது போல் தெரிகிறது.
இதுபோன்ற அரசியல் அழுத்தங்களால் பாதிக்கப்படாத ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப்போது துணிச்சலுடன் செயல்பட வேண்டும். அவர் நம்பகமான உள்நாட்டு பொறிமுறை மூலமாகவோ அல்லது சர்வதேச தலையீட்டை கோருவதன் மூலமாகவோ நீதியை நிலைநாட்ட வேண்டும்.
நாம் இழந்த உயிர்களையும், தொடரும் வேதனையையும் நினைவுகூரும் இந்த வேளையில், இலங்கையர்களாகிய நாம் நம்பிக்கையையும் புரிதலையும் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். – நம்மைப் பிரிக்க முயல்பவர்களை எதிர்ப்போம். வெறுப்புடனும் சந்தேகத்துடனும் அல்ல, அமைதி, கருணை, உண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.- Vidivelli