உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அது தொடர்பான கதையாடல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இதுவரை பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று அறிக்கைகள் வெளிவந்துள்ள போதிலும் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான் என கண்டறியப்படவில்லை. இந்நிலையில்தான் முதன் முறையாக இந்தத் தாக்குதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சில சக்திகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கூற்றை கடந்த காலங்களில் பலரும் கூறினாலும் முதன் முறையாக அதிகாரமிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பொலன்னறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கோ அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர் தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய முழுமையான தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அறிக்கையை ஆய்வு செய்து ஜனாதிபதிக்கு சிபாரிசுகளை வழங்குவதற்காக ஐவர் அடங்கிய உயர்மட்ட பொலிஸ் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த மறுகணமே நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அதனை மீளக் கட்டியெழுப்ப தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். இதன் மூலம் அத் தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டிய அவர் இத் தாக்குதலின் பின்னணியைக் கண்டறிவதற்குப் பதிலாக ஆதாரங்களை மூடிமறைக்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டிருந்தார். விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுத்த பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றியதுடன் அரசியல் பழிவாங்கலுக்கும் உட்படுத்தினார்.
இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காகவே இவ்வாறானதொரு தாக்குதல் நடத்த இடமளிக்கப்பட்டதாக பலரும் இன்று வரை நம்புகின்றனர். இப் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்து கூர்ந்து நோக்கத்தக்கதாக உள்ளது. அதேபோன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இதே கருத்தை அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிய தீவிரவாதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் அவர்கள் இவ்வாறானதொரு கூட்டுத் தாக்குதலை நடத்துமளவு எந்தவகையிலும் பலம் பொருந்தியவர்கள் அல்லர். இவ்வாறானதொரு அனர்த்தம் நிகழப்போவதாக போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் யாரினது நலனுக்காக இத்தாக்குதல் நடப்பதற்கு தெரிந்து கொண்டே வழிவிடப்பட்டது என்பதே இப்போது விடைகாணப்பட வேண்டிய கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதியின் முன்னெடுப்புகள் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தற்போதைய விசாரணைகள் திருப்தி தருவதாகவும் கிறிஸ்தவ சமூகமும் தெரிவித்திருக்கிறது. இதே நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் சமூகமும் உள்ளது.
உண்மையில் இந்த உண்மை கண்டறியப்படுவதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட களங்கம் துடைத்தெறியப்பட முடியும். இன்று வரை இத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் சமூகமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. உண்மை வெளிப்படும்போதே இந்த களங்கம் களையப்படும். அதுவரை நாம் நம்பிக்கையோடு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. – Vidivelli