உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: விசாரணையில் சர்ச்சைக்குரிய ஆறு விடயங்கள் இரண்டை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளோம்
உரிய முறையில் மர்மங்களை அவிழ்ப்போம் என்கிறார் ஜனாதிபதி
(எம்.வை.எம்.சியாம்)
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து ஐந்தரை வருடங்கள் உண்மையான சூத்திரதாரியை மூடி மறைக்கவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த ஆறு மாதத்திற்குள் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் சர்ச்சைக்குரிய 6 விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம். அவற்றுள் இரண்டு விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் எவ்வாறான மர்மமான விடயங்கள் இருந்தாலும் அதனை அவிழ்க்க வேண்டிய முறையில் நாம் அவிழ்ப்போம். அனைத்திற்கும் நாம் நீதியை நிலைநாட்டுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த 6 வருடங்களில் ஐந்தரை வருடங்கள் எதற்கு பயன்படுத்தப்பட்டது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து ஐந்தரை வருடங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 வருடங்கள் கழிந்து உள்ளன.ஆனால் ஐந்தரை வருடங்கள் எதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலின் சூத்திரதாரிகளை மறைப்பதற்கும் ஒழிப்பதற்கும் சாட்சிகளை மூழ்கடிக்கப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் திசைகளை மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். உண்மையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய பகுதிகளை கைவிடும் நோக்கிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதில் ஐந்தரை வருடங்கள் விசாரணைகளை குழப்பியடிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 6 மாத காலமாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் பலன் உள்ளது. தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நாம் பல தடவைகள் மேடைகளில் கூறினோம். அதில் 6 சந்தர்ப்பங்களை குறிப்பிட்டுள்ளோம்.அந்த 6 விடயங்களில் இரண்டு விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வவுணதீவுக்கு சென்று ஜெக்கட்டுக்களை அங்கு போட்டவர்கள் யார்? F.B.I. க்கு ஒரு இரகசிய குறியீட்டை வழங்கியது. சந்தேகத்துக்குரிய அந்த தொலைபேசி யாருடையது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய விடயங்களாக இருந்தாலும் அதனை அவிழ்க்க வேண்டிய முறையில் அதனை அவிழ்ப்போம். இவை அனைத்திற்கும் நாம் நீதியை நிலைநாட்டுவோம் என்றார்.- Vidivelli