உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: ஆணைக்குழு அறிக்கையை ஆராய சிறப்பு பொலிஸ் குழு
தலைவராக அசங்க கரவிட்ட ஷானி அபேசேகரவும் உள்ளடக்கம்
(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியால் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்க சிறப்பு பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 22 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஊடாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இக்குழுவின் தனது பிரதிநிதியாகவும் தலைவராகவும் குற்றப் புலனயவுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவை நியமித்துள்ளார். அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களை நியமிக்கும் அதிகரத்தை பெற்றுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் கடிதம் பிரகாரம், ஒரு மாத காலத்துக்குள் இவ்வறிக்கையை ஆராய்ந்து அடுத்த கட்டம் தொடர்பில் விஷேட அறிக்கையொன்றினை பொலிஸ் மா அதிபருக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வரவிருக்கும் விசாரணைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
குழுவின் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பியசேன அம்பாவில- குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் இமேஷா முத்துமாலி பணிப்பாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.கே.எஸ். பெரேரா பணிப்பாளர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு
எனினும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட பின்னர் இந்த குழுவின் மற்றொரு உறுப்பினராக மத்திய குற்ற விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவையும் நியமித்துள்ளார். ஷானி அபேசேகரவை ஆரம்பத்தில் நியமிக்காம தொஅர்பில் பல்வேறு அதிருப்திகள் எழுந்த நிலையில், பின்னர் அவர் அக்குழுவில் உள்வனக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய பல துணைக் குழுக்களை இந்தக் பிரதான குழு அமைக்கும் எனவும் இதன்போது வெளிப்படும் புதிய விடயங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கபப்டும் எனவும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 66,000–67,000 பக்கங்களுக்கு இடையில் இருப்பதால், தற்போது நிறுவப்பட்ட குழுக்களால் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் விசாரணைகள் தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். – Vidivelli