(இரா.ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகஸ்தர்களும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
தபால்மூல வாக்களிப்பின் போது இயலுமான வரையில் அலுவலக அடையாள அட்டையை ஆளடையாள உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும், உறுதிப்படுத்தப்பட்ட ஆளடையாளத்தை சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2025.05.06 ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதி நடைபெறவுள்ளது. 339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்பு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. அத்துடன் எதிர்வரும் வாரம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இம்முறை 339 உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கு தபால் மூல வாக்களிப்புக்கு சுமார் 648,495 அரச உத்தியோகஸ்த்தர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். ஆகவே தகுதி பெற்றுள்ளவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாட்டு யாத்திரையில் பாதுகாப்பு நிமித்தம் சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு கண்டி உயர் மகளிர் கல்லூரியில் விசேட வாக்களிப்பு மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒருசில உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிட நேரிட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், வாக்காளர்களுக்கு தாமதமில்லாமல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.- Vidivelli