டேன் பிரியசாத் சுட்டுக் கொலை
பின்னணியில் கஞ்சிபானை இம்ரானின் குழு விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்; மூவர் கைது துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டனர் தந்தை , மகனுக்கு வெளிநாட்டு பயண தடை
- பின்னணியில் கஞ்சிபானை இம்ரானின் குழு
- விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்; மூவர் கைது
- துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்
- தந்தை , மகனுக்கு வெளிநாட்டு பயண தடை
எப்.அய்னா
சிங்கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய, பொது ஜன பெரமுனவின் கொலன்னாவ நகர சபை வேட்பாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்றைய தினம் இரவு 11.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்தது.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் 6 ஆவது மாடியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு கைத்துப்பாக்கியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் அவரை இரவு 9.05 மணியளவில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். நண்பர்களுடன் மது விருந்தொன்றினை வீட்டோடு ஒட்டியுள்ள திறந்த வெளிப் பகுதியில் நடாத்திக்கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், தொடர்மாடி குடியிருப்பின் படிக்கட்டுக்களால் 6 ஆவது மாடி வரை சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு, அதே வழியாக தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் பிரகாரம், டேன் பிரியசாத்தின் தோள்பட்டை பகுதியில் இரண்டு தோட்டாக்களும் மார்பு பகுதியில் இரண்டு தோட்டாக்களும் பாய்ந்திருந்ததாகவும் காலிலும் துப்பாக்கிச் சூட்டு காயம் இருந்ததாகவும் அறிய முடிகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மது விருந்தில் இருந்த மற்றொருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தை மையப்படுத்தி, கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாரப்பனவின் கட்டுப்பாட்டில் 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளுக்கு உளவுப் பிரிவினரின் உதவியும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அதன்படி நேற்று மாலையாகும் போதும், துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்த துப்பாக்கிதாரிகளை அடையாளம் கண்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சி.சி.ரி.வி. மற்றும் இதர சாட்சிகளின் பிரகாரம் துப்பாக்கிதாரிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இதனைவிட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தில் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
போதைப் பொருள் பின்னணி:
இதுவரையில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் டேன் பிரியசாத்தின் கொலையுடன் வெளிநாடொன்றில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கஞ்சிபானை இம்ரானின் பாதாள உலக குழு தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்த சில குரல் பதிவுகள் பொலிஸ் உளவுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கான காரணியாக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். டேன் பிரியசாத் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டுபாய் சென்று திரும்பிய பின்னர், போதைப் பொருள் கடத்தல் குழுவொன்றுக்கு மிக நெருக்கமாக செயற்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனோடு தொடர்புபட்ட பிரச்சினை ஒன்று கொலைக்கான காரணம் என நம்பப்படுகின்றது.
வேட்பாளர் டேன் :
கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத், 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவின் கொலன்னாவ நகர சபைக்காக மீதொட்டமுல்ல தொகுதிக்கான பட்டியல் வேட்பாளராக வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டேன் பிரியசாத்தின் மரணத்தைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ஒவ்வொரு நாளும், வெவ்வேறு இடங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவற்றை உள்ளக மோதல்கள் எனக் கூறி அரசாங்கம் எளிதில் கை கழுவுகிறது. நான் கொல்லப்பட்டாலும், அவற்றை உட் கட்சி மோதல்களாக சித்தரிக்க முடியும். அவர்கள் மிகவும் வெட்கமற்ற வேலையைச் செய்கிறார்கள்.’ என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
“ஒரு கொலை நடந்துள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக தேவையான முடிவுகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன. வெல்லம்பிட்டி பொலிஸாரின் தலைமையில் கிடைக்கப் பெற்றுள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகள் நடந்து வருகின்றன.’ என சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் :
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் நேற்று (23) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்தக் குற்றத்தில் தந்தை ஒருவரும் அவரது மகனும் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிப்பதாக வெல்லம்பிட்டி பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
அதன்படி, தந்தை மற்றும் மகனான பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்ஷன ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும், அவர்களின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ள உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரினர்.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனாவல அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வெளிநாட்டு பயணத் தடையும் விதித்தார்.
குறித்த இருவர் தொடர்பிலும் நீதிமன்றுக்கு விடயங்களை முன் வைத்த வெல்லம்பிட்டிய பொலிஸார், இறந்தவரின் சகோதரரான திலின பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக குறித்த தந்தை மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் டேன் பிரியசாத்தின் கொலை சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
டுபாயில் டேன் இறந்ததாக வந்த வதந்தி:
முன்னதாக கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, டேன் பிரியாசாத் டுபாயில் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அவர் இறந்துவிட்டதாக வெளியான அந்த தகவல்கள் பொய் என தெரியவந்தது.
இவ்வாறான பின்னணியில், கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டேன் பிரியசாத், கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையின் கீழ் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டேன் பிரியசாத் மேலதிக விசாரணைக்காக நிக்கவரட்டிய வலய குற்ற தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய வேண்டாம் என்று நன்னேரியா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக நிக்கவெரட்டிய வலய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அவருக்கு எதிராக விசாரணையை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக, கல்கமுவ நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளின்படி அவர் கைது செய்யப்பட்டிருநதார். பின்னர் விளக்கமறியலில் இருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
டேன் மீதான ஏனைய குற்றச்சாட்டுக்கள்:
டேன் பிரியசாத் இனவாத கருத்துக்களைப் பரப்புவதாக பல்வேறு தரப்பினராலும் அடையாளப்படுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் பொலிஸ் புத்தகங்களில் பதிவாகியுள்ளன.
கடந்த 2022 மே 9 ஆம் திகதி அன்று கொழும்பின் காலி முகத்திடலில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல் வழக்கில் (அரகல மீதான தாக்குதல்) டேன் பிரியசாத் 6வது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதனைவிட கல்கிசை பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் கட்டிடத்திற்கு அருகில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக டேன் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மீதொட்டமுல்ல பகுதியில் முஸ்லிம் நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனைவிட நாட்டில் நடந்த பல வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டேன் பிரியசாத் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் விதித்த பயணத் தடை காரணமாக, செப்டம்பர் 2024 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முயன்றபோது குடிவரவு அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
சகோதரரின் கொலை
இதற்கிடையில், கடந்த 2022 ஆம் ஆண்டில், டேன் பிரியசாத்தின் சகோதரர் திலின பிரியசாத் ஒருகொடவத்த மேம்பாலம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் பிரச்சினையில் அக்கொலை நடந்திருந்ததாக பின்னர் தெரியவந்தது. அக்கொலைக்கும் டேன் பிரியசாத் இப்போது கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றனவா எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli