இலத்திரனியல் பொருட்களின் தொழில்நுட்ப ஈர்ப்பு சக்தி பற்றி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர்கள் சொல்கின்ற அனுபவக் கூற்றுக்களை நாம் அவதானிக்கலாம்.
“ஸ்மார்ட் தொலைபேசி எனது கையில் இருந்தால் 24 மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் நான் அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பேன். எனக்கு எந்த வகையிலும் அலுப்பு தட்டாது.”
“மெசஞ்சரில் (Messenger) எனக்கு வந்த ஒரு சிறிய செய்தியை பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைபேசியை கையில் எடுத்த நான், பல மணி நேரங்களாக அதனை வைக்க முடியாமல், என்னை அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்திகளை பார்பதற்கு அப்பால் பல இணையத்தளங்கள் என்னை அழைத்துக் கொண்டன. சடுதியாக தென்பட்ட பேஸ்புக் ரீல் பல மணி நேரங்களை பறித்துக்கொண்டது. சுடச்சுட வெளிவந்த பாராளுமன்ற செய்தி யூடியூபில் தென்பட்ட போது அதுவும் என்னை ஈர்த்துக் கொண்டது. ஒரு சிறிய செய்திதானே அதனை சற்று பார்வையிடலாம் என்று ஸ்கிரீனை தட்டி விட்ட போது, பல்வேறு அரசியல் செய்திகள் எனது அவதானத்தை தொட்டன. அவை எந்த விதத்திலும் முக்கியமான செய்திகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். வேறொரு முக்கியமான வேலையை செய்ய வேண்டி இருந்தாலும் சமூக ஊடகங்களில் எனது கண்ணைக் கவர்ந்த செய்திகள் என்னை மயக்கி விட்டன. பல மணி நேரங்கள் சென்ற பின்னர், கைபேசியில் சார்ஜ் முடியும்வரை நான் அதனை பயன்படுத்தினேன்’
இத்தகைய அனுபவங்கள் நமது மாணவர்களுக்கு மாத்திரமல்ல, நம்மில் பலருக்கு இருக்க முடியும். எனினும், இவ் அனுபவங்களுக்குள் மறைந்து இருக்கின்ற முக்கியமான ஒரு பேசுபொருள் இருக்கிறது. அதுதான் தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு சக்தி. இப்போது தொழில்நுட்ப உளவியலாளர்கள் இந்த ஈர்ப்பு சக்தியின் பாதிப்பினை ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். உலகில் பல்வேறு நிறுவனங்கள் இது பற்றிய ஆய்வுகளையும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றன. இவற்றில், சென்டர் ஃபோர் ஹியூமன் டெக்னாலஜி (Center for Human Technology), ஃபைவ் ரைட்ஸ் பவுண்டேஷன் (5 Rights Foundation), என்பன முக்கிய நிறுவனங்களாகும். இவற்றில் 5 ரைட் பவுண்டேஷன் நிறுவனம் இலத்திரனியல் கருவிகளின் வடிவாக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தி, சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பான ஆய்வொன்றினை இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. இதுபற்றி பேசுவது காலத்தின் தேவையாக உள்ளது.
தொழிநுட்பத்தின் ஈர்ப்பு சக்தியை புரிந்து கொண்ட ஒருவர் தன் குழந்தை அதிக நேரம் இலத்திரனியல் கருவிகளில் மூழ்கி இருக்கின்றபோது அதன் ஒட்டுமொத்த பழியையும் குழந்தை மீது சுமத்த மாட்டார். தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு சக்தியின் உளவியலை புரிந்து கொண்டு செயல்படுவார். குழந்தைகளை வசப்படுத்துகின்ற வகையில் தொழில்நுட்பம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார். இலத்திரனியல் கருவிகளின் எந்தக் கூறு அல்லது எத்தகைய வடிவமைப்பு சிறுவர்களை அதிகம் கவர்ந்து இழுக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவார். எல்லாவற்றுக்கும் மேலாக சிறுவர்களின் அவதானத்தை பறித்தெடுக்க வேண்டும் என்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் வியாபார தந்திரோபாயத்தையும் புரிந்து கொள்வார். சிறுவர்கள் தம்மை அறியாமலேயே தமது நேரத்தை இலத்திரனியல் கருவிகளுக்குள் செலவிட முயற்சிக்கின்றார்கள் என்றால் -அதற்குப் பின்னால், நாம் அறியாத ஏதோ ஒரு சர்வதேச நிறுவனத்தின் வியாபார உத்தி இருக்கிறது என்பதை நிதானமாக அறிந்து கொள்வார். பெற்றோர்கள் மாத்திரமன்றி சிறுவர்களும் தொழில்நுட்ப உருவாக்கம் அல்லது வடிவமைப்பின் ஈர்ப்பு சக்தி எத்தகைய பலம் மிக்கது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இனி அது பற்றி நோக்கலாம்.
தொழிநுட்பத்தின் ஈர்ப்பு சக்தி
தொழில்நுட்பக் கருவிகள் வெறும் உயிரற்ற, இயங்கு சக்தி அற்ற பொருட்கள் அல்ல. இலத்திரனியல் கருவிகள் உயிரற்ற பொருட்கள் என்றிருந்தால் அவை எவ்வாறு எமது சிந்தனையில், நடத்தையில் பாரிய தாக்கத்தைச் செலுத்த முடியும்? முதலில் நாம் இலத்திரனியல் கருவிகளை உயிரற்ற சாதனங்கள் என எண்ணுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துகின்றோமா அல்லது நம்மை தொழில்நுட்பம் பயன்படுத்துகிறதா என்று சிந்திக்க வேண்டும். அதேபோன்றுதான், இலத்திரனியல் கருவிகளை நாம் பயன்படுத்துகின்றோமா அல்லது அவை எம்மை பயன்படுத்துகின்றனவா என்பதையும் சற்று சிந்திக்க வேண்டும். சகல இலத்திரனியல் கருவிகளும் நமது சாதாரண மனித உணர்வுகளோடு பின்னிப் பிணைந்துள்ளன. எமது விருப்பு வெறுப்பு, அன்பு, தனிமை, விரக்தி என்பனவற்றை அந்த கருவிகளுக்குள் இருக்கின்ற ஏதோ ஒன்றோடு நாம் பகிர்ந்து கொள்கிறோம். கருவி நமது தனிமைக்கு துணையாக வருகிறது. எனவே, இக் கருவிகளை ஈர்ப்பு சக்தி மிக்க, மற்றும் நம்மை பாதிக்கின்ற ஒரு பொருளாக அறிந்துகொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப வடிவமைப்பை கட்டமைக்கின்ற போது சர்வதேச சமூக ஊடக நிறுவனங்கள் இளம் தலைமுறையின் அவதாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பதைப் பற்றி மிக ஆழமாக சிந்திக்கின்றார்கள். தொழில்நுட்பத்தின் வடிவமைப்பை பிரபல மானிடவியலாளரான நடாஷா டோவ் ஸ்ஹூல் (Natasha Dow-Schull) என்பவர் சூதாட்டச் சக்கரத்துடன் ஒப்பிடுவார் (slot machines). சூதாட்டச் சக்கரம் என்பது, கிடைக்கப் போவது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை அறியாமல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒரு விதமான போதை உணர்வுடன் சுழற்றி விடுகிற சக்கரத்தை குறிக்கிறது. மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், புகையிரத நிலையங்கள், சந்தைகள் மற்றும் சிறுவர்கள் குழுமி இருக்கின்ற இடங்களில் ஒரு சூதாட்டக்காரன் சிறிய ஒரு சக்கரத்தை வைத்துக் கொண்டு வருபவர்கள் முன்னிலையில் சுழற்றுவார். வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரும் பணத்தை வைத்து அந்தச் சக்கரத்தை சுழற்றுவர். தோல்வி அடைந்தாலும் கூட அடுத்த தடவையில் வெற்றி கிடைக்கும் என்ற பேரவாவுடன், கூடி இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் பணத்தை செலுத்தி அந்த சக்கரத்தை சுழல விடுவார்கள். ஒரு தரம் வெற்றியடைந்தவர் பல தடவைகள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் வெற்றி வரும் என்று மீண்டும் விளையாட்டில் ஈடுபடுவார். சூதாட்டச் சக்கரம் என்பது இதனையே குறிக்கிறது.
கணினி விளையாட்டிலும் இது பயன்படுத்தப்படுவதுண்டு. விளையாட்டில் ஈடுபடுபவர்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான பல்வேறு விதமான கவர்ச்சிப் பாகங்களை உள்ளடக்கியதாக இந்த சக்கரம் காணப்படும். அந்தக் கவர்ச்சியிலிருந்து தப்புவது சிரமம். இதேபோன்றுதன், தொழில்நுட்பத்தினதும் சமூக ஊடக தளங்களினதும் கட்டமைப்பு உள்ளது என நடாஷா டோவ் ஸ்ஹூல் குறிப்பிடுவார். இதனை அவர் மேலும் விவரிக்கும் சமூக ஊடக தளங்களின் வடிவமைப்பு ஒருவிதமான போதையின் வடிவமைப்பு என்று குறிப்பிடுவார். சூதாட்டக்காரர்கள் எப்போதும் சூதாட்டச் சக்கரத்திலிருந்து பிரிந்து வாழ முடியாத மனநிலையில் காணப்படுவதைப் போன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றவர்கள் அதன் வடிவமைப்பின் ஈர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மேலும், இது தொடர்பாக அவர் இந்த சூதாட்ட சக்கரத்தின் தாக்கம் ஒருவருடைய உணர்வு நிலையை மிஞ்சி அவரை ஒருவிதமான மயக்க நிலைக்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மூளையில் ஏற்படும் மாற்றம்
முன்னர் ஒரு காலத்தில் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பொறியியலாளராக கடமை ஆற்றிய ரிஸ்டல் ஹரிஸ் (Tristan Harris) தொழில்நுட்ப வடிவமைப்பினை கட்டமைக்கும் தந்திரோபாயங்கள் நிறைந்த உத்திகளின் புத்தகங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் காணப்படுவதாக குறிப்பிடுகிறார். இங்கு நிறுவனங்கள் என சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களையே அவர் குறிப்பிடுகிறார். இப்புத்தகத்தில் இருக்கும் தந்திரங்கள் எல்லாம் எவ்வாறு இணையதளத்தை பாவிப்பவர்களை மிக நீண்ட நேரம் அதில் நிலைத்திருக்க செய்வது என்பதைப் பற்றியதாகும். அவர் தனது ட்விட்டர் தளத்தில் (X) “மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மூளைத் தண்டின் அடிப்பகுதி வரை பந்தயமிட்டுச் செல்லும் உத்வேகம்” தொழில்நுட்ப நிறுவனங்களிடம் காணப்படுவதாக பதிவிட்டுள்ளார்.
மூளைத்தண்டு (brainstem) என்பது எமது மூளையில் உள்ள பிரதான கூறுகளில் ஒன்று. இது மூளை மற்றும் முதுகுநாளம் (Spinal Cord) ஆகியவற்றை இணைக்கும் மூளையின் கீழ் பகுதியாகும். இது மனிதர்களின் அத்தியாவசிய உயிர் செயற்பாடுகளான சுவாசம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், விழுங்குதல், தூக்கம் அல்லது விழிப்புநிலை போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது. இது “மூளையின் அடிப்படை (primitive) பகுதி” என்றும் அழைக்கப்படுகிறது.
இது நம்முடைய உள்ளுணர்வு சிந்தனை இல்லாமலேயே சில முக்கிய செயல்களை இயங்கச் செய்கிறது. உயர்ந்த சிந்தனை, காரணப்புலன் மற்றும் புத்தாக்கம் (Creativity) போன்ற செயல்பாடுகள் மூளையின் மேல் பகுதியில் உள்ள பெருமூளைப் புறணி (Cerebral Cortex) என்பதில் நடைபெறுகின்றன. எனினும் இப்பகுதியில், ஆய்வுகள் குறிப்பிடுவதைப் போன்று உயரிய தர்க்க ரீதியான சிந்தனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை. புத்தாக்க சிந்தனைகள், ஆக்கபூர்வமான தீர்மானங்கள் இங்கு மேற்கொள்ளப்படுவதில்லை. மிகச் சுலபமாகவும் வேகமாகவும் சடுதியாகவும் இப்பகுதி செயற்படுகின்றது. தொழில்நுட்ப தளங்களினதும் சமூக ஊடகத் தளங்களினதும் வடிவமைப்பு உத்தி இப்பகுதியை தட்டி விடுகிறது. இதனால், தர்க்க ரீதியாக சிந்தித்து, அறிவுபூர்வமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக எந்த விதமான பிரயோசனங்களும் இல்லாமலேயே நேரத்தை கழிப்பதற்கான மனோநிலை தோற்றுவிக்கப்படுகிறது. இலகுவான தீர்மானங்களின் பக்கம் தூண்டி விடுகிறது. இதனை பெற்றோரும் சிறுவர்களும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தோடு சுமார் 7 மணித்தியாலங்களுக்கு அதிகமாக இலத்திரனியில் கருவிகளின் திரையினை பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களின் மூளையில் பௌதீக ரீதியான மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (https://bigthink.com/health/screen-time-nih-study-60-minutes/#rebelltitem1) . இதே ஆய்வு சிறுவர்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக இலத்திரனியல் திரையினை பார்வையிடுவதன் மூலம் அவர்களது மூளையின் மேல் சட்டகம், அல்லது புறணி (Cortex) தேய்வடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடுகிறது. எனவே, அதிகமான திரை நேரத்திற்கு உட்படுகிற மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவை சந்திப்பது இயல்பானதே.
(தொடரும்…)
-Vidivelli